Wednesday, August 15, 2007

எதுவுமற்று இருத்தல்



இன்றைய நாளில் எதிர்கொள்ளப்போகும்
எந்த முகங்களும்
எனக்குத் தெரிந்தவையில்லை
எனக்கான புன்னகைகளைத் தேக்கி வைத்திருக்கவோ
மற்றவர்களுக்கென ஒரு புன்னகையைத் தரவோ
இரு தரப்புமே தயாராய் இருப்பதில்லை

வழக்கமாய் எதிர்கொள்ளும் முகங்கள்
மிகவும் அரிதானவை
அப்படியே எதிர்கொள்ள நேரிடினும்
அவை மிக இறுக்கமானவை மட்டுமே
காலை வெயிலில் எல்லா நெற்றிகளும்
சுருங்கிக் கிடக்கின்றன.

மிகத் தெரிந்த உலகத்தில் கூட
அழுத்தமான கைக்குலுக்கல்களை
யாரும் வரவேற்பதில்லை.
அவரவர் உலகங்களில் அவரவர்

எனக்கான உலகங்கள் எழுத்து வடிவம் கொண்டிருக்கிறது
அபூர்வமாய் சிலசமயங்களில் அது குரல் வடிவமெடுக்கும்.
மேலதிகமாய் அங்கங்கே எழுதப்படும்
எனக்குரியதான/என்னைப்பற்றியதான சில குறிப்புகள்
என்னையும் இவ்வெளியில் துருத்திக்கொண்டிருக்கலாம்.

எங்காவது ஒரு நினைவு என்னப்பற்றியதாய் இருக்கக்கூடும்
அன்பு வெறுப்பு பொறாமை எரிச்சல் கோபம் நட்பென
எவ்வித உணர்வாயிருப்பினும் அது எனக்குரியது
எனக்கென அனுப்பப்பட்ட அன்புகள்
பெரும்பாலும் மூடப்பட்ட என் அறை வாசலில்
காத்திருந்து சலித்து
திரும்பியே வராத தீர்மானங்களுடன்
திரும்பிப்போகிறது.

வரவேற்பதற்க்கும் வழியனுப்புவதற்க்கும்
எப்போதுமிருந்ததில்லை எனக்கான இன்னொன்று
எப்போதுமிருக்கிறது அறையை சூழ்ந்தபடி இருள்

நாளைய கண்விழிப்பில்
சிட்டுக்குருவியொன்றை
முதலில் பார்க்க நேரிட்டால்
அது மிகவும் முக்கியமானதொரு நாள்

12 comments:

Jazeela said...

உங்களுக்கான புன்னகையை ஏன் எதிர்பார்க்கிறீங்க? அவர்களுக்கான புன்னகையை நீங்க தந்தா திருப்பி தந்துட்டு போறாங்க :-)). நான் வேலை செய்ற சூழலில் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எல்லோரும் 'விஷ்' செய்வாங்க இல்லன்னா ஒரு புன்னகையாவது தருவாங்கப்பா நமக்கு பிரச்சனையே இல்லை:-). எங்க வீட்டு பகுதியில் சிட்டுக்குருவிக் கூட இருக்கு. :-)). காகத்தை பார்த்து தான் ரொம்ப நாளாச்சு :-D

கதிர் said...

சிலாகித்துச் சொல்லும் அளவுக்கு இந்த கவிதை எளிமையாக இருந்தாலும் நமக்குள் தினமும் நிறைய முறை பேசிக்கொள்வதால் இந்த கவிதை குறித்த எனது கருத்தை எதிர்பார்க்க மாட்டீர்கள் என்பது மட்டுமில்லாமல் எனது கருத்தென்று எதுவும் கிடையாது என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நன்றி- கமல்ஹாசன்

Ayyanar Viswanath said...

ஜெஸிலா காகம் பர்க்கில இருக்கு :)

தம்பி உடம்பு எப்படி இருக்கு..இப்ப பரவால்லியா

கதிர் said...

//தம்பி உடம்பு எப்படி இருக்கு..இப்ப பரவால்லியா//

யோவ் எனக்கென்னய்யா?
கல்லு மாதிரி நல்லாதான் இருக்கேன்.

மிதக்கும்வெளி said...

இது கவிதையா, உரைநடையா?

Anonymous said...

எனக்கென அனுப்பப்பட்ட அன்புகள்
பெரும்பாலும் மூடப்பட்ட என் அறை வாசலில்
காத்திருந்து சலித்து
திரும்பியே வராத தீர்மானங்களுடன்
திரும்பிப்போகிறது

manathai thotta varikal

Ayyanar Viswanath said...

கதிர் படுசீரியஸான உன் பின்னூட்டம் பார்த்திட்டு பயந்திட்டன்யா :)

சுகுணா ..வடிவம் எதுவா இருந்தா என்ன? ..பிடிச்சதா இல்லையா
பீரோ ரம்மோ போதை ஏறினா சரிதான்
:)

Ayyanar Viswanath said...

நன்றி அனானி

நாடோடி இலக்கியன் said...

//மிகத் தெரிந்த உலகத்தில் கூட
அழுத்தமான கைக்குலுக்கல்களை
யாரும் வரவேற்பதில்லை.
அவரவர் உலகங்களில் அவரவர்//

படித்து ரசித்தேன் ,ரசித்தே படித்தேன் கொஞ்சம் உரைநடை போலிருந்தாலும் படிப்பதற்கு சுகமாகவே இருந்தது வாழ்த்துக்கள் அய்யனார்!!!

கோபிநாத் said...

அதான் வெள்ளிக்கிழமை நல்லா ஜாலி இருந்திங்க எல்லோரும்...அப்புறம் என்ன சோகம் வேண்டிகிடக்கு ;(

LakshmanaRaja said...

//மிகத் தெரிந்த உலகத்தில் கூட
அழுத்தமான கைக்குலுக்கல்களை
யாரும் வரவேற்பதில்லை.
அவரவர் உலகங்களில் அவரவர்//

மிக உண்மை. வாழ்த்துக்கள்

Ayyanar Viswanath said...

நாடோடிஇலக்கியன்.கோபி மற்றும் லக்ஷ்மனராஜா நன்றி

Featured Post

test

 test