Sunday, October 28, 2007

மீட்டெடுத்தல்



பாதுகாப்புணர்வின் ருசியை இதுவரை அறிந்ததே இல்லை
எது கொண்டும் வாழ்வினை சமன்படுத்த முடியாமல் போகிறது
வெட்டி எறியப்பட்ட மிருகத்தின் ரத்தத் துளிகளிலிருந்து
பல்கிப் பெருகியதென ஆங்காரமாய் முன் நின்று சிரிக்கிறது
இயலாமையின் எச்சங்கள்...

எல்லாவற்றையும் தின்றுசெறிக்கும் மிக வலிமையான
மிருகமொன்றை யாரேனும் பார்த்தால் சொல்லுங்கள்!
அதற்குத் தின்னக் கொடுக்க
வழிவழியாய் வந்த ரத்தமும் சதையுமான துயரங்களும்
ஒரு போதும் மாற்றிடமுடியாத அவலங்களும்
என்னிடம் ஏராளமாயிருப்பதை..

சாம்பல் படிந்த என் வீட்டின் சுவர்களுக்கு
வண்ணங்கள் தேடியலைந்து கொண்டிருக்கிறேன்
தேவதை கதைகளில் வருவதுபோன்று
அவை ஏழு மலைகளையும் கடல்களையும் தாண்டிய
தனித்தீவில் நெருப்புக்கோளங்களுக்கு மத்தியில்
ஒரு பெட்டியினுள் வைத்துப் பூட்டப்பட்டிருக்கலாம்..

எப்படியிருப்பினும்
பறக்கும் கம்பளமும் தங்கநிற சாவியும்
கிடைக்காமலா போய்விடும்?

9 comments:

நாகை சிவா said...

//எப்படியிருப்பினும்
பறக்கும் கம்பளமும் தங்கநிற சாவியும்
கிடைக்காமலா போய்விடும்?//

விஜய் டிவியில் புதுசா திறந்திடு சிசேம் ஒரு நிகழ்ச்சி பண்ணுறாங்களாமே.. அதுக்கு போன நீங்க கேட்குற கிடைக்கும் என்று நினைக்குறேன்.

காயத்ரி சித்தார்த் said...

:(

காயத்ரி சித்தார்த் said...

படம் அருமை அய்யனார்! பொருத்தமா இருக்கு...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தேவதைக்கதைகளைப் படித்தே
வளர்ந்து
நிஜவாழ்க்கையை அதோடு ஒப்பிட்டு
குழப்பிக்கொள்கிறோம்.

பறக்கும் கம்பளத்தையும் தங்க நிற சாவியையும் எடுக்க எத்தனை பிராயாசைப்படவேண்டி இருக்கும்.. எத்தனை பூதங்களை அழிக்க வேண்டி இருக்கும் ஓவ்வொரு ராஜகுமாரனுக்கும் ராஜகுமாரிக்கும்.. :))

கோபிநாத் said...

\\எப்படியிருப்பினும்
பறக்கும் கம்பளமும் தங்கநிற சாவியும்
கிடைக்காமலா போய்விடும்?\\

கிடைச்சிட்டா மட்டும் சரியாக பயன் படுத்தவா போகிறோம்? அதில் இருந்தும் குழப்பங்கள் வரதான் செய்யும்..;)

முபாரக் said...

//எல்லாவற்றையும் தின்றுசெறிக்கும் மிக வலிமையான
மிருகமொன்றை யாரேனும் பார்த்தால் சொல்லுங்கள்!
அதற்குத் தின்னக் கொடுக்க
வழிவழியாய் வந்த ரத்தமும் சதையுமான துயரங்களும்
ஒரு போதும் மாற்றிடமுடியாத அவலங்களும்
என்னிடம் ஏராளமாயிருப்பதை..//

நீங்கள் பார்க்க நேரிட்டாலும் சொல்லுங்கள். என்னிடமும் ஏராளமிருப்பதை.

Ayyanar Viswanath said...

புலி விஜய் டி.வி இங்க வர்ரதில்ல அங்க வருதா?

காயத்ரி

அழுவாச்சி கவிதைகளோட இம்சை இப்பவாச்சிம் புரியுதா :)

முத்துலக்ஷ்மி

நிசந்தாங்க ..அதத்தான எல்லாம் பண்ணிட்டு இருக்கோம்

Ayyanar Viswanath said...

கோபி ஏன்யா இத்தன விரக்தி

முபாரக்

மிருகம் பார்த்தா ஓடும் மக்களுக்கு மத்தியில வலிமையான மிருகத்தை தேடும் நம்மோட மனநிலை சிரிப்பை வரவைக்குதில்ல :)

விமலா said...

அருமையான கவிதை ...அனைத்து
பதிவுகளையும் வாசித்து வருகிறேன்..
Nice work..

Featured Post

test

 test