Wednesday, November 28, 2007

ஆத்மாநாமை துணைக்கழைத்தபடி புனைவுகளிலிருந்து எழுதப்படும் இன்னொரு புனைவு

என்னைக் களைந்தேன்
என் உடல் இருந்தது
என் உடலைக் களைந்தேன்
நான் இருந்தது
நானைக் களைந்தேன்
வெற்றிடத்துச்
சூனிய வெளி இருந்தது
சூனிய வெளியைக் களைந்தேன்
ஒன்றுமே இல்லை....

ஆத்மாநாம்
இந்த இருக்கை உனக்கு வசதியாக இருக்கிறதா?சரியாய் அமர்ந்துகொள்...குளிர் போதுமா?...கொஞ்சம் குறைக்கட்டுமா?..குறைவாகத்தான் குடித்திருக்கிறாய்..இன்னும் வேண்டுமானால் தருவிக்கட்டுமா?..என்னிடம் போதிய சிகரெட்டுகளும் கைவசமிருக்கின்றன்..இந்த ஒரு இரவைப் பொறுத்துக்கொள் ..நான் என்னைப் பற்றி யாரிடமாவது பேச வேண்டி இருக்கிறது..எனக்கான பேச்சுக்கள் அதிகரித்து என்னை இரவில் தூங்கவிடுவதில்லை (மனமுலைகள் பெருகிப் பெருகி இன்னும் முலைகள்..) என வாழ்வில் நான் செய்திருந்த எல்லா வன்முறைகளும் இப்போது தொடர்ச்சியாய் நினைவுக்கு வருகிறது.அவை தந்த கசப்புணர்வில் என் மீதே எனக்கு குமட்டிக் கொண்டு வருகிறது....எங்காவது வாந்தி எடுக்க வேண்டியதின் உந்துதல்களில் இந்த அறையை, இரவை, உன்னை நாடி வந்திருக்கிறேன்.திலகவதி மொழி பெயர்த்திருந்த ஜாங்லீயின் தவம் என்றொரு சிறுகதை நினைவிற்கு வருகிறது, அதில் கதாநாயகி இப்படிச் சொல்வாள் "நான் தூங்கப் போகும் முன் அன்றைய தினத்தில் நான் செயத தவறுகளை நினைத்துக்கொள்வேன்.. மூடியப் போர்வைக்குள்ளிருந்து ஆயிரம் ஜோடிக் கண்கள் என்னையே பார்ப்பது போலிருக்கும்... எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் தண்டனை அது" என,என்னைப்பொருத்தவரை என் வன்முறைகளைச் சத்தமாய் வாய்விட்டுச் சொல்வதுதான் சரியானதாய்ப் படுகிறது...என் மொழி உனக்குத் தெரியாமல் போனதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சொல்லப்போனால் நீ! ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பித்தாய்...என் உளறல்களை,அபத்தங்களை,குற்றங்களை நீ! அறிந்து கொள்ள வேண்டியதின் பிரச்சினைகளிலிருந்தும் தப்பித்தாய்.

பெண்களை விட அவர்களின் பெயர்களில் எனக்கு கிறக்கம் அதிகம்.ஏனோ தெரியவில்லை..என்னுடன் பழகுபவர்களின் பெயர்களை அடிக்கடி உரக்க கூப்பிட்டுக் கொள்வது எனக்கு வழக்கமாக இருக்கிறது.என் நண்பன் ஆழியூரானைப் போலவே எனக்கும் நித்யா, அர்ச்சனா, நிவேதா, யாழினி, ப்ரியதர்ஷினி, ப்ரியா என்றெல்லாம் பெயர் வைத்திருக்கும் பெண்கள் அழகாய் இருப்பார்கள் என்ற கற்பனையும் உண்டு.இந்த நேரத்தில் எனக்கு நந்திதா என்ற பெயர் பிடித்திருக்கிறது.உன்னை நந்திதா என்றழைக்கட்டுமா?
நந்திதா
நந்திதா
நந்திதாஆஆஆஆஆஆஆ..
மன்னித்துக்கொள்..இப்படி ஆரம்பத்திலேயே உன்னை மிரட்சி அடைய செய்திருக்க வேண்டாம்.ஏனோ சத்தமாய் கூப்பிடுவதில் இப்படி கத்துவதில் உள்ளே ஏதோ ஒன்று நிறைவடைகிறது.

அகம் பிரம்மாஸ்மி, நான்,ஆத்மா,சாரீரம்,நத்திங்க்னஸ்,எம்ப்டினஸ்,நீதான் கடவுள்,உள்ளிருக்கும் புத்தர்,தேவன், சாத்தான், புனிதம், புண்ணாக்கு இப்படி ஏகப்பட்ட திரிவுகளாய் நம் வரலாறு முழுக்க, வாழ்க்கை முழுக்கத் திரித்துப்போயிருக்கின்றனர் ஏகப்பட்ட மகானுபாவர்கள்.இந்த சமயத்தில் நான் உனக்கொன்று சொல்லுகிறேன் கேட்டுக்கொள்!.. என் வாழ்வு முழுக்க நான் அலைந்து திரிந்து கண்டெடுத்தப் பேருண்மை இதுதான்.. நீ! இப்பிரபஞ்சத்தின் ஏனைய விலங்குகளோடு இன்னுமொரு விலங்கு அவ்வளவுதான்.ஒரு விலங்காய் இருப்பதை முழுமையாய் உணர்ந்துகொள்வது மட்டுமே உண்மைக்கான தீவிர தேடுதலின் முடிவாய் இருக்கமுடியும்.

சரி இந்த ஆத்ம(?)விசாரங்களை நிறுத்துவோம்.நான் வாழ்ந்திருந்த இந்த சொற்ப காலத்தினுள் என்னால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளைப் பற்றி பேசுவோம்.சொல்லப்போனால் அதற்காகத்தான் இங்கு வந்தேன்.என் நினைவிலிருப்பதை மட்டும் இப்போது பட்டியலிடுகிறேன்.
1.நீர்த்தவளை,ஓணான்,பட்டாம்பூச்சி,தெருநாய்,பாம்பு,எலி போன்ற சக விலங்குகளை/உயிரினங்களை கொல்வதில் எனக்கு மிகப்பெரிய ஈடுபாடிருந்தது.என் பால்யம் முழுக்க அவைகளைத் தேடித் தேடி கொன்று கொண்டிருந்தேன்.
2.பத்தாம் வகுப்பு கடைசித் தேர்வில்(வரலாறு புவியியல்) பின்னால் உட்கார்ந்திருந்த நண்பன் பார்த்து எழுதுகிறான் எனத் தெரிந்தும் என் விடைத்தாளினை கேள்வித்தாள் கொண்டு மூடினேன்.அந்த தேர்வில் அவன் தோல்வியுற்றான்.(அவனை திரிசூல் பாரில் மது சப்ளை செய்துகொண்டிருக்கிறவனாக சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது)
3.ஒரு சின்னஞ்சிறு கிராமத்து பெண்ணை (அவள்பருவமெய்தி ஓராண்டுதான் ஆகியிருந்தது) காதல் என்றபெயரில் துன்புறுத்தினேன்.அவளை கிளர்த்த கவிதைகளாய் எழுதிக் குவித்து,காத்திருந்து, பின்னால் அலைந்து, முதலைக் கண்ணீர் வடித்து, சிகரெட்டுகளாய் புகைத்து,எக்ஸ்பையரி ஆன மருந்தை குடித்து விடுவதாய் மிரட்டி யாருமற்ற ஒரு மதியத்தில் அவளின் உதடுகளில் முத்தமிட்டு என் காதலின் வெற்றிக்கனிகளை ருசித்தேன்.
4.எனக்காக தன் வீட்டை துறந்து, உறவுகளைத் தவிர்த்து, காத்துக்கொண்டிருந்த அதே பெண்ணை செட்டிலாகவில்லை என்றொரு சப்பைக் கட்டோடு இன்னும் நாட்களைத் தள்ளிப்போட்டேன். ஒரு கட்டத்துக்கு மேல் காத்திருப்பின் வலிகளை தாங்கமுடியாது விலகிப்போன பெண்ணைக் கொண்டு எழுதிய புனைவுகளில் என்னை அடையாளப்படுத்திக் கொண்டேன். (செத்தும் கொடுத்தாள் பாதகத்தி!)

5.வராத காதலனுக்காய் காத்துக்கொண்டிருந்த பெண்ணொருத்தி என்னை விரும்புகிறாள் என மறைமுகமாய் தெரிந்தும்,அவளை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் விலகிப்போனேன்.(அவன் அவளை என்ன செய்திருப்பான் என யாருக்குத் தெரியும்?)

6.புத்திசாலிப்பெண்ணின் புத்திசாலித்தனங்களை பொறுத்துக்கொள்ள முடியாத ஆணொருவன் அவளை விலக்கி வைத்திருந்தான்.என்னால் அவளுக்கொரு வாழ்வமைத்துக் கொடுத்திருக்க முடியுமென்கிற சூழல் இருந்தும், விட்டால் போதுமென விலகிவிட்டேன்(அவளை கிளர்த்தி கலவி கொள்ள முயற்சித்து தோல்வியுற்றதால் அந்த ஓட்டம்)
7.எவ்வித காரணங்களுமில்லாமல் கன்னியொருத்தியின் காதலை காலில் போட்டு மிதித்தேன்.அவளைத் தாங்கொனா துயரத்தில் தள்ளினேன்.அதே சமயத்தில் நடுத்தரவயதுக்காரியொருத்தியின் காதலுக்காய் ஏங்கிச் செத்தேன்.

இன்னும் என்னால் நேரடியாக/மறைமுகமாக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் ஏரளமாயிருப்பினும் இவைகளை சொல்லி முடித்த பின் ஏற்படும் ஆயாசமும் கழிவிரக்கமும் என்னைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது.
ஆனாலும் நான் சாக விரும்பவில்லை.கலைத்துப் போட்டு வாழ்வதில் எனக்கு ஆர்வம் இருக்கிறது.சூழலகளை மாற்றுவது,வழக்கத்திற்கு எதிரான செயல்களை செய்வது போன்றவற்றின் மூலமாக என் அபத்தங்களை/இருப்பை பழிவாங்கிக் கொள்கிறேன்.ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல ஒரே செயலுக்கான எதிர் செயல்களை அவ்வப்போது செய்வதின் மூலமாக 'கவனிப்பு' சாத்தியப்படுகிறது.பழகிய மூளை,பழகிய வாழ்வு என்பதிற்கும் இயந்திரத்தனத்திற்கும் என்ன பெரிய வித்தியாசம்?

நானொரு மிருகம் என்பதை ஓர் அடர்ந்த காட்டில் நிர்வாணமாய் சுற்றியலைந்த போதுதான் கண்டுகொண்டேன்.பின் அதிலிருந்து மீண்டு நகரத்தில் வசிக்கத் தொடங்கினேன்.சமூகம் என்ற ஒன்றோடு இணைந்திருக்க முயலும்போது அன்பு என்கிற மிகப்பெரிய ஆயுதத்தை மனிதர்கள் பிரயோகிக்கத் தொடங்குகிறார்கள்(குறிப்பாய் பெண்கள்).இந்த யுக்தி மிகவும் ஆபத்தானது.ஒருவரைக் கொல்வது விடவும் அவரை நேசிப்பதென்பது மிகக் கொடிய தண்டனை.நான் இந்த சூழலிலிருந்து விலகி இருக்க ஆசைப்படுகிறேன்.நாளை மீண்டும் என் சொந்த கானகத்திற்கு திரும்பிப்போகிறேன்.கடைசியாய் சொல்லிவிட்டுப் போக எனக்கு யாரும் இல்லாததால் உன்னிடம் வந்தேன்.

எல்லாம் கொட்டி முடிந்த பின் மிகவும் சோர்வாக இருக்கிறது.உனக்குப் பாடத் தெரியுமா?...எனக்காக ஒரு பாடல் பாடுவாயா?...உன் சொந்த மொழியாய் இருந்தாலும் பரவாயில்லை....இசைக்கும் பெண்ணிற்கும் மொழியென்பது அவசியமில்லை..
.......
.......
ஓ! சாரி!
கேன் யூ சிங் எ சாங் ஃபார் மீ?

FUCK YOU BASTARD ! GET LOST!!

Tuesday, November 27, 2007

நான் சொன்னா கேட்பீங்களா கவிஞர்களே?


நேற்று மாலை பூட்டைத் திறந்து உள்நுழைகையில்
குவியல்களாய் சிதறிக்கிடந்தன தரையில்
புத்தக அலமாரியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்குமோவென
அஞ்சி நோக்குகையில் இறுகப் பூட்டப்பட்டிருந்தது அலமாரி.
கொஞ்சம் குனிந்து உற்றுப்பார்த்தேன் இப்படி இவைகள் கிடந்தன

அன்பே சுயம் பிரதி நெஞ்சு வெளி
காதல் தேடல் துயரம் மரம்
மழை யோனி இருப்பு வலி துடிக்குது ப றவை
குடை அவஸ்தை வாழ்வு சாம்பல்
விழி நாப்கின் நான் உதிரப்பெருக்கு கசிவு பிறழ்வு நீ புணர்ச்சி
இமை வசீகரம் திரிபு பின்னிரவு
புன்னகை நீட்சி புலம்பல் நதி
உதடு மீட்சி உயிர் இயங்குதல் பெருவெளி
முத்தம் ஈரம் குறி போதை
இடை தனிமை முலை
சடை பிரிவு வேதனை அவ நம்பிக்கை
ரோஜா பிரியம க ட்டுடைத்தல் இதயம்
மல்லிகை ஈரம் பிம்பம்


நான் வந்ததை உணர்ந்ததும் விழித்துக்கொண்டவை
ஒரே சமயத்தில் பேச ஆரம்பிக்க அவை கூச்சல்களாய் முடிந்தது ஒவ்வொன்றாய் முன் வந்து சொல்லும்படி வலியுறுத்தினேன்
அன்பே காதல் இமை மழை குடை மிகவும் இளைத்துபோயிருந்ததன
"பேனாவை கையிலெடுக்கும் எல்லா பேமானியும் எங்களைத்தான் எழுதறானுங்க 'த்தூ' "என ஒரே குரலில் சொல்லிற்று
சுயல் தேடல் தனிமை இருப்பு அவஸ்தை ஓரணியாய் வந்தன
மிகவும் நைந்துபோன அவைகள்
சன்னமான குரலில் புலம்பிற்று'விட்டுடச் சொல்லுங்க எங்கள'
வலி துயரம் வேதனை பிரிவு துயரம் தாங்கொணா கோபத்திலிருந்தன
"எங்கள் எழுதும் எல்லா நாதாறிகளும் பலருடன் சல்லாபித்து மூக்கு முட்ட குடிச்சிட்டு வாழ்வ கொண்டாடுதுங்க எழுத ஆரம்பிச்சா மட்டும் எங்கள இழுக்குதுங்க மசிர்" என்றன.
குறி முலை யோனி உதிரப்பெருக்கு எல்லாம் ஒன்றுசேர்ந்து உரக்கச் சொல்லியதை சபையில் பகிர விருப்பமில்லை
வெளி பெருவெளி மரம் பறவை பிறழ்வு பிரதி திரிபு கட்டுடைத்தல் கொஞ்சம் பூசினாற்போலிருந்தன
அவைகள் சத்தமாய் சொல்லிற்று
"இந்த பிந பொறம்போக்குங்க கட்டுடைக்கும் களவாணிகள பொத்திட்டு இருக்க சொல்லுங்க"
சத்தமில்லாமல் அவ்வப்போது புன்னகைத்தபடி கேட்டு முடித்தேன்

ஆகட்டும் பார்க்கலாம் சொல்லிப்பார்க்கிறேன் என
தேர்ந்த அரசியல்வாதியின்
சாயல்களோடு அவைகளை அனுப்பி
கதவை
சாத்தினேன்
நான் சொன்னா கேட்பீங்களா கவிஞர்களே?

Sunday, November 25, 2007

சில வியாழக்கிழமை பிற்பகல்களும் ஒரு காதலும்



காதல் உணர்வு எதனால் வருகிறது?ஒரு பெண் ஆணின் மீதும் ஆண் பெண்ணின் மீதுமாய் எதனால் காதல் கொள்கிறார்கள்?உடலின் தேவை,பாலியல் ஈர்ப்பு என்பதோடு மட்டும் காதல் முடிவடைந்துவிடுகிறதா? அல்லது அதையும் தாண்டி புனிதமானது என்பது போன்று வேறேதேனும் காரணங்கள் இருக்கிறதா?சூழல், சமூகம், வாழ்வியல் முறை என்பதையெல்லாம் தாண்டி அல்லது ஒரு பொருட்டாய் மதிக்காமல் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட எது தன்முனைப்பாய் இருக்கிறது? என்பது போன்ற சிந்தனைகளை The Brief Encounter திரைப்படம் கிளரச்செய்தது.1945ல் வெளிவந்த பிரிட்டிஷ் திரைப்படமிது.இதன் நாடக வடிவம் 1936 களின் இறுதியிலேயே நிகழ்த்தப்பட்டது எனினும் இரண்டாம் உலகப்போரினால் ஒன்பது வருடங்கள் தாமதமாக 1945 ல் இந்நாடகம் திரைப்படமாக்கப்பட்டது.டேவிட் லீனின் இயக்கத்தில்
வெளிவந்திருந்த இப்படத்தில் லாரா கதாபாத்திரமாக Celia Johnson நடித்திருக்கிறார்.

ஏற்கனவே திருமணமான ஆணும் பெண்ணும் காதல் வயப்படும் கதை.புறநகரில் அன்பான கணவன் மற்றும் குழந்தைகளோடு வசிக்கும் இல்லத்தரசி லாரா எல்லா வியாழக்கிழமைகளிலும் நகரத்திற்கு வருவாள்.கடைவீதிக்கு சென்றுமுடித்த பின் மதிய திரைப்படக்காட்சி ஒன்றை பார்த்துவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.ஒரு நாள் ரயில் நிலைய புத்துணர்வு அறையில் Alec Harvey (Howard) யை சந்திக்கிறாள்.அலெக் ஒரு டாக்டர் திருமணமான இரண்டு குழந்தைகளின் தகப்பன்.இருவரின் ரசனைகள், நாகரீக அனுகுமுறைகள், பேச்சுக்கள் எல்லாம் பிடித்துப்போகவே அடுத்த சந்திப்பிற்காக ஏங்க ஆரம்பிக்கிறார்கள்.அடுத்த சந்திப்பில் காதல் வயப்படுகிறார்கள்.வியாழக்கிழமைகளில் மதியம் 12.30 திலிருந்து இரவு 9.30 வரைக்குமாய் இணைந்திருக்கிறார்கள். திரைப்படம், படகு சவாரி, கார்ப்பயணம் என இவர்களின் காதல் மெல்ல இறுக்கமாகிறது.லாரா ஒவ்வொரு வாரமும் தன் கணவனிடம் தகுந்த பொய்களை மிகுந்த உறுத்தல்களோடு சொல்கிறாள்.தனிப்பட்ட காதலும் பொதுப்பட்ட வாழ்வும் லாராவை அலைக்கழிக்கிறது.போகவே கூடாதென்னும் அவளது உறுதிப்பாடுகள் வியாழக்கிழமைகளில் காணாமல் போகிறது.


தன் நண்பனின் அறைக்கு ஒரு நாள் லாரவை கூட்டி செல்கிறான் அலெக்.அப்போது எதிர்பாராத விதமய் அலெக்கின் நண்பன் அறைக்குத் திரும்புகிறான்.லாராவை பின்புறமாய் வெளியேற்றிவிட்டு நண்பனை வரவேற்கிறான்.அந்த நிகழ்வில் திடுக்கிட்டு அவமானமடைந்த லாரா அவர்களின் உறவின் அபத்தங்களை உணர்ந்துகொள்கிறாள்.இரவில் ஆளற்ற சலையில் மழையில் நனைந்தபடி ஓடுகிறாள்.யாருமற்ற ஓரிடத்தில் புகைத்தபடி வெகுநேரம் அமர்ந்திருக்கிறாள்.பின் பிரிந்துவிடுவது மட்டுமே இத்தகைய அலைகழிப்புகளுக்கு தீர்வாய் இருக்க முடியும் என முடிவெடுக்கிறாள்.இருவரும் பேசி பிரிவதென்று முடிவெடுக்கிறார்கள்.தொந்தரவுகளுடன் நேரிடும் பிரிவின் துயர் தாளமல் ஒரு கணம் தற்கொலைக்கு முயன்று பின் மீள்கிறாள் லாரா.அவளின் சமீபத்திய சலனங்களை புரிந்துகொள்ளும் கணவன் என்னிடம் திரும்ப வந்ததிற்கு நன்றி என கட்டிக்கொள்கிறான்.

திருமணமான ஆண் எவ்வித உறுத்தல்களும்,தயக்கங்களும்,அலைக்கழிப்புகளும் இல்லாமல் இன்னொரு பெண்ணை மிகுந்த சுதந்திரத்தோடு காதலிக்கிறான்.ஆனால் திருமணமான பெண்ணிற்கான காதலில் இந்த சுதந்திரம் இருப்பதில்லை.தாய் என்கிற இன்னொரு வடிவம் பெண்ணிற்கான தனிப்பட்ட வாழ்வினை கேள்விக்குட்படுத்துகிறது.கணவன் நல்லவனாய் இருப்பதையும் மீறி பெண்ணிற்கான தேவைகள் தன் எல்லைகளை நீட்டிக்கிறது.அந்த சுதந்திர தன்மை தன் அழகியலையும்,அபத்தங்களையும்,அலைக்கழிப்புகளையும் உள்ளடக்கி இருக்கிறது.
ஒரு பெண்ணின் மன உணர்வுகளை துல்லியமாய் இந்தத் திரைப்படம் பதிவு செய்திருக்கிறது.



பெரும்பாலான காட்சிகள் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.கடைசி ரயிலை பிடிக்க ஒரு பிளாட்பாரத்திலிருந்து இன்னொரு பிளாட்பாரத்திற்கு ஓடுவது, சப் வே யில் முத்தமிடுவது, தவிப்புகளோடு காத்திருப்பது, துயரங்களோடு பிரிவது, தற்கொலைக்கு முயன்று வீச்சமான வெளிச்சத்தில் பயந்து பின் வாங்குவதென இவர்களின் காதல் முழுக்க முழுக்க ரயில் நிலையம் சார்ந்தே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.திரைப்படம் லாராவின் தன் சார்ந்த மொழியாய் வெளிப்பட்டிருப்பது ஒரு நாவலை படிக்கும் மன உணர்வை தருகிறது.திருமணமாகி காதலித்து கொண்டிருப்பவர்கள் இப்படத்தை தவிர்ப்பது நல்லது.என் நண்பனொருவனால் முழுமையாய் பார்க்கமுடியவில்லை.இத் திரைப்படத்தின் வீச்சம் அவனை அலைக்கழிப்புக்குள்ளாக்கியது.

Tuesday, November 20, 2007

மாலாவிற்கு மல்லிகா என்றும் பெயர்..



எனக்கு வயது முப்பத்தி மூன்று.என் பெயருக்கும் இந்த கதைக்கும் எவ்வித தொடர்பும் இல்லாததால் அது அவசியமில்லை.பஜாரிலிருக்கும் என் அரிசி மண்டிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கோரிமேட்டுத் தெரு இறக்கத்தில்தான் அந்த சிந்தனை தோன்றியது.கல்நகரை கடந்து முகல்புறா தெருவிற்குள் நுழையும்போது தீர்மானித்துவிட்டேன்.நாளையிலிருந்து குடிப்பதை நிறுத்திவிடவேண்டும்.பஜாருக்குள் நுழைந்தபோது சிகரெட்டையும் நிறுத்திவிடத் தோன்றியது.சைக்கிளை மண்டிக்கு முன்னால ஸ்டாண்ட் போடும்போது நாட்களைத் தோராயமாக கணக்கிட்டு செய்யும் அதையும் நிறுத்திடவிடவேண்டும் என கறுவியபடி முடிவெடுத்தேன்.எப்போதிலிருந்து குடித்துக் கொண்டிருக்கிறேன் எனக் கணக்கிட்டுப்பார்த்ததில் பதினாறு வருடங்கள் ஓடிப்போயிருந்தது பெரிய அதிர்ச்சியாய் இருந்தது.இன்று இந்த சிந்தனையும் கழிவிரக்கமும் தோன்ற நேற்று என் கடைச் சிப்பந்திகளை அவர்கள் மனைவி சகிதமாய் பாலசுப்பிரமணி தியேட்டரில் பார்த்ததே காரணமாய் இருந்திருக்க வேண்டும். என்னை எதிர்பார்த்திராத சிப்பந்திகள் நெளிந்ததும்,நானும் ஒப்புக்குப் புன்னகைத்து தியேட்டருக்கு உள்ளே போனதும்,படம் போட்ட பத்து நிமிடத்தில் எழுந்து வீட்டுக்கு வந்ததும் ஏன் எனத் தெரியவில்லை.நான் ஒன்றும் அந்த அளவிற்கு பொறாமைக்காரனும் இல்லை.என் இயலாமைகளின் தாங்க முடியாத கழிவிரக்கம் நேற்று முழுக்க தூங்க விடாமல் செய்துவிட்டிருந்தது.

சொன்னால் நம்புவீர்களா?என் முப்பத்தி மூன்று வருட வாழ்வில் எந்த ஒரு பெண்ணையும் நேசித்ததில்லை நேசிக்கப்பட்டதுமில்லை.பெண்ணொருத்தியின் வாசமோ,தீண்டலோ எதுவும் தெரியாதெனக்கு.ப்ளஸ் டு படிக்கும்போது கவிதாவும் நானும் அதிகாலையில் டியூசனுக்கு போகும் வழியில் தொடர்ச்சியாய் ஒரே இடத்தில் பார்த்துக்கொள்வோம்.அந்த நிகழ்வை கனவில் நீட்டிக்கொண்டதோடு என் இளமைக்காலம் முடிந்துபோய்விட்டது.அம்மாவோ,சகோதரியோ, சகோதரனோ யாருமில்லாத தனி ஆள் நான்.ப்ளஸ் டு முடித்த கையோடு மண்டியில் என்னை ஏற்றிவிட்டு என் அப்பா இறங்கி கொண்டார்.அவரை வாரத்தில் ஒரு நாள் வீட்டில் பார்ப்பதே அதிசயம் அதுவும் நிலைகொள்ளா போதையிலிருப்பார்.சக்தி தியேட்டர் மேட்டிலோ,முருகர் கோயில் பள்ளத்திலோ எனக்கு சித்தியோ சித்திகளோ இருக்கலாம்.
நண்பர்களென்று பெரிதாய் யாருமில்லை வெல்ல மண்டி சிவா மட்டும் கொஞ்சம் நெருக்கமாக பழகுவான் வயதில் சிறியவன் என்பதால் அவனோடும் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்வதில் சிக்கல்களிலிருந்தது.ஞாயிற்றுக்கிழமைகளில் அவனோடுதான் குடிப்பேன்.(குடியைப் பற்றி அதிகம் பேசுவதால் குடிகாரனென நினைத்துவிடாதீர்கள் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை குடிப்பேன் அவ்வளவுதான்.)

ஒருமுறை குடித்துக் கொண்டிருக்கும்போது சிவாவிடம் சொல்லிவிட்டேன்,அவன் அந்த போதையிலும் வெகுநேரம் சிரித்துக் கொண்டிருந்தான்.
"நீயெல்லாம் எதுக்கு ஒரு மனுசன்னு கீற! பேசாம செத்துடு!" என எக்களித்தான்.
"சரி இன்னா பொண்ணுதான இரு" என யாருக்கோ தொலைபேசினான்.நடுவில் வந்தான்
"இந்தா பார்ணா ஒரு புது பீஸ் வந்துகீதாம்! கொஞ்சம் செலவாவும் ஓகே வா?" என்றான் எனக்கு படபட வென இருந்தது.போதை குப்பென இறங்கி விட்டதாய் உணர்ந்தேன்.ஒரு திடத்திற்கு வந்து
"எவ்ளோ ஆனாலும் பரவால்ல சிவா!" என்றேன் அவன் மறுபடி வெகுநேரம் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.
"செரி மல்லிகா நம்பர் கொடு! என யாரிடமோ நம்பர் வாங்கி யாரிடமோ வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தான் எனக்கு நிலைகொள்ளாமலிருந்தது.கடைசியாய் வந்து
"நாளைக்கு பாத்துக்கலாம்ணா..புதுசு பிக்ஸ் ஆயிடுச்சாம்.. என் ரெகுலர் ஒண்ணு இருக்கு மல்லிகான்னு..அவளும் இன்னிக்கு ஃப்ரீயா இல்லையாம்..செரி வுடு! அப்புறம் பாத்துக்கலாம்" என்றபோது எனக்கு எங்கிருந்தோ ஒரு ஆசுவாசம் வந்து படர்ந்தது.அதுவரை அடித்துக்கொண்டிருந்தது ஒரு இயல்பு நிலைக்குத் திரும்பியது.ஒருவகையான திருப்தியோடு வீட்டுக்குப் போய்விட்டேன்.அதற்கு பிறகு சிவாவும் இதுகுறித்து எதுவும் பேசவில்லை.

உத்தமனாக தீர்மானித்த இன்றைய நாள் சந்தோசமாயிருந்தது.காலையிலிருந்து பிடித்திருக்க வேண்டிய ஐந்து சிகரெட்டுகளைத் துறந்திருந்தேன்.சாயந்திரம் ஏழு மணி வாக்கில் பெரிய கோயிலுக்குப் போனேன்.இதே ஊரிலிருந்தும் கோயில் பக்கம் எட்டிக் கூட பார்ப்பதில்லை. கடைசியாய் எப்போது பெரிய கோயிலுக்கு வந்தேன் என தெரியவில்லை.இப்போதெல்லாம் கோவிலில் கூட்டம் அதிகரித்து விட்டது.எங்கு பார்த்தாலும் கம்பித் தடுப்புகளும் மரத்தடுப்புகளுமாய் கோயிலின் அழகையே இந்த பெருங்கூட்டம் சிதைத்து விட்டிருந்தது.பிரகாரத்திற்கு போகாமல் ஆயிரங்கால் மண்டப படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்தேன்.

அப்போதுதான் என் வாழ்வில் முதன்முதலாய் அது நிகழ்ந்தது.குட்டை கோபுரத்திலிருந்து வீழ்ந்த மங்கிய வெளிச்சத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.ஒடிசலாய் சாதாரண உயரத்தில் தலைநிறைய மல்லிகைப்பூவோடும் கண்களுக்கு அடர்வாய் மையோடும் என் பக்கமாய் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள்.வெகு நாட்கள் கழித்து ஒரு பெண்ணை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.எனக்கே தெரியாமல் எங்கே அந்த பெண்ணை நெருங்கி விடுவேனோ என பயந்துபோனேன்.(ஒரு முறை என் மண்டியில் சாப்பிட்ட மத்தியான மயக்கத்தில் அமர்ந்துகொண்டிருந்தபோது வழக்கமாய் மண்டி கூட்ட வந்த தாட்டியான பெண்ணை அதிக நேரம் உற்றுப் பார்த்தேன் பின்பு எனக்கே தெரியாமல் அவளை மூர்க்கமாய் அணைக்க அவள் திமிறி கையிலிருந்த விளக்குமாற்றால் என்னை அடித்துவிட்டு வெளியேறினாள்)ஆனால் அவள் என்னை நோக்கி வந்தாள்.உலக அதிசயங்களில் இந்த நிகழ்வையும் தாராளமாய் சேர்க்கலாம்."என்னை உங்களுக்கு தெரியுமா? ரொம்ப நேரமாக பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே" என அவள் கேட்டபோது என் காலடியில் தரை நழுவியது.நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

ஒரு வழியாய் பதட்டத்தை ஒதுக்கி இளித்தேன்."நீங்க ரொம்ப அழகு" என உளறிக் கொட்டினேன்.அவள் மென்மையாய் சிரித்தாள் அப்படியா? என்றாள்.எனக்கு சற்று தைர்யம் வந்தது."நீங்க எங்க இருக்கிங்க?..உங்க அப்பா அம்மா யார்?.. நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.. உங்களுக்கு சம்மதமா? என்ற போது அவள் பெருங்குரலில் விடாமல் சிரித்தாள்."என் பேராவது தெரியுமா உங்களுக்கு? என்றபோது அந்த சங்கடத்திலிருந்து என்னை மீட்டெடுக்க நான் பார்த்திருந்த தமிழ் சினிமாக்கள் அத்தனையும் கை கொடுத்தன.பெயர் முக்கியமா?போன ஜென்ம தொடர்பு என்றெல்லாம் விடாமல் பேசினேன்.ஒருவழியாய் என் வாழ்வில் அந்த மேஜிக் நிகழ்ந்தது.அவளின் விலாசம் வாங்கினேன் நாளை வருவதாய் சொல்லிவிட்டு வீட்டுக்கு திரும்பியபோது கடைத்தெருவில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு 'இருளோ' வென இருந்தது ஆனால் மனசில் மட்டும் வெளிச்சமடித்துக் கொண்டிருந்தது.அத்தோடு மாலா! மாலா! என மனம் பிதற்றியபடியிருந்தது,அதுதான் அவள் பெயர்.. எத்தனை இனிமை பாருங்கள்! இரண்டே எழுத்து.. இந்த பெயரில் எந்த பெண்ணையும் இதுவரை கேள்விப்பட்டிராததும் கூடுதல் மகிழ்ச்சியளித்தது.

எனக்கு வெகு நாட்களாய் சமைத்துப் போட்டுக்கொண்டிருக்கும் தூரத்து பாட்டி சகிதமாய் அவள் வீட்டிற்கு போனது கூட தேவையில்லாத ஒன்றாய்த்தான் பட்டது. ஒரே ஒரு பாட்டியைத் தவிர அவளுக்கும் யாருமில்லை.அவளை நான் பேசவே விடவில்லை இரண்டே நாளில் திருமணம் என சொல்லி சம்மதிக்க வைத்தேன்.அவள் எதையோ சொல்ல வரும்போதெல்லாம் அவள் வாயை அடைத்தேன்.("என்ன மிஞ்சி மிஞ்சி போனால் பணமில்லை என்பாள் அல்லது யாரையாவது காதலித்து ஏமார்ந்ததாய் சொல்வாள் அவ்வளவுதானே!) அன்று என் கண்ணில்பட்டவர்களுக்கு மட்டும் என் திருமண செய்தியை சொன்னேன்.சிவா வெளியூர் வசூலுக்குப் பாண்டிச்சேரி போயிருந்தான் அவனுக்கு இந்த திடீர் காதல் கல்யாணம் எல்லாம் பெரிய ஆச்சர்யத்தை கொடுக்ககூடும்.முதலிரவு பற்றிய சங்கதிகளை எல்லாம் நான் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை ஆனால் இந்த உலகத்தில் பெண்ணைத் தவிர உசத்தி வேறெதுவும் இல்லை.

மூன்று நாள் கழித்து சிவா வந்தான் கலக்கிட்டணே! என்று கட்டிக்கொண்டான்.மாலாவைக் கூப்பிட்டு சிவாவிற்கு காபி எடுத்து வரச்சொன்னேன்.மாலா காபி கொடுத்து விட்டு அவசரமாய் உள்ளே போய்விட்டாள் சிவா முகம் திடீரென இறுகிப்போனது.
"ஆனாலும் உங்களுக்கு பெரிய மனசுண்ணே! என்றான் எனக்கு ஒன்றும் புரியவில்லை.கொஞ்ச நேரம் முழித்தேன்.சிவா மெல்ல சகஜமாகி "இவங்க பேரையும் மாத்திட்டிங்களா மல்லிகாவே நல்லாருந்ததே" என கண் சிமிட்டினான் எனக்கு இருட்டிக்கொண்டு வந்தது பொதுவாய் சிரித்து வைத்தேன் அவன் போனபிறகு உள்ளே வந்தேன் மல்லிகா என்ற மாலா கதவிற்கு பின்னால் தலைகுனிந்த படி நின்றுகொண்டிருந்தாள்.

எனக்கு நினைவழிந்து போகும் வரை குடிக்க வேண்டும் போலிருந்தது.

Monday, November 19, 2007

கோபி கிருஷ்ணன் - இறப்பு,எழுத்து மற்றும் வாழ்வு



மே 10,2003 ல் தன் இறுதி சடங்கிற்கான பணத்தைக்கூட சேர்த்து வைத்துக் கொள்ள முடியாமல் / தன் குடும்பத்தினருக்கு தந்திடாமல் இறந்துபோனான் தமிழின் மிகச் சிறந்த சிறுகதையாளன் கோபி கிருஷ்ணன்.ஒரு உண்மையான கலைஞனின் வாழ்வைப் போலவே மரணமும் பெரும் அலைக்கழிப்பாய் இருப்பது தமிழ்சூழலுக்கு ஒன்றும் புதிதில்லை.ஒருவேளை இவ்விதம் இறப்பது மட்டுமே உண்மைக்கான சரியான அடையாளமாய் இருக்கும் என்பதுபோன்ற தீர்மானங்களையும் நாம் நாளையடைவில் பெற்றுவிடக்கூடும்.

கோபி கிருஷ்ணன் தன்னுடைய உயிர்ப்பு - நாட்குறிப்பு பதிவுகள் எனும் ஒரு சிறுகதையில்(குறிப்புகளை சிறுகதையாக்கிய நவீன பாணி எழுத்தாளுமைகளை நிறைவேற்றிக் காட்டியவர்களில் இவர் முக்கியமானவர்)இவ்வாறு சொல்லியிருப்பார்,
12.89' இன்று நிறைய நண்பர்களைப் பார்த்ததில் மனம் சந்தோஷத்தால் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது.இன்றைக்கு இந்த சந்தோஷத்திலேயே செத்துப்போனால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்று எண்ணத் தோன்றிற்று.அந்த நைட்டிங்கேல் பறவையின் நாத இனிமையில் சாக விரும்பிய கீட்ஸ் நினைவில் நின்றார்.அந்த இளம் அழகி கொடுத்த அன்னியோன்ய சந்தோஷத்தின் பூரணத்துவத்தில் தன்னை மாய்த்துக்கொண்ட 'அப் அட் த வில்லா'வில் வரும் கார்ல் என்ற கதாபாத்திரம் மனதில் தங்கிற்று.இன்று கிடைத்த மனநிறைவு மீண்டும் கிடைக்குமா என்கிற ஏக்கம் மனதில் தோன்றி நிலைத்தது.


தோழமை மிக்க மனிதராக,விமர்சனங்களின் மீதும் காழ்ப்புணர்வுகளின் மீதும் எப்போதும் நம்பிக்கை கொண்டிராத,நண்பர்களை மிகவும் நேசித்த கோபிகிருஷ்ணனின் மரணத்திற்கு மிக சொற்பமானவர்களே குழுமி இருந்தனர்.வளர்மதி உள்ளிட்ட நண்பர்கள் அவரது இறுதி சடங்கிற்கான பணத்தை திரட்டித் தந்திருக்கிறார்கள்.வெளி ரங்கராஜன்,லதா ராமகிருஷ்ணன் போன்றோர் திண்ணை மூலமாக சிறுதொகை யொன்றை கோபி கிருஷ்ணனின் குடும்பத்திற்கு திரட்டித் தந்திருக்கின்றனர்.நிதியுதவி அளித்தோர் பட்டியலில் தமிழின் ஆகச்சிறந்த,வசதி படைத்த படைப்பாளிகளின் பெயர்களைத் தேடிப்பார்த்ததில் வெறுமையே எஞ்சியது.

விளிம்பு நிலை மனிதர்கள்,கீழ்த்தட்டு மனிதர்கள்,நடுத்தர வர்க்கம்,அதிகாரங்களுக்குப் பழகிய இயந்திரமயமாகிப்போன மனிதர்கள் என இவரது கதைமாந்தர்கள் இயலாமையின் உச்சத்திலிருந்து சமூகத்தின் போலி மதீப்பீடுகளை விசாரணைக்குள்ளாக்குபவர்கள்.உளவியல் சிக்கல்கள்,அக மனதின் விசாரங்கள் என இவரது துறை சார்ந்த செறிவான உள்ளீடுகளையும் இவரது படைப்பில் காணலாம்.வாழ்வின் மீது மறைமுகமாகப் படிந்துபோயிருக்கும் குரூரத்தினை தனது அடையாளமாகவே ஏற்றுக் கொள்ளும் வாழ்வின் உச்சகட்ட இயலாமைகளை மிகவும் புதுமையான ஒரு நடையில் நமக்கு அறிமுகப்படுத்துவதாகவே இவரது கதைகள் இருக்கின்றன.

இவரது படைப்புகள் ஒவ்வாத உணர்வுகள்,முடியாத சமன்,உணர்வுகள் உறங்குவதில்லை,தூயோன்,மானிட வாழ்வு தரும் ஆனந்தம்,டேபிள் டென்னிஸ்,உள்ளிருந்து சில குரல்கள்,இடாகினிப் பேய்களும்-நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும் என்னும் பெயர்களில் புத்தகங்களாக வந்துள்ளது.இதில் உள்ளேயிருந்து சில குரல்கள் நாவல் வடிவத்திலும்,உணர்வுகள் உறங்குவதில்லை குறுநாவல் தொகுதியாகவும்,டேபிள் டென்னிஸ் குறுநாவலாகவும்,மற்றவைகள் சிறுகதைத் தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளது.இவரது உள்ளிருந்து சில குரல்கள் உளவியல் ரீதியிலான சிக்கல்களை பேசும் மிகச் சிறந்த நாவல்.கோபி கிருஷ்ணனின் மாஸ்டர் பீஸ் என பெரும்பாலானவர்களால் இவரது டேபிள் டென்னிஸ் கொண்டாடப்படுகிறது.இது தவிர்த்து பல உளவியல் கட்டுரைகளும்,மொழிபெயர்ப்பு கட்டுரைகளும் இவரால் எழுதப்பட்டிருக்கிறது.இவரது படைப்புகளை முழுத்தொகுதியாய் வெளிக்கொண்டு வந்தால் அத்தொகுப்பு தமிழின் சிறந்த அடையாளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மதுரையில் பிறந்த கோபிகிருஷ்ணன் உளவியல் துறையிலும்,சமூக சேவை துறையிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். ஆத்மன் ஆலோசனை மையம் என்ற அமைப்பை உருவாக்கி, மனநல ஆலோசகராக சில காலம் பணியாற்றியுள்ளார். பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் சமூக சேவகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு.எந்த ஒரு வடிவிலும் குரூரத்தை தாங்கிக் கொள்ளாத மனநிலையே இவருக்கு வாய்த்திருக்கிறது.இவரது மானிட வாழ்வு தரும் ஆனந்தம் எனும் சிறுகதைத் தொகுப்பில் இந்த மென்மையான மனதைப் பார்க்கலாம்.காசாப்புக் கடையில் ஆட்டின் கழுத்தை அறுக்கும் வன்முறையை பார்த்த காட்சி அவனை மதிய உணவை சாப்பிட விடாமல் செய்வதை ஒரு துண்டு சிறுகதையிலும் சாலையோர பிச்சைக்காரனுக்கு தினம் உணவளிக்கும் இன்னொருவனை நடைபாதை உறவு எனும் சிறுகதையிலும் காணலாம்.அதிகார மய்யங்களுக்கெதிரான குரலை எழுப்ப முடியாமல் போவதின் துயரங்களையும் எழுப்புகிறவன் மீதெழும் இயல்பான கவர்ச்சி மற்றும் இயலாமைகள் ஆசான் சிறுகதையில் நேர்த்தியாய் வெளிப்பட்டிருக்கும்.

கோபி கிருஷ்ணனின் வாழ்வையும் எழுத்தையும் தனித்தனியே பார்க்க முடியவில்லை வாழ்வே எழுத்தாகவும் எழுத்தே வாழ்வாகவும் கொண்ட சொற்பமான மனிதர்களுள் கோபி கிருஷ்ணன் முக்கியமானவர்.அதிகமான மனவழுத்தம் காரணமாக பலமுறை தற்கொலைக்கு முயன்றவர்.தொடர்ந்து சாப்பிட்டு வந்த உளநல மருந்துகள் ஏற்படுத்திய பலகீனம் காரணமாக் நோய்மையுற்று இறந்தார்.ஆத்மாநாமினுடையது போன்ற வெளிப்படையான தற்கொலை இல்லையெனினும் இதுவும் ஒருவித மறைமுக தற்கொலையாகவே அவரது நெருக்கமானவர்களால் சொல்லப்படுகிறது.பிரதியூடான வாசிப்புகளை புதுமைப்பித்தன் வரை நிகழ்த்திக் காட்டிய மார்க்ஸ் உள்ளிட்ட அறிவுஜீவிகள் கோபி கிருஷ்ணனை எப்படி அனுகுகிறார்கள் எனத் தெரியவில்லை.எப்படியிருப்பினும் மிக நேர்மையான எழுத்து என்பதற்கு இவரை உதாரணமாக சொல்லலாம்.

தொடர்புடைய சுட்டிகள்
மேதமைகளைப் பின் தொடரும் இருண்மை-அய்யனார்
கோபி கிருஷ்ணனின் பீடி சிறுகதை
கோபி கிருஷ்ணன் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசம்
தமிழ் விக்கி பீடியாவில் கோபிகிருஷ்ணன்
உருபடாதது நாரயணனின் சிலாகிப்பு

Saturday, November 10, 2007

பெயர் மறந்துபோன அந்தப் பையனும் கருணையின் சாயல்களற்ற கண்களைக் கொண்ட பூங்குழலியும்



அந்தப் பையன் இரண்டாவது ஷிப்டில் வந்து மிகுந்த தயக்கங்களோடு என் பைக் சாவி கேட்டான்.ஏதோ அவசர வேலையிருப்பதாகவும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாகவும் சொன்னான்.நான் அப்போது கருப்பு நிற சுசுகி பைக் வைத்திருந்தேன்.எனக்கு மிகப் பிடித்தமான வண்டி.அதை வைத்திருந்த நான்கு வருடங்களில் எனக்கெந்த விபத்தும் நேரவில்லை.எவ்வளவு குடித்தாலும் அந்த பைக் என்னை எந்த சிக்கலுமில்லாமல் வீட்டில் சேர்த்துவிடும் என்ற நம்பிக்கையும் எனக்கிருந்தது.அவன் கேட்ட விதம் பிடித்திருந்ததால் தயங்காமல் சாவி கொடுத்தேன்.தரக்கட்டுப்பாடு பிரிவில் பரிசோதகனாக வேலை பார்த்தான் அந்தப் பையன். அதற்கு முன் அவனிடம் பேசியது கூட இல்லை மேலும் அவன் ஒரு அப்ரண்டிஸ் பையன் என்பதாலும் அவன் என்னிடம் பேசவோ, நான் அவனிடம் பேசிக்கொள்ளவோ சந்தர்ப்பம் வாய்த்ததில்லை.இரண்டு மணி நேரம் கழித்து ஆனந்த் வந்தான்.ஆனந்த் தரக் கட்டுப்பாடு பிரிவிலும் நான் உற்பத்தி பிரிவிலும் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தோம்.

அந்தப் பையனை ரொம்ப நேரமாக காணவில்லை இந்த பக்கமாக வந்தானா?எனக்கேட்டதற்கு என்னிடம் பைக் வாங்கிப்போன தகவலை சொன்னேன்.ஆனந்த மிகவும் கோபப்பட்டான் வேலை நேரத்தில் இப்படிப் போவதற்கு எப்படி அனுமத்தித்தேன் என்றும் பைக் வேறு கொடுத்தா அனுப்புவது என்றும் சத்தம் போட்டான்.மேலும் அந்தப் பையன் ஆறு மாதத்திற்கு முன்புதான் பைக்கில் விழுந்து வாறினான் என்ற தகவலையும் சொன்னான்.தொடையிலும் நடுமுதுகிலும் ப்ளேட் வைத்திருப்பதாயும் எந்த வாகனத்தையும் ஓட்டக்கூடாது என்றும் அவன் சொன்ன தகவல்கள் சின்ன அதிர்ச்சியை வரவைத்தது.ஷிப்ட் முடிய 1 மணி நேரம் இருக்கும்போது வந்தான்.தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டபடி சாவியை கொடுத்தான்.நான் எதுவும் பேசாமல் வாங்கிக்கொண்டேன்.அவன் திரும்பி வந்ததே போதும் என்ற மனநிலை அப்போது வந்துவிட்டிருந்தது.

நான் பணிபுரிந்த நிறுவனம் சுற்றுச் சூழல் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளில்(ஐஎஸ் ஓ 14001 & 18001) சான்றிதழ் வாங்க விரும்பியது. அதற்கான பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.பணிப்பாதுகாப்பு சம்பந்தமாக எங்கள் நிறுவன மருத்துவமனைக்கு தொடர்ச்சியாய் செல்ல வேண்டி வந்தது.மருத்துவமனை மருந்தகப் பிரிவில் பூங்குழலி வேலை பார்த்தாள். அவளிடம் சில தகவல்களைப் பெற வேண்டி இருந்தது.பெண்கள் இருக்கும் சூழலில் பணிபுரிவது மிகுந்த சந்தோஷமான ஒன்று. ஆனால் எனக்கந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இயந்திரவியல் துறை என்பதாலும் அதிலும் உற்பத்திப் பிரிவு என்பதாலும் என் பணியிடங்களில் பெண் வாசனையே இல்லாதிருந்தது.(இந்தியாவில் கடைசியாய் பணிபுரிந்த நிறுவனத்தில் மட்டும் விஜயலட்சுமி இருந்தாள்.சக ஆணை விட சக பெண்ணுடன் பணிபுரிவது பல விதங்களில் இணக்கமானது.தொழில்நுடப விவரங்கள்,பணிகுறித்தான தகவல்களை சுலபத்தில் ஒரு பெண்ணிடமிருந்து வாங்கிவிடலாம் (என் சமீபத்திய நண்பர் அடிக்கடி சொல்வதுபோல ஒட்டுகாஜ் அல்லது ஓசிகாஜ் அடிப்பது சுலபம்))

ஆனால் பூங்குழலியிடமிருந்து நான் தகவல்கள் வாங்க சற்று சிரமப்பட வேண்டியிருந்தது.அரைமணி நேரத்திற்கொருமுறை கேண்டீன் போக வேண்டியிருந்தது.அவளின் பிறப்பு,வளர்ப்பு எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.என் பைக் நிறம் அவளுக்குப் பிடித்தமானதாய் இருந்தது. என்னை இதற்கு முன்பு பார்த்திருப்பதாகவும் சொன்னாள்.( என் வீடு மருத்துவமனைக்கு சமீபமாய் இருந்தது) பொதுவாய் லொட லொட பெண்கள் மேல் எனக்கு ஆர்வம் இல்லை.அதுவும் சாப்பாடு, சினிமா, ஊர், காலேஜ், வேலை என்பது தவிர்த்து வேறெதுவும் தெரியாத பெண்களிடம் பேச என்ன இருக்கிறது? ஒரு வழியாய் அவளிடம் தகவல்களைப் பெற்றுக்கொண்டு திரும்பினேன் அதற்குள் அவளின் தொலைபேசி எண் என் தொலைபேசி எண் எல்லாம் கைமாறிவிட்டிருந்தது.ஒரு முறை வீட்டிற்கும் வந்து போனாள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் அவள் அந்தப் பையனை பற்றி கேட்டது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.அவள் அந்தப் பையனை காதலிப்பதாக சொன்னாள்.நான் ஆனந்திடம் இதுபற்றி சொன்னேன். உங்காளு பார்யா கலக்குறான்! என்றதற்கு அவன் சிரித்துக்கொண்டான்.அந்த பையனை அதற்கு பிறகு வேறு மாதிரி பார்க்க ஆரம்பித்தேன்.ஒரு ஆண் ஒரு பெண்ணால் காதலிக்கப்படுவது மிக முக்கியத்துவம் வாய்ந்ததது.அந்த ஆண் அதற்குப் பின் வேறுமாதிரி ஒரு வடிவத்தினை அடைகிறான்.ஒரு ஹீரோயிச தோற்றம் அவனுக்குப் பொருந்திவிடுகிறது.பின்பு அந்த நிறுவனத்திலிருந்து விலகிவிட்டு சென்னை போய் விட்டேன்.ஆனந்திடமிருந்து மட்டும் அவ்வப்போது தொலைபேசி அழைப்புகள் வரும்.பின்பு அதுவும் நின்றுபோயிற்று.மூன்று மாதங்கள் கழித்து ஊருக்குப் போனேன் மருத்துவமனையை கடந்து சொல்லும்போது பூங்குழலி நினைவில் வந்தாள் அவளோடு அந்த பையனும் நினைவில் வந்து போனான்.

சாயந்திரம் ஆனந்த் வீட்டுக்கு வந்தான்.மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.அந்த பையன் சூசைட் பண்ணிக்கினான் மச்சி! என ஆனந்த சொன்னது அதிர்ச்சியாக இருந்தது.திடீரென்று இரண்டு வாரமாய் ஆளை காணவில்லை என்றும் அவனை செங்கல்பட்டில் ஒரு லாட்ஜிலிருந்து அழுகிய உடலாய் அவன் பெற்றோர் கண்டுபிடித்ததாயும் ஆனந்த் சொன்னது என்னை உறைய வைத்தது.சில நிமிடங்கள் எதுவும் பேசமுடியவில்லை அவன் தாமதமாய் வந்த தருணத்தில் அவனை கடிந்து கொள்ளாமல் விட்டது இப்போது ஆசுவாசமாக இருந்தது.எதற்காகவென்று கேட்டதற்கு காதல் விவகாரம்தான் வேறென்ன எழவு! என இறுகிய முகத்தோடு சொன்னான்.அந்த பையன் மிக மெதுவாய் பேசுவான், உயரமாய், சிவப்பாய், அழகாய் இருப்பான்,என்ன சொன்னாலும் கேட்பான்,எதிர்த்தே பேசமாட்டான்,ரொம்ப நல்ல பையன் என ஆனந்த அடுக்கிக்கொண்டே போனான்.
இந்தப்பெண் அவனை கழட்டி விட்டுட்டு வேறொருத்தனோட சுத்த ஆரம்பிச்சிட்டா! பையனால தாங்க முடியல அதான் இப்படி பண்ணிட்டான்
என்றான்.

ஏனோ உலகத்தின் அத்தனை பெண்கள் மீதும் வெறுப்பாய் வந்தது.ஒரு வழியாய் அவனை தேற்றி அனுப்பி வைத்து விட்டு தனிமையில் புதைந்து கொண்டேன்.அந்தப் பையனின் நினைவுகளிலிருந்து என்னை மீட்டெடுக்க முடியாத கணமொன்றில் பூங்குழலியை பார்க்கப்போனேன்.அவள் அப்போதுதான் கிளம்பிக்கொண்டிருந்தாள் என்னை எதிர்பார்க்காததினால் மிக அதிக வெளிப்படுத்துதல்களுடனே வரவேற்றாள். என்னால் புன்னகைக்க முடியவில்லை. எப்படியிருக்கிறாய்? என்பதற்கு பதில் சொல்லாமல்
அந்த பையன் சூசைட் பண்ணிகிட்டானாமே தெரியுமா?
என்றதற்கு தெரியும் என்றாள்.மேலும் சுத்தப் பைத்தியக்காரத்தனம்!அவன மாதிரி அடிமுட்டாள் எவனுமில்லை என்றாள்.அப்போது அவள் கண்களை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தேன் அதில் கருணையின் சாயல்களைக் கூட காணமுடியவில்லை.அவளின் குரலில் குற்ற உணர்வின் த்வனி எட்டிப்பார்க்கக் கூட இல்லை.எதுவும் சொல்லாமல் வீட்டிற்கு வந்துவிட்டேன்.

அதற்குப் பின் நான் பூங்குழலியை பார்க்கவோ பேசவோ இல்லை. எங்களிருவருக்கும் பொதுவான நண்பர்களும் இல்லாததால் அவளைப் பற்றி கேள்விப்படாத நிம்மதியும்
கிட்டியது.எப்போதாவது லாட்ஜில் வாலிபர் தற்கொலை!அழுகிய உடல் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்பு என்ற செய்திகளை நாளிதழில் படிக்கும்போது மட்டும் அந்தப் பையனும் பூங்குழலியும் நினைவில் வந்து போவார்கள்.இப்போது தமிழ் நாளிதழ்களை படிக்கும் பழக்கத்தையும் விட்டாயிற்று.

Tuesday, November 6, 2007

உலகத்தின் வழிகாட்டி/கடவுள் #1 மற்றும் அவர் மனைவி


உலகத்தின் வழிகாட்டி/கடவுள் #1 க்கும் எனக்குமான உரையாடல்

மனம் பிறழ்தலென்பது உண்மைக்கு அருகாமையிலிருத்தல்..
மனம் பிறழ்ந்தோர் / பைத்தியக்காரர்கள் என்போர் உண்மையை கண்டறிந்து தவிர்த்தோர்...
சுவாமி,ஞானி,உள்விழிப்பு பெற்றவன்,என்லைட்டண்டு புத்தன் இவர்களனைவரும் உண்மையை கண்டறிந்ததாய் பிரச்சாரம் செய்துகொள்ளும் நாளைய ஆபத்தான உலகினுக்கான விதைகள்..
சமகாலத்தில் பெருத்துப்போய் இருக்கும் அத்தனை புராண, இதிகாச, மத, சாதீய பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணம் இந்த உண்மையை கண்டறிந்ததாய் சொல்லிக்கொள்ளும் புத்தர்களே.. இதிலிருந்து வாழ்வை மீட்டெடுக்க நீ செய்ய வேண்டியதெல்லாம் மனத்தை தொலைப்பது அல்லது மனம் பிறழ்வது அல்லது பைத்தியமாவது..

மனதை எப்படித் தொலைப்பது?'நான்'ஐ எப்படி விடுவது? கிடைக்கும் எந்த ஒரு நிமிடத்தையும் இந்த கணினியில் என் பெயரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.இந்த உலகினை இரட்சிக்க வந்த பின்நவீன கடவுளாகத்தான் என்னை வெகு காலமாய் கற்பனை செய்து வைத்திருக்கிறேன்.அத்தோடு ஆண்/பெண் பித்தும் சேர்ந்து விட்டிருக்கிறது.புடைக்கும் சமயங்களிலல்லாது எப்போதைக்குமான நுழைத்தல்களை சாத்தியப்படுத்துவதற்கான ஆதார தேடுதல்களையும் கொண்டிருக்கும் இந்நாட்களில் எப்படித் தொலைப்பது?

உனது உடலின் மையப்புள்ளி எது?சிந்தனைகளின் தோற்றுவாய் எது? உன்னை எப்போதும் இயங்கச் செய்வது எது? நீ ஒரு இயங்கும் விலங்கு என எப்படி உனக்குத் தெரியும்?உன் உடலின் ஏதோ ஒரு பாகத்தில் தான் அதற்கான விடை இருக்கிறது.. உன் உடலின் ஏதோ ஒரு பாகம்தான் இது அத்தனைக்குமான தூண்டல்... மனம்..ஆம்!.. இம்மனம் தான் எல்லாவற்றிர்குமான தோற்றுவாய்.. அதன் ஊற்றுக்கண் எங்கிருக்கிறது என எவனுக்கும் தெரியாது...உடலின் எப்பாகத்தில் அது மறைக்கப்பட்டிருக்கிறதென எவனும் இங்கு கண்டறியவில்லை.ஆனால் அதை அடக்கிவிட்டதாய் கொக்கரிக்கிறார்கள்.. அரைவேக்காடுகள்!..அரசியல்வாதிகளுக்கும் சாமியார்களுக்கும் மட்டுமே தெரிந்த அந்த ரகசியத்தை இப்போது உனக்கு சொல்லுகிறேன்.. அது இருப்பது சிறுமூளையில்!!.. அதை அடக்க மது அல்லது போதை வஸ்துக்களை அதிகப்படியாய் பயன்படுத்தினாலே போதுமானது.. அல்லது மிக அதிக வீர்யமுள்ள போதை வஸ்துக்களை மிகக் குறைவாய் உபயோகப் படுத்தினாலும் நலமே...

உலகத்தின் வழிகாட்டி/கடவுள் #1ன் மனைவிக்கும் எனக்குமான உரையாடல்

உனக்கொன்று தெரியுமா?சம காலத்தில் சாமியார்களாய் வேசம் போடும் அத்தனை பேடிகளும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை உபயோகிப்பவர்கள்தாம். ஒரு பொது இடத்தில் தலைவனொருவன் தன் சகாக்களுக்கு பிரசாதத்தை வழங்குவது போல் ஒபியத்தை வழங்கிக்கொண்டிருக்கிறான் பார்! அனைத்து அடிவருடிகளும் நக்கிக் குடித்து மனத்தை தொலைக்கிறார்கள்.அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது உண்மைக்கான வழி! இருப்பினும் தலைவர்கள் எப்போதும் தலைவர்களாகவே இருக்கும் பொருட்டு பெருந்திரளாய் குழுமியிருக்கும் தன் தொண்டர்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்! சுன்னத் செய்யப்பட்டவர்களை கொல்லுமாறு ஏவி விடுகிறார்கள். சிலைகளை தலையில் சுமந்தபடி தெருவெங்கிலும் ஊர்வலம் வரும்படியாயும், முக்காடிட்ட பெண்களை வன்புணரும்படியுமாயும் கட்டளைகளை இடுகிறார்கள்.உண்மைக்கு இத்தனை சுலபமான வழியை ஒருபோதும் கேட்டிராத ஆட்டு மந்தைகள் எதிர்பார்த்ததிற்கதிகமாய் கொல்கிறார்கள்.உண்மையை கண்டுகொள்ளும் பேராவலில் கிழிக்கப்படும் யோனிகளின் சப்தம் தூங்கும் கடவுளர்களை எழுப்புவதற்கான இசை என மகிழ்ந்து இன்னும் வேகமாய் சப்தத்தை ஏற்படுத்துகிறார்கள்.

அந்நிய மதக் குழந்தைகளை பூமிக்கு வரவிடாதபடி பார்த்து கொண்டால் (வயிற்றிலேயே குத்தி விடுபவன் வீரன்)உண்மையை வெகு சீக்கிரம் கண்டறியலாம் என்றொரு திரியை கிள்ளிப்போடுகிறான் போதை மிகுந்த தலைவனொருவன்.சாதாரண போதையிலிருந்தவனும் கிளர்ந்துபோய் போதையற்றவர்களுடன் சேர்ந்து குத்திக் கொல்கிறான் கர்ப்பிணிகளையும் கருக்களையும்..வீதிகளெங்கிலும் வழிந்தோடும் ரத்தத்தில் குளித்து மகிழ்கிறது கடவுளர்களின் சிலைகள்.

நீ பைத்தியமாகவேண்டுமா? அரசியல்வாதியாக வேண்டுமா? சாமியாராக வேண்டுமா? எல்லாவற்றிர்கும் ஆதாரம் இந்த போதை வஸ்துதான்.சிறுமூளையை ஆக்ரமிக்கும் இதன் மிகப்பரந்த நீர் வெளி கடும் இன்பத்தினாலானது.போதையின் அளவுகள்தான் இந்த முப்பரிமாண தோற்றத்தை உனக்கு வழங்குகிறது.அளவுகளை நீயே தேர்ந்தெடுத்துக்கொள் வடிவங்கள் தானாய் வந்துவிடும்

இல்லை எனக்கிந்த உணமையை தெரிந்து கொள்ள வேண்டாம் நான் இப்படியே இருந்து விட்டுப்போகிறேன்.கொல்பவர்களின் கூட்டத்தில்லையெனினும் சிலை சுமப்பவர்களில் ஒருவனாய் இருந்துவிட்டுப்போகிறேன்.

கடவுளும் கடவுள் மனைவியும் விடைபெற்றுப்போன போன ஒரு பின்னிரவில் தூக்கம் வர வேண்டி என் குளியலறையின் கதவை அடைக்கிறேன் இயலாமைகளோடும் ஆற்றாமைகளோடும் கசப்புகளோடும் கழிவிரக்கங்களோடும்....

Thursday, November 1, 2007

உள்ளேயிருந்து குரல்கள் அல்லது எண்ணங்களை எழுத்துக்களாக்குதல் அல்லது வாந்தியெடுத்தல்



இந்தப் பணியில் நீ ஒன்பது மாதங்களாக நிலைத்திருப்பது மிகவும் ஆபத்தானது.நல்லவேளையாக இரண்டு இருப்பிடங்களை மாற்றி விட்டிருக்கிறாய் இருப்பினும் வழக்கமாய் எதிர்கொள்பவர் சிரிக்க ஆரம்பித்து விட்டாலோ,ஒரே மனிதர்களை ஒரே நேரத்தில்,ஒரே இடத்தில் சந்திக்கத் துவங்கிவிட்டாலோ நீ! தேங்கிப் போவதை உணரத்தொடங்கு. உடனடியாக எங்காவது ஓடிப்போ! மேலும் இந்தப் பணியில் எந்த சுவாரஸ்யமில்லை.. இது என்ன எழவெடுத்த வேலை? ஒரு பிரயோசனமுமில்லை.. மேலும் இந்த சம்பளம்,பதவி எல்லாம் எத்தனை நாளைக்கு? உட்னடியாக எங்காவது கிளம்பு..
நீ! சற்று நிறுத்தேன் உன் பிரச்சினையால்தான் என் வாழ்வு இத்தனை அலைக்கழிப்பாய் இருக்கிறது.என்னால் நிம்மதியாய் மூச்சு விட முடியவில்லை.. இத்தனை ஓட்டங்களிலேயும் நான் அடைந்ததுதான் என்ன?ஒன்றுமில்லை. சற்று சும்மா இரு. என்னால் எந்த ஒன்றையும் மாற்றிவிடமுடியவில்லை.. எல்லாம் அப்படியேத்தான் இருக்கிறது.. மேலும் மாற்றிவிடமுடியும் என்கிற நம்பிக்கையும் எனக்குப் போய்விட்டது. இந்த அலைவுகளில் பல மோசமான மனிதர்களை சந்தித்தேன் என்பதைத்தவிர நான் சாதித்தது எதுவுமில்லை. என்னை விட்டுவிடு நான் எங்காவது நிலைபெற வேண்டிய தருணம் வந்துவிட்டது.இந்த இடம் சற்று ஆசுவாசமய் இருக்கிறது.அடுத்த மூன்று வருடங்களுக்கு நகர்வதாயில்லை.
உனக்கென்ன பைத்தியமா?இதுதான் சரியான தருணம் அலைவுகளின் மூலம்தான் உனக்கான மிகச் சரியான ஒன்றை நீ அடையமுடியும். யோசித்து பார் ஒரு காலத்தில் ஐந்தாயிர ரூபாய் தான் உன் கனவாயிருந்தது ஆனால் இப்போது பார் உன் வார இறுதிக்காக நீ செலவிடும் தொகை அதை விட அதிகம்.இது எதனால் வந்தது?
வாய மூடு ஐந்தாயிரம் வாங்கியிருந்தாலும் இதே போதையை ஏன் இன்னும் அதிக போதையைப் பெற்றிருக்க முடியும் இந்த கருமத்துக்காக எத்தன இழந்திருக்கிறேன்.
நான் ஐந்தாயிரம் என சொன்னது ஒரு உதாரணத்திற்காக நீ நேர்மையாக உன்னைப் பார்! எத்தனை வளர்ந்திருக்கிறாய்!..எத்தனை பண்பட்டிருக்கிறாய் என உனக்குத் தெரியாது.
இதன்மூலம் எனக்கென்ன வந்தது?என்ன பிரயோசனம் இந்த வடிவத்தில்? உனக்குத் தெரியுமா இந்த முறை ஊருக்கு போயிருந்தபோது நண்பர்களைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது.எல்லாரும் ஒரே இடத்தில்தான் இருக்கிறார்கள் மனைவி குழந்தை சகிதமாய் இரு சக்கர வாகனத்தில் வாடகை வீடாயிருப்பினும் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள்.நான் பார் பைத்தியக்காரனை விட கேவலமாய் எதையோ கிறுக்கி கொண்டிருக்கிறேன்.
இதென்ன அபத்தம்! பசங்க சந்தோசமா இருக்காங்கன்னு யார் சொன்னது உனக்கு? அவன் பிரச்சின அவனவனுக்கு.. நீ! டொயட்டால சுத்துற டேய்! நீ! ரொம்ப அதிகமான வசதிகளோட இருக்க.. என்ன அசிங்கமா திட்ட வைக்காத!
எனக்கு போதும்யா! இந்த வாழ்க்கை.. என்னை விட்டுடு..
இதோ பார்! இந்த ஊர்ல கல்யாணம் பண்ணிட்டுலாம் சந்தோசமா இருக்க முடியாது.இப்பவே யோசிக்க ஆரம்பி வேற ஊருக்கு போ, வேற வேல தேடு, வேற எங்காவது செட்டில் ஆகு!
எனக்கு யோசிக்கவே பயமா இருக்கு.. என் தகுதிக்கு இந்த வேலை ரொம்ப அதிகம்..
யார்ரா! சொன்னது அப்படியெல்லாம் இல்ல.. உன் திறமை உனக்கு தெரியாது
எனக்கு மட்டும் ஏன் வாழ்க்கை இத்தன சிக்கலா இருக்கு? இது வர எதுவும் ஒழுங்கா நடக்கல.. எது தேவையோ அது எப்பவும் கிடைக்கல..
என்னா கிடைக்கல உனக்கு? எது உன் தேவை?
தெரியல
ஆனா என்னால எதையும் மாத்த முடியல... என்னால யாரும் சந்தோசமா இல்ல.. நானும் சந்தோசமா இல்ல..
டேய்! இது வெத்து சீன்
நல்லா யோசிச்சி பார்! நீ மாறி இருக்க நிறைய விசயத்தை மாத்தியிருக்க (இந்த 'விசய' கூட இப்ப மாத்தினதுதான்)
அய்யோ! என்ன விட்டுடு..
இதோ பார்! இந்த பொண்ன என்னா பண்ணலாம்னு இருக்க?
தெரில
இருக்கிற பிரச்சின பத்தாதுன்னு இது வேற
சரி அந்த பொண்ணு?
டேய்! சும்மா இர்ரா!! என்ன டார்ச்சர் பண்ணாத.. என் வாழ்க்கைல எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமே இந்த பொண்ணுங்கதான்..
பன்றதெல்லாம் பண்ணிட்டு இதென்னடா மொக்க ஸ்டேட்மெண்ட்
சரி அந்த வீட்ட என்னா பன்றது
தெரில ஆனா அந்த வீட்ல என்னால இருக்க முடியாது
சரி வேற வாங்கு
அய்யோ! என்ன விடு..
டேய்! யோசிடா! எதையும் யோசிக்க மாட்டன்னு அடம்புடிச்சா என்ன செய்ய
எதுக்கும் தீர்வு வரப்போறதில்ல
என் வாழ்க்கை இப்படித்தான் நான் இப்படியே இருந்துட்டு போறேன் விடு..

நீ உனக்கான ஒரு பொய்யான உலகத்தைப் புனைந்துகொண்டு அதன் கனவுத் தன்மையில் ஆழ்ந்துபோய்கொண்டிருப்பதை உன்னால் உணரமுடிகிறதா? இந்த பாழாய் போன எழுத்தை எப்போது துவங்கினாயோ அப்போதிலிருந்து பிடித்துவிட்டது சனி.இதெல்லாம் வேலையில்லாத சோம்பேறிகளின் கொட்டாரம்.என்னசெய்வதென்று தெரியாமல் கொட்டாவி விடுவதைப் போன்றது நன்றாக யோசித்துப் பார் இந்த உலகத்திற்கு வந்த பிறகு நீ! எதையாவது உருப்படியாய் செய்தாயா?புத்தகங்கள் திரைப்படங்களய் வாங்கி குவிப்பது,அதிமேதாவித்தனமாய் சிந்திப்பது, அதிகபட்சமாய் கிடைக்கும் மனிதர்களிடம் உன் மேதாவித்தனத்தத நிரூபிக்க முனைவது.இதைத் தவிர்த்து வேறேதாயினும் செய்தாயா?மெல்ல மெல்ல நீ! உனக்கான வாழ்க்கையை புனைவுகளுக்கு நகர்த்துகிறாய்.எல்லா நிகழ்வுகளையும் எழுத்துக்களாகிப் பார்க்கிறாய்.உன் உலகம் மெல்ல வடிவம்,நிறம்,எல்லாமிழந்து வெற்று சொற்களாகவும் எழுத்துக்களாகவும் மாறி விட்டதை உன்னால் உணரமுடிகிறதா?..இப்போதெல்லாம் உனக்கு பெயரோ,வடிவமோ,பின்குறிப்புகளோ, முன் குறிப்புகளோ தேவைப்படுவதில்லை தமிழெழுத்துக்கள் மட்டுமே பிரதானமாய் முன்நின்று உன்னை ஆகரமிக்கத் தொடங்குவதை உணரமுடிகிறதா? தம்பி நீ! உனக்கான வாழ்வை இழந்து கொண்டிருக்கிறாய்.விழித்துக் கொள்..நீ ஒரு வடிவமாக நான் உதவியிருக்கிறேன் நீ! தரையிலிருந்து மேலெழும்பி மிதக்க ஆரம்பிக்க நான்தான் தூண்டுதலாய் இருந்தேன்.அதே நான் இப்போது உன்னை மேலிருந்து இறக்க மிகவும் சிரமப்படுகிறேன் உனக்கு மிக பிரம்மாண்டமான இறக்கைகள் முளைத்துவிட்டன.அவை மிகுந்த ஆபத்தானவை அவை உன்னை கொண்டு செல்லும் இடம் மிகப்பெரிய பள்ளத்தாக்காய் இருக்கக்கூடும்.. மேலும் உன்னுலக மனிதர்கள் ஒவ்வொருத்தராய் நிறமிழந்து கொண்டே வருவதை உன்னால் உணரமுடிகிறதா?இப்படித்தான் கடைசியில் எல்லாம் வெளிறிப் போகும்.

எனக்குத் தலை சுற்றுகிறது என்ன செய்வதென்று தெரியவில்லை.நான் என்ன செய்ய? எங்கு போக?எதை ஆரம்பிக்க?எதை முடிக்க?எதையும் என்னால் செய்ய முடியதென தீர்மானமாய் தெரிந்த கொண்ட பிறகு என்னை எங்காவது தொலைத்துவிட முடிவுசெய்கிறேன்.எனக்கிந்த இருப்பு மிகுந்த பயத்தை தருகிறது. நானே ஒரு உலகத்தை புனைந்துகொள்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த மனிதர்களை அங்கே நான் சந்திக்கிறேன் என் சிந்தனை என் எண்ணவோட்டம் இவைகளோடு பெரும்பாலோர் ஒத்துப்போகிறார்கள். நான் மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறேன். உனக்கொன்று தெரியுமா? என் உயரங்கள் இருபத்தாறு வருடங்களாய் எனக்கே தெரியாமலிருந்தது.இப்போது என்னால் உணரமுடிகிறது.நான் சந்தோசமாயிருக்கிறேன் தயவு செய்து என்னை குழப்பாதே.. கொஞ்சம் சும்மா இரு போதும்...இன்று வார இறுதி வேறு.. தியாகுவோடு கராமா ஓட்டலுக்கு போகிறேன். தர்க்கோயெவ்ஸ்கி படங்கள் இரண்டு பார்க்காமல் இருக்கிறது. மெல்லிதான போதையும், பின்னிரவும், மிக மெதுவான திரைப்படமுமாய் எனக்கான உலகம் என்னை விழுங்க காத்திருக்கிறது. தயவு செய்து உன் கொழுத்த வாயை மூடிக்கொண்டு போ!

Featured Post

test

 test