Sunday, December 23, 2007

பூமியிலிருக்கும் குட்டி நட்சத்திரங்கள்



இந்த இருள் எத்தனை பயத்தை தருகிறது என்பதை
நான் ஒருபோதும் உன்னிடம் சொன்னதில்லை அம்மா!
நான் உன் மீது எத்தனை கவனமாயிருக்கிறேன் என்பதையும்
ஒருபோதும் சொன்னதில்லை அம்மா!
ஆனால் உனக்கு தெரியும் இல்லையா அம்மா?
உனக்கு எல்லாமே தெரியுமே என் அம்மா!

என்னை இந்த கூட்டத்தில் தனியே விட்டுப் போகாதே
வீட்டுக்குத் திரும்பும் என் வழியை மறந்துவிடுவேன்
நினைத்துக்கூட பார்க்க இயலாத
தொலைதூரங்களுக்கு என்னை அனுப்பாதே
நான் அந்த அளவு மோசமா அம்மா?
நான் அந்த அளவு மோசமா என் அம்மா?
(....Tujhe sab hai pata,meri maa )

குழந்தைகளின் உலகம்தான் எத்தனை அற்புதமானது! அவர்களின் விழிகளில் தென்படும் அத்தனைக் காட்சிகளுமே ஆச்சர்யங்கள்தாம். பிரபஞ்சத்தை முழுக்க உள்வாங்கியபடி இருத்தலியத்தின் பிரதான வடிவமாய் திகழ்வது குழந்தையாகத்தான் இருக்கமுடியும்.அறிவு,புத்திசாலித்தனம் போன்ற மாபெரும் அரக்கர்கள் வசமாகும்வரை குழந்தமைகளின் உலகம் கடவுள்தன்மைக்கு மிக நெருக்கமானது.

இஷானுக்கு எதிலும் பயமில்லை.எல்லாமும் ஆச்சர்யங்கள்தாம்.பனித் துண்டங்களை செய்பவனின் நேர்த்தி, தண்ணீரை அண்ணாந்து குடிப்பவனின் திறமை,ரெயில்வே கிராதிகளில் ஓ வென இரைச்சலோடு விளையாடும் குழந்தைகள் இவைகளை விழிகள் விரியப் பார்த்துக்கொண்டிருப்பான். பாடங்கள்,மதிப்பெண்கள் மற்றும் பிறரால் ஒழுங்கு என சொல்லித் தருபவைகளைப் பற்றி எந்தக் கவலையுமில்லை. அவனது உலகத்தை மீன் குஞ்சுகளாலும், நாய்களாலும், பறவைகளாலும், வண்ணத்துப் பூச்சிகளாலும், வண்ணங்களாலும் நிரப்பி வைத்திருக்கிறான். இஷான் தன் கவனத்தை செலுத்திப் படிக்க முனைந்தாலும் எழுத்துக்கள் நடனமிடத் துவங்குகின்றன. அதன் நடன அசைவுகளில் அவனால் சரியாக எழுத்துக்களைத் தடம் காண முடியாமல் போய்விடுகிறது.மேலும் அவனால் ஒரே சமயத்தில் மூன்று நான்கு கட்டளைகளை செயல்படுத்த முடியாது. தமிழ் புத்தகத்தில் நாற்பதாவது பக்கத்தில் நான்காவது பத்தியில் மூனறாவது வரியைப் படி என்றால் தவித்துப்போவான்.தன்னை நோக்கி விரைந்து வரும் பந்தினைக்கூட அனுமானித்துக் கையில் பிடிக்க முடியாது. (இதற்கு dyslexia என்று பெயர்)


அவனது பிரச்சினைகளை அடையாளம் காண முடியாத பெற்றோரும் ஆசிரியர்களும் அவனை முட்டாள் என்றும் பிடிவாதக்காரனென்றும் பழிக்கிறார்கள்.இந்த மிக வேகமான உலகத்தில் இத்தகைய குணங்களோடு ஒரு மனிதனால் எப்படி உயிர் வாழ முடியுமென பயப்படுகிறார்கள்.முடிவில் பலவந்தமாய் அவனை ஒரு விடுதியுடன் கூடிய பள்ளியில் சேர்க்கிறார்கள்.ஒன்பது வயதில் ஒரு சிறுவன் தனித்து விடப்படுவது மிகக்குரூரமானது. எதிர்காலம், படிப்பு, என்னும் பெயர்களில் குழந்தைகளை விடுதிகளில் அடைப்பதை விட மிகப்பெரிய வன்செயல் எதுவும் இருக்க முடியாது.


சிறுவர்களை மய்யமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களில் extreme close-up shot கள் நேரடியாக மனதைத் தைக்க வல்லது. இந்தப் படத்தில் பெரும்பான்மைக் காட்சிகள் மிகவும் நெருக்கமாக எடுக்கப்பட்டுள்ளது இஷானாக நடித்திருக்கும் சிறுவன் தன்னுடைய முக பாவணைகளின் மூலம் அவனது உலகத்திற்கு நம்மைக் கொண்டு போய் விடுகிறான்.அந்த முன்பற்களும், அழுக்கான ஆடைகளும், ஆச்சர்யமான பார்வைகளும், எதற்கும் பயப்படாத அந்த பாவனைகளும், மிகச் சிறப்பாய் வந்துள்ளது.தாயை விட்டுப் பிரிந்தபின் ஏற்படும் பயத்தையும், நெருக்கமற்ற சூழல் ஏற்படுத்தும் கசப்பையும் மிக அழகாய் வெளிப்படுத்தியுள்ளான்.


இடைவேளையில் வரும் அமீர்கான் அந்தச் சிறுவனை அவனது உலகிலிருந்து மீட்டெடுக்க பெரும் சிரத்தை எடுக்கிறார்.அவனுக்குள்ளிருக்கும் அழகான ஓவியனை அடையாளம் கண்டுபிடித்து அதை எல்லாருக்கும் உணரவைக்கிறார்.கற்பித்தல்களில் புதியமுறைகள், தாமஸ் ஆல்வா எடிசனிலிருந்து அபிஷேக் பச்சன் வரை இந்த dyslexia நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்தாம் என்பன போன்ற மேற்கோள்கள் அவனை அவனது உலகிலிருந்து பெயர்த்தெடுக்க உதவுகிறது. அவனுக்காக தன் அத்தனை ஆற்றல்களையும் செலவிடுவதன் மூலமாக அவனின் துயரமான நம்பிக்கையற்ற உலகிலிலிருந்து வெளிக்கொண்டு வருகிறார்.


மிகக் குறைந்த கதாபாத்திரங்கள், கச்சிதமான நடிப்பு, உறுத்தலில்லாத இசை, அழகான ஒளிப்பதிவென படம் மிக நேர்த்தியாய் வந்திருக்கிறது.மிக மோசமான ஆசிரியர்களாக சித்தரிக்கப்படுபவர்கள் அமீர்கான் வந்ததும் தடாலடியாய் மாறிவிடுவது சற்று செயற்கையாய் இருந்தாலும் ஒரு வித நெகிழ்வுத் தன்மைக்கு பார்வையாளர்களை கொண்டு சென்றுவிடுவதால் லாஜிக்குகளை யோசிக்க முடியவில்லை.கடைசி பதினைந்து நிமிடங்களில் உள்ளிருந்து மிகக் கனமாய் ஏதோ ஒன்று பெருகி தொண்டையை அடைத்துக் கொள்கிறது.அதற்கு பெயர்தான் நல்ல சினிமாவாக இருக்க முடியும்.


அமீர்கானுக்கு இறுக்கமான ஒரு Hug.....

13 comments:

ஆடுமாடு said...

அய்யனார், உங்கள் எழுத்துகளில் விமர்சனம் அருமை.

அந்த பாடல்... 'பம் பம் போலே' பற்றி சொல்லியிருக்கலாம். ஷங்கர் மகாதேவன் குரலில் பட்டையை கிளப்புகிறது.

ஹிருத்திக் ரோஷன் கூட dyslexia வில் பாதிக்கப்பட்டவர்தான்.

சூப்பர் அய்யனார்.

குசும்பன் said...

நானும் தானே உன் கூட படம் பார்த்தேன் ஏன் இப்படி என்னால் எழுத முடியவில்லை? ஒருவேளை எனக்கும் dyslexia வா? அருமையாக சொல்லி இருக்கிறாய்!!! இந்த வாரமும் போகலாம் என்று இருக்கிறேன்.

கோபிநாத் said...

கலக்கல் விமர்சனம் ;))

seethag said...

அய்யனார் எனக்கு உங்கள் விமர்சனத்தைப்பார்த்து ரொம்ப அழுகையாக வந்தது. பயப்படாதீர்கள்..நீங்கள் ஹாஸ்டலுக்கு போகாமலே இப்படி எழுதீயிருக்கிறீர்களே?நான் ஹாஸ்டலுக்கு போகும்போது எனக்கு 5 வயது. நிஜமாகவே ராத்திரி அழுகையாக வரும் .இப்ப கூட நல்லா ஞாபகம் இருக்கிறதாலே அழுகை வருது.நல்லகாலம் ரெண்டு வருஷத்தில் கூட்டிகிட்டு போயிட்டாங்க.
டிஸ்லெக்ஸியா பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் இந்தியாவில் நிறய குழந்தைகளுக்கு மக்கு பட்டமும் அடியும் கிடைக்கும்.

நானும் ரொம்ப அழகான கவிதை போல ஒரு குழந்தைகள் படம்
பார்த்தேன்.dear frankie என்ற scottish படம்.scottish accent கேட்க்க நன்றாக இருக்க்கும் என்பதால் ரொம்பவே ரசித்தேன்.
ரொம்ப மனசுக்கு ஏதோ புரிய வைத்த படம்..

இராம்/Raam said...

அய்யனார்,

நல்ல விமர்சனம்..... இந்தமாதிரியான பரிசார்த்த முயற்சி திரைப்படங்கள் தமிழில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்பதை நாம் ஒத்துக்கொள்ள தான் வேண்டும்... :)

பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் படங்களில் கொஞ்சம் நம்பிக்கை தெரிகிறது... :) பார்க்கலாம் எவ்வளவு நாட்களுக்கு அவர் முயற்சிகள் தொடருக்கின்றது என்று....

MyFriend said...

அருமையான விமர்சனம்.. இதைவிட அருமையாக இந்த படத்தை யாரும் விமர்சிக்க முடியாது என நினைக்கிறேன்.

படத்தின் டிரேயிலர் பார்த்தபோதே கண்டிப்பா பார்க்கணும் என நினைத்தேன்..

Every child is special என்ற caption-உம் இந்த தூண்டுதலுக்கு ஒரு காரணம். :-)

Unknown said...

பல படங்கள் பார்த்தாலும் சில படங்கள் நல்ல கவிதையாய் நம் மனதைப் பதிக்கின்றன. அந்த வகையில் இந்தப்படமும். குழந்தைகளிடமிருந்து மிகையில்லா நடிப்பு ஆச்சர்யமூட்டுகிறது. Bollywood படவுலகில் அமீர்கானுக்கு perfectionist என்றொரு பெயர் உண்டு. அதை மீண்டும் நிருபித்திருக்கிறார்.

CVR said...

படத்துக்கு ஏற்ற அழகான விமர்சனம்!!
நல்லா எழுதியிருக்கீங்க அண்ணாச்சி!

வாழ்த்துக்கள்!! :-)

KARTHIK said...

நல்ல விமர்சனம்
நன்றி

Ayyanar Viswanath said...

ஆடுமாடு மேலதிக தகவல்களுக்கு நன்றி ஷங்கர் மகாதேவன் இசை நன்றாக வந்திருக்கிறதில்லையா?

போலாம் குசும்பர்ர்ர்

நன்றி கோபி

சீதா
நானும் ஆஸ்டலுக்குப் போனேன் ஆனால் 5 வயதிலில்லை 15 வயதில்
:)

Ayyanar Viswanath said...

ராம் இப்போதைய தமிழ்சூழல் பரவாயில்லைபா நெறய நம்பிக்கையான படங்கள் வருசத்துக்கு ரெண்டாவது வருது ..

நன்றி அனு

சுல்தான் அமீரின் திரைப்படங்கள் எப்போதுமே எனக்குப் பிடிக்கும் இப்படத்தை அவரின் மாஸ்டர் பீஸ் என சொல்லலாம்

நன்றி சி.வி.ஆர் உங்களோட பதிவும் பார்த்தேன் ..

நன்றி கார்த்திக்

Jazeela said...

ஆசிப் & குசும்பர் தயவில் நேற்றுதான் இந்த படம் பார்க்க கிடைத்தது. எல்லோரும் பார்க்க வேண்டிய படம். இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக கல்லும் கரையும்.

Ayyanar Viswanath said...

உண்மைதான் ஜெஸிலா வந்து கொண்டிருக்கும் பதிவுகள் மக்களை எந்தவிதத்தில் இத்திரைப்படம் பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. நன்றி

Featured Post

test

 test