Saturday, December 20, 2008

வாசகனின் நாட்குறிப்பிலிருந்து...

19.02.2012 : ஞாயிறு: இரவு 8.30
இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும் ஏற்பட்ட உணர்வுகளை வினோதம் என்றுதான் சொல்ல வேண்டும்.வினோதங்களின் திகைப்புகளிலிருந்து விடுபட வெகுநேரம் பிடித்தது.

பயம்.. பயம்... பயம்... இந்த பயம் என்பதை திரும்பத் திரும்பத் திரும்பத் த்பம்ருதி சொல்கையில் அல்லது கத்துகையில் பயம் பாசியைபோல் இழை இழையாகப் படரத் துவங்குகிறது. அடிவயிற்றிலா ஆரம்பிக்கிறது பயம்?இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். யாருக்குத் தெரியும்? ஆனால் ஏற்படும் உணர்வினுக்குப் பெயர் பயம்தான்.இப்போதெல்லாம் அதிகமாக பயப்படுகிறேன்.காரணமேயில்லாமல்;பயப்பட வேண்டிய எந்த நிகழ்வுகளுமே நடந்துவிடாதபோதும் கூட என்னால் பயப்படாமல் இருக்கமுடியவில்லை....இதனால்தான் பயம் வருகிறது என்றெல்லாம் இல்லை.எல்லாமும் பய நிலைக்குத் தள்ளுகிறது.சென்ற வாரத்தில் தூக்கம் வராத பின்னிரவில் வாழ்வு மிக மகிழ்ச்சியாய் இருக்கிறதெனக் கவலைப்பட்டேன்.அடுத்தநாள் கிட்டத் தட்ட முன் தின இரவின் அதேப்பொழுதில் வாழ்வு எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறதென மிக அதிகமாய் வருந்தினேன்.இது மனநலம் தொடர்புடைய குறைபாடா என விபரீதமாய் யோசித்துத் தொலைகிறேன்.(இந்தப் பத்தியை எழுதி முடிக்கும்போது பாருங்களேன்..விபரீதம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறேன். கடந்த இரண்டு தினங்களில் இந்த விபரீதம் என்கிற வார்த்தையைப் பதினெட்டு முறை பயன்படுத்திவிட்டேன்.ஏன் சம்பந்தமே இல்லாமல் ஒரே வார்த்தை திரும்பத் திரும்பத் திரும்பத் த்பம்ருதி என் நாவிலிருந்து வெளிப்பட வேண்டும்? ஏதேனும் விபரீதம் நிகழப்போவதைதான் மறைமுகமாக இது சுட்டுகிறதோ?எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.என்மேல் பேரன்பு கொண்ட தோலர், தோழர், தோழர்காள்! தோழரே!! டேய் தோலா!!! எனக்கு யாராவது உதவுங்களேன்...

-மீப்பெருவெளியில் தொலைந்த மீ (பீ)யொலிக் குறிப்புகள்:அய்யனார்

22.05.2012 :ஞாயிறு:இரவு 11
கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்றின் நெகிழ்வுகள் என்னை தூங்கவிடாமல் செய்துவிட்டிருக்கிறது.இந்தப் புத்தகத்தை படித்திருக்க வேண்டாம்தான்.படித்து முடித்ததும் விலகிப்போனவளின் நினைவுகள் விடாது இம்சிக்கத் துவங்கியது.

எல்லா ஞாயிற்றுக் கிழமைகளைப் போலவே இன்றும் ஏழு மணிக்கெல்லாம் வந்துவிட்டிருந்தாள்.டிசம்பர் மாதக் குளிரில் தண்ணீர் விறைத்திருக்கும்.எப்படிக் குளித்தாள் எனத் தெரியவில்லை.தலைக்கு வேறு குளித்துத் தொலைத்திருக்கிறாள்.விழித்தெழுந்த காலையில் மஞ்சள் நிற புடவையும்,தழைந்த கூந்தலில் மல்லிகைப் பூவுமாய் ஆத்மார்த்த காதலியை பார்க்கும் வாய்ப்பு கிட்டப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.அவளுக்கு விநாயகரை மிகவும் பிடிக்கும்.யானை என்றால்தான் பயப்படுவாள்.மணக்குள விநாயகருக்கு பனியில் குளித்திருந்த தாமரை மலர்களை இன்னொரு பனியில் குளித்த தாமரை சகிதமாக வாங்கிக் கொண்டு போய் சாத்தினேன்.விடுமுறை நாளை இப்படித்தான் துவங்குவோம்.எல்லாச் சனிக்கிழமை மாலைகளிலும் அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும்.இப்படிச் சொல்வாள் "முதல்ல கோயில்,அப்புறம் பீச்,..ம்ம்.. அப்புறம் கொஞ்சமா எங்காச்சிம் சாப்டுட்டு சினிமா..ஒரே ஒரு முத்தம்தான் ஓகேவா?..மதியம் எங்காச்சும் போய் நான்வெஜ்... ஹாஸ்டல் சாப்பாடு கொடும தெரியுமா?..சாயந்திரம் நம்ம பார்க்ல.. நம்ம ப்ளேஸ் அங்கயும் ஒண்ணே ஒண்ணுதான்.."அவள் சொன்ன முறை மாறாது ஒரு நாள் கழியும்.முத்தக் கணக்கில் மட்டும் சற்று தாராளமாய் இருப்பாள்.வழக்கமாய் நடப்பதை எதற்கு எழுதிக் கொண்டிருக்கிறேன் எனில் இன்று மதியம் உணவகத்தில் நடந்த ஒரு சம்பவம்தான் இப்படிப் புலம்பவிட்டது.

அந்த மேல்தட்டு உணவகத்தின் குளிரூட்டப்பட்ட பிரிவில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தோம்.அந்தச் சூழலுக்குப் பொருத்தமில்லா உடைகளணிந்த இருபது வயது மதிக்கத் தக்க ஆணும், பதின்மங்களைத் தாண்டியிராத பெண்ணும்(அந்தப் பெண் பள்ளிச் சீருடை தாவணி அணிந்திருந்தாள்)மிகுந்த தயக்கங்களோடும்,பயத்தோடும் எனக்கு எதிரிலிருந்த இருக்கைகளில் வந்தமர்ந்தனர்.அந்தப் பெண் அந்த சூழலை மருண்ட பெரிய விழிகளின் துணைகொண்டு மிரட்சியாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.அவன் மிகுந்த பதட்டமாய் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.மெனு கொடுக்கப்பட்டது.வாங்கிப் புரட்டிப் பார்த்தவனின் கண்களில் அதிர்ச்சி தெறித்தது.அந்தப் பெண்ணை பார்த்தவாறு "வேற எங்காச்சும் போலாம் இங்க நம்ம ஊரு சாப்பாடு இல்ல" எனச்சொல்லி அப்பெண்ணைக் கூட்டிக்கொண்டு வெளியில் போய்விட்டான்.பத்து நிமிடத்திற்குள் நடந்த இந்நிகழ்வு என்னை சமநிலையில் இருக்கவிடாது துன்புறுத்தியது.இவளிடம் புலம்பியபடி இருந்தேன்."நீ இருக்கச் சொல்ல வேண்டியதுதானே நாம் கொடுத்திருக்கலாமே" என என் குற்ற உணர்வுகளை இன்னும் அதிகமாக்கினாள்..

- உதிர் நட்சத்திரங்களின் வழி பயணித்தவளோடு வாழ்ந்த தொள்ளாயிரத்து முப்பத்தியோரு நாட்கள்:அய்யனார்

19.08.2012 : ஞாயிறு : மதியம் 3 மணி
இவ்விதமான கதை சொல்லல்கள் என் இளம்பிராயத்து வாழ்வை மீட்டுவதாய் இருந்தது.நான் தொலைத்த என் கிராமம் சார்ந்த நினைவுகளை இப்புத்தகத்தில் அடையாளம் கண்டுகொண்டேன்.

"அவன் எம்மாம் பெரிய மசிராண்டியா இருந்தா எனுக்கின்னா..போடா பெரிசா வந்திட்டான்..மான ரோசத்தோட வாழறவடா நானு..ஒத்த பொம்பளயா ஒன்ன வளக்கல?. நீ இன்னா அழுவியா பூட்ட?..எவன் ஒறவுஞ்சாரமும் எனுக்கு வேணாம்.. எந்தக் கொம்பன் வூட்டுக்கும் நான் வர்ல.. எவனும் இங்க வரவும் வேணாம்".

மாமா வீட்டுத் தொடர்பு இப்படித்தான் அறுபட்டது.போன வருசக் கடேசியில் மல்லாட்டக் கொல்லியில் தப்புக்காய் பொறுக்கப் போன போது பூங்காவனத்தை கடேசியாய் பார்த்தது.காஞ்சியில் ஒன்பதாவது சேர்ந்தபிறகு முன்பு போல் வெளியில் போக முடியவில்லை.சனி ஞாயிறில் மாட்டை ஓட்டிக்கொண்டு பெரிய்ய ஏரி,காவாங்கரை எனப் போய்விடுவதால் ஊரில் என்ன நடக்கிறது என்றே தெரிந்து கொள்ள முடியாமல் போனது.ஏரிக்கரை இலுப்பை மரத்தடி மதியங்களில் விழிப்பும் கனவுமாய் பூங்காவனத்தின் முகம் வந்து போகும்.அலையலையாய் கூந்தலும், குறும்புச் சிரிப்புமாய் என்னை நிறைக்கையில் அம்மாவின் குரல் அசீரரியாய் காதில் ஒலிக்கும்."இலுப்பம்பூ வாசனைக்கு மத்தியானத்துல முனி கினி வந்து அண்டும்..அந்த பக்கமா போய் ஒக்காராதே" சற்றுத் தள்ளிப்போய் கொடுக்காப்புளி மரத்தடி முட்களை அகற்றிவிட்டு அமர்வேன்.


- பூங்காவனம் : அய்யனார்

23.12.2012 : ஞாயிறு பின்னிரவு 2.00
இன்று சுத்தமாய் தூங்க முடியவில்லை.பல கவிதைகள் எனக்குப் பொருந்திப் போனது.வெறும் அழகியல் சார்ந்தவைதான் என்றாலும் நெடுநாள் புகைக்காமல் இருந்த என்னை புகைக்க வைத்தது இத்தொகுப்பு...

பூவரசமர பெஞ்சிலமர்ந்தபடி
மதிய மழையும்
கடலும்
கலவுவதினை
பார்த்துக் கொண்டிருந்தோம்
மஞ்சள் நிற இறக்கைகளும்
நீலக் கழுத்தையும்
கொண்ட சிறுபறவையொன்று
மஞ்சள் நிற பூவரசம் பூவிலிருந்து எட்டிப்பார்த்தது
பூ பிரசவித்த பறவை என பரவசப்பட்ட
அவளின் முகமேந்தியபடி சொன்னேன்
பூவீன்ற இப்பறவையும்
இன்னொரு பூவினை பிரசவிக்கப்போகும் நீயும்
அபூர்வமானவர்களென

...................................
ஒரு மழை நாளில்
வந்திருக்க வேண்டிய நேரம் வரை
வராமல் போனாள்
குத்தும் சாரல்களின் துணையுடன்
வழியெங்கிலும் தேடியலைந்து
திரும்பினேன்
அவளோடு சேர்ந்து
நனைந்த பூனைக்குட்டியொன்றும்
பூட்டிய கதவுகளுக்கு முன்
ஒண்டிக்கொண்டிருந்தது


-நானிலும் நுழையும் வெளிச்சம்:அய்யனார்

Thursday, December 11, 2008

சந்தோசின் கிளி


சந்தோசு எதையாவது வளர்த்துக்கொண்டிருப்பான்.எல்லாச் சிறுவர்களுக்கும் இருக்கும் பொது ஆர்வம்தான் என்றாலும் சந்தோசின் பிராணி வளர்ப்பு ஆர்வம் சற்று அதீதமானதுதான்.மேலும் அவன் வளர்ப்பதைத் தூக்கிக் கொஞ்சியோ, செல்லப் பெயரிட்டு அழைத்தோ, இம்சித்தோ, நான் பார்த்ததில்லை.அவன் வளர்க்கும் பிராணிகளுக்கான உணவு ,பாதுகாப்பு இவற்றில் செலுத்தும் கவனத்தை அவற்றினோடு விளையாடுவதில் காட்டமாட்டான்.தூரத்தில் அமர்ந்து அப்பிராணி விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பான்.பள்ளி முடிந்ததும் ஓட்டமும் நடையுமாய் திரும்புவான்.ஒருவேளை அப்பிராணி கடைசி வகுப்புகளிலேயே அவன் நினைவில் வந்துவிட்டிருகக்கூடும்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக எந்தப் பிராணியும் அவனோடு நிலைப்பதில்லை. நாய்,பூனைக்குட்டி,முயல் என அவன் வளர்த்ததெல்லாம் கொஞ்சம் வளர்ந்ததும் காணாமல் போய்விடும்.எதுவும் பேசாமல் இரண்டு நாட்கள் உம் மென்று சுற்றித் திரிவான்.அவன் அம்மா இரண்டு அடி போட்டதும் சம நிலைக்குத் திரும்புவான்.

சந்தோசு என் அக்காவின் மகன். ஆறாம் வகுப்பு படிக்கிறான். அவன் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் ஒரு பெரிய மனுசத்தனம் தெரியும்.நானும் இப்படித்தான் இருந்தேன்.அறிமுகமாகா மனிதர்களிடம் லேசாய் கூச்சம், புது இடத்தில் வெட்கம் ,பிடிவாதமில்லாது இருத்தல்,பலர் புழங்கும் இடத்தில் அடங்கி ஒடுங்கி இருத்தல் என என் சிறுவயது குணாதிசியங்களையே இவனும் பிரதிபலித்தான் . எனக்கும் அவனுக்குமான ஒரே வித்தியாசம் புத்தகங்கள்தாம். நான் எத்தனை முயன்றும் அவனிடம் படிக்கும் வழக்கத்தைக் கொண்டு வர முடியவில்லை. சிறுவர் பத்திரிக்கைகளை என் முன்னால் படிப்பது போன்ற பாவனை செய்வானே ஒழிய நான் சற்று அகன்றதும் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து விடுவான்.

சிறுவர்கள் வாசிப்பதை நிறுத்திவிட்டால் என்னாகும் என்கிற யோசனை எனக்குப் பயத்தையே தந்தது.வாசிப்பினூடாய் விரியும் காட்சிகள் ஒருவனது கற்பனைத் திறனை மேம்படுத்தும். மேலும் வாசிப்பு மட்டுமே மனிதனை முழுமையாக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.நான் ஆறாம் வகுப்பில் பொன்னியின் செல்வனை முடித்திருந்தேன்.இவன் குறைந்த பட்சம் அம்புலிமாமா வாவது படித்தால் நன்றாக இருக்கும்.ஆனால் இவன் தொலைக்காட்சி டிஷ்ஷீயும், டம்களில் மூழ்கிப் போயிருந்தான்.எந்த நேரமும் சுட்டி டிவியும், ஜெட் எக்ஸ்ம் வீட்டை அதிரச் செய்து கொண்டிருக்கும்.
மாதம் ஒருமுறை வீட்டிற்குப் போகும் இரண்டு தினங்களில் அவனைத் துன்புறுத்த வேண்டாமே என நானும் அதிகம் அவனை பிடித்து உலுக்குவதில்லை.ஒவ்வொரு முறை திரும்பும்போதும் அவனுக்கு பணம் கொடுத்து வருவேன்.”வீண் செலவு செய்து திரிகிறான் பணம் கொடுக்காதே” என அக்கா எவ்வளவு சொல்லியும் நான் பணம் கொடுத்துவிட்டுத்தான் வருவேன்.சந்தோசு தன் பணத்தை சேமிக்கும் இடங்கள் எவரும் அறியாதது.அவன் அம்மாவின் கண்ணில் பட்டுவிடாமல் இருக்க அதிகம் மெனக்கெடுவான்.அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பான்.அதை அவன் அம்மாவிடம் இருந்து காப்பாற்ற அவன் துப்பறியும் போலீசாக தன்னை நினைத்துக் கொள்வானாயிருக்கும்.பெட்டி சந்து, மண்ணைத் தோண்டி புதைத்தல், மரப் பொந்து என அவன் தேர்ந்தெடுக்கும் இடங்கள் பரம ரகசியமானது.

மூன்று மாதங்களுக்கு முன்னால் ஒரு கிளி வாங்கினான் .அக்காவும் அம்மாவும் அவனை உலுக்கி எடுத்திருக்கிறார்கள்.சின்னஞ்சிறு கிளி, இறக்கைகள் கூட இன்னமும் முளைத்திருக்கவில்லை.”பாவம் டா.. விட்டுட்டு வந்திடு” என அவனிடம் கெஞ்சியும்,மிரட்டியும் பார்த்திருக்கிறார்கள்.அவன் மசியவில்லை. ”விலைக்குதான் வாங்கிவந்தேன், எங்கிருந்தும் பிரித்து வரவில்லை”.. என சொன்னதும் என் அக்கா எனக்குத் தொலைபேசி ”ஏண்டா இவனுக்கு காசு கொடுத்து தொலையுற” என பொருமினாள்.”கிளிதான வளர்க்கட்டுமே என்ன இப்ப?” என தொடர்பை துண்டித்தேன்.அடுத்தவாரம் ஊருக்குப் போனபோது கிளிச்சத்தம் என்னை வரவேற்றது.பெருமையாய் தூக்கி வந்து என்னிடம் கொடுத்தான்.கிளி என்னென்ன சாப்பிடும்.. எப்போது சாப்பிடும்.. எந்த மாதிரி கத்தினால் என்ன அர்த்தம்.. என எல்லாவற்றையும் ஒப்பித்தான்.கிளிக்கூண்டு தற்சமயம் கிடைக்காததால் வெங்காய கூடையை தற்காலிக கூண்டாய் மாற்றி விட்டிருந்தான்.வீட்டை விட்டு விடுமுறை தினங்களில் கூட எங்கும் செல்லாமல் இருந்தான்.சினிமாவுக்கு அழைத்தேன் ”வர்ல மாமா கிளி தனியா இருக்கும்” என மறுத்து விட்டான்.முன்பு போல் அவன் சரியாய் படிப்பதில்லை ..எந்நேரமும் 'கிளி' 'கிளி' எனத் திரிகிறான் என அக்கா புராணம் வாசித்தாள்.”சின்னப்பசங்க அப்படித்தான் இருப்பாங்க வேலய பார்” என திட்டி விட்டு வந்தேன்.

அதற்கடுத்த மாதம் ஊருக்குப் போனபோது கிளி சற்று வளர்ந்திருந்தது..இங்கும் அங்குமாய் வீட்டிற்குள்ளேயே பறந்து கொண்டிருந்தது.இரண்டு முறை கிளி பறந்து போய் மாமரத்தின் மீது உட்கார்ந்து கொண்டதாயும், தாத்தா மரமேறி பிடித்துத் தந்தாரெனவும் சொல்லிக்கொண்டிருந்தான்.”கிளி வளர்க்கிறேன்னு எல்லார் உயிரையும் எடுக்குது இது” என அக்கா அவனை லேசாய் தட்டி விட்டுப்போனாள்.சென்ற மாதம் ஊருக்குப் போகமுடியவில்லை.வாரம் ஒருமுறை அவனுக்குத் தொலைபேசி கிளி விசாரிப்புகளை செய்துகொண்டிருந்தேன்.

இரண்டு தினங்களுக்கு முன்பு அக்கா தொலைபேசினாள்.”நீ கொஞ்சம் வரமுடியுமாடா?.. இவன் ரெண்டு நாளா எதும் சாப்டல... அழுதிட்டே இருக்கான்” எனச் சொன்னதும் கிளம்பிப் போனேன். என்னைப் பார்த்ததும் இன்னும் அழத் தொடங்கினான். ”கிளி பறந்து போய்டுச்சு மாமா” என்றவனைத் தேற்றினேன்.”வேற கிளி வாங்கிக்கலாண்டா” என சொன்னதும் அக்கா கத்த ஆரம்பித்தாள் ”இனிமே இந்த வீட்ல எதையாச்சிம் வளர்க்கிறேன்னு ஆரம்பிச்சான்.. அவ்ளோதான்” என்றவளைக் கத்தி அடக்கினேன்.ஒரு வழியாய் அவனைச் சாப்பிட வைத்து, ”கிளி அடைஞ்சி இருந்தா பாவம்டா.. இறக்கை முளைச்சதும் நானே அத பறக்க விடலாம்னுதான் இருந்தேன்” என மெதுவாய் அவன் தலைவருடி சொன்னதும் சமாதானமானான்.மாலை கடைக்குப் போய் மீனும் மீன் தொட்டியும் வாங்கிக் கொடுத்தேன்.

பேருந்தில் திரும்பி வரும்போது சந்தோசு புத்தகங்கள் வாசிக்காமலிருப்பது குறித்தான கவலைகள் என்னிடம் காணாமல் போயிருந்தன.

Monday, December 8, 2008

அனுஜன்யா ஓய்வு மற்றும் சித்தார்த்

நண்பர் அனுஜன்யாவிடமிருந்து இருநூறாவது பதிவினுக்கான வாழ்த்தாய் வந்திருந்த மடல் லேசான வெட்கத்தைத் தந்தது.மேலும் இந்த அன்பினுக்கு நான் தகுதியானவனில்லை என்கிற எண்ணமும் எழத் தவறவில்லை.சுயத் திருப்திகள் மட்டுமே என்னை இயங்கவைப்பதும் கூட இவ்வெண்ணத்தினுக்கு ஒரு காரணமாய் இருக்கக்கூடும்.ஒரு மாதத்தினுக்கு முன்பே இக்கீழ்கண்ட கவிதையை அவர் என் இருநூறாவது பதிவினுக்காய் எழுதிவிட்டிருக்கிறார்.
அய்ஸ் - இருநூறு

புரியவில்லை கவிதையெனவும்
தோள் குலுக்கிய அய்யனார்
கூட்டிசென்றது கூத்துப்பட்டறைக்கு;
சூரபத்மன் பின்னால் ஆடிய அலைகடல்
நடனக்காரியின் நீலச்சேலையென
இடைவேளையில் தெரிந்தது;
மீள் தோன்றிய அலைகடலில்
நீலப் புடவையும் நடனக்காரியின்
முகமும் மட்டும் தெரிந்தது.
திரும்பி வருகையில்
அய்யனார் சொன்னது
அலையும் கவிதையும் ஒண்ணுதான்.

எவ்வித முகாந்திரகளுமில்லாது அன்பினை மட்டுமே பிரதானமாய் கொண்ட நண்பர்களுக்கு பிரத்யேகமாய் சொல்லிக்கொள்ள நன்றியினைத் தவிர பெரிதாய் வேறெதுவும் என்னிடமில்லை.தொடர்ச்சியாய் வாசிக்கும், நேசிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றி.
.......................................

தொடர்ச்சியாய் பதிமூன்று நாட்கள் விடுப்பளித்து தம் அரசாங்க சலுகையை நிரூபித்த என் நிறுவனத்திற்கு நன்றி.இந்த ஓய்வு மிக லேசான மனநிலையைத் தந்துவிட்டிருக்கிறது.செய்ய எதுவுமே இல்லாத பனிக்குளிரடங்கிய ஒரு முழு நாள் அற்புதமானது.அ.மார்க்சின் ஓய்வு குறித்தான கட்டுரை ஒன்று ஓய்வின் உன்னதங்களை,அரசியல்களை முன் வைக்கிறது.ஓய்வும், ஓய்வைக் கொண்டாடி அனுபவித்தலும் கீழானதாக அறங்கள் வடிவமைக்கப்பட்டதை துல்லியமாக முன் வைக்கும் இக்கட்டுரை, மக்களின் விருப்பங்களை கீழிறக்கி அவர்களை சோம்பேறிகள், குடிகாரர்கள், வேட்கைப் பிரியர்கள் என சமூகத்திலிருந்து விலக்கி, இகழ்ந்து வருவதையும் சுட்டத் தவறவில்லை.கடமை அறியோம் தொழிலறியோம் என தலைப்பிடப்பட்ட இக்கட்டுரை மிகவும் பிடித்திருந்தது.மேலும் இதே தொகுப்பில் குடி பற்றியதான குடியும் குடித்தனமும் என்கிற கட்டுரையும் மிக முக்கியமானது.

கழிவறையில் ஆத்மாநாம், வரவேற்பரையில் ஆழிசூழ் உலகு, படுக்கையறையில் நெடுங்குருதியென பாதி பாதி படித்த புத்தகங்களும், சமீபத்தில் கிடைத்த லூயி புனுவலின் Belle de Jour,Viridiana,An Andalusian Dog திரைப்படங்கள் தந்த பெரும் திகைப்புகளும் ஓய்வின் உன்னதங்கள்.லூயி புனுவலின் பாத்திரங்களின் விநோதங்களில் மூழ்கித் திளைத்தபடியே பிரஸ்ஸோனின் பிக்பாக்கெட்டை பார்த்துக்கொண்டிருக்கவும்,சாம்பார் என்கிற வஸ்துவை குறைந்த பட்ச ருசியுடன் சமைப்பதெப்படி என்கிற மிகக் கடினமான பயிற்சியினை என மனைவிக்கு தந்தபடியுமாய் கடந்துபோகின்றன இவ்விடுமுறை நாட்கள்.Pedro Almodóvar ன் Dark Habbits ம் ஆலிவர் ஸ்டோனின் தயாரிப்பில் வந்த salvator ம் பாதியில் நிற்கின்றன.இவ்விடுமுறைக்குள் Kieslowski யின் The Decalogue தொடர்களை பார்த்து முடிக்கவும் திட்டமிருக்கிறது.பழைய வலைப்பதிவுகளை தேடிப்பிடித்து படித்துக் கொண்டிருந்தேன்.சுரேஷ் கண்ணனின் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் மிகவும் பிடித்திருந்தது.வரம் தந்த சாமிக்கு பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவர் அழ ஆரம்பித்து விட்டாராம்.எத்தனை அற்புதமான கணமாய் இருந்திருக்க முடியுமென நினைத்துக்கொண்டேன். எனக்கு இந்தப் பாடலைக் கேட்கும்போதுத் தொண்டை அடைக்குமே தவிர வாய் விட்டு அழவெல்லாம் முடியாது. அது அவருக்கு வாய்த்திருக்கிறது. வெகுநாட்களாய் பேசிக்கொண்டிருக்கும் நண்பர் ரெளத்ரன் பக்கத்திலும் இதே போன்ற ஒரு குறிப்பை படிக்க நேர்ந்தது. கற்பூர பொம்மையொன்று பாடல் அவரால் கேட்கவே முடியாமல் போனதை குறிப்பிட்டிருந்தார்.கேளடி கண்மணியில் வரும் இப்பாடலும் என் தொண்டையை அடைக்கும்.
.......................................

இன்று சித்தார்த்தின் மணவிழா வரவேற்பு.சித்து எனக்கு வலையில் கிடைத்த முதல் நண்பன். ஒரு வகையில் இவ்வலைப்பதிவிற்கு காரணமானவன்.நாங்கள் அரட்டையில் பேசியவற்றைத் தொகுத்தால் அது ஜெயமோகனின் நாவலை விட மிக அதிக பக்கங்கள் கொண்டிருக்கலாம்.ஜோ வினுக்குப் பிறகு எனக்கு கிடைத்த ஆத்மார்த்த நண்பன்.பேசிப்பேசிப்பேசிப்பேசி சலிக்காமல் இருந்தோம். இருவருக்குமான பெரும்பான்மைப் புள்ளிகள் ஒன்றே.பேச்சுக்கள் அவனை என் இடத்தினுக்கு வர நெருக்கடி தந்தன.முதல் முறையாய் என்னை பார்க்கவென்று கடல் கடந்து வந்த ஒரே ஜீவன் சித்தார்த்தான்.நாங்கள் இரவு முழுக்கப் பேசினோம், ஊர் சுற்றினோம் ,படித்துச் சண்டையிட்டோம் ,படங்களாய் பார்த்துத் தள்ளினோம் அவனோடு இங்கு கழித்த நான்கு நாட்கள் அற்புதமானவை. அவனுடைய வாழ்வின் முக்கியமான தருணத்தில் மிகுந்த நெகிழ்வுகளோடு நினைத்துக் கொள்கிறேன்.மனம் நிறைந்த திருமண வாழ்த்துக்கள் சித்தார்த்! செம்புலப்பெயல்போல் கலந்த அன்புடை நெஞ்சங்கள் என்றும் வாழ்கவே!!
.......................................

இப்பொழுதெல்லாம்

நன்றாகத்தான் இருக்கிறது
மெத்தென்ற புல்தரை
சில பறவைகள்
மீண்டும் மீண்டும்
எனைத் தேடி வருகின்றன
ஒரு மாற்றத்திற்காய்
நானோ
அவற்றின் வண்ணத்திலும்
சிறகிடுக்குகளின் அழகிலும்
அமிழ்ந்து போகிறேன்
கண் விழிக்கையில்
நான் மட்டுமே இருக்கிறேன்
இப்பொழுதெல்லாம்
பறவைகளைத் தேடுகிறேன்
ஒரு மாற்றத்திற்காய்...
- ஆத்மாநாம்

Saturday, November 29, 2008

பவழமல்லிப் பூவீன்றவளுடனான அதிகாலை உரையாடல்கள்


இருக்கியா?..
ம்ம்..உள்ள வா
எப்படியிருக்க?
நல்லா..என்ன இந்த நேரத்தில
சும்மா ....நெறய மிதந்து வந்திச்சி ஒரு மாதிரி சொற்களா குவியலா பேச்சா சிந்தனையா..எங்கயாச்சிம் யார்கிட்டயாச்சிம் கொட்டனும் இல்லனா வெடிச்சிடும்.
ம்ம்.. சொல் எனக்கும் ரொம்ப சலிப்பான ஒரு நாள்தான் இது.. பெரும்பாலான நாட்கள்மாதிரி..
உன் வீடு நல்லாருக்கு.. சின்னதா, அழகா, பளிச் னு உன்ன மாதிரி... எங்கிட்டயுமா..போர்..
சரி.. நேத்து ழார் பத்தாயோட விழியின் கதை படிச்சேன்
உங்களுக்கெல்லாம் திடீர்னு என்ன ஆச்சி? ..நாகார்சுனன் பிளாக்ல பார்த்தேன்..கருமம்..கருமம்..
ஆமா.. அது ஒருமாதிரி பண்ணிடுச்சி ...படிச்சிட்டிருக்கும்போதே....பதினம வயசில இப்படி ஆனது...ம்ம்ம்.. சில மூணாந்தரங்கள்.... அதுக்கு பிறகு இப்பதான்..
என்னது?.. ஓஓ... ஓ கே..
ம்ம்...
அதுல என்ன ..... குற்ற உணர்ச்சியா?
இல்ல..ஆனா i frustrate
usual தானே god damn frustrates
Yes i know...
அப்புறம் என்ன ?..ஆடுகள் எப்போது தம்மை ஆடுகள் என உணரத் தொடங்குகிறதோ அப்போது அவை மந்தையிலிருந்து விலகத் துவங்குகின்றன நீதான் இதுன்னு முழுசா எப்ப உன்ன உணர ஆரம்பிக்கிறியோ, அப்ப முழுசா வெளில வந்துடுவ..
ம்ம்..அந்த ஆடுகள் யார் சொன்னது?
கலீல் ஜிப்ரான்
Fuck the philosophers..
ஏன்? அவங்களுக்கு என்ன?..உங்கள மாதிரி கிறுக்குங்க இல்ல.. ரொம்ப தெளிவான நிதானமான ஸ்டேட்மெண்ட்ஸ் தான்... ஆரம்பத்தில பாக்குறப்போ ரொம்ப flat ஆ தெரிஞ்சாலும் நீங்க ஆராய்ச்சி பண்ணி கிழிச்சதும் அவங்க சொன்னதுக்கும் பெரிய வித்தியாசம் ஒண்ணுமில்ல..
இங்க பார் இந்த தத்துவம், தத்துவவாதிங்க இவங்கள லாம் கட்டி வச்சி ஒதைக்கனும்... ரொம்ப சோம்பேறித்தனமான மேலோட்டமான பாசிஸ்ட் தெரியுமா இவங்கலாம்
யார் சொன்னா..உனக்கப்படி படுது அவ்ளோதான்..மொதல்ல accept பண்ணு ..நம்பு..எல்லாத்தையும் குறுக்கில பாக்காதே..
STOP advising me!!!
கத்தாதே..பக்கத்து வீட்ல குழந்தைங்க இருக்காங்க.. விடியற்காலை இரண்டு மணி இப்ப..
sorry
no issues..
இந்த பேச்ச விடு தத்துவம் கலை கவிழ்ப்பு ன்னு போர்..
நீதான் ஆரம்பிச்ச...சரி உன் காதலிகள் எல்லாம் எப்படியிருக்காங்க எண்பத்தி எட்டாவது காதலிய கண்டுபிடிச்சிட்டியா?
ஆமா.. நேத்து ஆர்குட் ல ஒரு பொண்ண பாத்தேன்..சுமாரா கவிதை எழுதுறா..அழகாவும் இருக்கா ....i like her
orkut ல நெறய fake நானே மூணு id வச்சிருக்கேன் :)
இல்ல இவ நெசமாத்தான் இருக்கணும்...
எப்படியோ நல்லா இருந்தா சரி..உனக்குன்னு வந்து மாட்ராளுங்க பார் அவளுங்கள சொல்லனும்....
எனக்கு ஒரு டவுட்... நீ இந்த சாரு இன்னும் எல்லா பொனைவு எழுத்தாளர்களும் காதல், காதலி, சாட், காமம் ,அது இதுன்னு அடிச்சி உடறிங்களா நெசமாவே நடக்குதா இல்ல உங்க புனைவா?...
என்னோட சிறுபிராயத்து முதல் காதலியிலிருந்து எண்பத்தி ஏழாவது காதலியான செர்ஜினா சிமோந்தி வரைக்குமானவங்களோட புகைப்படம் இருக்கு..கடிதங்கள...கடிதங்கள்..தொலைப்பேச்சுகள்..கலவி கொண்டதற்கான தடயங்கள் எல்லாம் எங்கிட்ட இருக்கு அதெல்லாம் உன்கிட்ட காமிக்கிறதில எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல..
சரி..நம்பிட்டோம்..ஆளவிடு...
ஆனா உன்னத்தான் ஒண்ணும் செய்ய முடியல
கழுத்த பிடிச்சி வெளியில தள்ளனுமா இப்ப?..
இல்ல நான் ஆரம்பிக்கல... ஆனா நீ முதல்ல இந்த புனிதக்காரியான ஒரு அடையாளத்தில இருந்து வெளில வா..
இருந்துட்டு போகட்டும்.. உன் flirt லாம் என்கிட்ட மூட்ட கட்டி வச்சிட்டு பேசரதா இருந்தா பேசு... இல்ல எடத்த காலி பண்ணு...
சரி பேச்ச மாத்து... இத நீதான் ஆரம்பிச்ச..
:) சரி..இப்ப ஒண்ணு சொல்லவா?.. உன்கிட்ட எனக்கு பிடிச்சதே இந்த கூர்மையான அவதானம்தான்.. கடைசி subject ல நான் சொன்ன dialogue ஐ correct ஆ இப்ப சொல்ற..how sharp you !!
yes i know but இது பெரிய விசயம் ஒண்ணும் இல்ல க்ரேசி மோகன் கூட இன்னும் ஷார்ப்பா எழுதறான்..
பச்.. அந்த அளவுக்குலாம் தாழ்த்திக்காதே..உன்கிட்ட சரக்கு இருக்கு
yes i know
then what the hell u don't know?
i don't know :)
நீ திமிர் பிடிச்சவந்தான்...
i guss i know eve...ry..thingggg...
சரக்கு போட்ருக்கியா என்ன?
இப்ப இல்ல..காலைல எதிர் போட்டேன்... லைட்டா
இன்னும் இருக்கா?
இல்ல பளிச் னு இருக்கு..
நேத்து அதிகமா?...
ம்ம்..கொஞ்சம் அதிகம்தான்
ஏதாசசிம் படம் பாத்தியா?
frida பார்த்தேன் salma hayek படுத்திட்டா..robert rodriguz triology ல வருவா இல்ல அத விட இதுல செம அழகு.. நீ பாத்த இல்ல desparado?
இல்ல ரொம்ப ரத்தம் அதில.. பாதில மூடிட்டேன்..உன் பேச்ச நம்பி இனிமே படம் பாக்க கூடாது. இனிமே உங்கிட்ட கேக்கவும் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் நீ சொன்னன்னு perfume வாங்கினேன்..அன்னிக்கு என்னால சாப்ட முடியல் u know i vomitted..
இதான் உன்கிட்ட இருக்க பிரச்சின..குரூரம்னு லாம் எதுவும் இல்ல சொல்லப்போனா அழகியல்னு நீ நெனச்சிட்டிருக்க எல்லாம்தான் படு குரூரம்..
ப்ச் ...உன்கிட்ட இந்த சப்ஜெக்ட் பேசி சலிச்சிட்டேன்...நீயும் மாறப்போறதில்ல ..நானும் இப்படியிருக்கதான் ஆசப்படுறேன்..பேச்ச மாத்து..
tinto brass collection வாங்கினேன்
சொன்னியே..நீ அந்த கருமத்தலாம் பாக்குறதுக்கும் ஜோதி தியேட்டர் ரசிகர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?
நெறய இருக்கு..சொன்னா உனக்கு புரியாது..இல்லனா காத பொத்திப்ப..ஆளவிடு
இல்ல நீ சொல் நான் கேட்கிறேன் ஆனா உன் மைண்ட்லெஸ் ட்ங்க் க மட்டும் கொஞ்சம் அடக்கி வாசி..
சரி..காமம் கலவி இதெல்லாம் வெறுமனே நுழைப்புக்குள்ள முடிஞ்சிபோய்டுறதில்ல.பெரும்பாலான மக்கள் உச்சத்த சரியா அடையுறதும் இல்ல அத என்னன்னு உணர்ரதும் இல்ல.காமம் வெறும் சதை அசைப்புகளோடும் மனத் தூண்டுதல்களோடும் முடிஞ்சிபோய்டுது.மூளையிலிருந்து காமம் செயலுக்கு வர்ரதேயில்ல.கலவி ங்கிறது இப்ப பெரும்பாலும் நினைவின் தூண்டுதலா சுயத்தின் வெளித்துப்பலா மட்டும் தான் நிகழுது.இது மனிதனுக்கு ஆரோக்யமானதில்ல.ஓஷோ இத பத்தி பேசி இருப்பார்.மூளையின் நரம்பதிர்வுதான் உடலின் உச்சம்னா அந்த நரம்ப நொடிக்கொரு முறை துடிக்க செய்யும்படி உடல்ரீதியா விஞ்சானத்த கொண்டு அறுவ சிகிச்ச பண்ணிக்கலாம்.every five minute you can get orgasm... நம்ம விஞ்சான சோம்பேறிக் கோமாளிகள் இப்படி நரம்ப அறுவ சிகிச்சை பண்ணி, ஒரு சுவிட்ஜ் ஐ இணைச்சி கைல கொடுத்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு ஒண்ணுமில்ல..ஏன்னா காமம் பத்தின நம்மளோட மேலோட்டமான புரிதல் நம்மை கடைசியா அங்கதான் கூட்டிப்போக போவுது..
சரி காமம் உடல் ரீதியானதுதான்..அன்பால நிறைஞ்சதுதான்.. உடலின் அதி உன்னத முயக்கம்தான் ...நிதானமான அணுஅணுவான துடிப்புதான் ....எல்லாம் ஒத்துக்குறேன்..நான் கேட்டது நீ பாக்குற போர்னோ படங்களுக்கும் ஜோதி தியேட்டர் வகையறாக்களுக்கும் என்ன பெரிய்ய வித்தியாசம்?
சதை அசைவுகள் மட்டும்தான் காமம்னு நினைக்கிறவங்களுக்கு சுயபுயணர்ச்சிக்கு தேவையான பிம்பங்களுக்காக தேடி அலைபவங்களுக்கு அது சரியா படும்.எனக்கு அப்படி இல்ல.நான் காமத்திலிருக்க அதிகாரத்த களைய விரும்புறேன்.நுழைப்புகள் தவிர்த்து உச்சத்திற்கான மாற்றுக்களைத் தேடறேன்னும் சொல்லிக்கலாம்.நீ பியானோ டீச்சர் னு ஒரு படம் பார்.மாற்று உச்சம் பத்திலாம் பிறகு பேசலாம்.உங்கிட்ட விலாவரியா சொல்லி புரிய வைக்க என்னால முடியாது.நீ பார்த்திட்டு சொல்லு அப்புறம் பேசலாம்....
நான் ஏன் பாக்க போறேன்..ஆ ன்னா ஊ ன்னா அதிகாரம் ங்கிற வார்த்தைய பயன்படுத்த ஆரம்பிச்சிடுங்கடா..பெண் வந்து எப்பவும் driven தான் அதிலதான் சந்தோசம் இதில எங்க வந்தது அதிகாரம்?
உன்னமாதிரி middle class முட்டாள்களாலதான் நம்ம சமூகம் உருப்படாம போவுது.
நெனச்சேன் இத சொல்வேன்னு...
எல்லா பெண்களும் driven தானே அப்புறம் ஏன் நம்ம சமூகத்தில இத்தன பாலியல் குற்றங்கள்.கணவனே கண்கண்ட தெய்வம்னு இருக்க வேண்டியதுதானே..
அப்ப வெறும் உடல் இச்சை மட்டும்தான் இந்த குற்றங்களுக்கான காரணம்னு சொல்றியா
ஆமா..எல்லாத்துக்கும் உடல்தான் காரணம். அதுபத்தின அரைகுறை புரிதல்தான் எல்லா வினைக்கான துவக்கங்களும்.
உடலைத் தாண்டி மனம்னு ஒண்ணு இருக்குடா அதுதான் காரணமா இருக்க முடியும்.நீ ரொம்ப குரூரமா சிந்திக்கிற..விட்டா காதல்னு ஒண்ணு கெடயவே கெடயாதும்ப...
ஆமா அப்படின்னு ஒண்ணு கெடயவே கெடயாது...
போடா எனக்கு டயர்ட் ஆ இருக்கு உன்கிட்ட பேசி
baskin robbins icecream பிடிக்குமா ஒனக்கு? இந்த நேரத்தில கட தொறந்திருக்கும் போலாமா?..
இல்ல நான் டீ போடுறேன்...
நான் உன்ன டீ போடவா
செருப்பு பிஞ்சிடும்..
அய்யோ பாவம்
லூசுடா நீ
யெஸ்...இந்த விடியற்காலை நல்லாருக்கு இல்ல..சன்னமான பனி..நீ வேற அழகா இருக்க..கொஞ்சூண்டு புத்திசாலியாவும் இருக்க..என்ன சரியா புரிஞ்சிக்க வேற செய்யுற..முக்கியமா என்ன சகிச்சிக்கிற..இதுக்குலாம் என்ன பண்ணலாம்..
அய்யா சாமி நீ ஒண்ணியுமே பண்ண வேணாம்..ஆளவிடு..உன்ன வூட்ல வுட்டது தப்பா போச்சி..பெரிசா ஆரம்பிக்கிறான்..டேய் நீ செண்டிமெண்டுக்கு விரோதி மாதிரி பேசி கிழிப்ப.. அப்புறம் அப்படியே மென்மையான கவுஞ்சனா மாறிடுவ எப்படிடா இதெல்லாம்?..
நீ என்னோட காதல் கவிதைகள் தொகுப்பு படிச்சியா..அதில ஒரு வரி வரும்.. நீரினடியில் பற்றுதலுக்காய் அலைந்துகொண்டிருக்கின்றன என் மிக மெல்லிய வேர்கள் ன்னு சொல்லப்போனா அதான் நான்..
ம்ம் ஆகாயத் தாமரை.. நல்ல படிமம் டா அது!..எங்கிருந்து பிடிக்கிற நீ இதெல்லாம்
உன்கிட்ட இருந்துதான்..உன் கண்கள்ள இருந்துதான்
யப்பா!! டேய் அடிச்சி வுட்றா...
:) எரும..
நீ அலுத்துகிட்டாலும் பரவால்ல..நான் இத சொல்லியே ஆகனும்..உனக்குள்ள ரொம்ப மென்மையான ஒரு கவிஞன் இருக்கான்டா.அவன பத்ரமா பாத்துக்கோ..உன் காதல் கவிதைகள் தொகுப்பு படிச்சி ரொம்ப சந்தோஷப்பட்டேன்..புள்ள வழிக்கு வந்திடுச்சின்னு நெனச்சேன்..நீ இன்னாடான்னா இப்பவும் இந்த வாய்கிழிய பேசுறத விடல..
நான் நெறய மாறிட்டேன்..நெட் பக்கம் வர்ரதில்ல..கண்டதையும் படிக்கிறதில்ல..போலி, நெஜம், உண்மைய தேடுறேன்னுலாம் ஒளறிக்கொட்றதில்ல..உனக்கு தெரியுமா இப்பலாம் நெறய சினிமா பாட்டு கேட்க ஆரம்பிச்சிட்டேன்..என்னோட பழைய கலெக்சன்லாம் தேடி தேடி ஓடவிட்டுட்டு இருக்கேன்..நைட்ல சத்தமா பாடுறேன்..நேத்து வைரமுத்துவ சிலாகிச்சிட்டு இருந்தேன் தெரியுமா...மலர்கையில் மலர்வாய் க்காக..எத்தன அழகான வரி அது..நான் அத்தன கவனமா கேட்டதில்ல அந்த பாட்ட..ஆசிப் தான் சொன்னார்...இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில மலரனும்யான்னு..அசந்திட்டேன்..எத்தன பெண் தன்மை அந்த வரில..உச்சம் ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில நிகழ்வது அற்புதமான கலவியா இருக்க முடியும்.....
அடப்பாவி உனக்கு இப்பதான் இந்த வரிக்கான அர்த்தமே தெரியுமா?..எனக்குலாம் கேட்ட உடனே பிடிச்சது இந்த வரிதான்...எல்லாரையும் தட்டையா நிராகரிக்கடா நீ..நான் வேணா இப்ப அந்த பாட்ட பாடவா..ஸ்..நே...கிதனே...
ஆத்தா ஆளவிடு..நான் வேணா பாடுறேன்..உன் கொரல கேட்கிற தைரியம்லாம் எனக்கு இல்ல..
போடா வெண்ண..நான் சுமாரா பாடுவேன்..
அத நான் சொல்லனும்..
ஒரு கவித சொல்லேன்
எனக்கு சொல்ல வராதே
ஏன்?.. உனக்கு ஜோ வும்.. மொட்டைமாடியும் ..ஓல்ட்மங்கும் இருந்தாதான் வருமா..பெரிசா பண்ணிக்காதே..சொல்லு..
ம்ம்..சரி
கிளையிலிருந்து உதிர்ந்து
பசிய இலைகளில் தொற்றிக்கொண்டிருக்கின்றன

காவி நிறக் காம்புகள் கொண்ட
வெள்ள நிற
பவழமல்லிப்பூக்கள்
அது உன் கண்களிலிருந்து துவங்கி
இதழ்களில்
எப்போதும் தங்கியிருக்கும்
எனக்கான புன்னகையை
நினைவூட்டுகின்றது...

ம்ம்ம் சுமார்தான்.... இது என்ன பூ? பவழமல்லி?
அது ரொம்ப அழகான சின்ன்ஞ்சிறிய பூ நானும் சமீபத்திலதான் பார்த்தேன்..இந்த முறை ஊருக்குப் போயிருந்தப்போ அதிகாலைல ஊர விட்டுத் தள்ளி இருக்கும் ஒரு சிவன் கோவில்ல...அத்தன அழகு அந்த பூ ..பேர் தெரில...கதிர் ப்லாக்ல யாரோ சொல்லி இருந்தாங்க அந்த பூவுக்கு பேர் பவழமல்லின்னு..
சரி ..எனக்கு தூக்கம் வருது..நீ கெளம்பு
ம்ம்..விடிஞ்சிடுச்சி..வர்ரேன்..பை
குட் நைட் டா
குட்மார்னிங்க் :)

(முகமற்ற நேசத்தினுக்கு இந்த இருநூறாவது பதிவு....)

Wednesday, November 26, 2008

ஜோ


எனக்கும் ஜோ என்கிற ஜோசப் மரிய செல்வத்திற்கும் நிறைய ஒற்றுமைகள்.98 ஆம் வருடம் அவன் கடலூரிலும் நான் கிருஷ்ணகிரியிலும் எங்கள் படிப்பை முடித்திருந்தோம்.அவன் காதலியின் பெயரும் என் காதலியின் பெயரும் ஒன்றாய் இருந்ததுதான் எங்களிருவருக்குமான ஆரம்பப் புள்ளி. எல்லைப்பிள்ளைச் சாவடியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு கட்டிடத்தில் நான் வசித்து வந்தேன்.அவ்விடத்தை வீடு என மிகத் தாராளமாகச் சொல்லலாம் . மிகப்பழங்கால கதவுகளையும்,அதி பழங்கால சன்னல்களையும்,சுண்ணாம்பு பெயர்ந்து லேசாக வெளிறிய சுவர்களையும்,வீட்டின் கூடத்தில் இரும்புக் கதவு கொண்ட குளியலறை ஒன்றையும் கொண்டிருக்கும் வினோத வீடு அது.ஒழுங்கீனங்களின் மீது அபார விருப்பம் இருந்ததால் அவ்வொழுங்கற்ற வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பாண்டிச்சேரியில் ஈஸ்வரன் கோவில் தெருவில் இருவரும் பணிபுரிந்தோம்.இரவில் பணி முடிந்து திரும்புகையில் தினமும் என்னோடு லேசாய் குடித்துவிட்டு கடலூருக்குப் பேருந்தில் புறப்படுவான்.பணம் அதிகமாயிருந்த ஒருநாள் மிக அதிகமாய் குடித்திருந்தோம்.அவனை அதே தள்ளாட்டத்தோடு அனுப்ப விருப்பமில்லாததால் என் இளஞ்சிவப்பு நிற லேடி பேர்டு மிதிவண்டியில் அமரவைத்து அழைத்து வந்தேன்.அவ்வீட்டை வெகுநேரம் சிலாகித்துக் கொண்டிருந்தான்.புழுக்கம் மிக அதிகமாக இருந்ததால் குறுகலான, ஒரே ஒரு உருவம் மட்டும் ஏறக்கூடிய மாடிப்படியில் ஏறி,கைப்பிடியில்லாத மொட்டை மாடியில் நின்றபடி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.ஜோவிற்கு ஓல்ட் மங்க் குடிக்க பிடிக்கும். எனக்கும்.எனக்கு கவிதைகள் பிடிக்கும்.ஜோவிற்கும். ஜோவிற்கு நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தால் அவனுக்காய் காத்திருக்கும் காதலியை உடனே திருமணம் செய்துகொள்வான்.நானும்.இன்னும் சின்ன சின்னதாய் நிறைய ஒற்றுமைகள்.

ஒரு ஞாயிறு மாலை பச்சை நிற சூட்கேசுடன் என் அறைக்குக் குடியேறினான். ஜாவா படிக்க போவதாய் சொன்னதை நான் நம்பவில்லை.நாங்கள் பார்த்து வந்த துக்கடா வேலை முடிய இரவு பத்து மணி ஆகும்.பத்து மணிக்கு மேல் ஓல்ட் மங்க் அரைப்புட்டியை கையில் பிடித்துக்கொண்டு கணக்கு வைத்திருந்த மெஸ்ஸில் இரவு உணவையும் வாங்கிக்கொண்டு மொட்டை மாடியில் அமருவோம்.மிக மெதுவாய் குடிப்பது இருவருக்குமே மிகவும் பிடிக்கும்.முதல் மிடறை மிகக்கசப்புகளோடு விழுங்கிவிட்டு சிகரெட்டை பற்ற வைப்பான்.அந்த வண்ணதாசன் கவிதை சொல்லு மச்சி என ஆரம்பிப்பான்.ஜோவிற்கு பிடித்த கவிதைகள் எனக்கு மனப்பாடம்.புழுக்கம் மிகுந்த கோடை இரவுகள் மிகத் தெளிவான வானத்தையும் ஒளிர்விடும் நட்சத்திரங்களையும் பரிசாகத் தருவதுதான் எத்தனை அற்புதம். சாதாரண குரலில்தான் ஆரம்பிப்பேன் அக்கவிதையை, மூன்றாம் வரிகளில் உயர்ந்து,பின் இறுகி,முடிவில் மிகக் கசப்பானதை உமிழ்வது போல என் குரல் மாற்றமடைவதை என்னால் ஒவ்வொருமுறையும் உணரமுடிந்தது.

வயதாகிவிட்டது என் தூக்கத்திற்கும்
வினோத சொப்பணங்களுக்கிடையில்
அரற்றி அரற்றிப் புரள
நசுங்கிக் கிடக்கின்றன தலையனைகள்
தரையில் தாள் நகர்கிற சப்தத்திற்கும்
புத்தகங்கள் சிறகடிக்கிற நுட்பத்திற்கும்
விழித்தும் பதைத்தும் எழுகையில்
கண்காணாமல் போய் விட்டிருக்கிறது
இருளில் கரைந்த இசை ரூபம்

இந்த இடத்தில் நிறுத்திவிட்டு சிகரெட்டை ஜோவிடம் வாங்கி ஒரு முறை உள்ளிழுத்துக் கொள்வேன்.
யார்யாரைக் கைவிட்டீர்கள் உங்களில்
என நகரும் முட்களால் கேள்வி கேட்டபடி
அப்பால் சென்றது காலம்

இதை சொல்லி முடிக்கையில் என் பதட்டம் மிக அதிகமாயிருக்கும்.ஜோ உறைந்து போயிருப்பான். போதை எங்களிருவரையும் தன் அதி உன்னத உலகத்தில் தொலைக்கச் செய்து விட்டிருக்கும்.

அபியையும் ஆத்மாநாமையும் கிறக்கங்களோடு வாசித்த காலம் அது.ஜோவிற்கு அபியை புரிவிக்க நான் அதிகம் மெனக்கெடுவேன்.இந்தக் கவிதையைத் திரும்பத் திரும்பச் சொன்ன ஒரு இரவில் அவன் பைத்தியமானான்.

இந்த விளிம்பிலிருந்து
எட்டிப் பார்க்கையில்
செய்தி எதுவும் தெரிவிக்காத
அமைதிப் பள்ளத்தாக்கு....


ஜோ புரியல ஒய்.. புரியல ஒய்... என அரற்றத் துவங்கினான்.இரு மச்சி! இரு மச்சி!! இப்ப பார்
மொட்டை மாடியை ஒட்டிய தண்ணீர் தொட்டியின் மீது ஏறினேன்.இதாண்டா விளிம்பு..சிமெண்ட் சிலாபுகள் கொண்டு மூடப்பட்டிருந்த அத்தொட்டியின் நுனியில் என் பாதங்கள் ..இதாண்டா பிடிமானம் எதுவுமில்லாத விளிம்பு..பார்.பார்..இங்கிருந்து மெதுவா எட்டிப் பாக்கிறேன்..நீதான் பள்ளத்தாக்கு.. செய்தி எதுவும் தெரிவிக்காத அமைதிப்பள்ளத் தாக்கு.அ மை தி ப ள் ள த் தா க் கு அ வை உயர்ந்த குரலில் ஆரம்பித்து க் ல் அடங்கி கு வை காற்றாக வெளியிட்டேன்...
மச்சி நீ கீழ இறங்கு!.. விழுந்திடப்போற..எனக் குழறியபடி உறங்கிப்போனான்.நான் கவிதையை பிரசங்கித்த கிளர்வில் மேலிருந்தபடியே சிமெண்ட் சிலாபுகளில் உறங்கிப் போனேன்.

ரத்னா தியேட்டரில் அய்ரோப்பியத் திரைப்படங்களை எப்போதாவது திரையிடுவார்கள். ஒருநாள் அத்திரையரங்கைக் கடக்கையில் பை சைக்கிள் தீஃப் படம் திரையிடுவதை அறிந்து பார்க்கச் சென்றோம்.திரைப்படம் முடிந்து வெளியே வந்த பிறகு எங்களிருவ்ரையும் அழுத்தமான மெளனம் சூழ்ந்திருந்தது.என் நினைவு முழுக்க திருடமுயன்று பிடிபட்ட அச்சாமான்யனின் வெளிறிய முகமும்,கால்கள் வலிக்க அலைந்த சிறுவனின் பசியும் நிறைந்திருந்தது.ஜோ மெதுவாய் பணமிருக்கிறதாவெனக் கேட்டான்.இல்லையெனத் தலையசைத்தேன்.குடிச்சாதான் தூங்கமுடியும்னு தோணுதுடா! என்றான் எனக்கும் அப்படித்தான் இருந்தது.சாலையில் கடந்து போகும் முகங்களில்,தெரிந்த முகங்கள் எது தென்பட்டாலும் உடனடியாய் கடன் வாங்கிவிடும் தீர்வுடன் வெகு நேரம் நின்றுகொண்டிருந்தோம்.அலுவலக வாசலில் டீ கடை வைத்திருக்கும் ராமு மிதிவண்டியில் கடந்தான் புட்ரா மச்சான் அவன! என கத்தியபடி விரட்டிப் பிடித்தோம்.இன்னா மிசே ரோட்ல!! என்றவனை பேசவிடாது அவன் சட்டைப்பைக்குள் துழாவி அய்ம்பது ரூபாயைத் தேற்றினோம்.அப்போதிருந்த மனநிலைக்கு அது போதாதெனத் தோன்றிற்று. ராமு இன்னோரு அம்பது ரெடி பண்ணு! என்ற ஜோ வை மிகக் கடுமையாய் முறைத்தபடி கைகளை உதறினான்.இருந்தது அவ்ளோதான் என்றவனை அதிகம் பேசவிடாது நட கடைக்குப் போகலாமென அவனையும் தள்ளிக்கொண்டு கடைக்கு வந்தோம்.இன்னொரு அய்ம்பது ரூபாய் வியாபாரம் நடக்கும் வரையில் உட்கார்ந்திருந்து அதையும் பிடுங்கிக் கொண்டு அரைப்புட்டியோடு அறையை வந்தடைந்தோம்.இதை எழுதும்போது கூட சோர்வு மிகுந்த அச்சிறுவனின் முகம் என் நினைவில் வந்து போகிறது.அத்திரைப்படம் குறித்து மாற்றி மாற்றி அரற்றினோம்.ங்கோத்தா! அந்த ஓட்டல்ல ஒக்காந்து சாப்டுவானுங்க பாரு ப்ப்பா! என்னா சீன் டா தாயோலி சாகடிச்சிட்டாண்டா..

வெகு சீக்கிரத்தில் நெருக்கடிகள் எங்களிருவரையும் ஆக்ரமிக்கத் தொடங்கின.இடம் பெயர்வது குறித்து யோசிக்கத் துவங்கினோம்.அடுத்த வேலை எதுவுமில்லாத நிலையில் இருந்த வேலையும் தூக்கி எறிந்து விட்டு திசைக்கொருவராய் விலகினோம்.செட்டில் ஆனா சொல்றன் மச்சி இதுதான் நாங்கள் கடைசியாய் பேசிக்கொண்டது.நான் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் சுற்றி அலைந்தேன்.கைவசமிருந்த ஒரே பிடிமாணத்தையும் தொலைத்து விட்டு துபாய் கிளம்பி வந்துவிட்டேன்.ஜோவிற்கும் பிடிமாணம் தொலைந்ததை தெரிந்து கொள்ள முடிந்தது.அவன் எங்கிருக்கிறானெனத் தெரிந்து கொள்ள விருப்பமில்லை.நான் அவனையும் என்னை அவனும் பார்க்க நேரிடும் சூழலின் அபத்தங்கள் மிகக் குரூரமாய் இருக்கக்கூடுமென நம்பினேன்.சென்ற வருட இறுதியில் அவனிடமிருந்தது ஒற்றை வரியில் மின்னஞ்சல் வந்திருந்தது.செட்டில் ஆயிட்டண்டா..நானும் அதே வரிகளை எழுதி அனுப்பினேன்.

இந்த வருட துவக்கத்தில் சென்னை அசோக் நகர் தண்ணி டேங்க் பூங்காவில் சந்திப்பதாய் முடிவு செய்தோம்.ஜோ கொஞ்சம் பூசியிருந்தான்.அவனை வெளிறிய வெள்ளை/ கோடு போட்ட சட்டைகளிலேயே பார்த்திருந்தது.இப்போதவன் அடிடாஸ் ஜோ வாக மாறியிருந்தான். ரே பானை உயர்த்தியபடி பல்ஸரிலிருந்து இறங்கினான். உள்ளுக்குள் நிறைவும் மகிழ்வும் ஒரே நேரத்தில் பொங்கியது. வா! ஒய் என கட்டிக்கொண்டேன்.அவனும் துபாய் தண்ணியா ஒய் செம கலராயிட்ட எனக் கிண்டலடித்தான்.
டகீலாவா எறங்குது மச்சான் என சத்தமாய் சிரித்தேன்.அப்ப நம்ம பிராண்ட அடிக்கிறதில்லையா நீ! எனக் கோபித்தான்.இல்ல மச்சி என சிரித்துக்கொண்டேன்.
எவ்ளோடா வாங்குற? என்றான்
ஒண்ணர மச்சான்
அடி தூள் எங்கயோ போய்ட்ட
நீ என்றேன்
அறுவது தொட்டண்டா
இருவரும் மிகக் கவனமாய் அந்தக் கேள்விகளைத் தவிர்த்தோம்.குடிக்க அழைத்தேன்
இல்ல மச்சி.. என்னோட கொலீக்.. ஒரு பொண்ணு... இப்பதான் நாலு மாசம்.. அவளோட வெளில போற ப்ளான்..என வார்த்தைகளை மென்றான்.லேசாய் நெளிந்தான். சந்தோஷமாயிருந்தது.சரிடா கெளம்பு நீ நான் அடுத்த லீவ்ல வரும்போது வீட்ல தங்குறா மாதிரி வர்ரேன் என விடைபெற்றுக்கொண்டு பிரிந்தேன்.சொல்ல முடியாத உணர்வில் கண்மண் தெரியாமல் குடிக்க வேண்டும் போலிருந்தது..சிகரெட்டினைப் பற்றவைத்துப் புகையை ஆழமாய் உள்ளிழுத்தேன்.மறுபடியும் ஜோ..
இன்னாடா... போவல?
நாம ஜெயிச்சிட்டமா மச்சி? என்றான்.அவன் முகத்தில் படிந்திருந்த பரிதாபத்தை துயரத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.விழிகளைத் தாழ்த்திக் கொண்டேன்.என்ன சொல்வதென்றும் தெரியவில்லை.அவன் பைக்கை திருப்பிக் கொண்டு விரைந்து கடந்தான்.

Photo from Dictionary of Khazars play

Saturday, November 15, 2008

வாரணம் ஆயிரமும் முதல் முத்தமும்


திரைப்படம் பார்த்து முடித்த பின்பு லேசாய் குடித்தால் நன்றாகவிருக்கும்போல் தோன்றியது. இரவு பதினோரு மணிவாக்கில் Grand ல் போய் அமர்ந்தேன்.மூன்று வாரங்களாய் தொட்டிராத பியர் வாசனை தந்த மகிழ்வை விட வெகு காலம் கழித்து நம் சூழலில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியில் நிறைந்திருந்தேன்.உறவுகள் தொடர்கதை யென கிதார் பின்னனியில் தொடங்கும்போதே மகிழ்வாய் இருந்தது.ரயில், மழை, கிதார், காதல் என பதின்மங்களை புரட்டிப்போடும் காட்சியமைப்புகள்.நெடிய திரைப்படத்தில் அங்கங்கு கவிதைத்தனம்.(அவளோடு வாழ்ந்த தொண்ணூ்று நாள் ஒரு இளையராஜா பாடல் மாதிரி).கல்லூரியில் படிக்கும்போது எல்லாருக்கும் ஒரு கனவிருக்கும். கையில் ஒரு கிதார், ஒரு அழகான பெண், என் இனிய பொன்நிலாவே, வென தன்னைப் பிரதானப்படுத்தி காட்சிகள் பகல்கனவில் விரியும்.அதை திரையில் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்வு அளவில்லாதது.சூர்யா- சமீராரெட்டி காதல் ஒரு இளமை fantasy.

அப்பாவுக்கும் மகனுக்குமான உறவு நமது சூழலில் அழுகாச்சி காவியங்களாகவே சொல்லப்பட்டிருக்கிறது.முதன்முறையாய் இயல்பான, நட்புரீதியிலான, நெகிழவைக்கிற, அற்புதமான கதை சொல்லல் இத்திரைப்படத்தில் சாத்தியமாகி இருக்கிறது.கிருஷ்ணன் கதாபாத்திரம் தமிழ்சூழலுக்கு மிகவும் புதிது.நானா படேகர் இப்பாத்திரத்தில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான் என்றாலும் சூர்யாவின் உழைப்பு எவ்வகையிலும் உறுத்தவில்லை.உடல்மொழி, குரல், உடைத்தேர்வுகள் காட்சியமைப்புகளென கிருஷ்ணன் கதாபாத்திரம் மிகக் கச்சிதம்.பதின்ம சூர்யா, கல்லூரி சூர்யா, காதல் சூர்யா, பொறுப்பான சூர்யா, தடுமாறும் சூர்யா, அலையும் சூர்யா, திரும்பும் சூர்யா, உழைக்கும் சூர்யா, சாகச சூர்யா, குடும்ப சூர்யா,அப்பா சூர்யா,சந்தோஷமாய் மரணிக்கும் சூர்யா ..மூச்சுமுட்ட வைக்கும் சூர்யாக்கள்.ஒவ்வொரு காட்சியிலும் புதிய சூர்யாவை பார்க்க முடிகிறது.ஒரு திரைப்படத்திற்காக உழைக்கும் கலைஞனை பார்க்க மகிழ்வாய் இருக்கிறது.சுயசரிதைப் படங்கள் பிரதான பாத்திரத்தின் உழைப்பைக் கோருபவை Raging Bull ல் Robert di niro அபரிதமாய் உழைத்திருப்பார்.ஒரு குத்துச் சண்டை வீரனாய் ஆரம்பித்து குடிகார குப்பனாய் மாறும் வரையிலான உடலை அப்படியே நம் முன் கொண்டு வந்திருப்பார். சூர்யாவின் உழைப்பும் உலகத் தரம்தான்.

இந்த படத்தில் நொட்டை சொல்ல ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.நீளத்தை வெட்டியிருக்கலாம்,தேவையில்லாத காட்சிகளை நீக்கியிருக்கலாம், இன்னும் கச்சிதமாக்கியிருக்கலாம், தமிழில் பேசியிருக்கலாம், இப்படி ஏகப்பட்ட லாம்கள்.ஆனால் சுயசரிதை படங்கள் கசாமுசா வென இருப்பது தான் எனக்குப் பிடித்திருக்கிறது.நேர்கோட்டில் எவரின் வாழ்வும் இல்லை.அப்படி நேர்கோட்டில் சொல்வதெல்லாம் சுயசரிதைப் படங்களாக முடியாது.கெளதம் தன் அப்பாவிற்கு செலுத்திய மிக உயர்ந்த பட்ச நன்றியாய் இப்படம் இருக்கலாம்.சினிமாவை நேசிக்கும் மிகச் சொற்பமான நபர்களுக்கு நிச்சயம் இத்திரைப்படம் பிடிக்கலாம்.
.............................................................

வியர்வைக் கசகசப்புகள் மிகுந்த ஒரு வன்கோடையின் பின் மதியத்தில்தான் நிகழ்ந்தது அது.அழுக்கேறிய தலையணைகள், எப்போதுமே மடித்திராத போர்வைகள், சுருட்டியிராத பாய்கள் எங்களைச் சூழ்ந்திருந்தன.அடுத்தவரின் படுக்கையறையை ஆவென வாய்பிளந்து சன்னலின் வழி உள்நுழைந்து பார்க்கும் சூரியனை ஒரு கனமான போர்வையினைக் கொண்டு தடுத்திருந்தேன்.முருங்கை மரமொன்றும்,மாமரமொன்றும் மிகச் சோம்பலான நிழலை,மென் காற்றை, இணைப்பாய் தேன் சிட்டுகளின் ட்விட் ட்விட்டை தந்துகொண்டிருந்தன.எவ்வித முன் தீர்மாணங்களும் அந்நிகழ்விற்கு இல்லை.வெளிர் நீலமும் வெளிர் பச்சையும் எனக்குப் பிடித்தமான நிறங்கள்.அன்றைய நாளில் பச்சை நிறம் உடுத்தியிருந்த அப்பச்சை நிற தேவதையின் நெற்றி வியர்வை நீர்,அவளின் மென் சங்கு கழுத்திலிறங்கும் காட்சி மழைக்காலத்தில் வெள்ளைக் கோட்டின் சாய்ல்களில்,பாறையின் மீது வழுக்கும் தற்காலிக அருவியினை நினைவூட்டியது. நீர் அருந்தும் மனநிலைதான் இருந்ததெனக்கு.மிகுந்த தாகத்துடன் அந்நீரைக்குடித்துவிட முனைகையில் அஃதொரு முத்தமாய் வடிவமெடுத்தது.முத்தங்கள் வடிவமிலிகள், உருவமிலிகள், எண்ணற்றத் தன் பெருக்கிகள், உடையக் காத்திருக்கும் நீர்க்குமிழிகள், உடைவதற்காய் ஏங்கும் உயிருள்ள கூடு முட்டைகள்.மேலும் முத்தங்கள் உடைந்த நொடியில் பறக்கத் துவங்கும் அசுர வளர்ச்சி கொண்டவை யாகவுமிருக்கின்றன.சமதளத்திற்கு வெகு சீக்கிரத்தில் வந்து விட விரும்பாத முத்தங்கள் இலக்கற்ற வெளியில் தன் எழுச்சியைத் தொலைத்து மீண்டும் திரும்புகின்றன.நாங்கள் மீண்டு திரும்பியபோது சூரியனை மறைக்க ஆரம்பித்திருந்தன அடர் கரு மேகங்கள்.

(கென்னிற்கு....)

Wednesday, November 12, 2008

ஆசிப்பும் உலகத் திரைப்படங்களும்




The Diving bell and the butterfly சற்றும் எதிர்பார்க்காமல் /தேடாமல் பார்க்கக் கிடைத்தது .முதல் இருபது நிமிடங்கள் என்ன நிகழ்கிறது என்பதை சரியாய் புரிந்து கொள்ளமுடியவில்லை.உடலின் அனைத்து பாகங்களும் செயலிழந்து போன ஒருவனின் ஒரே ஒரு விழியினூடாய் மொத்த திரைப்படமும் நகர்கிறது.விழியின் முன் வந்து போகும் செவிலிகள், மருத்துவர்கள், கூரை, என படம் அலைந்தபடி இருக்கிறது.மொத்த படத்தையும் இப்படித்தான் பார்க்கநேரிடுமோ என்கிற வியப்பும் வரத்தவறவில்லை.சன்னாசியின் பக்கத்தில் இத்திரைப்படம் குறித்த சில குறிப்புகளும் உதவியாய் இருந்தன.ஒரு முறை விழியசைத்தால் ஆம் இரண்டு முறை விழியசைத்தால் இல்லை இப்புரிதல்களோடு விபத்துக்குள்ளானவர் தான் எழுத ஒத்துக்கொண்ட புத்தகத்தை எழுதி முடிக்கிறார்.படம் பார்த்து முடித்த சில நாட்களுக்கு பிறகு சுஜாதாவின் கற்றதும் பெற்றதுமை கழிவறையில் மேய்ந்துகொண்டிருந்தபோது இத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அறிதல் முறை குறித்து சில குறிப்புகள் எழுதி இருந்ததையும் படிக்க முடிந்தது.சிந்திக்கும் போது மூளையில் ஏற்படும் மெதுவான நுண் மின் அலைகலை (Slow critical potential)ஆம்/இல்லை வகை கேள்விகளுக்கு விடையாக கட்டுப்படுத்தமுடியுமாம்.யுத்தத்தில் அத்தனை இயக்கங்களையும் இழந்த போர்வீரர் ஒரு வரை பேசவைத்த குறிப்பையும் தந்திருந்தார்.

சமீபத்தில் எத்தனையாவது முறையாகவோ ஆசிப்பிற்காக desperado வை பார்க்க நேரிட்டது.Robert rodriguz ன் குருதி தெறிக்கும் அட்டகாசமான ஆரம்பகாலப் படங்கள் தமிழ் மசாலா படங்களுக்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை.ஆனாலும் மிக விறுவிறுப்பான காட்சியாக்கங்களில் பார்வையாளனை திரும்ப திரும்ப படத்தை பார்க்கவைக்கும் யுக்தி இவருக்குத் தெரிந்திருக்கிறது.El mariachi யின் சம தள கதை சொல்லலை ஹாலிவுட் மிகை வண்ணங்களைப் பூசி Desperado வாக கொடுத்திருப்பார்.ரசனை அடிப்படையில் எனக்கு el mariachi தான் பிடிந்திருந்தது என்றாலும் salma hayek கிற்காக desperado வை அதிக முறை பார்த்தேன்.இவர் திடீரென தடம் மாறி குழந்தைகளுக்கான படங்களை எடுக்கத் துவங்கியது குறுநகையை வரவழைத்தது.ஆனால் spy kids ன் இரண்டு பாகங்களையும் அக்காவின் குழந்தைகளோடு பார்க்கநேரிட்டதால் அப்படங்களையும் என்னால் ரசிக்க முடிந்தது.குழந்தைகளுடன் குழந்தைகளுக்கான சாகச படங்களை பார்க்க நேரிடுவது அலாதியானது.திரும்பவும் ரத்தம் தெறிக்கும் sinsity யை இவர் படமாக்கியபோது அதில் மிக குரூரமான காட்சிகளை comicical ஆக மாற்றியிருப்பார் இது இன்னொரு வகையில் காட்சியமைப்பின் வீர்யத்தை குறைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.2010 மற்றும் 2011 களில் sinsity யின் அடுத்தடுத்த பாகங்களை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.

The Dreamers திரைப்படத்தை பார்த்துவிட்டு ஆசிப் இசா இசா என புலம்பிக்கொண்டிருந்தார்.hilary duff படங்கள் பார்த்து சந்தோஷப்படும் மனிதரை இன்னும் சிறிது வதைக்க ஆசைப்பட்டு pasolini யின் Decameron யையும் மறுபடியும் பார்த்தேன்.முதல் அரை மணி நேரத்திற்கே மனிதரின் விழி பிதுங்கிவிட்டது.திரையின் மூலம் புனிதங்களை உடைத்தவர்களில் pasolini முக்கியமானவர்.கி.ரா மற்றும் கழனியூரான் தொகுத்திருந்த மறைவாய் சொன்ன கதைகள் மற்றும் கி,ராவின் நாட்டுப்புற பாலியல் கதைகளைப்போல இத்தாலியின் நாட்டுப்புற பாலியல் கதைகளை படமாக்கியிருப்பார்.இரண்டாவது கதையில் பெருக்கெடுத்து ஓடும் convent Nun களின் காமம் திருச்சபைகளின் புனிதங்களை உடைத்தது.இவரின் Oedipus Rex படம் கைவசமில்லாததால் மனிதர் தப்பித்தார்.

உச்ச வதையாக Master of Erotica என அழைக்கப்படும் Tinto Brass ன் P.O.Box Tinto Brass திரைப்படத்தைப் பார்த்தோம்.மிக அதிக பட்ச கிளர்ச்சிகளைத் தரும் படம். இத்திரைப்படம் மருத்துவருக்கு பெண்கள் அனுப்பும் கடிதங்கள், புகைப்படங்கள், வீடியோ டேப் களிலிருந்து விரிகிறது.திரை முழுக்க வரும் பெண்கள் மிக அதீதமான கவர்ச்சியுடையவர்கள்.உடலை மிக அதிக பட்சமாய் ஆராதிக்கும் ஒவ்வொரு காட்சிகளும் கிளர்ச்சியினைத் தூண்டுபவை.உடல் ...உடல் ...உடல்... திரை முழுக்க உடலாயும், துரோகங்களாயும், நிறைவேறாமையும் பொங்கிப் பிரவகிக்கும் படமிது.இத்திரைப்படத்தை முழுமையாய் பார்த்த புண்ணியவான்களிடம் கேட்க என்னிடம் ஒரு கேள்வியிருக்கிறது :)

Saturday, November 8, 2008

வா.மு.கோமு வின் கள்ளி

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வா.மு.கோமுவின் முதல் நாவல் இது.கொங்கு வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் தொடும் தளம் விடலைத் தனம்.எவ்வித திரிபுகளுமற்ற கொங்கு மொழியின் அசாத்தியம் இந்நாவலில் சாத்தியமாகி இருக்கின்றது.வட்டார வழக்கில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நாவல்களில் இதையும் இனிமேல் சேர்த்துக்கொள்ளலாம்.கொங்கு வாழ்வினை தளமாக கொண்ட இலக்கிய படைப்புகளை அறிமுகப்படுத்தியதில் பெருமாள் முருகனுக்கு முக்கியப் பங்கு உண்டு.ஆனால் இவராலும் அம்மக்களின் வாழ்வை இலக்கியப் பாங்கோடுதான் படைக்கமுடிந்தது.வா.மு.கோமு செய்திருப்பது அசாத்திய மொழி உடைப்பு.இலக்கியம் நுழைய முடியாத அல்லது இலக்கிய வடிவினில் சேர்க்க விரும்பாத,சேர்க்கத் தயங்கிய பல கூறுகளை எவ்வித தயக்கமும் இல்லாது நேரடியாய் பேசுகிறது இவரின் மொழி.

எல்லாப் பக்கங்களிலும் மது பொங்கி வழிகிறது.காமம் கரைபுரண்டோடுகிறது.கற்பு,ஒழுக்கம் என எவ்வித பம்மாத்துகளுமில்லாது காமத்தினை ஒரு விளையாட்டாய் விளையாடித் தீர்க்கிறார்கள் இவரின் கதை மாந்தர்கள்.நள்ளிரவு,விடியல்,முன்னிரவு, என எல்லாப் பொழுதுகளிலும் வெட்ட வெளி,பாறை இடுக்கு, முட்காடு, எவருமற்ற அந்நியன் வீடென எங்கெங்கிலும் புணர்ந்து திரியும் இவரது கதை மாந்தர்களுக்கான அடிநாதம் தீராக்காமமாயும் பருவத் தெறிப்பாகவுமிருக்கிறது.

இது தவிர்த்து இந்நாவல் தொட்டுச் செல்லும் இன்னொரு தளம் மாதாரிகளின் கொண்டாட்டமும் அவலமுமான வாழ்வு.மேலதிகமாய் கவுண்டர்களின் ஆதிக்கத் திமிர்களையும் பண்ணைய முறைகளின் வன்முறைகளையும் கோடிட்டுச் சென்றிருக்கிறது.விடலைத் தனம் நிரம்பியிருப்பதால் மிக அழுத்தமாய் சொல்லப்பட்டிருக்க வேண்டிய பல விதயங்களை சற்றே தொட்டுவிட்டு மதுவில் கரைந்து போகிறது இந்நாவல்.முதல் அத்தியாயத்தில் தொடங்கிய வீச்சும், புதுத்தளமும், புதுமொழியும், அசாத்திய நகைச்சுவையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் வலுவிழந்து போகிறது.எனினும் கிண்டலும், கேலியும், காமமும் சேர்ந்து நாவலை ஒரே மூச்சில் படிக்க வைக்கும் மனநிலையைத் தந்துவிடுகிறது.நாவலைப் படிக்கும்போது சத்தம் போட்டு சிரித்தது கடைசியாய் எந்த நாவலுக்கென மறந்து போய்விட்டது.ஆனால் எத்தகைய உம்மணாமூஞ்சிகளையும் வெடித்துச் சிரிக்க வைக்கும் அசாத்திய மொழி இந்நாவலில் சாத்தியமாகி இருக்கிறது.

கடைசி அத்தியாயத்தில் தாங்கிப் பிடிக்கும் ஆதிக்க மனோபாவ கொடி முதல் அத்தியாயத்திலிருந்து சொல்லப்பட்ட விளிம்புசார் நிலையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.கடைசி அத்தியாயத்தை நம்ப எனக்கு சிறிது நேரம் பிடித்தது.லேசான எரிச்சலும் மண்டியது.எழுத்தாளனுக்கான கடமை இதுவென எதையும் வலியுறுத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் தான் எழுதும் தளத்தின் வீச்சை, தேவையை உணர்ந்து கொள்ள வேண்டியது எழுத்தாளன் செய்ய வேண்டியது.
இவரின் எழுத்துக்கள் பெண்ணியவாதிகள் கண்ணில் பட்டதா எனத் தெரியவில்லை.பெண்மைத் தனங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக்கியிருக்கிறார்.காமம் மட்டுமே பிரதானமாய் கொண்ட பெண்களை மட்டுமே உலவவிட்டிருக்கிறார்.போதாக் குறைக்கு இந்நாவலை அவரின் காதலி/மனைவிக்கு சமர்பித்திருக்கிறார்.மிக அசாத்திய துணிச்சலராய் இருக்கவேண்டும்.




இரண்டு முன்னாள் காதலிகள்..

ஜப்பானிய இயக்குனரான Yasujiro Ozu யின் இரண்டு திரைப்படங்களைப் பார்க்க நேரிட்டது.ஜப்பானிய திரைப்படங்களின் ஊடாய் அவர்களின் கலாச்சாரம், வாழ்வு, தொன்கதைகள், பண்பாடு, இவற்றை அறிய நேரிடுவது அலாதியானது.மிகப் பெரும்பான்மையான புள்ளிகளில் திராவிட கலாச்சாரங்களோடு அவைகள் ஒத்துப்போவது மிக ஆச்சர்யமான ஒற்றுமை.உலகமெங்கிலும் உள்ள வழமைகள் ஒன்றுக்கொன்றுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவைதான் என்றாலும் ஜப்பானியர்களை என்னால் மிக நெருக்கமாக உணர முடிகிறது. 1959 ல் வெளிவந்த இவரின் Ukigusa aka The floating Weeds திரைப்படம் ஒரு மறுபதிப்பு.1934 ல் இவர் கருப்பு வெள்ளையில் எடுத்த சலனப் படத்தை 1959 ல் வண்ணப்படமாக பிரசித்தி பெற்ற ஒளிப்பதிவாளர் Miyagawa வினால் மீணடும் எடுக்கப்பட்டது.Miyagawa அகிராவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்.

1.The floating Weeds


இத்திரைப்படம் Kabuki கலைஞர்களின் வாழ்வைப் பேசுகிறது.ஜப்பானிய தொன்கலைகளில் ஒன்றான Kabuki கிட்டத் தட்ட நமது தெருக்கூத்துக் கலைக்கு ஒப்பானது.சிறு குழுவாய் நகரெங்கிலும் பயணிக்கும் இக்கலைஞர்கள் ஒவ்வொரு ஊரிலும் தங்கி தங்களின் நிகழ்ச்சியை நடத்துவார்கள்.அக்குழுவின் தலைமை நடிகர் Komajuro, அவரின் மனைவி Sumiko, இளம் நடிகை Kayo, உள்ளிட்ட குழுவினரோடு கடற்கரையோர கிராமத்திற்கு ஒரு வெயில் தகிக்கும் மதியத்தில் சென்றடைகிறார்கள்.அந்நகரத்திற்கு இக்குழு ஏற்கனவே வந்திருக்கிறது.ஆனால் இப்போதிருக்கும் பலர் அப்போதிருக்கவில்லை.Komajuro வின் ரகசிய மனைவி அல்லது முன்னாள் காதலி இந்நகரத்தில் தனது வளர்ந்த மகனோடு வசித்து வருகிறாள்.இவர்களின் உறவை அவள் மகனுக்கும் தெரிவித்திருக்கவில்லை.மாமா எனவே இவரைத் தெரிந்துவைத்திருக்கிறான்.இவர்களின் உறவு sumiko விற்கு தெரிந்து போகிறது.தன் கணவனை பழி வாங்கும் பொருட்டு அவர் மிகவும் நேசிக்கும் அவரின் மகனை தன் குழுவில் இருக்கும் இளம் பெண்ணை வைத்து காதலிக்க வைக்கிறாள்.அதன் மூலம் குழப்பங்கள் ஏற்படுகின்றன.அவரின் மகனுக்கும் இவர் தந்தை என தெரிந்து போகிறது.அவரின் எதிர்ப்பை மீறி அவ்விளம் நடிகையை மணந்து கொள்கிறான்.இடையில் அக்கலைக்குழு தோல்வியடைகிறது. மொத்தப் பணத்தையும் இழக்கிறார்கள். தலைமை நடிகர் பிற நடிகர்களை திருப்பி அனுப்புகிறார்.இறுதியில் அவரின் முன்னாள் காதலி, மகன், என எல்லாரையும் துறந்து அந்நகரை விட்டுச் செல்கிறார்.ரயில் நிலையத்தில் அவரால் ஏற்கனவே துரத்தியடிக்கப்பட்ட மனைவி்யோடு இணைந்துகொள்வதாய் படம் நிறைவடைகிறது.

குறுகலான ஜப்பானிய தெருக்கள், வெயில் உண்டு வாழும் சாமான்யர்கள்,கோபமும், ஆத்திரமும், வன்மமும், பெருமிதமும் , கொண்டாட்டமுமான பல்வேறு பாத்திரங்கள் என இத்திரைப்படம் தனது மண்சார்ந்த பதிவுகளை மிக நேர்த்தியாய் நம் முன் வைக்கிறது.

2.Kohayagawa-ke no aka The End of Summer(1961)



சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் என்று கூட இத்திரைப்படத்தை சொல்லலாம்.காலமும் சூழலும் ஒரு குடும்பத்தை வெவ்வேறு தளங்களுக்குள் கொண்டு செல்வதையும், இழப்பு/மகிழ்வு, வெறுமை/அன்பு என இரு வேறு நிலைப்பாடுகள் மத்திய தர வாழ்வை மாறி மாறி அலைக்கழிப்பதையும் நேர்த்தியான பின்புலம் கொண்டு சொல்லியிருக்கிறார் Yasujiro Ozu.மனைவியை இழந்த ஒரு குடும்பத் தலைவன்,மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண், இந்தக் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களைத் திரைப்படமாக தந்திருக்கிறார்.இதிலும் வெக்கை மிகுந்த வெயில் படம் முழுவதும் பயணிக்கிறது.மிக நேர்த்தியான ஒளிப்பதிவு,ஒத்திசைவாய் அற்புதமான இசை, எனக் காட்சி இன்பத்தினைத் தூண்டும் பதிவாக்கம் வேறொரு மனநிலைக்கு பார்வையாளனை அழைத்துச் செல்கிறது.இத்திரைப்பபடத்தை ஒளிப்பதிவு செய்திருப்பவர் Tomoichi Nakai.இவர் குறித்த தகவல்கள் எதுவும் இணையத்தில் காணப்பெறவில்லை.மிகுதி எனச் சொல்லப்படும்படியான கதை சொல்லல்கள் இல்லாதிருந்தது ஆச்சர்யத்தைத் தந்தது. நகரும் மேகத்தைப் போல, கடக்கும் கணத்தினை போல, மிக இயல்பான காட்சிப் பதிவாக்கம் மிகவும் நெகிழ்வுத் தன்மைக்கு தள்ளியது.

வயதான Kohayagawa-ke (Ganjiro Nakamura) தனது பொறுப்புகளிலிருந்து விலகி பழைய காதலியின் வீட்டிற்கு அடிக்கடி செல்கிறார்.கணவனை இழந்த முதல் பெண், வாய் துடுக்கு மிகுந்த இரண்டாவது மகள், படிக்கும் மூன்றாவது மகள்,அதிக விஷயஞானமில்லாத மகன் என அனைவரும் தந்தையின் இச்செயலின் மீது மனவருத்தம் கொள்கின்றனர்.தந்தையின் மீதிருக்கும் அபரிதமான அன்பை மய்யமாக கொண்டிருக்கிறது இத்திரைப்படம்.பொறுப்பில்லாத தகப்பனார்கள் தரும் அயர்ச்சி விவரிக்க இயலாதது.அவரின் உடல்நிலை கெடும்போது நால்வரும் பரிதவித்துப் போவதும்,அவரின் வயதுக்கொவ்வாத செயல்களின் மீது ஏற்படும் வெறுப்பை நேரிடையாய் வெளிக்காட்ட முடியாததுமாய் தவிக்கும் காட்சிகள் நடிப்பின் உச்ச சாத்தியங்கள்.மரணம் குறித்தான உரையாடல்கள் தென்னிந்திய தத்துவங்களின் மறுபதிப்பாக ஜப்பானில் உலவும் ஒற்றுமை இன்னொரு ஆச்சர்யம்.முதல் மகளாய் நடித்திருந்த பெண்ணின் கண்களில் ஒளிர்ந்த கருணையும் அமைதியும் வெகுநேரம் கட்டிப்போட்டது.சுற்றியுள்ளவர்களிடத்தில் அன்பை பொழியும் இவளின் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது.

இரண்டு திரைப்படங்களின் பிரதான பாத்திரத்தில் நடித்திருப்பவர் Ganjiro Nakamura தலைமை கலைஞனாகவும்,வயதான தகப்பனாகவும் இரண்டு படங்களிலும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.இரண்டிலும் பொதுவான அம்சம் old Flame ஆக இருக்கிறது.

பதின்மங்களின் கிளைகளில் பூக்கும் காதல் பரவசங்கள்,விலகிப் போக நேரிடின் அவற்றைப் பின் தொடராதிருப்பதே அப்பரவசங்களுக்கு நாம் தரும் மிகக் குறைந்த பட்ச மரியாதையாய்/ நன்றியாய் இருக்கமுடியும்.இன்றளவிலும் அவளின் திசையறிய எவ்வித முயற்சிகளுக்கும் மெனக்கெட்டதில்லை.எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாய்த்தான் நம்பிக் கொண்டிருக்கிறேன்,முதல் காதலும் இன்னும் சில முத்தங்களும்..

Monday, October 20, 2008

பசப்பு



நிலை தவறிய போதையில்
குறைந்த வெளிச்சத்தில்
ஒளிர்ந்தவளை அழைத்து வந்தேன்
இப்போது வெளிச்ச ஒளிர்வில்
அவள் இருட்டியிருந்தாள்
நீள மறுக்கும் குறியினை
மறைத்து
கவிதை சொன்னேன்
நானொருத் தனிமைப்பறவை
தீராத இவ்விரவினை துணையோடு விரட்ட
அழைத்து வந்ததாய்
வார்த்தைகளைத் தூவினேன்
அவளறியா வண்ணம் அவள் தோழிகளின்
எண்களைத் திருடிக்கொண்டேன்
அதிகாலையில் பணமில்லாமல்
போனதாய் பதபதைத்தேன்
அடுத்த வார இறுதியில் தருவதாய்
சத்தியமிட்டேன்
இணைப்பாய் நெற்றியில்
முத்தமிட்டேன்
இதுவரைச் சந்தித்திராதவன் நீயென
நெகிழ்ந்து விடைபெற்றாள்
இரண்டு வாரம் கழித்து
தொலைபேசி
என் பிறப்பைச் சந்தேகித்தாள்
நான் சத்தமாய் சிரித்துக்கொண்டேன்..

Saturday, October 18, 2008

புத்தக வாசம் - சில பதில்கள்

எந்தத் தொடர்பதிவென்றாலும் சலிக்காமல் பதில் சொல்வதிலுள்ள ஆர்வம் இன்னும் தீர்ந்தபாடில்லை.கேள்விகள் சற்று அதிகம்தான் இருப்பினும் பகிர்வதற்கு உகந்த கேள்விகள் என்பதால் லேகாவினைத் தொடர்ந்து என் பதில்கள்..

1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது? எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?

படக்கதைகள்,சிறுவர் புத்தகங்கள் இவற்றிலிருந்து ஒன்பது வயதில் வெளிவந்தாயிற்று.ஏதோ ஒரு க்ரைம் நாவல் ராஜேஷ் குமாரினுடையது பெயர் நினைவிலில்லை.
ஆனால் முதல் நாவல் வாசித்த திருப்தி எனில் பொன்னியின் செல்வன்.

2. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?

அதிகம் பூச்சுக்களில்லாத நாவல்கள் மிகப்பிடித்தமானதாய் இருக்கிறது.அகம் சார்ந்து எழுதப்பட்ட, வினோத நிலைகளின் உள்புகுந்து எழுதப்பட்ட நாவல்களைப் பிடிக்கிறது.சந்தித்திராத மனிதர்கள்,புதிய சூழல்கள், முகத்திலறையும் வாழ்வு, என உண்மைத் தன்மைக்கு நெருக்கமான நாவல்களே மிகப் பிடித்தமானதாய் இருக்கின்றது.

3. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?

ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்தினுக்கு தாமாகவே கூட்டிச் செல்லும்.இந்த வினோதத்தை எல்லாரும் உணர்ந்திருக்கலாம்.உண்மையில் புத்தகங்கள் விதைகளையொத்தவை. ஒன்றிலிருந்து இன்னொன்றாய், இன்னொன்றிலிருந்து பன்மடங்காய், வாசகனைப் பெருக வைக்கும் விசை புத்தகங்களுக்கு இருக்கிறது.

4 நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

சிறுகதை என்பது ஒரு காட்சி ஒரு நிகழ்வு.நாவலென்பது பல காட்சி பல நிகழ்வு். பக்க அளவுகள் சிறுகதை அல்லது நாவல்களை நிர்ணயிப்பதில்லை,உள்ள்டக்கமே வடிவத்தை தீர்மாணிக்கிறது. மூன்று வரி சிறுகதைகளும் உண்டு முன்னூறு பக்க சிறுகதையும் உண்டு.கோபி கிருஷ்ணனின் மொத்த சிறுகதைகளும் ஒரே நாவலின் பல்வேறு பக்கங்கள் என அறியப்படலாம்.ஒரே தளம் கொண்டு எழுதிய டேபிள்டென்னிஸ் நாவலெனவே அறியப்படுகிறது.

5. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?

வாசகனைப் பொருத்துதான்.உதாரணத்திற்கு மோகமுள்ளின் மய்யப் பாத்திரம் பாபு வா? யமுனாவா? ரங்கண்ணாவா? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பார்வையிருக்கலாம்.அப்படிப் பன்முக சாத்தியங்களை உருவாக்குபவையே சிறந்த படைப்புகளாக இருக்க முடியும்

6. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?

பக்க அளவுகள் எதையும் தீர்மாணிப்பதில்லை

7. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?

ஒரு நாளை ஓட்டிவிடலாம் எனத் தோன்றும்

8. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?

இல்லை.

9. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?

நண்பகல்,பின்னிரவு

10. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?

நிறைய உண்டு ஒரு கட்டத்திற்கு மேல் சில எழுத்துக்களின் மீது ஆர்வம் போய்விடும் படிக்கலாம் என வாங்கி பாதி படித்து தூக்கி போட்ட புத்தகங்கள் ஏராளம்.சமீபத்தில் புலிநகக் கொன்றை.

11. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?

கொற்றவை,உபபாண்டவம்

13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?

எம்.வி.வெங்கட்ராமின் நித்யகன்னி,தமிழவனின் வார்ஸாவில் ஒரு கடவுள்,அ.மாதவனின் கிருஷ்ணப்பருந்து

14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?

இடைவெளி - எஸ் .சம்பத்

டேபிள் டென்னிஸ் - கோபிகிருஷ்ணன்

நவீனன் டைரி - நகுலன்

அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்

ஏறு வெயில் - பெருமாள் முருகன்

அஞ்சலை - கண்மணி குணசேகரன்

வெக்கை - பூமணி்

கருக்கு - பாமா

பச்சைக் கனவு - லா.ச.ராமாமிர்தம்

சொல் என்றொரு சொல் - ரமேஷ் ப்ரேம்

15. படித்ததில் பிடித்த பிற இந்திய மொழி நாவல்கள் எவை?

காட்டின் உரிமை - மகேஸ்வேதா தேவி
பால்ய கால சகி - வைக்கம் முகம்மது பஷீர்
தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரன் பிள்ளை
சதத் ஹசன் மண்ட்டோ கதைகள்
Interpreter of Maladies – Jumbha lahari

16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?

நூற்றாண்டுகால தனிமை - மார்க்வெஸ்
கசாக்குகள் - லியோ டால்ஸ்டாய்
மரணவீட்டின் குறிப்புகள் - தஸ்தாயெவ்ஸ்கி
அந்நியன் - ஆல்பெர் காம்யூ
தாய் - கார்க்கி
Foucault's Pendulum - Umberto eco
A Message in a Bottle - Nicholas Sparks
விசாரணை -காப்கா
விழியின் கதை - ழார் பத்தாய்

17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?

தரையில் இறங்கும் விமானங்கள், செம்பருத்தி, மரண வீட்டின் குறிப்புகள்,கரையோர முதலைகள்,மரக்கால்,ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன, கூளமாதாரி,சதுரங்க குதிரைகள்,உள்ளேயிருந்து சில குரல்கள் என மிக நீளமான பட்டியல்

18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?

நிறைய தலைப்புகள் ஈர்த்ததுண்டு.கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள் ரமேஷ் ப்ரேமின் இந்த தொகுப்பின் தலைப்பு என்ன வெகுவாய் ஈர்த்தது.மேலும் மனுஷ்ய புத்திரனின் என் படுக்கை அறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் தலைப்பும் எனக்கு மிகவும் பிடித்தது.

19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.

ஆரம்ப காலத்தில் இருந்தது. நா.பா வின் குறிஞ்சி மலர் படித்து சத்திய மூர்த்தியைப் போல ஆசிரியனாக ஆசைப்பட்டேன்.பின்பு நாவல்களின் பெண்கள் என்னை வசீகரிக்கத் துவங்கினர்.
நினைவுகளில் பெண்களை புகுத்திக் கொள்வது கனவுத் தன்மையை கெடாமல் வைத்திருந்தது.முதலில் காதலிக்க ஆரம்பித்த பெண் குறிஞ்சிமல்ர் பூரணி. பின் மோகமுள் யமுனா, மரப்பசு அம்மிணி, பாலகுமாரனின் நாயகிகள் என கனவிலேயே உழல துணையாய் இருந்தனர்.வாசிப்பு விரிவடைய அந்த உணர்வுகள் காணாமல் போய்விட்டன. இது ஒருவகையில் இழப்பாக இருந்தாலும் நிகழின் தளத்திற்கு வந்தேயாகவேண்டிய நிர்பந்தங்கள் என்னை அந்த தளத்தில் தொடர்ச்சியாய் இயங்கவிடவில்லை.

20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?

சூழல்,வாழ்வுமுறை, மனிதர்கள் என வெவ்வேறு தளங்களின் பரிணாமங்கள், புதுமை மனநிலைக்கு வாசகனை தள்ளும் சாத்தியங்கள் தமிழை விட பிற மொழிகளில் அதிகம்தான்.மரபு ரீதியிலான கட்டுக்கள் தமிழில் அதிகம் உண்டு.இருப்பினும் சரியாய் கவனிக்கப்படாத அபூர்வமான நாவல்கள் தமிழில் ஏராளம்.எல்லா இலக்கியச் சூழலும் அரசியலுக்குட்பட்டதுதான் என்றாலும் தமிழ்சூழலின் அரசியல் மிக மோசமானது. அபூர்வங்களை,புதுமைகளை இருட்டடிப்பு செய்துவிடுவது தொடர்ந்து வரும் சோகம்.ஆனால் வேறெந்த மொழிகளிலுமில்லாத அகநிலை சார்ந்து எழுதப்பட்ட உன்னத படைப்புகள் தமிழில் ஏராளம்.

21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?

இடைவெளி,டேபிள்டென்னிஸ்,புயலிலே ஒரு தோணி,நாளை மற்றுமொரு நாளே,பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்

22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?

ரத்த உறவு,குள்ள சித்தன் சரித்திரம்,அஞ்சலை,மோகமுள்,கோபல்ல கிராமம்,ஏழாம் உலகம்

23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?

இதையெல்லாம் நாம் தீர்மானிக்க இயலாது ஆனால் வட்டார வழக்கில் எழுதப்படுபவை மிகக்குறைவானவையே விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை பதிவிக்கும் முயற்சிகளும் வெகு சொற்பமே.இத்தள உரையாடல்கள் மிக முக்கியமானவை இவை அதிகம் எழுதப்படுமெனில் எனக்கு மகிழ்ச்சியே.

24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?

தமிழின் பெரும்பாலான எழுத்தாளர்கள் குறிப்பிட்ட சாதியினரே அல்லது மேல் மட்ட வர்க்கத்தினரே.எழுத்து மட்டுமில்லாது மற்ற தளங்களிலும் இவர்களின் ஆளுமை அதிகமாய் விரவிக்கிடந்ததை நாம் உணர்ந்திருக்கலாம்.தமிழ்சூழலைப் பொருத்தவரை சாதீயத்தின் பிடியில் அல்லது மேல்மட்ட மனோபாவத்தில் பெரும்பாலான நாவல்கள் எழுதிக் குவிக்கப்பட்டுள்ளன.தி.ஜா விலிருந்து லா.ச.ரா வரையிலான பெரும்பான்மை உயர்குடிகளின் தளம் நிறைவேறாக் காமத்திலிருந்து வெளிவரவே இல்லை.அந்த தளத்திலியே அவர்கள் எழுத்தின் மிக அபூர்வ சாத்தியங்களை உருவாக்கிக் காட்டினார்கள் என்றாலும்.பிற மனிதர்களின் வாழ்வியல் குறித்தான எந்த ஒரு அணுசரனையும் இவர்கள் எழுத்துக்களில் இல்லை.இதிலிருந்து ஓரளவுக்கு வெளிவந்து புதிய சாத்தியங்களை உருவாக்கி காட்டியதில் நகுலனுக்கு மிகப்பெரும் பங்குண்டு எனினும் இந்த மய்ய நீரோட்டத்தில் பங்கெடுக்க முடியாத நிலைக்கு அவரையும் தள்ளியது இவர்களின் உயர்குடி சமூகம்.

25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?

கோபிகிருஷ்ணன் உயிரோடு இருந்திருந்தால் சந்தித்து இருக்கலாம் மற்றபடி நகுலனையும் சிங்காரத்தையும் சந்திக்கும் ஆசையிருந்தது

26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?

நாவல்களைப் பொருத்தது பெரும்பாலான புத்தகங்கள் ஒரே இரவில் படிக்கப்பட்டவையே.

27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?

யூமா வாசுகி,யுவன் சந்திரசேகர்,சாரு நிவேதிதா,கோணங்கி,நாஞ்சில் நாடன்,ஜெயமோகன்

28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?

ஜெயமோகனின் எல்லா கதைகளிலுமான பிரதான பாங்கு இந்த தன்னிருத்தலே.இது முதல் வாசிப்பில் பிடிபடாது போகலாம் சில புரிதல்களோடு மீண்டும் அணுகுகையில் அதன் வீச்சம் தாங்கொணா அசூசையை ஏற்படுத்துகிறது.சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகளில் தென்படும் தன்னிருத்தலைக் குறித்து சாரு நிவேதிதா எழுதிய விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை.

29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.

நாயகத் தன்மை வழக்கமே இல்லாத எழுத்துக்கள் கோபியினுடையது.கோணங்கின் மொழியிலும் இந்த வழக்கமான தன்மைகளை காணவியலாது.கி.ரா வின் கதைகளிலும் ஒற்றைத் தன்மை கொண்ட நாயக குணங்கள் இருக்காது பல்வேறு மனிதர்களின் அல்லது ஒரு சமூகத்தின் வாழ்வை இயல்பு குலையாமல் பதித்தவர்களில் கி.ரா முதன்மையானவர்.

30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா?

இல்லை வடிவங்கள் ஒருபோதும் உன்னதங்களை தீர்மாணிப்பதில்லை.

31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?

கண்மணி குணசேகரனின் அஞ்சலை.

32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?

நாம் ஒரு நாவல் எழுத வேண்டுமென்ற எண்ணம் உண்டு.

33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை?

எப்போதும் விழிப்பாய் இருக்கும் சோம்பலினால்தான்.

இதை இவர்கள் தொடரலாம்

நிறைய புத்தகங்கள் வாசிக்கும் தமிழ்நதி மற்றும் நதியலை
அமீரக இலக்கியவாதிகள் கதிர் மற்றும் சென்ஷி

எழுதக் கேட்ட லேகாவிற்கும் உஷாவிற்கும் நன்றி..

Thursday, October 16, 2008

பெண்கள்



பசுந்தளிர்களில் விலகிச் சிதறும் நீர்த்திவலைகள்
அவளுக்குப் பிடித்தமானதாய் இருக்கலாம்
மேகங்களற்ற வானில் தனித்தலையும் பறவை
அவளின் ஆதர்சக் குறியீடாய் இருக்கலாம்
பள்ளத்தாக்கின் மெளனத்தில் புதைந்தபடி
காற்றெழுப்பும அந்தராத்மாவின் இசையில்
கரைந்து போயிருக்கலாம்
நதியின் கரங்களென விரிந்த
எழுச்சிகளை
ஒருபோதும் சொல்லிடாதிருக்க வேண்டும்
சொல்லப்படுபவைகளின் உன்னதங்கள்
நிறமழிந்து போவதின் விந்தைகள்
அவளுக்கும் புரிந்திருக்கலாம்...

*******************************

பயணங்களில் சூழும் பிறழ்வுகள்
அடர்சிவப்பின் பின்புலத்தைக் கொண்டுள்ளன
ஒற்றை முலை கொண்டவளொருத்தியின்
வெடிச்சிரிப்பில் அஞ்சி
காதுகளைப் பொத்திக்கொண்டேன்
உச்சந்தலையில் பள்ளம் விழுந்த இன்னொருத்தி
வாய் ஓயாது சாபங்களைத் தந்துகொண்டிருந்தாள்
அழுத்தம் தாங்காது விலகத் துணிகையில்
இருவரையும் இடக்கையால் புறந்தள்ளி
கனமுலைகளை முன் நிறுத்துகிறாள்
பாஸோலினியின் கிராமத்து அழுக்குப் பெண்
இப்போது பின்புலங்கள்
சிவப்புதிர்த்து சாம்பலுக்குத் தாவுகின்றன..

*****************************************

பேச்சுக்குமிழியின்
முட்டைகளுடைத்தவனுக்கு
எனது முத்தங்கள்
திரையின் பின்னாலிருந்து
மொழியுமிழ்தலென்பது
சுய புணர்வையொத்தது
பேச்சுக்களற்ற வெளி அபாயகரமானதென
எவன் சொன்னது
மெளனங்களின் உன்னதங்கள்
கலவியின் கூட்டினை திறக்கவல்லது...

Monday, October 13, 2008

தமிழ் சினிமா இன்னுமொரு தொடர்

சினிமா தொடர் பதிவுகளை தவிர்க்கும் பொருட்டே (எல்லாரும் சொல்லியவையே என்னுடைய பதிலாகவுமிருக்கும் என்கிற காரணத்தினால்)சென்ற பதிவில் சில தமிழ்சினிமா நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு தப்பித்து விட நினைத்தேன். நண்பர்கள் பரத்தும் சித்தார்த்தும் அழைத்ததும் வேறுவழியில்லாமல் இதோ .....

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ஏழு வயதில், என் கிராமத்தினையடுத்த பக்கத்துச் சிறுநகரத்திற்கு என் சகோதரனுடனும் அவரின் நண்பர்களுடனும் மிதிவண்டியில் சென்றது நிழலாடுகின்றது.பார்த்த படம் நீங்கள் கேட்டவை காட்சிகள் எதுவும் நினைவிலில்லை ஆனால் அந்த நிலாக்கால இரவில் முன் கம்பியில் உட்கார்ந்து பயணித்தது சுகானுபவம்.விழிநிறை தூக்கத்தோடு, மெல்லிய குளிரும், பேய் குறித்தான பயங்களோடும் திரும்பி வந்தது இன்னமும் நினைவிலிருக்கிறது.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

இராமன் தேடிய சீதை வேண்டிய மட்டும் முன்பதிவில் வாரிவிட்டதால் விமர்சனம் எதுவுமில்லை.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

பார் மகளே பார் போன மாதம் விடுமுறைக்குச் சென்றபோது என் வீட்டில் பார்த்தது. வீம்பும் கர்வமும் கொண்ட பணக்கார சிவாஜி,தியாக விஜயகுமாரி,எந்தக் காட்சியில் வில்லனாக மாறுவரோ என பதபதைத்துப் பார்க்கச் செய்து, கடைசிவரை நல்லவராகவே நடித்திருந்த நடிகவேள் எம் ஆர் ராதா,இளம் வயதிலேயே முதியவராகவே நடித்த பாவம் வி.கே ராமசாமி என எல்லாரையும் ரசித்தேன் 'நீரோடும் வைகையிலே' உள்ளிட்ட அற்புதமான பாடலகள். படம் மிகவும் பிடித்திருந்தது.மிகவும் திருப்தியாக உணர்ந்தேன்.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பூவே பூச்சூடவா,இப்போதும் ஜேசுதாஸின் குரலில் அந்த பாடல் என்னமோ செய்கிறது.மிகச்சிறிய வயதிலேயே காதலிக்கத் தூண்டிய நதியா, அந்த மறக்கவே முடியாத மணியோசைச் சிறுவர்கள், என முதன்முதலில் என்னை ஈர்த்த தமிழ்படமிது.அடுத்ததாய் குணா கிட்டத்தட்ட பைத்திய மனநிலைக்கு என்னை இட்டுச் சென்ற படமிது.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ஷோபா,சில்க ஸ்மிதா இரண்டுப் பேரழகின் தற்கொலைகள்.ஷோபாவின் தற்கொலைக்கு காரணமாய் நான் நினைத்திருந்த பாலுமகேந்திராவின் மீது கோபமுமிருந்தது.ஆனால் சமீபத்திய பாலுவின் அனுவுடனான பேட்டியில் பாலு இப்படி சொல்லியிருந்தார்.யாருக்குமே கெடைக்காத அபூர்வமான, அற்புதமான, அழகான ஒரு பொண்ணு என் வாழ்க்கைல கொஞ்ச நாள் வந்திட்டு போய்ட்டா... அந்த பிரிவை என்னால தாங்கிக்கவே முடியல ....மூன்றாம் பிறைல நான் சொல்லியிருந்த அந்த பிரிவுத் துயர் என்னோட துயரங்களில வெகுசொற்பம்தான் என சொல்லியபோது பாலுவை இன்னமும் அதிகமாக நேசிக்கத் துவங்கினேன்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் இதயத்தை திருடாவில் ஒரு காட்சி வரும்.உன் மடில படுத்துக்கவா எனக் கேட்கும் நாயகியை நாயகன் மார்போடு அணைத்தபடி கட்டிலில் அமர்ந்திருப்பான் பனிப்புகை அந்த அறையை மெல்ல சூழும். இந்த காட்சி என்னால் வெகு காலத்திற்கு மறக்க முடியாதிருந்தது.மற்றபடி நானொரு ஒளிப்பதிவு ரசிகன்.பாலுவின் கேமராவிற்கு அதிதீவிர ரசிகன்.நீங்கள் கேட்டவை பிள்ளை நிலா பாடல் ,உதிரிப்பூக்கள் அழகிய கண்ணே பாடல் இவ்விரண்டையும் அற்புதமான திரைக்கவிதை என்பேன்.ஒளிப்பதிவு தாண்டிய தொழில் நுட்பமெனில் மணியின் ஆயுத எழுத்து எடிட்டிங்க் உத்தி, அலைபாயுதே உத்தி, கமலின் விருமாண்டி எடிட்டிங்க் உத்தி என நினைவில் நிற்கும் பல தொழில் நுட்பங்கள் தமிழில் உண்டு.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

உண்டு, ஆனால் தமிழில் தமிழ் சினிமா குறித்தான நல்ல விமர்சனங்கள் வருவதில்லை.பெரும்பாலான விமர்சனங்கள் ஒருதலைப்பட்சமானது அல்லது தட்டையானது அல்லது மேம்போக்கானது.எம்.ஜி.சுரேஷ்,சாரு,யமுனா ராஜேந்திரன் போன்றோர்களின் தமிழ்சினிமா விமர்சனங்கள் மிகப்பெரும் எரிச்சலைத் தந்தன.

7. தமிழ்ச்சினிமா இசை?

எனக்குத் தெரிந்த ஒரே இசை தமிழ்சினிமா இசைதான்.பெரும்பாலான தனிமையை, இரவுகளை, பதின்மக் காதலை, கனவுகளைத் தந்தது இளையராசாவின் இசைதான்.மற்றபடி மென்மையான பாடலை யார்தந்தாலும் அவர்கள் என் நேசத்திற்குரியவர்கள்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

இந்திய சினிமாவில் மலையாளம்,வங்காளம்,இந்தி மொழிப்படங்களின் பரிச்சயம் உண்டு.உலகப்படங்களில் சிலவற்றைக் குறிப்பிட வேண்டுமெனில் கதறி அழச் செய்த Children of Heaven,Life is Beautiful குரூரத்தையும் வினோதத்தையும் ஒருங்கே தந்த Purfume,வாழ்வின் மீது மிகப்பெரும் சலிப்பை ஏற்படுத்திய Bicycle theif,பைத்தியம் பிடிக்க வைத்த Mirror,Solaris,I Could read the sky நெகிழச்செய்த Cinema paradiso,Amilie,Cindrella man,Forrest gump, கிளர்வுகளைத் தூண்டிய A Short Film about Love, வியப்புகளைத் தந்த Dreams பயமுறுத்திய Birds எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பேரரசு,விஜய்,அஜித் இன்னபிற புரட்சிபட்டங்களை சுமந்து திரியும் பாலாபிசேக நாயகர்களை வைத்துக்கொண்டு பிரகாசமாய் இருக்கும் எனச் சொல்ல தயக்கமாய் இருக்கின்றது.அபூர்வமாய் வருடத்திற்கு இரண்டு படங்கள் வரலாம் வணிகம், கலை என இருவேறு பார்வைகளை களைந்து கலை என்கிற ஒரே பார்வையை பார்வையாளனும், பிரதானமானவனும் கொள்ளாதவரை தமிழ்சினிமாவின் எதிர்காலம் நீர்க்குமிழியை ஒத்ததுதான்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு ஒன்றுமில்லை. வலைப்பதிவர்கள் பதிவிட திண்டாடிப்போகலாம்.மொக்கைப்பட மொக்கை விமர்சனங்களை படிப்பதிலிருந்து நானும் தப்பித்துக்கொள்வேன்.தமிழர்களின் நிலை கவலைக்கிடம்தான்.

இத்தொடரினை தொடர நான் அழைப்பவர்கள்.....

இயக்குநர் வளர்மதி
தமிழ் சினிமா பிரமுகர் ஆடுமாடு
பதிவே போடாத பைத்தியக்காரன்
பெங்காலி சினிமா நிர்மலா
இலக்கியவாதி லேகா

Saturday, October 11, 2008

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை,தமிழ் சினிமா மற்றும் புகை



நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை..

இரண்டு நாட்களாக இந்த பாடல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.ஏதோ ஒரு வசீகரம் இப்பாடல் முழுக்க நிரம்பி வழிகிறது.எவருமற்ற இத்தனிமையில் திரும்பத் திரும்ப இப்பாடலில் கரைந்து போகிறேன்.திடீரென எல்லாவற்றையும் பூஜ்ஜியத்திலிருந்து துவங்கியாயிற்று.புதிய சூழல், புதிய வாழ்வென நாட்கள் சிறகுமுளைத்துப் பறக்கின்றன.தொடர்ச்சியாய் என் தகவமைப்பை மாற்றிக்கொண்டேயிருக்கிறேன்.இதுவரை பதினைந்து மாதங்களுக்கு மேல் ஒரே விதமான வாழ்வுச் சூழலில் இருந்ததில்லை.பிடித்தோ பிடிக்காமலோ மாறிக்கொண்டேவிருக்கிறது நிகழ்.ஒருவகையில் இது சவாலாக, சுவாரசியமாக நாட்களை நகர்த்த உதவுகிறதுதான் என்றாலும் நிலைத்தன்மையின் மீது, ஒரே விதமான வாழ்வுச் சூழலின் மீது, கவர்ச்சியை, ஏக்கத்தை இப்புதிய, பழகிடாத சூழல்கள் ஏற்படுத்த தவறுவதில்லை.ஏதோ ஒன்று பிடிபடாது நழுவிக்கொண்டே செல்கிறது. எப்போதைக்குமான ஒன்று என்பது சாத்தியமே இல்லை போல.எல்லாரிடத்தும், எப்போதும், எவராலும், எதுகொண்டும், நிரப்பி விட முடியாத வெற்றிடங்கள் இருக்கிறதுதான் போலும்.வெற்றிடங்கள் இதுவெனத் தெரிந்து அதை நிரப்பிட முனைகையில், எங்கிருந்தாவது வெளிப்படுகிறது இன்னொரு வெற்றிடம்.தேவைகளின் தன்முனைப்பின் பருத்த பெருநிழல் வாழ்வின் மீது மிகச் சாதுவாய் படர்ந்திருக்கிறது.நிழல்களை துரத்திச் சலிக்கும் நாளொன்றிலிருந்து விடுபட இது போன்ற பாடல்கள் மிக உதவியாய் இருக்கின்றன.தமிழனுக்கு தமிழ்சினிமா பாடல்களே மிகப்பெரிய இசை என்பதை தவிர்க்கமுடியாது.பதின்மங்களில் இரவை நிரப்பிய பாடல்கள் இன்னமும் விடாது வாழ்வை நிறைத்துக்கொண்டிருக்கின்றன.இப்பாடலுக்கு பின்புலமான அனைவருக்கும் நன்றி.

ஊருக்கு போய் சுமாரான தமிழ்படங்கள் ஒன்றுவிடாமல் பார்த்தேன்.திருவண்ணாமலை போன்ற சிறு நகர திரையரங்குகளில் பகல் காட்சிகள் மட்டுமல்லாது மாலைக் காட்சிகளும் காலியாகத்தானிருக்கின்றன.இடை இடையே மின் வெட்டுக்கள் வேறு.திரையரங்குகளின் அந்திமக்காலம் இதுவோ என்கிற எண்ணங்களும் எழுந்தன.ஜெயங்கொண்டான்,பொய் சொல்ல போறோம்,சரோஜா மூன்றுமே ஏமாற்றமில்லாமல் இருந்தன.ராமன் தேடிய சீதை உச்சகட்ட எரிச்சலைத்தான் கிளப்பியது.சேரன் டயலாக் பேசும்போது வேண்டுமென்றே வாயைக் கோணிக்கொள்கிறாரா? அல்லது வாய் கோணும்படியான டயலாக்குகளையே வசனகர்த்தாக்கள் எழுதித் தொலைக்கிறார்களா என்கிற சந்தேகமும் எழுந்தது.யதார்த்த நாயகன் சேரன் படங்களில் கதாநாயகி கதாநாயகனை நிராகரித்து விட்டால் அல்லது பிரிந்து சென்றுவிட்டால் அவளது வாழ்வு நாசமாய் போகும்.ஆட்டோகிராபில் கோபிகாவின் கணவரை கொல்லும் நாயகன் இதில் நடிப்பை மட்டும் ஏற்றிருப்பதலோ என்னமோ இவரை நிராகரிக்கும் பெண்ணின் கணவரை ஜெயிலுக்கு அனுப்புவதோடு நிறுத்திக் கொள்கிறார்.பொய் சொல்ல போறோம் மிகவும் பிடிந்திருந்தது.மெளலியின் நடிப்பு மிகச்சிறப்பாய் இருந்தது.தமிழில் நகைச்சுவை படங்கள் என்றால் பிரதான கதையின் இடைச்சொருகல் மாத்திரமே என்கிற அசைக்க முடியாத நம்பிக்கைகளை இன்னும் நாம் களையத் தயாராய் இல்லை.காமெடியன்கள் என்ற சொல்லையே தகுதி குறைவான அல்லது கதாநாயக நாயகிகளுக்கு அடுத்த பட்ச கடைசி தரத்தைத்தான் நாம் தந்து கொண்டிருக்கிறோம்.சிறந்த நகைச்சுவை படங்கள் தோல்வியைத் தழுவுவது சோகமானது.ஜெயங்கொண்டானில் சம்பத்தின் மனைவியாக வரும் பூங்கோதை கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது.கதையம்சத்தோடு படங்கள் வருவது அரிதான சூழலில் ஜெயங்கொண்டான் போன்ற படங்கள் வரவேற்கத் தகுந்தவையே.குறிப்பாய் பெண்களை நடிக்கவும் வைக்கலாம் என்கிற சிந்தனை இயக்குனருக்கு இருந்தது ஆறுதலானது.பூங்கோதை,லேகா,பாவனா என எல்லாரையும் நடிக்கவைத்த இயக்குனருக்கு ஒரு சபாஷ்.

நாகார்சுனன் தொடங்கி லக்கி வரையிலான சினிமா பதிவுகளை படித்துக்கொண்டிருக்கும்போது நான் பார்த்த முதல் தமிழ் படம் எதுவென யோசிக்கையில் குறிப்பாய் எதுவும் நினைவில் வரவில்லை.என் தந்தைவழிப் பாட்டி அதிக சினிமா பார்க்கும் பழக்கம் கொண்டவர்.எப்போது சினிமாவிற்கு போனாலும் நானும் உடன் ஒட்டிக்கொள்வேன்.வீட்டிற்கு அருகிலிருக்கும் கீத்து கொட்டாயில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாறும் எல்லா படங்களையும் பார்த்திருந்தேன்.நினைவுகளை விரட்டிப் பார்த்தும் எதுவும் நினைவில் வரவில்லை.என் சொந்த கிராமத்திலிருக்கும்போது பார்த்த நீங்கள் கேட்டவையாய் இருக்கலாம்.பெரும்பாலோனோர் குறிப்பிட்டிருந்தது போல எனக்கும் அவள் அப்படித்தான் மஞ்சு மறக்கமுடியாத கதாபாத்திரம்.இது தவிர்த்து உதிரிப்பூக்கள்,தண்ணீர் தண்ணீர்,அச்சமில்லை அச்சமில்லை,முள்ளும் மலரும்,அழியாத கோலங்கள்,என் உயிர் தோழன் என மகேந்திரன் பாலுமகேந்திரா,பாலச்சந்தர் பாரதிராஜாக்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள்.இதயத்தை திருடாதே மெளனராகம் என மணிரத்னமும் நினைவில் நிற்பவரே.செல்வராகவனின் புதுப்பேட்டை சமீபத்திய வரவில் மிகவும் பிடித்தது.

சுந்தரின் புகை ஆதங்கங்கள் நியாயமானவையே.புகைக்கு ஆதரவளித்தால் எங்கே அறிவுசீவிப் பட்டம் கிடைக்குமோவென பயந்தே பின்னூட்டத்தை தவிர்த்திருந்தேன்.பொது இடங்கள் எனச் சொல்லப்படுவதில் பேருந்து மற்றும் சினிமா அரங்குகளினுள் புகைப்பது எரிச்சலானது.அருகிலிருப்பவர்களே அதை தடுக்க முடியும்.நான் பயணிக்கும் பேருந்துகளில் என் முன் அமர்ந்திருப்பவர் புகைத்தால் எழுந்துபோய் புகைக்கவேண்டாமெனக் கேட்டுக்கொள்வது வழக்கம் திரையரங்கினுள் புகைத்தாலும் அவ்வண்ணமே பிறர் செய்வதை பார்த்துமிருக்கிறேன்.இதற்கு தனியொரு சட்டமும் தண்டனைகளும் தேவையில்லாதது.போக்குவரத்துச் சட்டங்கள் நமது காவலர்களுக்கு இன்னொரு ஆதாயமாக எப்படி வழிவந்ததோ அவ்வண்ணமே இப்புகைச் சட்டங்களும் நமது காவலர்களுக்கு இன்னுமொரு வரும்படியாய் மாறிப்போகலாம்.இச்சட்டத்தினுக்கான பின்புலம் மக்கள் நலன் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.ஏதாவது ஒரு போதை எப்போதும் மனிதர்களுக்கு தேவைப்படுகிறது அதை எந்தக் கொம்புச் சட்டங்களாலும் மாற்றவியலாது.புகைத்தால் உடல் கெடும் என்பது புகைப்பவனுக்கு தெரியாததல்ல.இதை உணர்த்த புகுத்த விழிப்புணர்வுகளை வேண்டுமானால் சமூக நல அறக் காவலர்கள் செய்து கொண்டிருக்கட்டும்.அதற்காக அதிரடிச் சட்டங்களை இயற்றுவது வீணானது.துபாய் போன்ற கடுமையான சட்டங்கள் கொண்ட நாடுகளில் பான்பராக்,தம்பாக்கு இன்னபிற வாய்வழி போதைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் விற்பனை என்னவோ அமோகம்தான்.இப்போது துப்பிய எச்சில் கறைகளை தூய்மையாக்கும் பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது.

ஜீன்ஸ் அணிந்த யுவதி ஒருத்தர் பொட்டீக்கடையில் புகைக்கும் புகைப்படம் ஒன்றை இரண்டு மூன்று பக்கங்களில் பார்க்க நேரிட்டது.பெண் புகைப்பது என்ன அருங்காட்சியக செயலா?ஏன் இத்தனை முக்கியத்துவம் அப்புகைப்படத்திற்கு எனத் தெரியவில்லை.நமது குறுகிய மனங்களின் இன்னுமொரு வெளிப்பாடெனப் புன்னகைத்து கடக்க வேண்டியதுதான்.சென்னை வாழ்வில் ஒருமுறை கடற்கரைக்கு சென்றிருந்தேன்.புகைக்கு நெருப்பில்லாமல் போகவே எட்டு மணி இருளில் கடற்கரையில் நெருப்பு தேடி அலைந்தேன்.தூரத்தில் கங்குகள் சுடர்விடவே நிம்மதிப் பெருமூச்சோடு அருகில் சென்று நெருப்புக் கேட்டேன்.ஜீன்ஸ் அணிந்த யுவதி புகைத்துக்கொண்டிருந்தார்.அவரிடமும் தீப்பெட்டி இல்லை புகைத்துக் கொண்டிருந்ததையே கொடுத்தார்.முதன்முதலாய் ஒரு பெண் புகைத்த மீதத்தில் என் புகைக்குப் பற்றவைத்தேன்.மிக மகிழ்ச்சியாய் இருந்தது. "உங்களுக்கு ஆட்சேபணை இல்லையெனில் நமது புகைகளை மாற்றிக்கொள்ளலாமா" என வாய் வரை வந்த கேள்வி ஏதோ ஒரு தயக்கத்தில் நின்றுபோனது.பெண்களுடன் ஒரே புகையை பகிர்ந்துகொள்வது உன்னதமானது.நண்பர்கள் எச்சில் மீதங்களோடு புகை மீதங்களை கொடுத்தால் கடிந்துகொள்ளும் வழக்கம் பெண்களுடன் புகைக்கும்போது மட்டும் காணாமல் போய்விடுவது ஏன்?

Friday, October 10, 2008

கனவுபவர்களின் கலகம் - last tango in paris & The Dreamers



Bernardo Bertolucci யின் last tango in paris ஏற்படுத்திய அதிர்வுகள் வன்மமானது.dreamers ஐ முதலில் பார்த்திருந்தால் இன்னமும் மிகப்பெரும் அதிர்வுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம் the last emperor bertolucci மட்டுமே எனக்கு அறிமுகமாகியிருந்தமையால் last tango bertolucci மிகப்பெரும் அதிர்ச்சியளித்தார். dreamers ஐ சமீபத்தில்தான் பார்க்க நேரிட்டது.முன்முடிவுகள் இருந்தமையால் நேரிடையான அதிர்ச்சிகளின் பங்கு சற்றுக் குறைவாகத்தானிருந்தது.last tango in paris இன் Maria Schneider ரும் Marlon Brando வும் பெரும்பாலான காட்சிகளில் ஆடைகள் அணிருந்திருப்பதில்லை.மிக வன்மமான புணர்வுகள் திரைப்படம் முழுக்க வந்த வண்ணமிருக்கும்.எனினும் அத்திரைப்படம் மிகப்பெரும் கிளர்வையோ அல்லது தூண்டுதலையோ ஏற்படுத்தியிருக்கவில்லை.இன்னபிற போர்னோக்களுக்கும் bertolucci முன் வைக்கும் அரசியல்பூர்வமான உடல்மொழிக்குமான வித்தியாசங்களை முதலிரண்டு காட்சிகளிலேயே புரிந்து கொள்ளலாம்.இத்திரைப்படத்தில் ஒரு காட்சி, தனது அடையாளங்களை அழிக்க விரும்பும் brando தனது பெயரை முதலில் அழிக்கிறான். தன்னை பெயரிட்டு கூப்பிடுகையில் பெருங்கோபத்தையும்,அசூசையுணர்வைம்,மிருகத்தனத்தையும் ஒரே நேரத்தில் பெறுகிறான்."என்னை எவ்வித அடையாளத்திற்கும் உட்படுத்தாமால் ஏற்றுக்கொள்" என தன் காதலியிடம் சொல்லுகிறான். அவள் எப்படி அழைக்கவென வினவுகையில் பெருங்குரலெடுத்து கத்துகிறான். "ப்ப்ப்ப்ஓஓஓஓ என என்னை அழை, க்க்க்கோஓஓஓஒ வென நான் உன்னை அழைக்கிறேன்.அடையாளங்கள் ஆபத்தானவை" எனச் சொல்லி சிரிக்கும் காட்சி அரசியல் கூருணர்வு அல்லது சித்தாந்த புரிதல்களின் உச்சமாய் வெளிப்பட்டிருக்கும்.


The dreamers திரைப்படம் மூன்று cinema freak களின் உலகத்தைப் பேசுகிறது.இதில் தியோவும் இசபெல்லாவும் இரட்டையர்கள்.french படிக்க france வரும் அமெரிக்கனான Mathew, இவர்களின் ரசனைக்கு ஒத்துப்போகவே நெருக்கமாகிறான்.godart, Robert Bresson,chaplin என மூவருக்குமான புள்ளிகள் ஒன்றே.godart ன் band of outsiders திரைப்படத்தில் வரும் ஓடிக்கடக்கும் சாதனையை முறியடிக்கும் காட்சியிலிருந்து திரைப்படம் அடுத்த தளத்திற்கு நகர்கிறது.தியோவும் இசபெல்லாவும் ஒரே படுக்கையிலிருப்பதை பார்க்கும் mathew முதலில் அதிர்ச்சியடைகிறான்.பின்பு குளியலைறையில் உடல் பற்றிய எவ்வித பிரக்ஞையும் இல்லாமல் இருவரும் புழங்குவது அவனையும் அவர்களின் உலகத்தில் நுழைய ஏதுவாய் இருக்கிறது. ஒரு திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க முடியாமல் தோற்கும் தியோவை மண்டியிட்டு சுயமாய் இன்பிக்குமாறு தண்டிக்கிறாள் இசபெல்லா.இன்னொரு திரைப்பட கேள்விக்கு தவறாய் பதில் சொல்லும் mathew வை தன் முன் இசபெல்லாவுடன் கலவி கொள்ளும் தண்டனையளிக்கிறான் தியோ.இசபெல்லாவுடனான கலவி உச்சத்தில் ரத்தம் தெறிக்க, mathew கலவரமும் ஆனந்தமும் ஒருங்கே அடைகிறான்.அவளின் ரத்தத்தை முகத்தில் பூசிக்கொள்கிறான்.படம் முழுக்க விளையாட்டுத்தனமும், கேலியும், சமூக ஒழுங்கை நிர்குலைக்கும் துணிச்சல்களும், மிக இயல்பாய் விரவிக்கிடக்க மார்க்சிச பெர்ட்லூச்சியே காரணமாய் இருந்திருக்க முடியும்.

இத்திரைப்படத்தை incest என பொத்தாம் பொதுவாய் கடந்துவிடமுடியாது.இசபெல்லாவும் தியோவும் கலவி கொள்வதில்லை.அவர்களுக்குள் இருப்பது காதலே.இன்னொருத்தியோடு தியோ கலவி கொள்ளும் சப்தங்களை தாங்கிக்கொள்ளமுடியாமல் துயருறுகிறாள் இசா.இக்காட்சியினூடாய் மட்டுமே காதல் வெளிப்படுகிறது மற்றபடி இரட்டையர்களின் மிக இயல்பான நெருக்கமே சொல்லப்பட்டிருக்கிறது.பால்தன்மை குறித்தான பிரக்ஞைகள் இருவருக்கும் இல்லாமலிருக்கிறது என்பதற்காக மட்டும் இதை incest ல சேர்த்து விட முடியாது.



"கலகம் என்பது உயர்ரக ஒயினைக்குடித்தபடி உலக சினிமாக்கள் பார்ப்பது, மிகப்பெரும் புத்தகங்களை கரைத்துக் குடிப்பது, வேண்டிய மட்டும் இன்பம் துய்ப்பது மட்டுமில்லை. புரட்சிக்கு முதலில் தெருவில் இறங்க வேண்டும்" என்கிறான் mathew.கிறங்கிய மதுவில் ஆடைகளற்று தூங்கும் மூவரையும் கண்டு அதிர்ச்சியடைந்து அவர்களின் தேவைக்கான காசோலையை வைத்து விட்டகலுகிறார்கள் இசா,தியோ வின் பெற்றோர்கள்.விழிப்பில் உணர்ந்துகொள்ளும் இசா தற்கொலைக்கு முயலுகிறாள்.Mouchette திரைப்படத்தில் வரும் Robert Bresson னின் நாயகி தற்கொலை செய்து கொள்ளும் காட்சியை நினைத்துக்கொள்கிறாள்.தெருவிலிருந்து பாய்ந்து வீட்டின் கண்ணாடியை உடைக்கும் ஒரு கல இருவரையும் விழிக்கச் செய்கிறது. இசா தற்கொலையை மறைக்கிறாள்.மூவரும் அரசுக்கு எதிரான கலகத்திற்காக தெருவில் மற்றவர்களோடு இணைகிறார்கள்.(1968 student rebellions - France).Mathew தடுக்க தடுக்க இசபெல்லாவும் தியோவும் வன்முறையை கையிலெடுக்கிறார்கள்.

Friday, October 3, 2008

ஊரும் வாழ்வும்........



அக வாழ்வு...
பின்னந்தலையை துளைத்துப் பாயுமொரு துப்பாக்கித் தோட்டா வெகுநாள் கனவில் வந்த வண்ணமிருக்கிறது.சில பதறிய விழிப்புகளில், அத் தோட்டா வந்த திசை நனவிலியின் குழப்பமான எத்தனையோக்களின் இன்னொரு எச்சமாய் திசை தொலைத்து, தன்னை இழக்கிறது. சுற்றிலும் கண்ணாடிகளால் சூழப்பட்ட அறைகளில், தனித்தமர்ந்திருக்கையில், எங்கிருந்தோ விரைந்து வரும் குண்டுகள், மூளையை / தலையை பக்கவாட்டிலிருந்து சிதறச்செய்வதாய், சில மாயத் தோற்றங்கள் நிகழ்ந்து மறைகின்றன.கனவில் பின்னந்தலையாகவும், நினைவில் பக்கவாட்டிலுமாயும், என் தலையைத் தெறிக்க, வெகுநாட்களாய் இத்துப்பாக்கித் தோட்டாக்கள் பெரும் முயற்சி செய்துகொண்டு வருவதை, வெகு நுட்பமான என் மன உணர்வுகள் தடம் பிடித்ததை உணர்ந்து, பெரு மகிழ்வு கொண்டேன்.அவ்வப்போது தலையை கைகளினால் தடவிக்கொள்வேன்.பாய்ந்து வரும் தோட்டாக்களுக்கு சிக்காமல் என் தலையை அடிக்கடி குனிந்தோ, சாய்ந்தோ, கவிழ்ந்தோ, காப்பாற்றிக் கொள்வேன்.கூட்டமான இடங்களுக்கு செல்கையில் வெகு கவனமாய் இருப்பேன்.இந்தக் கும்பலில் எத்திசையிலிருந்து வேண்டுமானாலும் விரையலாம் என் தலையை சிதறடிக்கும் தோட்டாக்கள், அதைத் தவிர்க்கும் பொருட்டு அடிக்கடி தலையின் இருப்பை மாற்றியமைத்துக் கொள்வேன். உள்ளுணர்வு அதிகமாகத் துடிக்கையில், எவ்விடத்தில் இருந்தாலும் உடனடியாய் தரையில் படுத்துக்கொள்வேன். தோட்டாக்கள் மிகப்பெரும் ஏமாற்றமடைந்து எங்காவது தன் வலிமை இழந்திருக்கலாம்.தோட்டாக்கள் அகன்றதை உள்ளுணர்வு சொன்னதும் மிக உவப்பாய் எழுவேன். கண்ணுக்கே தெரியாத அவ்விரோதியை ஏமாற்றிவிட்டதை உணர்ந்து மகிழ்வில் கத்துவேன்.கூச்சலிடுவேன்.என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு என் செய்கைகள் கோமாளித்தனமாய்த் தெரியலாம். என்னைப் பார்த்துச் சிரிக்கலாம். பைத்தியமெனலாம். மன உளவியலின் அடிப்படையில் சில புதிய நோய்க்கூறுத்தன்மையை மேற்கோள் காட்டலாம், அல்லது புதியதொரு வாயில் நுழையாப் பெயரை துப்பறிந்து, என் இயல்புகளோடு பொருத்திப் பார்த்து, மிக நீளமான விரிவுரை ஒன்றை இச்சமூக ஆர்வலர்கள் நிகழ்த்தலாம். அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை.என் புலப்படா விரோதிகளைப் பற்றி என்னைச் சுற்றியுள்ளவர்களுக்குத்(புலப்படும்) தெரியாது.அவர்/வை கள் ஒரு சிறிய விசையிலிருந்து பாயும் வலிமை கொண்டவர்கள்/ன. எல்லாவற்றையும் சிதறடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்/வை. அவர்/வை களுக்கு இலக்கு என் பின் மற்றும் பக்கவாட்டுத் தலை. ஆம்! அவர்கள் / அவைகள் என்னை முன்புறமாய்த் தாக்குவதில்லை.இந்த சிக்கலான உணர்வுகளைப் புரியவைக்கவே இப்படிச் சிக்கலாய் எழுதினேன். மற்றபடி புரியாமை நிலைக்குத் தள்ளுவது என் நோக்கமல்ல.புரியாமைகளின் ஒத்திசைவின் அதிர்வுகள் மாத்திரமே பகிரத் தூண்டுவதால் இப்புரியாமையும், சிக்கலும், தலைசுத்தலும் கடேசியாய் வாந்தியும்.

பு/பிற வாழ்வு

நீல வானில் வெண்மை திரண்ட மேகங்கள் காற்றின் அலைக்கழிப்புகளுக்கேற்றார்ப்போல் தன் வடிவங்களை அமைத்துக்கொள்கின்றன.குட்டித் தும்பிக்கை கொண்ட யானையொன்று, தன் தும்பிக்கை நீளும் வித்தைகளை மிக மெதுவாய் நிகழ்த்திக்கொண்டிருக்கும். இன்னுமொரு மாலையில் வாயைப் பிளந்த முதலையொன்று, ஒரு வினோத சிறிய உயிரை மெல்ல விழுங்கிக்கொண்டிருக்கும்.படக்கதைகளென விரியும் மேக நடனங்கள், மிதக்கும் வனங்களாகின்றன.தாவும் குரங்கு,கிளையழிக்கும் யானை, மானின் முதுகில் பதியும் சிறுத்தையின் முன்னங்கால்கள், இப்படிச் சிலவாய் வனங்களின் உயிர்களை, வெகு துல்லியமாய் மேகங்கள் கொண்டிருக்கும்.வனங்களில் வழி தப்பி மீள்வதும், வானில் நினைவு தொலைந்து மூழ்குவதும் ஒரே உவப்பைத் தரவல்லது.வழமையாய் மின்சாரம் போகும் விடியல், கொசுக்களை அனுப்பி என்னை என் வீட்டின் மாடிக்குத் தூக்கி வரச் செய்யும்.நான் விழிநிறை தூக்கங்களோடு வானில் புதைவேன்.குறிகளற்ற மேகக் கலவியில் திசுக்களெங்கிலும் கிளர்வு.

இந்த முன்பகலை பார்த்துக்கொண்டிருப்பது வெகு சாந்தமானது.மாமர அடிபாகத்தில், செங்குத்தாய் அமர்ந்து, வால் தூக்கிப் பார்க்கும் சாம்பல் நிற அணில், அருகாமையிலிருக்கும் எம்மரத்திற்குத் தாவும்? என்பதை எவராலும் தீர்மானிக்க முடியாது.சில நேரங்களில் அது எங்கும் தாவாமல் மாமரத்தின் உச்சிக்கே மீண்டும் விரையும்.பெரிய வண்ணத்துப் பூச்சியொன்று எவ்விடத்திலும் அமராது அலைந்து கொண்டிருக்கும். வண்ணத்துப் பூச்சிகள் அமர என் வீட்டின் சிறு தோட்டத்தில் மலர்களில்லை.எனினும் வண்ணத்துப் பூச்சிகள் அலைந்து கொண்டுதானிருக்கின்றன.சிமெண்ட் தரையிலமர்ந்து தேநீர் பருகியபடி அலையும் வண்ணத்துப் பூச்சிகளைப் பார்த்துக்கொண்டிருப்பேன். அப்போது தொலைபேசியில் அழைக்கும் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பேன். இவ்வண்ணத்துப் பூச்சி அமர்வதற்கான இருக்கை என்னிதயப் பூவாய் இருக்கலாம். முருங்கை மரப் பூத்தேனின் மீது, தேன் சிட்டுகளுக்கு அலாதி பிரியமாய் இருக்கக்கூடும்.சிட்டுக்குருவிகளை விட மிகச்சிறிய இப்பறவைகள் விதவிதமான வண்ணங்களில் இருக்கும். மஞ்சளும் நீலமும் கலந்த சிறுபறவைகள் என் வீட்டிற்கு வழமையானவை.தேனுண்ட பறைவகளின் உற்சாக கீச்சுகள் முன்பகலை வண்ணமயமாக்கும்.

நண்பகல் கருப்பு வெள்ளை திரைக்கானது.நெற்றிநரம்பு புடைக்க சிவாஜியின் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் வார்த்தைகளாய் இறைந்து கொண்டிருக்கும்.கைகளிரண்டையும் உயரத் தூக்கி பாபூ பாபூஊஊஊ எனக் கத்தும் ஆலயமணி ஜமீந்தார், நினைவு தப்பிய காதலியை மீன் தொட்டி சிதற சந்தித்து அதிர்ச்சியுறும் ஆண்டவன் கட்டளை விரிவுரையாளர்,வேலைக்காரன் வீட்டு அதிரசத்தை அறியாமல் உண்டு பின் உணர்ந்து வாந்தியெடுக்கும் 'பார் மகளே பார்'மேல்தட்டு பணக்காரர்,ஒச்சிடுவேன் என நாகேஷ் உடன் கலாய்க்கும் கலாட்டக் கல்யாணம் பணக்கார இளைஞன்.என சிவாஜி மிக மெதுவாய் என் நண்பகலை நகர்த்திக்கொண்டிருப்பார்.எந்தவித எதிர் குணங்களும் இல்லாத, மிக நல்ல, மிக யோக்கிய, மிக நேர்மையான, பெருங்கொண்ட சத்தியவான் எம்ஜிஆரை என்னால் 30 நிமிடத்திற்கு மேல் பார்க்கமுடிவதில்லை.

ரமணர் ஆசிரமத்திலிருந்து மலையிலிருக்கும் கந்தர் ஆசிரமத்துக்கு செல்லும் மலைப்பாதை என் பால்யங்களோடு மிக நெருக்கமானது.பள்ளிக்காலத்தில் என் பாடங்களை அப்பாதை வழிகளில் அமர்ந்துதான் படித்தேன். நண்பர்களோடும் தனித்தும் சுற்றித்திரிந்த மலைப்பாதை அது.கோடை விடுமுறைகளில் அப்பாதைகளில் அமர்ந்துதான் கதைப்புத்தகங்களை படித்துக்கொண்டிருப்பேன். குறிப்பாய் ரஷ்ய மொழிபெயர்ப்புகளை, ராதுகா பதிப்பக வெளியீடுகளின் பெரும்பாலான புத்தகங்களை அங்குதான் படித்தேன்.வெயிலேறத் துவங்கியதும் பாறைக்கடியில் தஞ்சம் புகுந்தபடி, பனிப்பொழியும் ரஷ்ய சதுப்பு நிலக் காடுகளில் என்னைத் தொலைத்திருப்பேன்.இந்த முறை சென்ற போது சமீப மழையால் மலை மிகப் பசுமையாய் இருந்தது.மிக அருகினில் மேகக்கூட்டங்கள், சுழன்றடிக்கும் காற்று, என மிக அற்புதமான ஒரு பொழுதில் ஓஓஓஓஒ வெனக் கத்தினேன் பாறைகளில் பட்டுத் தெறித்த என் குரல் எங்கேயோ புதைந்து கிடந்த என் ஆதி வேர்களின் மீதங்களை மீட்டெடுத்தது.மஞ்சள் கொன்றை மலர்கள் அங்கங்கே பூத்துக்குலுங்கின. மலைக்குரங்குகள் கண்ணில் பட்டன.இவ்வகை குரங்குகள் இப்போதுதான் வந்திருக்கின்றன போலும்.மலைக்குன்றின் முடிவும் புதிய ஒன்றின் துவக்கமுமான இடமொன்றில் மிக அடர்த்தியாய் மரங்கள் சூழ்ந்திருந்தன.அடர்வான மரமொன்றின் அடிவேரில் தலைசாய்த்து அமர்ந்திருந்தேன். சுழன்று சுழன்று அடித்துக்கொண்டிருந்த காற்று நிதானமானது. சொல்லில் விவரிக்க முடியா மஞ்சம்பில் கலந்த வாசனையை அக்காற்று கொண்டிருந்தது.முடிந்த வரை என்னில் நிரப்பிக்கொண்டேன்.மலை விட்டிறங்கும்போது எப்போதும் பூத்திருக்கும் இந்நித்தியப்பூவினை நீங்கள் மலையென்றும் அழைக்கலாம் என்கிற என் பழைய வாசகம் நினைவில் வந்துபோனது.

நான் நீந்திக களித்த பெரும்பாலான கிணறுகளை எப்போதோ மூடிவிட்டிருந்தனர்.வெற்றிலைக்கிடங்குகள்,கண்ணுக்கெட்டியவரையிலான பசும் வயல்வெளிகள், அடர்வான மரங்கள், ஏரியிலிருந்து நீர் வரும் அகலமான வாய்க்கால், சாலையின் இருமருங்கிலும் அடர்த்தியாய் வளர்த்திருந்த புளியமரங்கள், என எதுவுமில்லை.நகரம் பெரிதாய் ஒன்றும் வளர்ந்துவிடவில்லை ஆனால் எல்லா விவசாய நிலங்களும் ப்ளாட்டுகளாகி விட்டன.புதிதுபுதிதாய் ஏகப்பட்ட நகர்கள் முளைத்திருக்கின்றன.விவசாயிகள் நிலங்களை விற்றுவிட்டு, பணத்தை வங்கியில் பாதியும், வட்டிக்கு பாதியுமாய் இறைத்திருக்கிறார்கள்.பெருகிய பணம் டாஸ்மாக்குகளில் மிதந்துகொண்டிருக்கிறது. வேட்டி எதுவுமற்று கடைக்கருகிலேயே தூங்கிப்போகும் எத்தனையோ விவசாயிகள் முன்பொரு காலத்தில் பயிர்செய்து பசுமைகளை உருவாக்கிக் கொண்டிருந்தவர்கள் என்பதை நம்புவதற்கு சிறிது கடினமாய் இருக்கிறது.பணம் தன் விகாரப் பற்களினால் கடித்துத் துப்புவது இயல்பு வாழ்வையும் யதார்த்த மனிதர்களையும்தான்.

Featured Post

test

 test