Tuesday, July 15, 2008

சமையல் குறிப்புகள்


என் இந்தியத் தனிமை வாசத்தில் சமையலறைகளை பியர் போத்தல்களை சேமிக்குமிடமாகத்தான் கருதிவந்திருந்தேன்.என் சகோதரனுடன் வசித்த இரண்டு வருட காலத்தில் வீடு என்கிற அமைப்பு வீடு என்கிற அமைப்பாகவே இருந்தது.அப்போதுதான் சுமாராக சமைக்க கற்றுக்கொண்டேன்.பின்பு நீண்ட இடைவெளிக்கப்பால் சமீபமாய் சமைக்கத் துவங்கியிருக்கிறேன்.முதலில் பயந்து கொண்டே சமைக்க ஆரம்பித்து இப்போது மிக நன்றாக சமைப்பதாக நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

சமைப்பதென்பது மிகவும் அலாதியானது."நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி" க்கேற்றார்போல் டன்டன்டன்டய்ய்.. டன்டன்டன்டய்ய்ய்..ம்ம்ம்ம்ம்.. என் லேசாக ரொமான்டிக் நடனமாடியடி சமைப்பது இன்னமும் அலாதி.சமீபத்தில் பார்த்த திரைப்படமொன்றில் சமைக்கும்போது சிறிது அன்பையும் சேருங்களென ஒரு ரெசிபியை சொல்லியிருப்பார்கள்.நான் எத்தனை முயற்சித்தும் அன்பை எங்கேயும் வாங்க முடியவில்லை.சரி என்னிலிருந்து பிடுங்க முடியுமாவென பார்த்தாலும் மருந்துக் குப்பியளவிற்கு கூட இல்லை.மற்றவர்கள் நம்மைப் பற்றிச் சொல்வதெல்லாம் சரிதான் போலிருக்கிறது என மிகுந்த வருத்தத்தோடு உலகின் மிகச்சிறந்த அன்பாளர்களான வைரமுத்துவையும் வாலியையும் துணைக்கழைத்தேன்.வாலி தொடங்கி பேரரசு வரை விரிந்த அன்பாளர்கலால் நிறைந்த இச்சமூகம் என்னைப்போன்ற காட்டுமிராண்டிகளை தனது கவிதை வரிகளால் சாதுவாக்குவதை இரண்டாம பாடலைக் கேட்கும்போதே உணரமுடிந்தது.பின்பென்ன செய்ய.. நதியெனப் பொங்கி, ஆறெனப் பெருக்கெடுத்து ஓடிய அன்பை வழித்தெடுத்து, உணவோடு கலந்து சமைத்து முடித்தேன்.இதுவரை உணர்ந்திராத சுவையென நண்பர்கள் ஆர்பரித்தார்கள்..எனக்கும் மிகுந்த களிப்பாய் போயிற்று.

சரி இப்போது மாங்காய் முருங்கைக்காய் சாம்பார் வைப்பது எப்படியெனப் பார்ப்போம்.நான் எப்படி சமைப்பேனோ அப்படியே சொல்கிறேன்.வழமைகளின் மீதான நம்பிக்கை இல்லாத பிம்பத்தைக் காப்பாற்றுவது எத்தனை கடினமென்பதை அனுபவித்தால்தான் தெரியும்..

1.குக்கர் பாத்திரத்தில் அரிசி எடுத்துக்கொள்ளவும்.சன்ரைஸ் கப் என்றால் நாலு பேருக்கு ரெண்டு, குண்டு கப் என்றால் நாலு பேருக்கு ரெண்டே முக்கா.
2.அரிசியை மூன்று முறை கழுவி சிறிது நேரம் ஊற வைக்கவும்.இந்த ஊற வைத்த அரிசியை யாரும் திங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.மீறித் தின்பவர்களின் கல்யாணத்தில் மழை பலமாய் பெய்யுமென பயமுறுத்துவதும் அவசியம்.
3.இப்போது பாடல்களை தேர்வு செய்யலாம் அல்லது ஒரு தம் அடிக்கலாம்.
4 துவரம் பருப்பு அரை கப் எடுத்து நன்கு கழுவிக்கொள்ளவும்.
5.வெங்காயத்தை ஆறு துண்டாய் நறுக்கவும் ..நான்கு பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்..
6.மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும் முருங்கைக்காயை நடுத்தர அளவில் வெட்டிக்கொள்ளவும்.
இப்போது குக்கர் பாத்திரத்தில் இருக்கும் அரிசியை வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிட்டு அந்த குக்கரில் பருப்பு, வெங்காயம், மிளகாய், காய்கறிகள், பூண்டு என எல்லாவற்றையும் போடவும். கொஞ்சம் மஞ்சள் தூள சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
7.அடுப்பின் தீயை நன்றாக எரியவிடவும்.இப்போது தாளிப்பதற்கு தேவையான
வெங்காயம் - 2, தக்காளி - 2, பூண்டு - 4 பல், இம்மூன்றையும் பொடியாய் நறுக்கவும்.
கறிவேப்பிலை கொத்தமல்லி இவற்றையும் தயாராய் வைத்துக்கொள்ளவும்
8.பருப்பு,காய்கறி வெந்ததும்(3 விசில்) இறக்கி விட்டு வாணலியை அடுப்பில் வைக்கவும்.
9.வாணலி காய்ந்ததுதும் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, வெங்காயம், தக்காளி, என எல்லாவற்றையும் நன்கு வதக்கவும்..
10.குக்கரில் வெந்த காய்கறிகளை கரண்டியில் எடுத்து வாணலியில் போட்டு லேசாக வதக்கவும்.சிறிது நேரம் கழித்து பருப்பு வேக வைத்த தண்ணீரை வாணலியில் ஊற்றவும்.
கொஞ்சம் கொதி வந்த பின்பு சாம்பார் பொடியையும், உப்பையும் சேர்க்கவும்.
நன்கு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

இப்போது ஊறவைத்த அரிசியை இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும்
சரியாய் மூன்றாவது விசிலில் நிறுத்தவும்.சாதமும் சாம்பாரும் ரெடி..ஓரமாய் உட்கர்ந்து வேடிக்கை பார்த்த அறைத்தோழனை வத்தல் பொறிக்கச் சொன்னால் வேல முடிஞ்சது..

** லேபிள் க்கு நன்றி :ஜெயஸ்ரீ

பிகு

இதே சாம்பாரை வேறுவிதமாய் ருசியாய் எப்படி செய்யலாமென்கிற மாற்றுப் பார்வைகள் வரவேற்கப்படுகின்றன.

என் வாசகியின் வேண்டுகோளின்படி பதிவிற்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்.

33 comments:

Anonymous said...

கொத்தமல்லி தூவும் முன் ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல் அரை டீஸ்பூன் மல்லி விதையை அரைத்து ஊற்றி ஒரு நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு மல்லி இலை தூவி இறக்கினால் மணம் கூடுதலாக இருக்கும்....முயற்சித்துப் பாருங்கள்.....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குறிப்பின் பல இடங்களில் வருகிற ஊறவைக்கவும் என்கிற வார்த்தையில் பிழை .. ர அல்ல ற. திருத்தவும்.. :)

கதிர் said...

சமகால இலக்கிய சாம்பார் வித்தகர் அய்யனாரிடமிருந்து இப்படியொரு கமகம பதிவு எதிர்பார்க்கவில்லை.

இருந்தாலும் பதிவுக்கு சம்பந்தமில்லாமல் பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படும் என்ற ஆதிக்க மனப்பான்மையை எதிர்க்கிறேன்.

வாசகிகளுக்கே சலுகையென்றால் வாசகர்களுக்கு ஒன்றுமே இல்லையா...

நிற்க.

இந்த சாம்பாருக்கு புலி போட வேண்டுமா அல்லது கருப்பு புலியா, செவப்பு புலியா, அல்லது கேரளா புலியா தமிழ்நாட்டுப்புலியா,

பருப்பில் மைசூர் பருப்பு மட்டும் உள்ளவர்களுக்கு மாற்று வழி ஏதேனும் உள்ளதா அல்லது துவரம்பருப்பில் மட்டுமே இத்தகைய கமகம சாம்பார் வைக்க முடியுமா விளக்கம் ப்ளீஸ்

சாப்பிட்ட தட்டகூட கழுவதெரியாதவனெல்லாம் சமையல் குறிப்பு எழுத வந்துட்டா அது சமகால இலக்கியமாகிடுமா....

ஆபாசமான தலைப்பு.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நக்கலு... :)

லேபிளில் உள்ள வரியைப் படித்துச் சிரித்தேன் :)

ஆடுமாடு said...

சரக்கு போடுவதற்கான நல்ல சைடிஸ்களையு்ம/ அதற்கான செய்முறைகளையும் சொன்னேங்கன்னா பயனுள்ளதாகவும் இருக்கும்
post madernisam ஆகவும் இருக்கும்.

ஒதவுறீங்களாண்ணா?

anujanya said...

அப்பாடா! ஒரு வழியாக 'சமகால இலக்கியம்' புரிந்தது.

அனுஜன்யா

KARTHIK said...

அசைவமும் சமகால இலக்கியத்தில் இடம்பெறுமா?

லேபில் நல்லருக்கு.

வால்பையன் said...

//நான் எப்படி சமைப்பேனோ அப்படியே சொல்கிறேன்//

சாப்பிட்ட பின் என்ன நடக்கும் என்றும் சொல்லமுடியுமா

வால்பையன்

வால்பையன் said...

//குக்கர் பாத்திரத்தில் அரிசி எடுத்துக்கொள்ளவும்.சன்ரைஸ் கப் என்றால் நாலு பேருக்கு ரெண்டு, குண்டு கப் என்றால் நாலு பேருக்கு ரெண்டே முக்கா.//

எங்க வீட்ல டம்ளர் தான், லிட்டர் அளவில் சொல்ல முடியுமா
அல்லது எத்தனை டம்ளர் அரிசிக்கு எத்தனை டம்ளர் தண்ணி என்று கூறினாலும் சரி

வால்பையன்

வால்பையன் said...

//அரிசியை யாரும் திங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.மீறித் தின்பவர்களின் கல்யாணத்தில் மழை பலமாய் பெய்யுமென பயமுறுத்துவதும் அவசியம்.//

மீறியும் தின்றால் ஆசிட் மலை பெய்யும் என்று பயமுறுத்தலாமா

வால்பையன்

வால்பையன் said...

//இப்போது பாடல்களை தேர்வு செய்யலாம் அல்லது ஒரு தம் அடிக்கலாம்.//

ரெண்டுக்கும் வழியில்லாதவர்கள் புத்தகம் படிக்கலாமா

வால்பையன்

வால்பையன் said...

//துவரம் பருப்பு அரை கப் எடுத்து நன்கு கழுவிக்கொள்ளவும்.
5.வெங்காயத்தை ஆறு துண்டாய் நறுக்கவும் ..நான்கு பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்..//

இந்த கப் அளவு உதைக்குதே!
சரி விடுங்கள் சின்ன வெங்காயமா பெரிய வெங்காயமா
இதெல்லாம் முக்கியமான தகவல் இல்லையா

வால்பையன்

வால்பையன் said...

//இப்போது குக்கர் பாத்திரத்தில் இருக்கும் அரிசியை வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிட்டு அந்த குக்கரில் பருப்பு, வெங்காயம், மிளகாய், காய்கறிகள், பூண்டு என எல்லாவற்றையும் போடவும்.//

இன்னும் ஒரு விசில் கூட வரல. அதுக்குள்ளே மாத்துறதா
இன்னும் அரிசியா இருக்குமே

வால்பையன்

வால்பையன் said...

//அடுப்பின் தீயை நன்றாக எரியவிடவும்.இப்போது தாளிப்பதற்கு தேவையான
வெங்காயம் - 2, தக்காளி - 2, பூண்டு - 4 பல், இம்மூன்றையும் பொடியாய் நறுக்கவும்.//

இப்பதான் அடுப்பையே பத்த வைக்கணுமா!
இதெல்லாம் முன்னாடியே சொல்றதில்லையா

வால்பையன்

வால்பையன் said...

//பருப்பு,காய்கறி வெந்ததும்(3 விசில்) இறக்கி விட்டு வாணலியை அடுப்பில் வைக்கவும்.//

குக்கரில் ஒரு விசில் தான் இருக்கும், மூணுக்கு எங்க போறது

வால்பையன்

வால்பையன் said...

//வாணலி காய்ந்ததுதும் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, வெங்காயம், தக்காளி, என எல்லாவற்றையும் நன்கு வதக்கவும்..//

காய்ந்த மிளகாய் சரி.
பூண்டு, வெந்தயம், தக்காளி எல்லாம் காய்ந்ததா
ஏனென்றால் இந்த பாராவில் காய வேண்டியது நிறைய இருக்கிறது

வால்பையன்

வால்பையன் said...

//சிறிது நேரம் கழித்து பருப்பு வேக வைத்த தண்ணீரை வாணலியில் ஊற்றவும்.//

அத எடுத்து வைக்கனும்னு முதல்லையே சொல்றதில்லையா
நான் கீழே ஊத்திட்டனே

வால்பையன்

வால்பையன் said...

//ஓரமாய் உட்கர்ந்து வேடிக்கை பார்த்த அறைத்தோழனை வத்தல் பொறிக்கச் சொன்னால் வேல முடிஞ்சது..//

அவனுங்க அதை ஒழுங்க தின்னாலே போதாதா! வேல சொன்ன ஓடிற மாட்டானுங்க

வால்பையன்

வால்பையன் said...

//லேபிள் க்கு நன்றி :ஜெயஸ்ரீ//

இங்கே நன்றி சொன்னதற்காக நாங்கள் எப்படி ஏற்று கொள்வது

//என் வாசகியின் வேண்டுகோளின்படி பதிவிற்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்.//

இப்படி ஒரு கண்டிஷனும் போட்டுட்டு

வால்பையன்

லேகா said...

நன்றி அய்யனார்...எனக்கு பெரிதும் உதவும் இக்குறிப்பு...தொடர்ந்து இது போன்ற குறிப்புகளை குடுங்க..

Ayyanar Viswanath said...

அனானி
இந்த மல்லு மக்க இம்சையால தேங்காவ பார்த்தாவே அலர்ஜியா இருக்கு இருந்தாலும் உங்கள் டிப்ஸ்க்கு நன்றி..

எழுத்துப் பிழைகளைச் சுட்டியமைக்கு நன்றி முத்துலக்ஷ்மி..

Ayyanar Viswanath said...

எலே தம்பி சமையல் இலக்கியத்தில சேராதா..ஒன்னமாதிரி எலக்கியவியாதிங்களுக்கு சமையல் னா எளக்காரமா போச்சா :@@@

சுந்தர் : என்ன கொடும நான் சீரியசா எழுதியிருக்கேன்

ஆடுமாடு ஜி..நான் சமையல் இப்பதான் கத்துக்கறேன்..எதுக்கும் நீங்க சொன்னத மைண்ட் ல வச்சிக்கறேன் :)

Ayyanar Viswanath said...

அனுஜன்யா:நன்றி

கார்த்திக்:சமகால இலக்கியத்துல நான்வெஜ் க்குதான் தனி இடம்..சீக்கிரம் அதையும் கத்துகிட்டு பதிவு போடுறேன்...

வால் பையன் : ஏன் இந்த கொலவெறி..நான் இப்பதான் சமைக்க கத்துக்கறேன்..வரிக்கி வரி கேள்வி கேட்டு இம்ச கொடுக்காத ராசா:)

Ayyanar Viswanath said...

லேகா
நன்றி..கிண்டலா நெசமான்னே புரியல :)

thamizhparavai said...

//3.இப்போது பாடல்களை தேர்வு செய்யலாம் அல்லது ஒரு தம் அடிக்கலாம்//
இது பண்ணலாம்..
//அறைத்தோழனை வத்தல் பொறிக்கச் சொன்னால் வேல முடிஞ்சது..//
அப்டியே சாம்பாரையும் வைக்கச் சொல்லிட்டா வேலை முடிஞ்சதுன்னு சாப்பிட உட்கார்ந்திடலாம்..
அய்யனாரே.. இதெல்லாம் ஆவுறதில்லை...அருவாள வைச்சிகிட்டு அடுப்படிப் பக்கமெல்லாம் போகாதீங்க...

ரௌத்ரன் said...

வர வர ஒங்க லொள்ளுக்கு ஒரு எல்லையில்லாம போயிடுச்சுங்க...இருந்த எல்லா டௌட்டையும் வால்பையன் கேட்டுட்டுட்டாரு.அப்படியே வத்தக் குழம்பு எப்படி வைக்கிறதுன்னு சொல்லிட்டீங்கன்னா கொதிக்க கொதிக்க எறக்கி என் கொலீக்குங்க வாயில ஊத்திப்புடுவேன்.(ரொம்ப நாளா எலக்கியம்னா என்னான்னு கேட்டு பிராண்டிக்கிட்டு இருக்காய்ங்க)

கிருத்திகா ஸ்ரீதர் said...

சமகால இலக்கியத்தை சமையலை விட ரொம்ப எளிமையா புரியவைச்ச உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல... நீடுழி வாழ்க....:)

Saminathan said...

ஆள வுடுங்கப்பா சாமியோவ்வ்....( பி.கு : கவுண்டபெல் மாதிரி உச்சரிக்கவும் )

இந்த சமகால இலக்கியம் உங்க கிட்ட மாட்டிகிட்டு திரு திருன்னு முழிக்குது..

Ayyanar Viswanath said...

தமிழ்பறவை அரிவாளில் காய்கறி வெங்காயம் இதெல்லாம் சீக்கிரம் நறுக்கிடலாம் :)

ரெளத்ரன் : நன்றி

கிருத்திகா மிக்க நன்றி :)

ஈரவெங்காயம் ..சூப்பர் பேர்! இந்த பதிவுக்கு ரொம்ப பொருத்தமாவும் இருக்கு :)) btw இந்த சமகால இலக்கியத்தை ஒரு வழி பண்ணிட்டுதான் மறுவேல :)

வெட்டிப்பயல் said...

வெங்காயம் வதக்கும் போதே உப்பு போட்டா சீக்கிரமா வதங்கும்னு வலைப்பதிவு ஒண்ணுல படிச்சி, அதை ஃபாலோ பண்றேன். நல்லா வருது.

நீங்களும் முயற்சிக்கலாம்.

படத்துல உருளைக்கிழங்கு வருவலும் இருக்கு. அட்டகாசமான காம்பினேஷன். பார்த்தவுடனே பசி எடுக்குது...

- கார்ன் ஃபிளேக்ஸ் சாப்பிட்டு வேலைக்கு வந்தவன்

(நீங்க எழுதன பதிவுலே எனக்கு புரிஞ்ச பதிவு இது தான். அதான் உடனே பின்னூட்டம் போட்டாச்சு)

Saminathan said...

ஆமா, எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டுங்க அய்யனார்...

இந்த சமகால இலக்கியம் சமகால இலக்கியம் அப்டினு சொல்றாங்களே, அப்படின்னா எந்த காலம்..?

அப்ப கழித்தல் கால இலக்கியம், கூட்டல் கால இலக்கியம், பெருக்கல் கால இலக்கியம், வகுத்தல் கால இலக்கியம் அப்படின்னு எதாவது இருக்கா என்ன..?
{ நாங்கெல்லாம் தமிழ் மீடியத்துல கணக்கு படிச்சோம் பாருங்க, அதனாலதான்..}

Ayyanar Viswanath said...

வெட்டி வருக !

சூப்பர் டிப்ஸ்..உடனே ட்ரை பண்ணிடறேன்..என்ன கொடும இன்னுமா கெலாக்ஸ் :)

ஈர வெங்காயம் எனக்கும் இது டவுட்டுதான்.. அதுவுமில்லாம நானும் கவுருமென்டு இஸ்கோலுதான்.. பத்தாதுக்கு கணக்கில அரியர் வேற.. பேசாம இங்கிலிபீசு ஆளுங்க யாரையாச்சிம் புடிச்சி கேட்கலாமா?

தமிழன்-கறுப்பி... said...

ருசித்தேன்...!

உங்க கிட்டயிருந்து நானும் இதை எதிர்பாக்கல....

Featured Post

test

 test