Sunday, July 27, 2008

இன்னும் சில குப்பைகள்



மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு
நீ உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
பதுங்குவதற்கு குழிகளற்ற
பசுஞ்சமவெளியின்
பிரம்மாண்டம் கண்டு மிரளும்
முயல்குட்டியையே
நினைவுபடுத்துகின்றது.
முயல் மொழியறிந்தோர்
யாராவது சொல்லுங்களேன்
பசுஞ்சமவெளிகளில்
பயங்களில்லையென..


Laybrinth ஐ போலிருக்கின்றன இத்தெருக்கள்.எத்தனை முறை வந்தாலும் குழம்பிப்போகிறேன்.சொல்லிவைத்தாற்போல ஒவ்வொருமுறையும் வழியைத் தவற விட்டு,சிறிது நேரம் நின்று, சுத்தி, கடுப்பாகி, வியர்த்து வழிந்து, பின்பு முளையின் ஏதோ ஒரு அடுக்கில் படிந்திருக்கும் ஏதோ ஒரு நினைவு தூண்டின பிரகாசத்தில் செல்ல நினைத்த இடத்திற்கு சென்றடைகிறேன்.இதென்ன வீதிகள்!!..இத்தனை குறுகலாய், இடைஞ்சலாய், அங்கங்கே திடீரென வளைந்து, நீண்டு, சிறுத்து, குறுகி பார்க்கவே எரிச்சலாக இருக்கிறது.பிதுங்கி வழியும் கட்டிடங்கள்.இடைவெளிகளே இல்லாத அளவுக்கு மிக இடுக்கமான உயரமான கட்டிடங்கள்.நடந்து செல்கையில் மூச்சு முட்டுகிறது.இங்கு வந்த பின் வானம் என்கிற வஸ்துவே இருக்கிறதா இல்லையா என்பது மறந்து போயிற்று.ஆறு மணிக்கு அடிக்கத் துவங்கும் வெயிலில் வியர்த்து அலுவலக வண்டியைப் பிடித்து வேலைக்குப்போய் நேரத்தைக் கடத்தி மீண்டும் ஆறு மணி வெயிலில் வியர்த்து இந்த பொந்தினை அடைவது மிகச் சலிப்பாய் இருக்கிறது.என்னக் கருமாந்திரன்டா இது ச்சே..

வார இறுதி இரவுகள் தூங்குவதற்கானதில்லை.மாய உலகின் வழிகாட்டிகளை சூழல் மறக்கடிப்பவைகளை அந்த இரவில் துணைக்கழைக்கலாம்.அவர்களின் துணையோடு பழகிய பொந்தில் சஞ்சரிப்பது சற்று ஆசுவாசமானது.விடியற்காலை மூன்று மணியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நடமாட்டங்கள் குறைந்த கருப்பு வெளி.கிடைத்த இடுக்குகளில் துருத்திக்கொண்டிருந்தன சிற்றுந்துகள்.சற்று உயரமான இடத்திலிருந்து பார்த்தால் சிற்றுந்துகளின் மீதுதான் இந்நகரம் எழுப்பப்பட்டிருக்கிறதோ என்கிற பிரம்மைகள் எழுகின்றன.சில கருப்புதேசத்து பெண்கள் மட்டும் சாலையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டிருந்தனர்.கும்பலாய் நின்றபடியும், பேசியும், புகைத்தும், நடந்தும், இரவு தீரப்போவதற்கான முனைப்புகளை, தவிப்புகளை வெளித் துப்பிக் கொண்டிருந்தனர்.பதுங்கி பதுங்கி வந்த சில இந்திய ஆண்கள், பைஜாமா அணிந்த பாகிஸ்தானிகள் தேர்வு செய்த பெண்களுடன் கட்டிடங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தனர்.ஒரு பெண் மட்டும் வெகு நேரமாய் நின்றுகொண்டிருந்தள்.ஒருவேளை அவள் வசீகரம் குறைந்தவளாய் இருக்கக்கூடும் அல்லது வந்தவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவளாயுமிருக்கலாம்.வெகுநேரம் காத்திருந்து சலித்த அப்பெண், அந்தப் பின்னிரவு தேவதை தான் புகைத்துக் கொண்டிருந்த சிகெரெட் துண்டினை சுண்டி விட்டெறிந்தாள்.அது கருப்பு நிறச் சாலையில் நெருப்பைத் தெறித்தபடி,செந்நிற அனலைக் கக்கியபடி கடைசி மூச்சை விட்டது.

வெறுப்புகள், வன்மங்கள், துவேஷங்கள், மிகவும் பாதுகாப்பானவை.நட்பு, அன்பு,ஸ்நேகம், சாப்டியா? எப்படியிருக்க? எனவெல்லாம் கேட்க நேரிட்டால் எரிச்சலாக வருகிறது.எல்லாமே தன்முனைப்பு சார்ந்தவைதாம்.எல்லாமும் சுய நலங்களாலானவைதாம். எல்லாமே பயன்படுத்திக்கொள்ளல்தாம்.மேலும் அதில் தவறேதுமில்லை.தன்னை நேசிப்பதில் சுயநலமாய் இருப்பதில் என்ன தவறு?.western philosophy படித்த குரங்கு ஒன்று வெகு நாட்களாக இப்படிச் சொல்லித் திரிகிறது.doing,happening இரண்டிற்குமான வித்தியாசங்களை உன்னால் புரிந்து கொள்ள முடிகிறதா? எனக் கேட்டேன்.குரங்கு சிறிது யோசித்தது.செய்வது நிகழ்வது இரண்டும்தான் சுயநலம் பற்றிய புரிதல்களுக்கான விளக்கமாய் இருக்க முடியும்.நானொரு அப்பட்டமான சுயநலவாதி என்பதை உணர்வது அதே நிலையில் தொடர்ந்து நீடிப்பதற்காக அல்ல.அதிலிருந்து மெதுவாய் வெளிவருவதற்காகவே.Ayn rand கள் அதே நிலையில் நீடித்திருக்கிறார்கள்.தான் தான் என்கிற குப்பைகளை பிறரிடம் சேர்த்த அமெரிக்க மூளைகள் பைத்தியம் பிடித்துதான் செத்தன.வேடிக்கைபார்த்தல்(witnessing) மட்டுமே எல்லாக் குழப்பங்களுக்குமான திறப்பு.

தொடர்ச்சியாய் ஒரே செயல்களை செய்துகொண்டிருப்பது எத்தனை அலுப்பான ஒன்று.இந்த முறையை வேண்டுமானால் கொஞ்சம் முயற்சித்துப் பாருங்கள்.ஜே கிருஷ்ணமூர்த்தி awareness குறித்தான discourse ஒன்றில் சொல்லியிருப்பார்.ஒரு நாளில் நீங்கள் செய்யும் செயலை அடுத்த நாள் reverse ஆக செய்துபாருங்கள்.உதாரணம் காலை எட்டு மணிக்கு எழுபவராய் இருந்தால் ஐந்து மணிக்கு எழ முயற்சியுங்கள்.நகர அடைசல்களற்ற அமைதியான சாலையில் நடங்கள்.துயிலெழும் பட்சிகள்,மினுங்கிக் கொண்டிருக்கும் வெள்ளி, நீல நிற ஆகாயம், தவழும் மேகங்கள், மெல்லியக் குளிர் எல்லாம் உள்வாங்கியபடி நடந்து விட்டு வரும்போது தினசரி யின் பிடியிலிருந்து கொஞ்சம் உங்களை விடுவித்துக் கொள்ள முடியும் என்பார்.முயற்சித்துப் பாருங்கள்..

அடையாளங்களை அழித்தல் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்(இதை எழுவது எத்தனை அபத்தமானது!)ஏதோ ஒன்று தன்னை மீறி வளர்ந்து நிற்கும்போது அதன் வளர்ச்சி, ஆகிருதி, அல்லது பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட அதன் உருவம் பயம்கொள்ளச் செய்கிறது.தன்னிலிருந்து பெருக்கிக் கொண்டவைதான் இவைகளே தவிர இவற்றுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை.ஏதோவொரு சந்தர்ப்பங்களில் வெளிப்படும் இவை மீதான நம்பகத்தன்மைகள் சிறிது வியப்பை மட்டுமே தருகின்றன.அதே சமயத்தில் அவ்வியப்புகள் எப்படித் தோன்றினவோ அப்படியே காணாமல் போவதும் உருவாக்கிக் கொண்டவற்றின் பிழையா? அல்லது கொண்டவர்களின் பிழையா? என்னுடைய பிழையா? பிழை பிழை பிழை மழை மழை :))

எல்லாம் தவிர்த்துக், கடந்து, துறந்து, மூச்சடக்கி, காதுபொத்தி, நினைவுதவிர்த்து, உள்ளமிழும்போது உயிர்த்தெழுகிறது நிசப்தம்.

உன் பேச்சுக்கு
பூனைக்குட்டிகளின் முகங்களை
மனதில் தருவிக்கிறேன்
அவை உன் பேச்சின் மீது
இன்னும் வாஞ்சையைத் தூண்டுகின்றன
உன் கோபம்
எரிச்சல்
மகிழ்வு
சிரிப்பு
கிண்டல் அழுகை
என உணர்வுகளுக்கேற்றார்போல்
பூனைக்குட்டிகளின் முகங்கள்
வந்து வந்து போகின்றன
சொல்
நீயொரு பூனைக்குட்டியா?

புகைப்படம்: www.joelane.com/images/trash-use1a.jpg

19 comments:

சென்ஷி said...

அருமையான பதிவு அய்யனார்.
கவிதைகளும் அருமை.

MSK / Saravana said...

படிக்க படிக்க வித்தியாசமான அனுவபமாயிருந்தது.
:)

Anonymous said...

அய்யோ,,,,,,,,,,,

-/பெயரிலி. said...

/ஒரு நாளில் நீங்கள் செய்யும் செயலை அடுத்த நாள் reverse ஆக செய்துபாருங்கள்.உதாரணம் காலை எட்டு மணிக்கு எழுபவராய் இருந்தால் ஐந்து மணிக்கு எழ முயற்சியுங்கள்.நகர அடைசல்களற்ற அமைதியான சாலையில் நடங்கள்.துயிலெழும் பட்சிகள்,மினுங்கிக் கொண்டிருக்கும் வெள்ளி, நீல நிற ஆகாயம், தவழும் மேகங்கள், மெல்லியக் குளிர் எல்லாம் உள்வாங்கியபடி நடந்து விட்டு வரும்போது தினசரி யின் பிடியிலிருந்து கொஞ்சம் உங்களை விடுவித்துக் கொள்ள முடியும் என்பார்.முயற்சித்துப் பாருங்கள்../

ஜிட்டுவின் பிரச்சனையே, அவர் நாளாந்தப்பிரச்சனைகளையெல்லாம் உங்களைப்போலவோ, என்னைப்போலவோ, செய்திகளிலே தினம் சாகின்றவர்களைப் போலவோ எதிர்கொள்ளத்தேவையில்லாமலிருந்தது ;-) அவர் அதை முயற்சித்திருக்கவேண்டும்; அவர் முயற்சித்த ஒன்ரே ஒன்று, அன்னிபெசண்டிடமிருந்து "தப்பி" ஓடியதுதான்.

காலைநடைபோக, நாடு பாதுகாப்பாகவிருக்கவேண்டும் என்பதை அவர் ஒருபோதும் பேசியதில்லை.

ஆயில்யன் said...

நல்லா இருக்கு ! முயல் மொழி கவிதை சூப்பர்!

//ஜே கிருஷ்ணமூர்த்தி awareness குறித்தான discourse ஒன்றில் சொல்லியிருப்பார்.ஒரு நாளில் நீங்கள் செய்யும் செயலை அடுத்த நாள் reverse ஆக செய்துபாருங்கள்.உதாரணம் காலை எட்டு மணிக்கு எழுபவராய் இருந்தால் ஐந்து மணிக்கு எழ முயற்சியுங்கள்.நகர அடைசல்களற்ற அமைதியான சாலையில் நடங்கள்.துயிலெழும் பட்சிகள்,மினுங்கிக் கொண்டிருக்கும் வெள்ளி, நீல நிற ஆகாயம், தவழும் மேகங்கள், மெல்லியக் குளிர் எல்லாம் உள்வாங்கியபடி நடந்து விட்டு வரும்போது தினசரி யின் பிடியிலிருந்து கொஞ்சம் உங்களை விடுவித்துக் கொள்ள முடியும் என்பார்.முயற்சித்துப் பாருங்கள்..//

நிறைய தடவை படித்து நினைத்துப்பார்த்ததுண்டு! :)

தமிழன்-கறுப்பி... said...

பக்கத்தில் இடி விழுந்தாலும் சற்று விலகி இருக்க பக்குவப்பட்ட மனதிலிருந்து சில வெளிப்பாடுகள்...

தமிழன்-கறுப்பி... said...

பல நாட்களுக்கு பிறகு ஓஷோவையும் நினைவுபடுத்தியிருக்கிறீர்கள்...

தமிழன்-கறுப்பி... said...

///doing,happening இரண்டிற்குமான வித்தியாசங்களை உன்னால் புரிந்து கொள்ள முடிகிறதா? எனக் கேட்டேன்.////

அப்படி பிரித்தறிய வேண்டிய அவசியம் இருக்கிறதா அண்ணன்...

கிருத்திகா ஸ்ரீதர் said...

“செய்வது நிகழ்வது இரண்டும்தான் சுயநலம் பற்றிய புரிதல்களுக்கான விளக்கமாய் இருக்க முடியும்.நானொரு அப்பட்டமான சுயநலவாதி என்பதை உணர்வது அதே நிலையில் தொடர்ந்து நீடிப்பதற்காக அல்ல.அதிலிருந்து மெதுவாய் வெளிவருவதற்காகவே”

வேடிக்கைபார்த்தல்(witnessing) மட்டுமே எல்லாக் குழப்பங்களுக்குமான திறப்பு.

அடையாளங்களை அழித்தல் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன

எல்லாம் தவிர்த்துக், கடந்து, துறந்து, மூச்சடக்கி, காதுபொத்தி, நினைவுதவிர்த்து, உள்ளமிழும்போது உயிர்த்தெழுகிறது நிசப்தம்."

ஏன் இத்தனை யோசனை.. இதைவிட இலகுவாய் இருப்பது இன்னும் எளிமையானதாய் இருக்காதோ....

KARTHIK said...

நல்ல பதிவு
படமும் கவிதையும் அருமை.

Ayyanar Viswanath said...

நன்றி : சென்ஷி

நன்றி சரவணகுமார்

Ayyanar Viswanath said...

பெயரிலி
உங்களின் கருத்திலிருக்கும் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறதென்றாலும் ஜிட்டுவால் முடிந்தது அவ்வளவே என நாம்தாம் மனதை தேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது :)


நன்றி : ஆயில்யன்

Ayyanar Viswanath said...

தமிழன்
doing , Happening

இரண்டிற்குமான வித்தியாசங்கள் மிக அதிகம். செய்தல்,நிகழ்தல் இரண்டும் வெவ்வேறானது..இந்த செய்தலில் துருத்தியிருக்கும் தன்முனைப்பு நிகழ்தலில் காணாமல் போகலாம்..நாம் செய்யவேண்டியதெல்லாம் செய்தலிலிருந்து நிகழ்தலுக்கு நகர்வதே

பிகு:
அண்ணன் என்றெல்லாம் விளித்து வயசைக் கூட்டாதீங்கோ :)

Ayyanar Viswanath said...

கிருத்திகா
இலகுத் தன்மை நோக்கிய நகர்வுகள்தான் இதெல்லாமே என நம்புவோம்..

கார்த்திக் : நன்றி

anujanya said...

நல்ல பதிவு அய்யனார். நிறைய யோசிக்க வைக்கிறது. இரண்டு கவிதைகளும் அழகு என்றாலும், முயல் அதிகமாகப் பிடிக்கிறது. செய்தலிலிருந்து நிகழ்தல் நிலைக்கு சென்று வேடிக்கை பார்த்தல் என்பது தினசரியின் பிடியிலிருந்து தப்பினாலும், ஒரு வித சுயநலம் அதிலும் இருப்பதுபோல் தோன்றுகிறது. செய்தலின் சுயநலங்கள் அற்பமானவை; வேடிக்கை பார்ப்பதில் நிம்மதியுடன் பெரும் சுயநலமும் உள்ளது போல் தோன்றுவது பிழையா?

அனுஜன்யா

தமிழன்-கறுப்பி... said...

அய்யனார் said...
\\\
தமிழன்
doing , Happening

இரண்டிற்குமான வித்தியாசங்கள் மிக அதிகம். செய்தல்,நிகழ்தல் இரண்டும் வெவ்வேறானது..இந்த செய்தலில் துருத்தியிருக்கும் தன்முனைப்பு நிகழ்தலில் காணாமல் போகலாம்..நாம் செய்யவேண்டியதெல்லாம் செய்தலிலிருந்து நிகழ்தலுக்கு நகர்வதே
///

நிச்சயமாய் அண்ணன்...

தன்முனைப்பற்றவர்களுக்கு அல்லது தனிமையில் மகிழ்ச்சியாய் இருக்கத் தெரிந்தவர்களுக்கு அந்த அவசியமிருக்காது என்பது என் எண்ணம்...
இங்கே தனிமையில் மகிழ்ச்சியாயிருத்தல் என்பது பகிர்வதற்ம் கொடுப்பதற்கும் நம்மிடம் ஏதாவது இருப்பதாகிய மகிழ்ச்சியை குறிக்கும்...

மற்றபடி செய்தல் நிகழ்தல் இரண்டிற்குமான வேறுபாடு அதிகம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்...

பி .கு: நான் இங்கே அண்ணன் என்று விழித்தது நிகழ்தல் என்று கருதிக்கொள்க...நிகழ்தல் இனி நமக்கடையில் பல உறவு முறைகளை உருவாக்கலாம் :)

லேகா said...

//அடையாளங்களை அழித்தல் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்(இதை எழுவது எத்தனை அபத்தமானது!)ஏதோ ஒன்று தன்னை மீறி வளர்ந்து நிற்கும்போது அதன் வளர்ச்சி, ஆகிருதி, அல்லது பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட அதன் உருவம் பயம்கொள்ளச் செய்கிறது//

நிதர்சனமான வார்த்தைகள்..நம்மை அறியாது நம்முள் வந்த அடையாளங்களை விட்டு விலகுதலோ அதை முற்றிலுமாய் அளிப்பதோ எளிதல்ல..வேண்டாத பட்சத்தில் அளிப்பதில் தவறில்லை.கணினி யுகம் வளர்ந்து எங்கோ சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் மதத்தின் அடையாளங்கள் கொண்டு திரியும் மானிடர்களை பார்க்கும் பொழுது எனக்கும் அடையாளங்களை அழித்தல் குறித்து தீவிரமாய் யோசிக்க தோன்றும்.இங்கு மத அடையாளம் என கூறி இருப்பது ஒரு எடுத்துக்காட்டே.

//உன் கோபம்
எரிச்சல்
மகிழ்வு
சிரிப்பு
கிண்டல் அழுகை
என உணர்வுகளுக்கேற்றார்போல்
பூனைக்குட்டிகளின் முகங்கள்
வந்து வந்து போகின்றன//
பூனை காதல் அழகாய் உள்ளது!!

Ayyanar Viswanath said...

அனுஜன்யா : பிழையென்றெல்லாம் எதுவுமில்லை.நமது புரிதலின் அளவு விரிவடைய விரிவடைய நாம் இந்த வேடிக்கைபார்த்தலை செதுக்கிக் கொள்ளலாம்.ஆரம்பத்தில் அப்படித் தோன்றுவது இயல்புதான் ..

நன்றி...

நன்றி தமிழன்

Ayyanar Viswanath said...

நன்றி லேகா இந்த அடையாளங்களைப் பற்றி பேசும்போது அந்த life circle ஐ எழுத மறந்துவிட்டேன்..அதையும் எழுதியிருந்தால் கச்சிதமாக இருந்திருக்கலாம்.

Featured Post

test

 test