Thursday, October 28, 2010

அத்தியாயம் 2அ. விஜி என்றான விஜயலட்சுமி

சிறுவர்களின் ‘ஹோ’ என்ற கூச்சல்தான் என்னை எழுப்பியது. இன்று விடுமுறை தினம். சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து கும்பலாய் வந்து பெரும்பாலான ‘பார்’களை மொய்த்திருப்பார்கள். சனி ஞாயிறுகளில் எங்கேயுமே போக முடிவதில்லை. எழவே சலிப்பாகவிருந்தது. இந்த விஜயலட்சுமி வேறு துரத்தியடிக்கிறாள். அவளின் திரண்ட வாளிப்பான உடலை நினைத்துக் கொண்டேன். அடுத்த நான்கு மாதத்தை சுவாரசியமாக நகர்த்த நிச்சயம் உதவியாய் இருப்பாள்தான். ஆனாலும் லேசாய் பயமாய் இருந்தது. ஆபத்து எந்த வடிவில் வந்தாலும் எதிர் கொள்ளும் துணிச்சலுக்கு தயார் செய்யப்பட்டிருந்தாலும், பெண் எப்போதுமெனக்கு அச்சத்தைத்தான் தருகிறாள். ஒரு பெண்ணின் ஆழமான பார்வையைக் கூட என்னால் எப்போதுமே தாங்கிக் கொள்ள முடிந்ததில்லை. பெண்களுடன் தங்க நேரந்த இரவுகளில் பெரும்பாலும் பாதியில் ஓடிவந்துவிடுவேன். உச்சத்தினுக்குப் பிறகு பெண் ஒரு வஸ்துதான். எந்த ஆர்வமுமில்லாத உடல்தான். பெண்ணுடலை முழுதாய் பார்க்ககூட என்னால் எப்போதும் முடிந்ததில்லை.

ஒரு முறை கோவா தாஜ் ஓட்டலுக்கு பணி நிமித்தமாகச் சென்றிருந்தேன். கொழுத்த பண முதலை ஒருவனை எவருக்கும் தெரியாமல் தீர்த்துக் கட்ட வேண்டும். இம்மாதிரி விஷயங்கள் மிகச் சுலபமானவை. கொழுத்தப் பணக்காரர்கள் பெரும்பாலும் மந்த புத்தி கொண்டவர்கள்தாம். மேலும் அவன் அதே ஓட்டலில் ஒரு வாரம் தங்கியிருந்தான். ஒரு வார கால அவகாசம் எனக்குப் போதுமானதாக இருந்தது. மரணம் இயற்கையாய் நிகழ்ந்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது கட்டாயமாக இருந்ததால் அவனுடைய உணவில் தினம் சில மில்லி மென் விஷத்தைக் கலந்து விடுவதுதான் திட்டம். ஏற்கனவே நான் பணிபுரியும் நிறுவனம் சரியான விஷத்தை வாங்கித் தந்திருந்தது. உணவைக் கொண்டுச் செல்லும் பணியாளர்களில் ஒருவனும் வாங்கப்பட்டிருந்தான். என் வேலை எல்லாமும் சரியாக நடக்கிறதா என்பதைக் கண்கானிப்பதும், திட்டம் பாழாகிவிட்டால் வேறு வழியை விரைந்து பயன்படுத்துவதும்தான். எல்லாமும் சரியாக நடந்து கொண்டிருந்தது. அங்கு தங்கியிருந்த ஒரு வார காலத்தில் இரஷ்யப் பெண்ணொருத்தி அறிமுகமானாள்.

ஒரு நாள் மதிய வாக்கில் நீச்சல் குளத்தின் அருகே போடப்பட்டிருந்த சாய்வு இருக்கையில் படுத்தபடி, அட்டை தெரியும்படி, படித்துக் கொண்டிருந்த ஆங்கில தஸ்தாயெவ்ஸ்கியைப் பார்த்து வந்து அறிமுகப் படுத்திக் கொண்டாள். பேச்சின் சுவாரசியம் முற்றி அவளின் அறைக்குச் சென்று பேசிக் கொண்டிருந்தோம். அப்ஸல்யூட் வோட்காவில் துவங்கி, அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கி வரை எங்களிருவருக்குமான அலைவரிசை ஒன்றாகத்தான் இருந்தது. ஒரு அரசியல்வாதிக்கு கம்பெனி கொடுக்க அழைக்கப்பட்டிருக்கிறாள். கடைசி நேரத்தில் அரசியல்வாதி ஓய்வெடுக்க வரும் தேதி தள்ளிப்போனதால் அவன் வரும்வரை ஓட்டலில் காத்திருப்பதாகச் சொன்னாள். புத்தகங்கள், கதாபாத்திரங்கள், திரைப்படங்களோடு போதையும் சேர்ந்து கொள்ளவே இருவரின் புத்திசாலி நடிப்புகளை தூக்கி தூர எறிந்து விட்டு முத்தங்களிலிருந்து துவங்கினோம். எதற்காக இதுவரை நடித்துக் கொண்டிருந்தோமோ அதன் மூல நாடகத்தினை ஒப்பேற்ற ஆரம்பித்தோம்.


இந்தியப் பெண்களைத் தவிர்த்து வேறு தேசத்துப் பெண்களின் உடல்களும், அணுகுமுறைகளும் எனக்குப் பழக்கமில்லாததால் அவளின் ஆர்வமும், ஈடுபாடும், முனகல்களும் மிகப் பெரும் கிளர்ச்சியாக இருந்தன. அவள் என் உதடுகளைச் சப்பியபடி நாவினை என் வாயினுள் விட்டுத் துழாவிக் கொண்டிருந்தாள். ஒரு கையை இடுப்பில் சேர்த்து அணைத்தபடியும் மறு கையினால் குறியைத் தடவிக் கொடுத்தபடிமாய் இருந்தாள். இருவரின் உடலும் நுழைப்புக்காய் தயாரானபோது ஏற்கனவே அரை நிர்வாணமாயிருந்த அவள் தன் உள்ளாடைகளை கழற்றி எறிந்து முழு நிர்வாணமானாள். வெள்ளை வெளேரென வழுவழு உடலைப் பார்க்க லேசாய் அதிர்ச்சியாய் இருந்தது. அவள் மந்தகாசப் புன்னகையுடன் என் குறியைத் தடவிக் கொண்டே வேகமாய் உடைகளைக் கழற்ற ஆரம்பித்தாள். கூச்சத்தில் நெளிந்தேன். என்னை வலுக்கட்டாயமாய் துகிலுரிந்தாள். ‘கட்டிலில் உடைகளோடு நாங்கள் படுப்பதில்லை’ என சாதாரணமாகச் சொன்னாள். அவளது கச்சித உடலின் மிகப்பெரும் வசீகரம், குடித்திருந்த போதையுடன் சேர்ந்து கொண்டது. ஆதிக் கிளர்வுகள் பொங்க வன்மமாய் அவளுடன் கலவி கொண்டேன். முன்புறம் முடிந்ததும், புட்டம் தூக்கி பின்புறம் நுழைக்கச் சொன்னாள். இல்லை கெஞ்சினாள். நான் ஏற்கனவே களைப்படைந்திருந்தேன். அவசரத்தில் உறையை வேறு மறந்தது தொலைத்திருக்கிறேன். நோய் குறித்த பயம் ஏற்கனவே முள்ளாய் தைக்க ஆரம்பித்திருந்தது. போதும் என்றபடி ஆடைகளை அணியத் துவங்கினேன். அவள் கோபமுற்றாள். கட்டிலின் குறுக்கில் கால்களை அகல விரித்துப் படுத்தபடி பிளந்திருந்த யோனியினுள் வலக்கையின் நான்கு விரலை திணித்துக் கொண்டு முன் பின் இயக்கியபடியே “இந்த விசயத்தில் இந்தியர்கள் சோதாப் பயலுகள்” எனக் கடுமையாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள். என்னை அவமானம் பிடுங்கித் தின்றது. கால்களில் பூட்ஸ்களைப் பொருத்திக் கொண்டிருந்தபோது “அவ்வளவுதானா உன் வீரம் மை டியர் இந்தியன் இண்டலக்சுவல்?” எனக் கத்தினாள். ஒன்றும் பேசாது கதவை அறைந்து சாத்திவிட்டு என் அறைக்குள் வந்து ஒடுங்கிக் கொண்டேன். அவமானம் பொங்கிப் பெருக்கெடுத்து ஓட அவளின் அறையில் நிகழ்ந்த சம்பவங்களை மீண்டும் நினைவில் கொண்டு வந்தேன்.

பாதி பிதுங்கிய முலைகளும், பாவாடை ஏறின தொடைகளும்தான் இதுநாள் வரை எனக்குக் கிளர்ச்சியாக இருந்திருக்கிறது. முழு உடலைக் காணும் போது ஏன் அதிர்ந்து போகிறேன்? காமம் ஏன் மூளையிலிருந்து முழுவதுமாக உடலின் இயக்கத்தினுக்கு கடத்தப்படவில்லை? தமிழ் சினிமாக்கள், வெகு சனப் பத்திரிக்கைகள், மலையாள பிட்டுகள், இணையம் முழுக்க விரவியிருக்கும் காமத் தளங்கள் போன்றவைகளெல்லாம் இத்தகைய என் மனச் சிக்கலுக்கு ஒரு காரணியாய் இருந்திருக்கலாம். அத்தோடு எல்லாவற்றையும் பாதி திறந்து, பாதி மூடி வைக்கும் தமிழ் சூழலும், வாழ்க்கை முறையும் கூட ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். மிகுந்த ஆயாசமாக உணர்ந்தேன். இவளே கடைசிப் பெண்ணாக இருக்கட்டும் என முடிவெடுத்ததும் லேசாய் மனம் இளகினாற் போலிருந்தது. கீழிறங்கி தள்ளாட்டத்துடன் பாருக்குப் போய் எழ முடியாத அளவிற்கு குடித்துவிட்டு அங்கிருந்த மேசையிலேயே தூங்கிப் போனேன்.

அந்த இரஷ்யப் பெண்ணிற்குப் பிறகு விஜயலட்சுமிதான் என்னை அசைத்துப் பார்த்திருக்கிறாள். இடைப்பட்ட இந்த ஒரு வருடத்தில் எந்தப் பெண்ணையுமே நான் சந்திக்கவில்லை அல்லது சந்திக்க மெனக்கெடவில்லை. ஒரு பெண்ணுடன் பேசிப்பழகித்தொட்டுமுத்தமிட்டு ஒரு வருடம் ஆகிறது என்பதே இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. நான் விஜயலட்சுமியை நெருங்க உடல் ரீதியாய் இந்த ஒரு காரணமே போதுமானதாக இருந்திருக்கக் கூடும். மேலும் அந்த இரவில் அவளை இன்னொருத்தனுடன் பார்த்திருந்ததால் அநாவசிய செண்டிமெண்டுகளுக்கு இடமிருக்காது என்ற நிம்மதியான எண்ணமும் வந்து போனது. தொடர்ந்து இரண்டு மாதங்களாய் பகற் பொழுதுகளை பாரில் கழிப்பது சலிப்பாய் இருந்தது. இன்றிலிருந்து வேறு மாதிரி இருந்து பார்ப்போம் என முடிவெடுத்தேன். கிட்டத்தட்ட எல்லா சனிக்கிழமை காலைகளிலும் இப்படி முடிவெடுத்து திங்கட்கிழமை மாற்றிக்கொள்வதும் வழக்கமாகிவிட்டது.

குளித்து விட்டு உடைகளை மாற்றிக் கொண்டு வெளியில் வந்தேன். கதவை வேண்டுமென்றே அறைந்து சாத்தினேன். அடுத்த நொடி பக்கத்துப் போர்ஷன் திறந்தது. விஜயலட்சுமி ஈரம் காயாத கூந்தலில் ஒரு டவலைச் சுற்றியபடி வெளியில் வந்தாள். நீல நிறக் காட்டன் புடவையும் அதே நிறத்தில் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். ஜாக்கெட்டில் அங்கங்கு ஈரம் திட்டுத் திட்டாய் தெரிந்தது. இறுக்கமான அவளின் ப்ரா, முலைகளை இன்னும் இறுக்கி அசாதாரண அழகைத் தந்தது. இவள் பேரழகிதான் என நினைத்துக் கொண்டேன். விஜயலட்சுமி புன்னகைத்தபடி பேசத் துவங்கினாள்.

“நீங்க இவ்ளோ நாள் பக்கத்தில இருந்தும் ஒரு காபி சாப்ட கூட கூப்டல.. உங்கள பாக்கிரதே அதிசயமாதான் இருக்கும்.. நானும் பகல்ல வேலைக்கு போய்டறனா.. பேசிக்கவே முடியாம போய்டுச்சி.. வீட்டுக்கு வாங்களேன்” என்றாள்.
“நான் இன்னொரு தரம் வர்ரேன். உங்க அம்மாவிற்கு உடல் நிலை சரியானதும்” என்றேன்.

உதடுகளும் கண்களும் ஒரு சேர “பரவால்ல வாங்க என்றாள்.

அவள் வீட்டினுள் நுழைந்தேன். என் பொந்தை நகலெடுத்த அதே மாதிரியான எலிப் பொந்துதான். வரவேற்பு பொந்தில் அழுக்கான சோபா இருந்தது. அமரச் சொன்னாள். பச்சை வண்ணம் அடித்து உதிர்ந்துபோன இரும்பு மேசையின் மீது டிவி வைக்கப் பட்டிருந்தது. படுக்கையறைக்கு ஒரு பச்சை நிற திரைச்சீலை, டிவிக்கு பின்னாலிருந்த சன்னலுக்கும் அதே நிற திரைச்சீலை. சோபாவில் அமர்பவர்கள் தரிசிக்கும் படி கருப்பு வெள்ளை போட்டோ ஒன்று எதிர் சுவற்றில் மாட்டப் பட்டிருந்தது. “என் அப்பா” எனப் புன்னகைத்தாள். காலையிலேயே அந்தப் புகைப்படத்திற்கு மல்லிகை மாலை சாத்தப்பட்டு, சட்டகத்தின் ஓரத்தில் ஒற்றை ஊதுபத்தி சொருகப்பட்டிருந்து. இரும்பு மேசையின் மேல் அரை முழம் மல்லிகை மீதமிருந்தது. சைக்கிள் பிராண்ட் ஊதுபத்தி மணம், மல்லிகைப் பூவின் காலை நேர அடர்த்தியான வாசம், தலையில் ஈரத் துண்டு சுற்றிய, பெரிய கண்களைக் கொண்ட பேரழகியின் புன்னகைப் பேச்சு, இவையெல்லாமும் இதற்கு முன் அனுபவித்திராத ஒரு விசித்திரக் கிளர்ச்சியைத் தந்தது. அவள் என் கண்களை நேராய் பார்த்துப் பேசிக் கொண்டிருப்பதும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவள் இன்னொருவனுடன் புரண்டதை நான் பார்த்துவிட்டேன் என்கிற அச்சம் சிறிதளவும் அவள் கண்களில் இல்லை. ஒருவேளை அன்று இரவு மாடிக்கு வந்தது வேறு யாராவதாய் இருக்கலாம் என நம்புகிறாளா எனவும் புரியவில்லை. அழகான பெண்களிடம் இயல்பாகவே ஒரு தன்னம்பிக்கை இருக்கிறது. அது இவளிடம் அபாரமாய் இருந்தது.

காபியைத் தந்தபடியே “டிபன் சாப்டீங்களா?” என்றாள்.இல்லை இனிமேல்தான் என்றதற்கு
“அப்ப இங்கயே சாப்டுங்க.. காபி இப்ப வேணாம்..சாப்டுட்டு குடிங்க..” என்றபடியே என் கையிலிருந்த காபி டம்ளரை பிடுங்காத குறையாய் வாங்கிக் கொண்டாள். சமையலறைக்குப் போய் எவர்சில்வர் தட்டில் நான்கு இட்லிகளை வைத்து ஓரமாய் தேங்காய் சட்னி வைத்து கையில் கொடுத்தாள். சற்று இறுக்கமாகவே அதை சாப்பிட்டு முடித்தேன். தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். “தட்லயே கை கழுவிக்கிங்க” என்றபடி தட்டைப் பிடித்துக் கொண்டாள். இன்னும் அதிக கூச்சத்துடன் அதிலேயே கை கழுவிக் கொண்டேன். இதெல்லாம் எனக்கு பழக்கமில்லாதது. என் அம்மாவோடு வாழ்ந்த சொற்ப வருடங்கள் நினைவில் வந்தன. அவளுக்குப் பிறகு வேறெந்த பெண்ணும் எனக்கு உணவு பரிமாறியதாய் நினைவில்லை. சில உணவு விடுதிகளில், மது விடுதிகளில் பெண்கள் பரிமாறியிருந்தாலும். இதுவும் அதுவும் வெவ்வேறு.

சாப்பிட்டு முடித்த பின் சற்று ஆசுவாசமாய் உணர்ந்தேன். காபிக் குடித்தபடியே ஆஸ்பிடல் சென்று வந்தாயா எனக் கேட்டேன். போய் அம்மாவிற்கு காலை ஆகாரம் கொடுத்து விட்டு வந்துதான் குளித்ததாகச் சொன்னாள். அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை.

“நான் கிளம்புரேன் இட்லி நல்லாருந்தது”
“இன்னிக்கு ஒரு நாள் குடிக்கப் போகாம இருக்க முடியுமா”?
“நான் குடிக்கதான் போறேன்னு யார் சொன்னா?”
“நீங்கதான்”
புன்னகைத்துக் கொண்டேன்.
“அதுவும் இல்லாம நீங்க திரும்பி வரும்போது லேசான ஒரு தள்ளாட்டம் இருக்கும்… அதுல தெரிஞ்சிடும்... இந்த ஊர்லயே பொறந்து வளர்ந்ததாலயோ என்னவோ.. அதிக குடிகாரங்கள பாத்தாச்சு.. என் அப்பா, தம்பி எல்லாரும் குடிக்கிறவங்கதான்.. அப்படி அதுல என்ன இருக்குன்னு தெரில.. நான் உங்கள ஒண்ணு கேட்கட்டுமா?”
“ம்ம் கேளுங்க”
“எதுக்காக குடிக்கிறீங்க?”
“மத்தவங்க எதுக்காக குடிக்கிறாங்கன்னு தெரியாது. ஆனா எனக்கு பொழுது போகல அதுனால குடிக்கிறேன்.”
விஜயலட்சுமி சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தது நன்றாக இருந்தது. இடது கையை வாய் மீது வைத்து சிரிப்பை அடக்கிக் கொண்டாள்
“நெஜமாவா சொல்றீங்க யாராவது பொழுது போகலன்னு குடிப்பாங்களா?”
“நெஜம்தான்”
“அப்ப நான் ஒரு ஐடியா சொல்ரேன்.. உங்களுக்கு எப்பலாம் போரடிக்குதோ சொல்லுங்க.. அப்ப நான் வந்து பேசிட்டிருக்கேன்... சரியா… என்னோட பேச பிடிச்சிருக்கா?... இல்ல நானும் போரடிக்கிறானா?...
நான் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தேன்.
“நீங்க பாக்க ரொம்ப சாப்டா இருக்கிங்க... அதிராம பேசுறீங்க... கூச்ச சுபாவம் வேர... இவ்ளோ நல்லவரா இருந்துட்டு ஏன் குடிக்கிறீங்க? வெளில சொல்ல முடியாத பிரச்சின ஏதோ உங்களுக்கு இருக்கு…. ஏதாச்சும் லவ் பெய்லியரா?...”
“அப்படிலாம் எதுவும் இல்ல விஜயலட்சுமி நான் சும்மாதான் குடிக்கிறேன். வேர ஏதாவது வேல இருந்தா அதப் பாக்க போய்டுவேன். இப்ப எதுவும் இல்ல அதனாலதான்…”

“நீங்க விஜின்னும் கூப்டலாம்… விஜயலட்சுமின்னு சிரமப்பட வேணாம்… சரி அப்ப நான் ஒரு வேல சொல்லவா?”
“ம்”
“இங்க பக்கத்துல தவள குப்பம்னு ஒரு கிராமம் இருக்கு.. அங்க ஆதரவற்ற குழந்தைங்க, வயசானவங்களுக்கு ஒரு ஆசிரமம் இருக்கு... நான் அங்கதான் வேல பாக்குரேன்… அங்க வாங்க, குழந்தைகளை பாத்திட்டிருந்தா நல்லா பொழுது போவும்..” என்றாள்.
“எனக்கு அதிலலாம் ஆர்வமில்ல விஜயலட்சுமி”
“அப்ப என்ன செஞ்சா உங்களுக்கு போரடிக்காது?”
“கடலுக்கு எதிர உட்கார்ந்துட்டு குடிச்சா போரடிக்காது” என்றேன்
அவளுக்கு முகம் லேசாய் சிவந்தது. முகத்தை சற்றுக் கடுமையாய் வைத்துக் கொண்டு
“சரி அப்ப போங்க” என்றாள்
நான் சிரித்துக் கொண்டேன். “நீ இப்ப என்ன பன்ர?”
அவள் முகம் முழுக்க பிரகாசமாய் “என்ன கேட்டீங்க?”
“நீ இப்ப என்ன பன்ர?”
“ஹப்பா! இது எவ்ளோ நல்லாருக்கு. சும்மாதான் இருக்கேன்.”
“இந்த ஊர்ல எங்க போகனும்னு ஆசைப்பட்டு போகாம இருக்க?”
“ம்ம்ம். தெர்லயே. அப்படிலாம் நான் எதுவும் ஆசப்படுரது இல்லயே”
“சரி இந்த ஊர்ல நல்ல இடம் எதுன்னு நினைக்கிற?”
“பீச். இல்லனா ஈடன் கார்டன்”
“அங்கலாம் வேணாம்…கிளம்பி கீழ வா!... லஞ்ச் இன்னிக்கு என்னோட சாப்டுர…”
“எங்க போறோம்?” றோமில் இளகின அவளின் குரல், கிளர்ச்சியின் உச்சம்.
“சொல்ரேன் வா”
“நான் அம்மாவுக்கு சாப்பாடு எடுத்துக்கரேன்.. அப்படியே கொடுத்திட்டு போய்டலாம்… ட்ரெஸ் மாத்திக்கவா?.. இல்ல இது ஓகேவா?.. என்றாள்
நான் சிரித்தபடியே
“இது நல்லாருக்கு. நீ எதிலயும் நல்லாதான் இருப்ப” என்றேன்.

அவள் வெட்கியபோது இதுநாள் வரைக்குமான என் வாழ்வில் அவளை விட ஒரு அழகான பெண்ணை சந்தித்திராத உண்மை எனக்குப் புலப்பட்டது.
ஓவியம் : Vladimir Weisberg
- மேலும்

3 comments:

Mohan said...

உங்கள் எழுத்தின் மூலமாக விஜயலட்சுமி கிறங்கடிக்கிறாங்க!அடுத்த பகுதிக்காக ஆவலுடன்!

கவிதா | Kavitha said...

ம் நல்லா இருக்குங்க.."விஜயலட்சுமி" :) நல்லா இருக்காங்க..:))

//காமம் ஏன் மூளையிலிருந்து முழுவதுமாக உடலின் இயக்கத்தினுக்கு கடத்தப்படவில்லை? தமிழ் சினிமாக்கள், வெகு சனப் பத்திரிக்கைகள், மலையாள பிட்டுகள், இணையம் முழுக்க விரவியிருக்கும் காமத் தளங்கள் போன்றவைகளெல்லாம் இத்தகைய என் மனச் சிக்கலுக்கு ஒரு காரணியாய் இருந்திருக்கலாம். அத்தோடு எல்லாவற்றையும் பாதி திறந்து, பாதி மூடி வைக்கும் தமிழ் சூழலும், வாழ்க்கை முறையும் கூட ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். மிகுந்த ஆயாசமாக உணர்ந்தேன்.//

அய்ஸ்..இதெல்லாம் எதற்கு? அப்போது உறையில்லை என்ற ஒன்று தான் காரணம் இல்லையா?

Ayyanar Viswanath said...

நன்றி மோகன்

கவிதா, அதுமட்டுமே காரணமல்ல. நிர்வாணத்தின் மீதிருக்கும் பயமும் களைப்பும்தான் பிரதானம். இந்தக் களைப்பிற்கான காரணமாகவே உளவியல் பிரச்சினையை தொட்டிருந்தேன். தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றி.

Featured Post

test

 test