Monday, November 1, 2010

அத்தியாயம் 3. தாமஸ் குணா மற்றும் சீராளன்

-------------------------------------------------------------------
இம்மாதிரியான வேலைகளுக்கு நான் பழகியிருக்கவில்லை. இந்தக் கண்ணுக்குத் தெரியாத நிறுவனத்தில் சேர்ந்ததிலிருந்து இன்று வரை மிகச் சாதாரணப் பணிகளே தரப்பட்டிருந்தன. பணியில் சேர்ந்த புதிதில் கத்தியைப் பிரயோகிக்க, துப்பாக்கியைப் பயன்படுத்த சொல்லித் தரப் பட்டிருந்தது. நானும் பழகியிருந்தேன் என்றாலும் நிஜத்தில் இம்மாதிரியான கடினமான வேலைகள் எதுவும் இதுவரை செய்ததில்லை. இந்தப் புதிர் வட்டத்தினுள் நுழையும்போதே எந்தக் காலகட்டத்திலும் இதிலிருந்து விலகி ஓட முடியாது என எனக்குத் தெரிந்துதான் இருந்தது. கிட்டத் தட்ட இந்தத் தொழிலொரு கண்ணி வெடிதான். செத்தால்தான் விடமுடியும் அல்லது விட்டால் செத்துப் போவோம்.

சராசரி வாழ்வில், கண்ணுக்குத் தெரியும் புத்திசாலித்தனமற்ற பிழைகள் மட்டுமே குற்றங்களாக முன் எடுத்துச் செல்லப்படுகின்றன. குற்றமென்பதும் நீதியென்பதும் ஊடகங்களால் கட்டமைக்கப்படும் மாபெரும் புனைவுகள்தானோ என்றெல்லாம் கூட சில நேரங்களில் நினைத்துக் கொள்வதுண்டு. எங்களுடைய செய்திகளற்ற உலகமும் செய்திகளை மட்டும் நம்பி வாழும் இதே உலகத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. மிகச் சுறுசுறுப்பாக, மிகப் புத்திசாலித்தனமாக, மிகமிகக் கொண்டாட்டமாக,நூறு சதவிகித பாதுகாப்பில்லாது எங்களின் வாழ்விருக்கிறது. செய்திகளின் உலகில் வசிக்கும் செல்வந்தர்களுக்கு செய்திகளற்ற நாங்கள் எல்லாவற்றையும் பரிசளிக்கிறோம். எல்லாவற்றையும் நிகழ்த்திக் காட்டுகிறோம். எங்களுக்கு நீதிகளோ அல்லது அடிப்படை நியதிகளோ எதுவும் இல்லை.

அப்பாஸ் கியராஸ்தமியின் படமொன்று நினைவுக்கு வருகிறது. ஒருவர் தன்னுடைய தற்கொலைக்கு உதவி செய்ய வேண்டி இன்னொரு மனிதனைத் தேடி படம் முழுக்க அலைந்து கொண்டிருப்பார். அவரை உயிரோடு மண்ணில் புதைக்க வேண்டுமென்கிற வேண்டுகோளைக் கேட்ட அனைவரும் பயந்து ஓடுவர். வாழ்வின் மீது நம்பிக்கையிழந்து தன்னை மாய்த்துக் கொள்ள் விரும்புபவர்களுக்கு உதவக் கூட சராசரி மனிதர்கள் அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு மரணத்தின் மீது மிகப் பெரும் பயமிருக்கிறது. எத்தனை மோசமானதாக இருந்தாலும் இந்த வாழ்வை கடைசி நாள் வரை வாழ்ந்துவிட பேராசை கொள்கின்றனர். எங்களுக்கான முதல் அடிப்படைப் பாடம் வாழ்வைத் துச்சமென மதிப்பதும் பயத்தைக் களைவதும்தான். எந்த ஒன்றின் மீதும் பற்றோ பயமோ இல்லாதபோது இன்னும் சுலபமாய் நம்மால் முடிவுகளை எடுக்கமுடியும். சுதந்திர மனம் என்பது துரிதங்களை நிகழ்த்திக் காட்டுவதற்கும், எதிர்பாராத சவால்களை எதிர் கொள்வதற்கும் மிக அத்தியாவசியம். எனக்கு பயங்கள் குறைவு. எனவேதான் இத் தொழிலில் இருக்கிறேன்.

வாழ்வின் மீதான ஆழமான காதல் கொண்டவர்களைக் கூட வாழ்லிருந்து துண்டிப்பதை நாங்கள் எவ்விதக் குற்ற உணர்வுமில்லாமல் செய்கிறோம். அழிப்பது சிவமென்றால், ஒவ்வொரு நிழல் மனிதனும் சிவம்தான் இல்லையா? இந்தச் சமூகம் மிகப் பாதுகாப்பாக இயங்குவதாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. அரசு, காவல் துறை, சட்டம், நீதி என பல்வேறு பெயர்களில் மனிதர்களின் வாழ்வு பத்திரப்படுத்தப் படுவதாகவும் சமூகத்தில் சம நீதி பரவலாய் எல்லாருக்கும் கிடைக்கக் கூடியதாய் இருப்பதாகவுமாய் நம்மைச் சுற்றியுள்ள அரசியல்வாதிகளால், எழுத்தாளர்களால், ஊடகவியலாலர்களால் , அதிகாரிகளால் நம்பவைக்கப் பட்டுள்ளது. அது சுத்தப் பொய். எந்த பாதுகாப்பையும் நொடியில் நிர்மூலமாக்கும் எங்களின் உலகம் இந்தப் பாதுகாப்புலகை சுற்றியேதான் கண்ணுக்குத் தெரியாமல் பின்னப்பட்டுள்ளது.

நான் இப்போதொரு பணக்கார, தடித்துச் சிவந்த நடுத்தர வயதுப் பெண்ணொருத்தியைக் கொல்ல வேண்டும். அவள் கழுத்தை என்னுடைய சட்டைப் பையிலேயே வைத்திருக்கும் சிசேரியன் கத்தி கொண்டு லேசாய் கீறினாள் போதுமானது. இரண்டு நிமிடத்தில் சாவு நிச்சயம். நான் இம்மாதிரிக் கத்திகளைப் பயன்படுத்த தயார் செய்யப்பட்டிருக்கிறேன். சும்மா ஒரு பாதுகாப்பினுக்காக சிறிய மினியேச்சர் ரக துப்பாக்கியினைக் கூட உள் ஜட்டிக்குள் வைத்திருக்கிறேன். இது நாள் வரை மிக மேலோட்டமான காரியங்களை மட்டுமே செய்து வந்திருக்கிறேன். பெரும்பாலும் சம்பவங்களுக்கான திட்டங்களை தீட்டுவது, ஆட்களை அமர்த்துவது, தகவல் தொடர்பு இப்படியான காரியங்கள்தாம். ஒரு விபத்து, இரண்டு விஷம் என சாந்த வழிகளின் மூலமே நான்கைந்து பேரைக் கொன்றிருக்கிறேன். சமீபமாய் எனக்கும் தலைமை நிர்வாகத்தினருக்கும் உறவு சரியில்லை. அதனால் இந்த மாதிரியான மாட்டிக் கொள்ளும் சிக்கலான வேலைக்கு அமர்த்தப்படுகிறேன். இந்த பெண்ணைக் கொன்றுவிட்டு எங்காவது சென்றுவிடலாம். இனிமேல் வருவதில்லை எனக் கூட தலைமைக்கு தகவல் அனுப்பிவிட நினைத்துக் கொண்டேன். ஆனால் அதற்குப் பின்பும் தொல்லைப் படுத்தாமல் இருப்பார்களா என்பது சந்தேகம்தாம். நான் எங்கு சென்றும் மறைந்த கொள்ள முடியாத மிகப்பெரிய அமைப்பு இது.

பகல் பதினோரு மணிக்கு அவளின் வீட்டிற்குள் நுழைய வேண்டும். தனி வீடுதான். சேல்ஸ் ரெப் தோரணை போதுமானது. ஆழமாய் மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டேன். அந்த புகைப்படத்திலிருந்த பெண்ணை ஒரு கடமையாக்கினேன். அவளின் கழுத்தறுப்பது என் வேலை என இரண்டு முறை சொல்லிக் கொண்டேன். தங்கியிருந்த ஓட்டலை விட்டு சாலைக்கு இறங்கி நடக்கத் துவங்கினேன். இந்த ஊரில் தங்குவது இதுவே முதல்முறை. ஆனால் இந்த ஊரின் வழியாக பல முறை பயணித்திருக்கிறேன். சேலம். சேலம் என்றால் என்னவென்று தெரியவில்லை. எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். பத்து மணிக்கே வெயில் மிகக் கடுமையாய் இருந்தது. நடைபாதையில் ஒரு மட்டரக தோளில் மாட்டக் கூடிய பை ஒன்றினையும் டை ஒன்றினையும் வாங்கிக் கொண்டேன். சாலையோரக் கக்கூஸில் நுழைந்து சட்டையை இன் செய்து டையைக் கட்டிக் கொண்டேன். எப்போதும் பூட்ஸ் அணியவேண்டுமென்பது நிர்வாகத்தின் நியதி. பார்க்க ஷூ மாதிரிதான் இருக்குமென்பதால் ஒரு சேல்ஸ் ரெப் தோரணை வந்துவிட்ட்தாகவே நினைத்துக் கொண்டேன்.

எம் ஆர் சி கல்யாண மண்டபத்தினுக்கு பின் புறம் 15 ஆம் இலக்க, மஞ்சள் வண்ணமடித்த, சிவப்பு இரும்பு கேட் கொண்ட வீடு. வந்து சேர்ந்தேன். நான் எதிர்பார்த்திருந்ததை விட மிகப்பெரிய ஜி ப்ளஸ் ஒன் வீடு. வாசலில் பதித்து வைக்கப்பட்ட பெயர் பலகையில் எஸ்விசி ஜுவல்லரி என எழுதப்பட்டிருந்தது. சேட்டுப் பெண் என்கிற எண்ணம் புகைப்படத்தை பார்த்தபோதே வந்தது. என் வாழ்நாளில் எந்த ஒரு மார்வாடிப் பெண்ணிடமும் பேசியது கூட இல்லை. வயிறை மொத்தமாய் காட்டியபடி முக்காடிட்ட சிவந்த பெண்களை என் சொந்த ஊரில் கடந்து போனதோடு சரி. பூட்டியிராத கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன். வாசலில் மிகப்பெரிய தேக்கு கதவு. அதற்கு முன் கம்பிகளாலான நுழைவு கேட்டு. நகைக் கடை நுழை வாயில்களைப் போன்றே வீடுகளையும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அழைப்பு மணியை அழுத்தினேன். சற்று நேரம் கழித்து ”கோஓன்? ” என்றபடியே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.

அவளின் தைரியமான தோற்றமும், சப்தக் குரலும் என்னை லேசாய் தடுமாற வைத்தது. விற்க வந்தவன் என்றால் பிராண்டி வெளியே துரத்திவிடுவாள். புருவத்தை உயர்த்தி என்ன? என சைகையால் கேட்டாள்.
”ஏசி மெயிண்டனன்ஸ் மேம்” என்றேன் பரிதாபமாக.
”நல்லா ஓடுதே. யார் கம்ப்ளைண்ட் பண்ணா? ”
”வாரண்டி மெயிண்டனன்ஸ் மேம்”
”வாங்கி நாலு வருஷம் ஆச்சே அப்புறம் என்ன வாரண்டி?”
’இல்ல மேம் நாங்க மேனுபேக்சரர்ஸ்.. எதாவது ட்ரபுள்ஸ் வருதான்னு எல்லா கஸ்டமர்கிட்டயும் சர்வே பண்னிட்டிருக்கோம்.”
”அதுலாம் ஒண்னும் இல்ல நல்லாருக்கு”
“ஒரே ஒரு அஞ்சு நிமிசம். பங்க்ஷன் செக் பண்ணிட்டு போயிடுரேன்”
லேசாய் முறைத்தபடியே கதவைத் திறந்தாள்.
“கெஸ்ட் வராங்க சீக்கிரம் கிளம்பிடனும்” என்றாள்.

சரி மேம் என்றபடியே பவ்யமாய் உள்ளே போனேன் ”ஏசி எங்க இருக்கு மேம்?” பெட்ரூம் என்றபடியே மாடிக்குக் கை காட்டினாள். பெட்ரூமில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்த கிங் சைஸ் கட்டிலை ஆக்ரமித்துப் படுத்திருந்தார். என்னைப் பார்த்து புன்னகைத்தார். வாட்சைப் பார்த்தார். ”சமையலறையிலேயே முடிச்சிடு” எனத் திரும்பிப் படுத்துக் கொண்டார். எனக்கு எந்த உணர்வுமே ஏற்படவில்லை. மெல்ல கீழிறங்கிப் போனேன் எனக்கு முதுகாட்டி கேஸ் ஸ்டவ்வில் எதையோ கிளறிக் கொண்டிருந்தாள். கத்தியை விரல்களுக்குள் வைத்து நீட்டிக் கொண்டேன். சத்தமில்லாது அருகில் போய் மேம் என்றேன். திக் என அவளின் உடல் தூக்கிப் போட திரும்பினாள். திரும்பும் இடைவெளியில் சரியாய் கழுத்து வாகில் கீறினேன். கத்தக் கூட இயலாது ஹீக் என வினோதமாய் முனகியபடி இரண்டு கைகளால் கழுத்தைப் பொத்தியபடியே கீழே விழுந்து துடித்தாள். வாசலில்அழைப்பு மணி அடித்தது.

சமயலறைக் கதவைச் சாத்தினேன். வரவழைத்தவன் இவளின் கணவன் என்பதால் சாதாரணமாகவே இருந்தேன். துடிக்கும் அவள் உடலில் சரிந்து கிடந்த தொப்பையின் மீது அழுத்தமான பூட்ஸ் காலை வைத்து அழுத்தினேன். உடல் அடங்க இரண்டு நிமிடங்கள் தேவைப்படும். சப்தம் வெளியில் கேட்காதிருக்க அவள் முகத்தினுக்காய் குனித்து வாய் பொத்தினேன். மூன்று நிமிடங்கள் கழித்து கதவைத் திறந்தேன். மேலே படுத்திருந்த மாமிச மலை மாடிப்படிக்கட்டுகளில் மல்லாக்க விழுந்து துடித்துக் கொண்டிருந்த்து. வலது பக்க கழுத்தில் ஆழக் கீறல் விழுந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. துடிக்கும் அவரின் நெஞ்சின் மீது காலை வைத்து அழுத்தியபடியே நான் வைத்திருக்கும் அதே சைஸ் மருத்துவ கத்தியின் இரத்தத்தை ஒருவன் துடைத்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து புன்னகைத்தேன். அவனும் புரிந்து சிரித்தான்.

”இவன் அனுப்பின ஆளா நீ?” என்றான்
”அதுலாம் தெரியாது”
”இவ வச்ச ஆளா நீ?” என்றேன்
”எனக்கும் தெரியாது” என சிரித்தான்.
”இந்த ஊர்ல ஏதாவது நல்ல பார் இருக்கா?” என்றேன்.
வா போலாம் என வீட்டின் முன் கதவை சாத்திவிட்டு பின் பக்க சுவர் எகிறி குதித்து வெளியேறினோம்.

சேலம் பேருந்து நிலையத்தினுக்கு சமீபமான ஒரு ஓட்டலின் குளிரூட்டப்பட்ட பாரில் அமர்ந்தோம். கும்பல் சிதறியிருந்தது.என்னைக் கேட்காமலேயே ஓல்ட் மங்க் என்றான். முதல் ரவுண்டை அவசரமாய் முடித்து விட்டு தொண்டையைக் கனைத்தபடியே
”என் பேரு தாமஸ்” என்றான். பெயரைச் சொன்னேன்.
”எத்தன வருசம் ஆச்சி?”
”எட்டு வருசம்”
”பார்க்க சின்ன வயசா இருக்க”
சிரித்தேன்
”எவ்ளோ தராங்க பீசுக்கு”
”பீஸ் ரேட் இல்ல அப்பப்ப அக்கவுண்ட்ல பணம் போடுவாங்க ஒரே ஊர்ல இருக்க கூடாதுங்கிறதுதான் கண்டிசன். சொந்தம் வீடு வாசல் எதுவும் எனக்கு கிடையாது. அப்படியே மேகம் மாதிரி மிதந்து போய்ட்டே இருக்கேன்” லேசாய் போதை ஏறி இருந்தது எனக்கு.

”நம்மள ரொம்ப மோசமா பயன்படுத்திக்கிறானுங்க இல்ல”
”ம்ம்ம். என்ன பன்ரது அதுக்கு? எனக்கும் போரடிச்சிருச்சிதான். ஆனா விடவும் முடியல”
தாமஸ் என் கண்களை ஆழமாய் பார்த்துக் கேட்டான்.
”சேர்ந்து பண்ணலாமா? மூணே வருசம் . ஓரளவுக்கு தேத்திகிட்டு வெளிநாடு போய்டலாம். திரும்பி வரவே வேணாம். என்ன சொல்ர? ”
“எனக்கு யாரையும் தெரியாதே”
”அத நான் பாத்துக்கரேன்”
”சரி. எங்க? எப்போ? எப்படி?”
”இத முடி கெளம்புவோம். மதுரைல கொஞ்ச நாள் உட்காரலாம். யோசிக்கலாம். அப்புறம் ஆரம்பிக்கலாம்.”
தாமஸ் யாருக்கோ தொலைபேசினான்
”குணா வண்டி இருக்கா?” …………
”நம்ம பார்லதான்”.……………
”பத்து நிமிசத்துல வா!” என்றபடியே வைத்தான்.

அரைப்புட்டியைக் குடித்திருந்தோம். இன்னொரு அரைப்புட்டியை வாங்கி பெப்சி பாட்டிலில் ஊற்றிக் கொண்டான். இருவருவரும் கீழே வந்தோம். வெள்ளை நிற சுமோ ஒன்று உரசுவது போல் அருகில் வந்தது. ஏறிக்க என்றபடியே தாமஸ் கதவைத் திறந்தான்.பின் சீட்டில் அமர்ந்து கொண்டோம்.
”யார் இவரு?” என்றான் குணா
”நம்மாளுதான் குணா. எடத்துக்கு போய் பேசிக்கலாம்” என்றான்
குணா வண்டியை விரட்டத் துவங்கினான்.

இருள் கவிய ஆரம்பித்திருந்த போது மதுரையை நெருங்கினோம். வண்டி ஒத்தக் கடையிலேயே வலது பக்கமாய் திரும்பி ஓடத் துவங்கியது. இந்தச் சாலை சக்கரத்தாழ்வார் கோயிலுக்கு செல்லும். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு இந்த வழியில் பயணித்திருக்கிறேன். மீண்டும் மண் சாலையில் இறங்கி, அடர்த்தியான இருளைக் கிழித்து வண்டி நகர்ந்தது. இரண்டு மூன்று குறுகலான வேலிக்காத்தான் முள் வளைவுகளுக்குப் பின் ஒரு தென்னந்தோப்பிற்குள் நின்றது. தாமஸ் தான் முதலில் இறங்கினான். ”இறங்கு பா” என்றபடியே நடக்க ஆரம்பித்தான். நான் அவனைத் தொடர்ந்தேன். குணா வண்டியைப் பூட்டி விட்டு என் பின்னால் வந்தான். இருள் அடர்ந்திருந்தது. சுற்றிலும் உயரமான தென்னை மரங்கள் இன்னும் அடர்த்தியான இருளுக்கு காரணமாயிருந்தன. தூரத்தில் ஒரு குண்டு பல்பு தனியே தொங்கிக் கொண்டிருந்தது. சற்று நெருங்க ஓட்டு வீடு ஒன்று புலப்பட்டது. எதுவும் பேசாமல் அதை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். திடீரென இருளில் சலசலப்புகள் கேட்டன. லேசான முனகல்களும் சிணுங்களும் வந்த திசையை நோக்கி தாமஸ் பற்களைக் கடித்தான். ”தாயோலி மவன் அடங்க மாட்டேங்குறானே.

“இந்த இருட்ல எவ டா வர்ரா” என்றான் குணாவைப் பார்த்து.
”சொன்னா அதிர்ச்சி ஆவ மாட்டியே”
”சொல்லு”
”ஓனரம்மா தான்” எனச் சொல்லி சிரித்தான்.
”தூ! கருமம் அந்த கெளவியயா.. நாறப் பய எவ கெடச்சாலும் விட மாட்டேன்குறான். ..கொல்டித் தாயோலி.. எப்பவும் கைல புடிச்சிட்டு திரியுரானே”
எனப் புலம்பிக் கொண்டே நகர்ந்தான். நான் சிரித்துக் கொண்டேன்.

பார்க்க சிறிய ஓட்டு வீடாக இருந்தாலும் சற்று விஸ்தாரமான கூடமும் படுக்கையறையும் உள்ளே இருந்தது. சமையல் செய்வதற்கும் தனியே ஒரு சுவர் தடுப்பிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் லுங்கியை தோளில் போட்டபடி சிவப்பு ஜட்டியுடன் சீராளன் வந்தான். ”எப்ப வந்தீங்க எல்லாம்” என இளித்தான். என்னைப் பார்த்து ”யாரு இவரு?” என்றதற்கு தாமஸ் பதில் சொல்லாமல் முறைத்துக் கொண்டிருந்தான். ”ரொம்ப கோச்சுக்காதன்னா” என கொஞ்சியபடியே ”இரு குளிச்சிட்டு வந்திடுரேன்” என வீட்டின் வலது புறமாய் சென்று இருளில் மறைந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் தொம் என கிணற்றில் நீர் சிதறும் சப்தம் கேட்டது. வீட்டிற்கு முன்பிருந்த சிமெண்ட் திண்ணையில் தாமஸ் அமர்ந்து கொண்டான். லேசாய் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

”இதான் நாங்க. நான், குணா, சீராளன் மூணு பேரையுமே தனித்தனி கும்பல்கள் பயன்படுத்திட்டிருக்கு. சீராளன் எப்பவோ வெளில வந்துட்டான். குணா போன மாசந்தான் வெளில வந்து ஒரு வண்டி வாங்கி ஓட்டிட்டு இருக்கான். நான் இன்னிக்கு பண்ணம் பார் இதோட வெளில வந்துட்டேன். இந்த மாதிரி ஒரு வீட்ட தேடி கண்டுபுடிச்சி தங்கிட்டிருக்கோம். அப்படியே பல யோசனைகள் எல்லாருக்கும் ஓடுது. உன் தொழில் சுத்தத்த பார்த்தேன். எங்களுக்கு சமமான ஆள்தான். ஒண்ணா இருக்கலாம்.”

எனக்கு இந்த இடம் பிடித்திருந்தது. இந்த சூழல் இந்த மூன்று பேர் என எல்லாமும் பிடித்திருந்தது. அடுத்த முறை என்னைத் தலைமை தொடர்பு கொள்ளும்போது சொல்லிவிட வேண்டியதுதான் என மனதில் நினைத்துக் கொண்டேன்.

”சரி தாமஸ் எனக்கு கொல பசி. ஏதாவது சாப்ட தா!” என்றேன்.

சீராளன் தலை துவட்டியபடி வந்தான். ”சாப்பாடு ரெடியா இருக்கு மதியம் ஏரிக்கு போய் உளுவையும் கொறவையும் புடிச்சிட்டு வந்தேன். வர்ர வழில ரெண்டு கொக்கையும் போட்டு எடுத்துட்டு வந்தேன். கொக்கு வறுவல், மீன் குழம்பு கோட்டர்தான் மிஸ்” என்றான் வருத்தமாக.

குணா உள்ளே போய் இரண்டு நெப்போலியன் முழு பாட்டிலை எடுத்து வந்தான். எதுவுமே மிஸ் ஆவுல இன்னிக்கு என சத்தமாய் சொல்லியபடிப் புன்னகைத்தான்.

நிலா மேலெழ ஆரம்பித்தது. தென்னை மரங்கள் மென்மையாய் கீற்றுகளை அசைக்கத் துவங்கின. வீட்டிற்கு முன்புறம் இருந்த சிமெண்ட் தளத்தில் வட்டமாய் அமர்ந்து கொண்டோம். எவெர்சில்வர் டம்ளரில் பாட்டிலை உடைத்து சமமாய் ஊற்ற ஆரம்பித்தான் தாமஸ். எளனி லேசா சேரு என்றான் குணா. பச்சை இளநீரை சீவித் தூவலாய் ஊற்றி பின்பு நீர் சேர்த்தான். நான்கு பேரும் பேசாமல் எடுத்துக் குடிக்க ஆரம்பித்தோம். குணா ஒரே கல்பில் அடித்து பட் டென டம்ளர் சப்தம் எழ கீழே வைத்தான். தாமஸ் அண்ணாந்து நீர் குடிப்பது போல இரண்டு முறை தொண்டையில் சரித்துக் கொண்டான். சீராளனும் நானும் மட்டும் ஒரு சிப் குடித்து விட்டு டம்ளரை கீழே வைத்தோம். குடிக்கும் முறை தான் மனிதர்களின் ரசிப்புத் தன்மையை வெளிப்படுத்துகிறது. குடித்த பின்பு அவனவன் குணத்தையும் குடி பிரதிபலிக்கிறது.

எனக்கு வயிறு கப கப வென எரிந்தது. சட்டியிலிருந்த கொக்குக் துண்டு ஒன்றினை எடுத்து எலும்பைக் கையினால் பிடித்தபடி சதையினை மென்றேன். வாய் எரியத் துவங்கியது. உள்ளங்காலிருந்து உச்சந்தலை வரைக்குமாய் காரம் பரவியது. தாங்க முடியாத காரம். உஸ் ஆ என சப்தமாய் வாயைத் திறந்து காற்றை ஊத ஆரம்பித்தேன். மூவரும் சிரித்தனர். ”இவன் ஆந்திரால இருந்து வந்து பத்து வருஷமாச்சி ஆனாலும் அதே காரத்தோடதான் சமைக்குரான், திங்குரான்... இவனால நாங்களும் காரத்த பழகிகிட்டோம்...சரக்க எடுத்து குடிங்க பாஸ்” என்றான் குணா. ஒரே மூச்சில் மீதி இருந்த பிராந்தியை காலி செய்தேன். இதுக்குதான் குடிக்கும்போது காரமா திங்குரது என சிரித்தான் தாமஸ். நான் இப்போது ஒரு நிலைக்கு வந்திருந்தேன். அடுத்த பீசை எடுத்து சாப்பிட்டேன். அபரிதமான ருசியாக இருந்தது. ”ரொம்ப நல்லாருக்கு” என்றேன் சிரித்தபடி. எல்லாரிடமும் இருந்த தயக்கம் லேசாய் விலகியிருந்தது. ”ஊத்துண்ணா” என்றான் குணா.

மிகக் குறைவான இந்த ஒளியில் தாமஸ் டம்ளர்களை வரிசையாக வைத்து ஒரு துளி கூட சிதறாமல் மதுவினைக் கலந்து கொண்டிருந்தது கவனம் பிசகாத ஓவியனை நினைவூட்டியது. டம்ளர்களில் மது ஊற்றும் சப்தத்தை மற்ற நாங்கள் மூவரும் கேட்டுக் கொண்டிருந்தோம். சமோவாரில் தேநீர் கொதிக்கும் சப்தம் கேட்டபடி தியானிக்கும் புத்த பிட்சுகளாக ஒரு கணம் எங்களை நினைத்துக் கொண்டேன். சிரிப்பு வந்தது. மொட்டையடித்து, காவி அங்கி அணிந்த பிட்சுகளாக மற்ற மூவரையும் கற்பனை செய்து பார்த்தபோது சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. என் கற்பனையை சொன்னேன்.

மூணு வருசத்துக்கு பின்னால புத்த பிட்சு என்ன புத்தனாக கூட மாறலாம்.ஆனா இப்ப இந்த மூணு வருசம் கொலகாரனுங்களாதான் திரியனும். என்றான் தாமஸ்.
பணம்தான் டார்கெட் னா ஏன் கொல பண்ணனும் தாமஸ்?. கொள்ளையடிக்கலாமே.
திருட்டு வேணாம். வேல செய்ஞ்சிதான் சம்பாதிக்கனும் அப்படிங்கிற அடிப்படை விசயம் ஒண்ணு இருக்கு. அத மீற முடியாது. அது எந்த வேலங்கிறதுலதாம் மீருரோம் என்றான் தாமஸ். சீராளனும் குணாவும் அதை ஆமோதித்தனர். திருடுவது மட்டும் வேலையில்லயா என நினைத்துக் கொண்டேன். வெளியில் சொல்லவில்லை.

”சரிதான். ஆனா எங்க ஆரம்பிக்க போறோம்.. யார் வேல தர போறா நம்மோட ரேட் என்ன? எங்க இருக்க போறோம்... இதுலாம் தெரியனும்.

அவசரமாய் சீராளன் சொன்னான். ”இருக்கப் போறது இங்கதான் இத விட நல்ல எடம் கெடச்சிட போவுதா என்ன?”

”கெளவி சாமானுக்கே இவ்ளோவா..என குணா சிரித்தபடியே அவன் தலையில் தட்டினான்.

”ஏஏ அதுலாம் ஒண்ணும் இல்ல. நல்ல காத்தோட்டமான மறைவான இடமா இருக்கிறதால சொல்ரேன். இந்த மாதிரிலாம் வேற எங்காயாச்சிம் ஃப்ரியா குடிக்க முடியுமா?”
”ஆமாண்டா உன்ன மாதிரி ஃப்ரியா காத்தோட்டமா காவா க்குள்ளலாம் கிளவியோட படுத்துப் புரள எவனாலயும் முடியாதுதான்”
”அட ஏம்பா திரும்ப திரும்ப அங்கியே வந்துட்டு. பாவம் அது. பத்து வருசமா சோப்ளாங்கி புருசனோட கெடந்து தவிச்சிருக்கு. நான் லேசா கண்ணதான் காட்னேன். எங்க கூப்டாலும் வருது.. என்ன சொன்னாலும் பண்ணுது... ரொம்ப நல்ல மாதிரிபா”
எல்லாருக்கும் நான்கு ரவுண்டு ஏறியிருந்தது. நான் தீவிரமாய் சீராளனிடம் சொன்னேன்.

”எங்க வேணா பொரளு. ஒண்ணும் பிரச்சின இல்ல. இவளுங்க இப்படித்தான் எங்க கூப்டாலும் வருவாளுங்க.. என்ன சொன்னாலும் பண்னுவாளுங்க.. நீயும் அதே உணர்வோட இருந்துக்கோ. எப்ப பிச்சிக்கனுமோ அப்ப பிச்சிக்க.... இந்த லவ்வு செண்டிமெண்டு இப்படி எதுலயும் வுழுந்திடாதே... பாசமா இருக்கான்னுலாம் வாழ்க்கய நாசம் பண்ணிக்காதே ...அப்புறம் வெளில வர்ரது கஷ்டமாய்டும்.”

”என்கிட்டயேவா பாஸ். எத்தன பொண்ண க்ராஸ் பண்னி வந்துறிக்கிங்க நீங்க? இப்ப பொரண்டு வந்தனே அவளோட சேர்த்து நாப்பது பேரோட படுத்திருக்கேன். இதுல பாதிக்கும் மேல இஷ்டப்பட்டு வந்ததுதான். உருகி உருகி காதலிச்சதுதான். என்னப் பொருத்தவர ஒழுக்கம், துரோகம் இந்த ரெண்டு வார்த்தைக்குமே அர்த்தம் இல்ல பாஸ். சந்தர்ப்பங்களும், தேவைகளும்தான் எல்லாத்துக்கும் பின்னால இருக்கு. என்னோட தேவய நீ தீர்.. உன்னோட தேவய நான் தீக்குரேன் அவ்ளோதான்.... எவ்ளோ நாள் இந்த உறவு போவுமோ, அவ்ளோ நாள் போவட்டும்... எப்ப முடிலயோ அவங்க அவுங்க வழிய பாத்துட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்... இதுல காதல்,புனிதம், ஒறவு , தோல்வி, துரோகம்,ஏமாற்றம் இப்படின்னுலாம் எந்த மசிரும் இல்ல..கையாலாக எல்லா பேமானிங்களும் இந்த மாதிரி வார்த்தைகள்லாம் தூவி என்னவோ ஒலகத்துல தாம் மட்டும்தான் நல்லவங்கிற மாதிரியும் மத்தவங்களாம் டுபாக்கூருங்க மாதிரியுமா தனக்குத் தானே நம்பிக்கிறாங்க. அப்படியொரு நம்பிக்கைலதான் இந்த ஒலகமே இயங்கிட்டிருக்கு. ஆனா நான் அப்படி நம்பல பாஸ். அஎன் யோக்கியத எனக்கு தெரியும்கிறதால மத்தவங்க யோக்கியதையப் பத்தி நான் நெனச்சதே இல்ல பாஸ்.

எனக்கு ஏதோ துலங்கியது போலிருந்தது. விஜயலட்சுமியின் மீது அன்பு பொங்கியது. என் வஞ்சிக்கப்பட்ட கழிவிரக்க மனநிலை ஓடிப்போனது. நான் எழுந்து சீராளனைக் கட்டிக் கொண்டேன். தேங்க் யூ சீராளா என அவனை இறுக்கி முத்தமிட்டேன்.

7 comments:

chandru / RVC said...

சன்னமாய் ஒரு சப்தம் கேட்கிறது. துரோகத்தின் நிழல் நாவலுக்குள் நுழையும் சப்தம் :(

Mohan said...

இந்தத் தொடர் மிகவும் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது!

கவிதா | Kavitha said...

இதற்கு முன் நீங்க கதைகள் எழுதி இருக்கீங்களான்னு எனக்கு தெரியல.. இப்பத்தான் உங்க கதையை முதன் முறையாக தொடர்ந்து படிக்கிறேன்.

அய்யனார் என்ற பெயர் முகவரியோட முகத்தை காட்டி, எந்த ஒரு இமேஜ் க்குள்ளும் நீங்கள் இல்லாமல் இப்படி ஒரு கதையை எழுதி வருவது ஆச்சரியமாக க்கூட இருக்கு.. :). இதை முதல் மற்றும் தொடர்ந்த பதிவுகளில் சொல்லனும்னு நினைத்தேன்... :))

நல்லா இருக்குங்க.. கதையை இந்த எபிசோட் ல கொஞ்சம் கெஸ் பண்ண முடியுது.. :)) பாக்கலாம் கதை அப்படித்தான் போகுதான்னு ..

வாழ்த்துக்கள்.. !

Anonymous said...

intha mari novel padichu romba nal achu ...thanks ayyanar

மதுரை சரவணன் said...

உள்ளேன்.. அய்யா சீக்கிரம்... முழுவதும் படித்து விடுகிறேன்..

நிகழ்காலத்தில்... said...

தொடரை முழுமையாக படித்துக்கொண்டு இருக்கிறேன்.

நாவலாக வரக்கூடிய தரத்தில் இருக்கிறது. நிச்சயம் வரும்

வாழ்த்துகள் நண்பரே

Anonymous said...

Fantastic! Subha(Suresh-Bala) and Pushpa Thangadurai combine forces to create this Master piece.

Featured Post

test

 test