Wednesday, December 8, 2010

நந்தலாலா- தனித்துவத்தின் பாடல்



தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள் என அறியப்பட்ட பெரும்பாலான படங்களுக்குச் சில பொதுத் தன்மைகள் இருக்கும். அழுத்தமான காட்சிகளின் மூலம் பார்வையாளர்களை கதறி அழ வைப்பது, எதிர்பார்த்திராத மிகப்பெரிய அதிர்ச்சியை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாத்திரங்கள் மூலமாய் ஏற்படுத்தி பார்வையாளர்களை ஒரு விதத் துயர மன நிலைக்குத் தள்ளுவது போன்றவைகள் சில உதாரணங்கள். சமீபத்தில் வெளிவந்து தமிழின் சிறந்த படங்களாக அறியப்பட்ட காதல்,பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம், அங்காடித் தெரு போன்ற படங்களும் இந்த பொது விதிகளுக்கு உட்பட்டுத்தான் தங்களின் இடங்களை அடையாளப்படுத்திக் கொண்டன. அத்துடன் இயக்குநரின் ஒட்டு மொத்த திறமையையும் வசனங்களின் மூலமோ, காட்சிகளின் மூலமோ, மொத்தமாய் கொட்டி படத்தின் சிறந்த கலைத் தன்மையை நிறுவிக் கொள்வதுதாம் வழக்கமானதாக இருந்து வந்திருக்கின்றது. இந்தப் பொதுத் தன்மை இந்திய அளவில் கூட பொருந்திப் போகலாம்.

சத்யஜித்ரேவிலிருந்து சமீபத்திய வசந்தபாலன் வரைக்குமாய் இந்திய சினிமாக்களில் சிறந்த படங்கள் என அறியப்பட்டவைகளில் பெரும்பாலானவை அழுகாச்சி படங்கள்தாம். மூளையிலிருக்கும் எல்லாவற்றையும் திரையில் பகிரங்கப்படுத்தி, ஒரு வித திணிக்கப்பட்ட கதை சொல்லல்கள்தாம் பெரும்பாலும் நம் திரையை நிறைத்து வந்திருக்கின்றன. இந்தப் பொதுத் தன்மையை நந்தலாலா உடைத்திருக்கிறது. அழுத்தத்தைக் கொண்டு வருகிறேன் பார் என்றெல்லாம் முக்கி முக்கி மெனக்கெடாமல் போகிற போக்கில் விசிறலாய் இந்தப் படம் ஏகப்பட்டக் கிளர்வுகளை,அழுத்தங்களை,நெகிழ்வுகளை,கரைவுகளை பார்வையாளரிடத்தில் கடத்திச் செல்கிறது. எல்லாவற்றையும் சொல்லி விடுவதன் அபத்தங்களிலிருந்துத் தப்பித்து நந்தலாலா மெளனத்தை இசைக்கிறது. சொல்லாமல் விடுவதன் இன்பத்தை நந்தலாலாவின் ஒவ்வொரு காட்சியிலும் உணர முடிகிறது. படம் பார்த்து முடித்த பின்பு அந்த மெளனம் நம்மையும் ஆக்ரமிக்கிறது.


மிஷ்கினின் திரைமொழி தமிழிற்கு மிகவும் புதிது. இதுவரைக்குமில்லாத புதியதொரு திரை பாணியை மிஷ்கின் தக்க வைத்திருக்கிறார். இவரின் திரை நாயகர்கள் பதட்டமானவர்கள். முரட்டுத்தனமும் கனிவும் நிரம்பியவர்கள். மிஷ்கினின் படங்களில் முகங்களை விட கால்கள் பிரதானமானவை. செவ்வியல் நாடகத் தன்மையும், போலி பாவனைகளிலிருந்து தப்பித்து நேரடியாய் இதயத்தோடு பேசும் வசன உத்தியும் மிஷ்கினின் தனித் தன்மைகள். இவரின் மூன்று படங்களும் மெல்லியதொரு பதட்டத்தை, அலைவை ஒவ்வொரு காட்சியிலும் தக்க வைத்திருக்கின்றன. ஒரு வித சிலிர்ப்பு மன நிலையை மிஷ்கினின் சித்திரம் பேசுதடியும் அஞ்சாதேவும் எனக்குப் பரிசாகத் தந்தன. நந்தலாலா இந்தப் பதட்டங்களிலிருந்து மீண்டு நிறைவை அடைந்திருக்கிறது. தனித் தன்மைகள் நிறைந்த ஒரு படத்தை உருவாக்குதென்பது மிகவும் கடினமானது. தனக்கான ஒரு பாணியை, திரை மொழியை தக்க வைத்துக் கொண்டவர்கள் நம் சூழலில் வெகு சிலரே. அந்த வெகு சிலரின் பட்டியலில் மிஷ்கினும் இணைகிறார்.

அகிரா குரசோவாவின் பெரும்பாலான படங்களில் அற உணர்வும், மனித நேயமும், அன்பும், கருணையும் மேலோங்கி இருக்கும். ஆனால் எதையும் வெளிப்படையாக காட்சிப்படுத்தியிருக்க மாட்டார். துருத்திக் கொண்டிருக்கும் எந்த ஒரு பிரச்சார வசனங்களும், அழுத்தக் காட்சிகளும் இவரது படங்களில் கிடையாது. இவரது கதாபாத்திரங்கள் அன்பையும் அறத்தையும் இயல்பான ஒரு விஷயமாகக் கொண்டிருக்கும். எனக்குப் பிடித்த அகிராவின் கதாபாத்திரங்கள் சிலவற்றை யோசிக்கும்போது உடனடியாய் நினைவுக்கு வருபவையாக Madadayo படத்தின் விரிவுரையாளர், Dersu Uzala படத்தில் வரும் நாடோடி வேட்டைக்காரன், The Lower Depths படத்தில் வரும் துறவி கதாபாத்திரங்களைச் சொல்லலாம். நேய உணர்வை படம் முழுக்க பயணிக்கும் ஒரு துணைக் கதாபாத்திரமாகவே அகிரா மாற்றிவிடுவார். Red Beard டாக்டர் பாத்திரத்திலிருந்து இடியட் மிஷ்கின் பாத்திரம் வரைக்குமாய் அறம்தான் அகிராவின் முக்கியமான பேசுபொருளாக அவரின் படங்கள் முழுக்கப் பயணித்து வந்திருக்கிறது

அகிராவிற்கு அடுத்தபடியாய் மிஷ்கினின் படங்கள் இதே தளத்தில் இயங்குகின்றன. நாடகத் தன்மையும் உணர்வெழுச்சியும் மிகுந்த கதாபாத்திரங்கள், திடீரென அதற்கு நேர்மாறாய் அமைதித் தன்மைக்கு திரும்பும் வினை மாற்றங்கள் எல்லாம் அகிராவின் படங்களில் மட்டுமே நிகழ்ந்து வந்த அற்புதம். பூனை வளர்க்கும் Madadayo படத்தின் பேராசிரியர் கதாபாத்திரத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். வாழ்வின் மேலான நிலை, கீழான நிலை என எல்லாவற்றையும் புன்னகையோடும் அன்போடும் கடக்கும் பேராசிரியர் தான் வளர்த்த பூனை காணாமல் போனபின்பு அடம்பிடிக்கும் சிறுவன் மன நிலைக்குத் தாவிவிடுவார். இம்மாதிரியான வினோத அகிரா கதாபாத்திரங்களின் ஒட்டு மொத்த சாரமாகவே பாஸ்கர் மணி கதாபாத்திரம் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. இந்தக் கதாபாத்திரத்தின் வலிமையை உணர்வுபூர்வமாக வேறு எவராலும் புரிந்து கொள்ள முடியாது (அகிராவின் தீவிர இரசிகர்களைத் தவிர) என்கிற சிக்கல் இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும்போது மிஷ்கினுக்கு தோன்றியிருக்கலாம். அதன் நிமித்தமாகவே இந்தக் கதாபாத்திரத்தில் மிஷ்கினே நடித்திருக்கலாம். ஒரு வகையில் இந்த முடிவு பாராட்டப்பட வேண்டியது. வேறு எந்தத் தொழில் முறை நடிகராலும் பாஸ்கர் மணி கதாபாத்திரத்தை சிறப்பாய் செய்திருக்க முடியாது.

நந்தலாலாவின் அடிநாதம் வெகு எளிமையான ஆனால் ஒட்டுமொத்த கிழக்குச் சித்தாந்தத்தின் சாரமாய் இருக்க கூடிய நிலைப்பாடுதாம். அது அன்பை வெளியே தேட வேண்டியதில்லை என்பதுதாம். இதுநாள் வரைக்குமாய் அன்பை நாம் எப்படிப் புரிந்து வந்திருக்கிறோம்? உறவுகளின் வழியே நாம் பெறுவதுதாம் அன்பா? பிற மனிதர்களிடமிருந்து பெறுவது மட்டும்தான் அன்பா? நமக்கே நமக்காய் இருப்பது மட்டும்தான் அன்பா? என்பன போன்ற அடிப்படைக் கேள்விகளை வெவ்வேறு நிகழ்வுகளின் மூலமாய் இத்திரைப்படம் தொடர்ச்சியாய் எழுப்புகிறது. இறுதியில் வேறு எவரிடமிருந்தும் பெற்றுவிடமுடியாத, இதற்காகத்தான் இது என்கிற கொடுக்கல் வாங்கல் பிணைப்பில்லாத, தன்னுள் மட்டுமே முழுமையாய் நிறைந்திருக்கும் பேரமைதிதான் அன்பு என்பதை எல்லாரும் உணர்ந்து கொள்வதாய் இந்தப் படம்/பயணம் நிறைவடையும். தமிழில் இம்மாதிரியான ஒரு தளத்தில் வேறு ஏதாவது முயற்சிகள் நடந்திருக்கிறதா? என்றால் சின்னத் தயக்கத்தோடு இல்லை என்றுதான் சொல்ல முடிகிறது. இந்தப் படத்தில் சொல்லப்பட்டதை விட சொல்லப்படாதவைகள் ஏராளம். அந்த சொல்லப்படாதவைகளைப் புரிந்துகொள்ள அங்கங்கே சிறுசிறு பாதைகளை இந்தப் படம் உருவாக்கியிருக்கிறது. அந்தப் பாதைகளின் வழியை தொடரும்போது ஏற்படும் உணர்விற்குப் பெயர் பிரம்மிப்பாகத்தான் இருக்க முடியும்.

நந்தலாலா படம் முழுக்க சின்ன சின்னதாய் ஏகப்பட்ட நுட்பங்கள் விரவிக் கிடக்கின்றன. இத்தனைச் சிக்கனமாய் ஒரு படைப்பைச் செதுக்கியிருக்கும் மிஷ்கினின் அறிதல் மீது அன்பு பெருக்கெடுக்கிறது. பாஸ்கர் மணி சுவற்றில் கோடு கிழித்தபடியே நடப்பதன் மூலமாய் ஆதூரமான ஒரு பிடிமாணத்திற்காய் ஏங்கித் தவிக்கும் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது. அறிமுகக் காட்சியில் கவனமாகவும், தன் தாயைச் சுமந்தபடி வெளியேறும் காட்சியில் அநிச்சையாகவும் இந்தச் சுவர் கோடு காட்சி பதியப்பட்டிருக்கிறது. மிஷ்கின் வேறோ அவரது தாய் வேறோ அல்ல. சொல்லப்போனால் இந்தப் படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுமே ஒன்றுதான். தன் தாயின் சாயல்களை பாலியல் தொழிலாளியிடம் வெறித்தனமாய் தேடும் கிழவன் உட்பட அனைவரும் ஒன்றைத்தான் முன் வைக்கிறார்கள். அது அவர்களுக்குக் கிடைக்காமல் போன அன்பாகத்தான் இருக்கிறது. இந்தப் படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் அன்பிற்காய் ஏங்குகின்றனர். இவர்கள் அனைவருமே வாழ்வின் பெரும்பாலான நாட்களை தனிமையில் கழிக்க சபிக்கப் பட்டவர்களாய் இருந்திருக்கிறார்கள். யாராவது ஒருத்தர் அன்பின் சிறு பொறியைத் திறந்து காண்பித்தாலும் உடைந்து போகக் கூடியவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் அனைவருமே இந்த முயற்சியில் தோல்வியடைகிறார்கள். ‘நொண்டி’ ‘மெண்டல்’ என்கிற வார்த்தைகள் மட்டுமே இவர்களைச் சிதைக்கப் போதுமானதாய் இருக்கிறது.


கிழவனின் முரட்டுத் தடி ‘திம்’ ‘திம்’ என அதிர்ந்தபடி எல்லோரையும் ஒரு கட்டத்தில் தாக்குகிறது. ஏற்கனவே கைவிடப் பட்டவர்கள் இன்னும் செயலிழந்து போகிறார்கள். எல்லாம் உடைந்து அழ ஆரம்பிக்கும்போது மழை எல்லா நாற்றத்தையும் கழுவி விடும் என நம்புகிறார்கள்.ஒரு நிறைமாத தாய் பாம்பு கைவிடப்பட்டவர்களின் தலைப் பக்கமாய் ஊர்ந்து செல்கிறது. வயிற்றுக்குள் குட்டிப் பாம்போடு அது மிகப் பெரும் நம்பிக்கையையும் சுமந்தபடி ஊர்ந்து செல்கிறது. இருத்தலின் அழகை இத்தனைக் கச்சிதமாய் இந்திய சினிமாவில் நாம் பார்த்திருக்க முடியாது. படம் முழுக்க ஒன்றிலிருந்து இன்னொன்றுக்காய் கதாபாத்திரங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். பயணம் என்பது கதை நிகழும் தளமாக மட்டும் இல்லாமல் அகமும் புறமுமாய் பயணம் நிகழ்ந்தபடியிருக்கிறது. இறுதியில் வண்ண பலூன்களை சுமந்தபடி பாஸ்கர்மணி சேர்ந்த இருவரைக் கடந்து போகிறான். நாம் மெளனத்திற்குப் போகிறோம்.

2

கிக்கிஜீரோவை அட்டைக் காப்பி அடித்துவிட்டார்கள் என துப்பறியும் சாம்புக்களும், விமர்சன அதிபுத்திசாலிகளும் கண்டுபிடித்திருக்கிறார்கள். திருடன், திமிர்பிடித்தவன், ஆணாதிக்கவாதி என்றெல்லாம் கூட மிஷ்கினுக்குப் பல பட்டங்களை இணையத்தில் வாரி வழங்கியிருக்கிறார்கள். கிக்கிஜீரோதான் என்று நீ ஏன் ஆரம்பத்திலேயே ஒத்துக் கொள்ளவில்லை? இப்போது ஒப்புக்கொண்டாயா சரி, பிறகு ஏன் டைடில் கார்டில் கதை கிடானோ எனப் போடவில்லை? இப்படி மாறி மாறிக் கேள்விகளால் நம்மவர்கள் துளைத்தெடுக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் சொல்லக் கூடிய ஒரே சரியான பதில் “ஆம் அது அப்படித்தான் நண்பர்களே!” என்பதுதாம். இருப்பினும் நான் புரிந்து கொண்ட வரையில் இந்தக் காப்பிக் களங்கத்திற்கு ‘சப்பை’ கட்ட முயற்சிக்கிறேன்.

அகிரா குரசோவாவையும், கிடானோவையும் தன்னுடைய மானசீக குருமார்கள் என்கிறார் மிஷ்கின். இவர்களின் படங்களின் மூலமாய்த்தான் மிஷ்கின் தனக்கான திரைமொழியைக் கண்டறிந்திருக்கிறார் என்பதை ஆரம்ப நிலை உலகப்பட பார்வையாளர்களால் கூட அனுமானித்து விட முடியும். தமிழ் சினிமாவின் ‘பிரம்மா’ கே.பாலச்சந்தர் சமீபத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார். “ஒரு காட்சி என்பது ஆரம்பம், நிகழ்வு, முடிவு என எல்லாவற்றையும் கொண்டிருக்க வேண்டும் அப்படி இருந்தால்தான் அது அது சிறந்த படமாக முடியும்” நல்ல கருத்துதான். இப்படிச் சம்பிரதாயமாக எந்த ஒரு புண்ணாக்குமே இல்லாமல் காட்சிகளை உருவாக்கும் தமிழ் சினிமா சூழலில் ஏதாவது இருக்க வேண்டும் என அறிவுறுத்துவது நியாயமானதுதான். இம்மாதிரியான ஒண்ணாங் க்ளாஸ் தமிழ் சூழலில் மிஷ்கின் அடைந்திருக்கும் உயரத்தை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது கடினமானதுதான்.

மிஷ்கினின் திரைமொழி ஒரு காட்சியின் முடிவையும் இன்னொரு காட்சியின் முடிவையும் இணைக்கிறது. அதாவது அடுத்தடுத்த இரண்டு காட்சிகளின் முடிவை மட்டுமே மிஷ்கின் நமக்குப் பார்க்கக் கொடுக்கிறார். ஆரம்பத்தையும் நிகழ்வையும் வெட்டி எறிந்து விடுகிறார். இந்த உத்தியை மிஷ்கின் அஞ்சாதே படத்திலும் கச்சிதமாகப் பயன்படுத்தி இருப்பார். (நரேன் முதல் நாள் வேலைக்குப் போய் திரும்பி வரும் இரவுக் காட்சியை நினைவுபடுத்திப் பாருங்கள்) கிடானோ கிக்கிஜீரோவை முழுக்க இந்த பாணியில்தான் இயக்கியிருப்பார். நந்தலாலாவிற்கான சிறுவனை மிஷ்கின் கிக்கிஜீரோவில் கண்டுபிடித்திருக்க வேண்டும். அந்த ஒற்றுமைதான் இரண்டு படங்களையும் இணைக்கிறதே தவிர இரண்டு படங்களின் அடிநாதமும் வெவ்வேறு. கிக்கிஜீரோ வை இந்தப் படம் பல மடங்கு தாண்டியிருக்கிறது என்பதுதான் என் பார்வையாக இருக்கிறது.

உதாரணத்திற்கு லாரி ட்ரைவர் கதாபாத்திரத்தை எடுத்துக் கொள்ளலாம். சாலைப் பயணத்தை களமாகக் கொண்ட கதையில் லாரியையோ, லாரி ட்ரைவரையோ தவிர்க்க முடியாது. இதையெல்லாம் காப்பி என்றால் தமிழ் சினிமா ‘புத்திசாலி’ப் பார்வையாளனை ஒன்றுமே செய்ய இயலாததுதான். கிக்கிஜீரோ லாரி ஓட்டுநரும் நந்தலாலா லாரி ஓட்டுநரும் எந்த அளவிற்கு நுட்பமாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என யோசித்துப் பார்த்தாலே இரண்டு படங்களுக்குமான வித்தியாசம் புரிந்து விடும். நந்தலாலா கதாபாத்திரங்களில் என்னை மிகவும் நெகிழ வைத்த பாத்திரமாக இந்த லாரி ஓட்டுனர் இருக்கிறார். வலிமையான உடல் கொண்ட ஓட்டுநர், ஹாரனைத் திருடியதற்காக பாஸ்கர் மணியை அடி அடியென அடிப்பார். அப்படியே சாலையில் மடங்கி உட்கார்ந்து அழ ஆரம்பிக்கும் பாஸ்கர் மணியின் இயலாமை ஓட்டுநரை கலங்கடித்து விடும். பாடலின் பின்னணியில் அடுத்தடுத்து வரும் காட்சிகள் மனித நேயத்தின் உச்சம். இம்மாதிரியான ஒரு காட்சியைக் கூட கிக்கிஜீரோவில் பார்க்க முடியாது.

சிட்டி ஆஃப் காட் படத்தின் காப்பி புதுப்பேட்டை, பை சைக்கிள் தீஃப் படத்தின் காப்பி பொல்லாதவன், இன் டு த வைல்ட் படத்தின் காப்பி கற்றது தமிழ் என்பது மாதிரியான பயங்கரமான கண்டுபிடிப்புகளை நம்மவர்கள் தொடர்ச்சியாய் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் நல்ல படங்கள் வரத் துவங்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இன்னும் தம்முடைய ஒலக சினிமா அறிவை பகிரங்கப்படுத்திக் கொண்டிராமல் ஆரோக்கியமான/ உருப்படியான விமர்சனங்களை விமர்சகர்கள் முன் வைக்க வேண்டும். காப்பி என்கிற விஷயம் அயோக்கியத்தனமானதுதான். அடுத்தவரின் உழைப்பைச் சுரண்டும் எல்லா வழிகளும் அடைக்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் எது காப்பி? எது ஒரிஜினல்? என்கிற தெளிவு நம்மவரிடையே வளர்த்தெடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

17 comments:

Anonymous said...

தோ... வந்துட்டாருடா

Mohan said...

உங்கள் விமர்சனம் எப்பவும் போல் மிகவும் அருமையாக இருந்தது. காப்பியையைப் பற்றி நீங்கள் கூறியது சாட்டையடி!

ராம்ஜி_யாஹூ said...

சமரச வாதியாக நீங்களும் மாறி வருவது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

Ashok D said...

:)

jayaramprakash said...

அதெல்லாம் இருக்கட்டும் எட்டாவது அத்தியாயம் எப்ப போடறதா உத்தேசம்.

கென் said...

விமர்சனம் அருமை புலி

Baski.. said...

திரைமொழியின் அடிப்படை தெரியாதவர்களால் மட்டுமே நந்தலாலா காப்பி என்று சொல்ல முடியும். நல்ல விமர்சனம் அய்யனார்.

rajasundararajan said...

//தன் தாயின் சாயல்களை பாலியல் தொழிலாளியிடம் வெறித்தனமாய் தேடும் கிழவன் உட்பட அனைவரும் ஒன்றைத்தான் முன் வைக்கிறார்கள். அது அவர்களுக்குக் கிடைக்காமல் போன அன்பாகத்தான் இருக்கிறது.//

அன்பு. ஆமாம் அதுவே தாய்மை தந்தைமை காதன்மை என்றெல்லாம் கிளைவிரிக்கிறது.

பொறுப்போடு கூடிய விமர்சனம். வாழ்க!

sakthi said...

அருமையான விமர்சனம் அய்ஸ்!!!

தமிழ்த்திரையுலகில் தனித்துவம் மிக்க படம்!!!

பிரபாகர் said...

இரண்டு படங்களையும் பார்த்தேன்... நீங்கள் கூறியிருப்பதுபோல் தான் நானும் உணர்ந்தேன்...

தாக்கம் இருக்கிறது, அப்படியே தழுவலாய் இல்லை...

அனுபவிச்சி எழுதியிருக்கீங்க!...

பிரபாகர்...

Unknown said...

இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது எனக்குள்... ராஜாவின் உணர்ச்சி ரிங்காரம்!!

"நந்தலாலா" அருமையான படம்!


"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com

சசிகுமார் said...

நீங்கள் இளையராஜாவை பற்றி சொல்லாதது என் உட்பட பல பேருக்கு வருத்தம் . உண்மையில் சொன்னால் கிகுஜுரோவை விட இந்த படத்தில் நல்ல இசை .

Unknown said...

நந்தலாலா அருமையான படம்.உங்களின் விமர்சனமும் அருமை..

ரோகிணிசிவா said...

kavithai pola padathiriku kavithaiyaai oru vimarsanum

காமராஜ் said...

உண்மையில் ஆர அமர உட்கர்ந்து பேசித்தீர்த்தமாதிரி இருக்கிறது . சில விஷயங்கள் புதிதாகவும் சில புதிர்கள் விடைகளாகவும் இருக்கு. நல்ல விவரணை அய்யனார்.வாழ்த்துக்கள் அய்யனார்.

Swami said...

ungal vimarsanam attagasam. uyirppana isaiyai patri oru vari ezhuthi irukkalam.thelivana parvaikku en vannakkam.

லதாமகன் said...

நீங்கள் கூறியிருப்பதுபோல் தான் நானும் உணர்ந்தேன்..நல்ல விமர்சனம் அய்யனார். :)

Featured Post

test

 test