Thursday, December 16, 2010

கரிசனமும் யதார்த்த இம்சையும் - துபாய் திரைப்பட விழா


ஏழாவது சர்வதேசத் திரைப்பட விழா துபாயில்கடந்த பனிரெண்டாம் தேதி துவங்கி வரும் பத்தொன்பதாம் தேதி வரை நடைபெறுகிறது. 57 நாடுகளிலிருந்து 153 படங்கள் திரையிடப்படுகின்றன. 127 hours, the kings speech போன்ற புதிய படங்கள் நேரடியாய் திரையிடப்படுகின்றன. இந்தியப் படங்களாக நம் ஊரிலிருந்து மைனா திரையிடப்படுகிறது. மலையாளத்தில் நயன் தாரா நடிப்பில், ஒரே கடல் இயக்குனர் ஷ்யாம் பிரசாத் இயக்கத்தில் எலெக்ட்ரா, இந்தியில் அபர்ணா சென்னின் இயக்கத்தில் An Unfinished Letter போன்றவை திரையிடப்படுகின்றன.

திரைப்பட விழாக்களில் நான் பெரும்பாலும் ஆங்கிலப் படங்களையும் எளிதில் பார்க்க முடிகிற படங்களையும் தவிர்த்து விடுவேன். புதிய பிரதேசங்களின் வாழ்வையும் கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ள உதவும் படங்களை பார்ப்பதற்கே விருப்பமாக இருக்கும். அரேபிய குறும்படங்கள், அரேபிய – பிரான்சு, அரேபிய - ஆப்பிரிக்க கலாச்சார தழுவல்களில் உருவாக்கப்படும் படங்களின் மூலம் மிகவும் புதிய நிலப் பிரதேசங்களின் வாழ்வைத் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் நேற்று மாலை MIN YE ( Tell me Who you are) என்கிற ஆப்பிரிக்கத் திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன். ஆப்பிரிக்காவின் மாலி பிரதேசத்திலிருந்து வந்திருக்கும் படமிது. இப்படத்தின் இயக்குனர் Souleymane Cisse ஏற்கனவே சர்வதேச அளவில் கவனம் பெற்றவர். கான் திரைப்பட விழாவில் சிறந்த வெளி நாட்டுப் படங்களுக்கான பிரிவில் இவரது முந்தைய இரண்டு படங்கள் தேர்வாகி இருக்கின்றன. MIN YE ( Who you are) எனும் இந்தப் படம் ஆப்பிரிக்க இஸ்லாம் சூழலில் இயங்கும் மத்தியதர வர்க்க குடும்பங்களின் கதையைப் பேசுகிறது. மதம், கலாச்சாரம் இவைகள் பெண்களுக்கு தரும் மன ரீதியிலான அழுத்தங்களையும் அதிலிருந்து மீள விரும்பும் பெண்களின் விருப்பத்தையும் இப்படம் களமாகக் கொண்டிருக்கிறது, அவ்விருப்பங்களின் தோல்வி எவ்வாறு பொய்களாகவும் துரோகங்களாகவும் வடிவம் கொள்கின்றன என்பதையும் இந்தப் படம் பதிவு செய்திருக்கிறது.
இந்தப் பகுதிகளில் ஆண்கள் வசதிக் கேற்ப நிறைய பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். சட்டமும் மதமும் அதற்குப் பூரணமாய் சுதந்திரம் அளிக்கிறது. கணவனை வேறொரு பெண்ணிடம் பகிர்ந்து கொள்ள விரும்பாத பெண்களின் அகப் போராட்டங்களையும் இப்படம் பதிவு செய்திருக்கிறது. உயர் கல்வி பயின்று நல்ல பதவியில் இருக்கும் பெண்களும் இந்த இரண்டாம் /மூன்றாம் தார சிக்கலிலிருந்து தப்ப முடியாது. மருத்துவம் பயின்று நல்லதொரு பணியில் இருக்கும் மிமி என்கிற கதாபாத்திரத்தின் மூலமாய் பெண்களின் ஆசைகள், இயலாமைகள், துரோகங்கள் என எல்லா நிலைகளும் மிக யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சமூகத்தின் கட்டுப்பாடுகள் இவைகளுக்கான பின்புலமாய் இருக்கின்றன என்பதுதாம் மறைபொருளாக படத்தில் பேசப்படுகிறது.

படத்தில் மனதைத் தொடும் எந்த ஒரு விஷயமும் கிடையாது. அடூர் கோபால கிருஷ்ணன்களை விட படு மோசமான திரையாக்கம். படம் முழுக்க தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பாணியில்தான் இயக்கப்பட்டிருந்தது. சினிமா மொழி, திரைக்கதை யுக்தி, பார்வையாளனை கட்டிப் போடுதல் போன்ற எந்த மெனக்கெடலும் திரைப்படத்தில் இல்லை. மேலதிகமாய் படத்தில் எந்த விதமான அரசியல் தன்மையும் இல்லை. ஆனாலும் இந்தப் படம் நேரடியாய் மக்களின் வாழ்வைப் பேசுகிறது. ஒரு சாதாரண குடும்பக் கதை. அதை யதார்த்தமாகவும் சிக்கனமாகவும் படமாக்கி இருக்கிறார்கள். நடிகர்களின் முழு நடிப்புத் திறமைதான் படத்தின் சிலாகிக்கும் அம்சமாக இருக்கிறது. மிகவும் பின் தங்கிய பிரதேசங்களில் இருந்து திரைப்படங்கள் இப்படித்தான் படமாக்கப்படுகின்றன. அவர்கள் எந்த ஜோடனைகளையும் நம்புவதில்லை. மாறாய் தங்களின் கலாச்சார சிக்கல்களை, வாழ்வின் இயலாமைகளை, கொண்டாட்டங்களை ஓரளவு நேர்மையுடன் பதிவு செய்து விட முனைகிறார்கள்.

இந்திய சூழலில் பத்து, இருபது வருடங்களுக்கு முன்னால் கலைப்படங்கள் இப்படித்தான் வந்தன. கேமராவை கொண்டு போய் ஒரு இடத்தில் வைத்துவிட்டு இயக்குனரும் கேமிராமேனும் டீ குடிக்கப் போய்விட்டார்களா? என அஞ்சும் காட்சியமைப்புகள்தாம் இந்திய சினிமாக்களில் நிறைந்திருக்கின்றன. இம்மாதிரியான அயர வைக்கும் காட்சிகளுக்குப் பெயர் போனவர் அடூர் கோபாலகிருஷ்ணன். சமீபமாய் அவரது நிழல் குத்து படம் பார்த்து, அயர்ந்தேன். கதை மிகவும் முக்கியமானதுதான். எவரும் தொடத் தயங்கும் தளம்தான். இருப்பினும் அதை யதார்த்தமாய் பதிவு செய்வதாய் சொல்லி அயர வைப்பதுதான் யதார்த்த சினிமாக்களின் தோல்வியாக இருக்கிறது. உதாரணத்திற்கு நிழல் குத்து படத்திலிருந்து ஒரு காட்சியைப் பார்ப்போம். தூரத்திலிருந்து புள்ளியாய் ஒரு மாட்டு வண்டி தெரியும். மெல்ல அவ்வண்டி கேமரா வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி வரும் வரும் வரும் வரும்.. கேமிரா அசையாது ஒரே கோணத்தில் இருக்கும். பொழுதும் போகும்.. போகும்... அதிலிருந்து மூவர் இறங்குவர். இருள் மெல்லக் கவிய ஆரம்பிக்கும். ராந்தல் விளக்கைப் பொருத்துவர். பின்பு மெல்ல இருளுக்காய் நடக்க ஆரம்பிப்பர். கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் கேமிரா ஒரே இடத்தில் அசையாது இருக்கும். சில நேரங்களில் கொட்டாவியோடு கொலை வெறியும் சேர்ந்து கொள்ளும் அளவிற்கு இந்த யதார்த்தத்தை நம்மவர்கள் சாறு பிழிந்திருக்கிறார்கள். தூய சினிமா என்பது இதுவல்ல. சினிமாத் தொழில் நுட்பம் வளர்ந்திராத கருப்பு வெள்ளை காலகட்டங்களிலேயே பிரெஞ்சு புதிய அலை சினிமாக்கள் காட்சி மொழியின் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. சொல்லப்போனால் ஃபெலினி இயக்கிய 8 ½ திரைப்படத்தைப் போலவெல்லாம் இன்னொரு திரைப்படத்தை உருவாக்கிவிட முடியுமா? என்பது சந்தேகம்தான்.

திரையிடலுக்குப் பின்பு இயக்குனருடன் அரங்கத்திலேயே குழுவாக உரையாட முடிந்தது. திரைப்பட விழாக்களில் இருக்கும் சிறப்பு அம்சமாக இந்த ஒரு நிகழ்வைச் சொல்லலாம். படத்தின் இயக்குனர் அல்லது நடிகர்களுடன் படம் பார்த்து முடித்த பின்பு அத்திரைப்படம் எழுப்பும் கேள்விகளை பகிர்ந்து கொள்வது நல்லதொரு அனுபவமாக இருக்கும். சில நேரங்களில் இந்த உரையாடல்கள் படத்தையே வேறு மாதிரி புரிந்து கொள்ள உதவும். இன்னொரு வகையில் இந்த உரையாடல்கள் நம்முடைய சொந்த அனுபவத்தை பாதித்து விடவும் கூடும். சமீபத்தில் அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் அபுதாபியில் நடந்த திரைப்பட விழாவில் சில படங்களைப் பார்த்தேன்.


ப்ரேசிலிலிருந்து I travel because I have to, I come back because I love you என்றொரு படம் பார்த்தேன். படம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. படத்தின் பிரதான கதாபாத்திரம் கேமராதான். படம் முழுக்க ஒருவனின் கண்கள் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கும். வெறுமனே குரல் ஒன்று, விடாமல் பேசிக் கொண்டிருக்கும். மனைவியை விட்டுப் பிரிந்து ப்ரேசிலின் வறண்ட பிரதேங்களில் மண் ஆய்வு செல்லும் ஒருவன் ஒவ்வொரு நாளையும் எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை. மிகக் கவித்துவமான உரையாடல்கள், கவிதைகள், காட்சி மொழிகள் என படம் மிக நல்லதொரு அனுபவமாக இருந்ததது. கிட்டத்தட்ட ஒரு நல்ல நாவலை வாசித்து முடித்த திருப்தியை படத்தின் பின்னணியில் ஒலிக்கும் குரல் தந்திருந்தது. படம் முடிந்த பின்பு இயக்குனர் இப்படத்தைப் பற்றித் தந்த தகவல்கள் கிட்டத்தட்ட படத்தையே வெறுக்க வைத்து விட்டது. முதலில் இது ஒரு திரைப்படமே அல்ல. பத்து வருடங்களுக்கு முன்னால் இயக்குனர் ப்ரேசிலின் வறண்ட பகுதிகளை ஒரு டாக்குமெண்டரியாக எடுக்க வேண்டுமென விரும்பியிருக்கிறார். அப்பிரதேசங்களுக்கு பயணித்து மனிதர்கள் குடிபெயர்ந்து போன வெற்றிடப் பகுதிகளை கேமிராவில் பதிவு செய்திருக்கிறார். இடையில் அந்த டாக்குமெண்டரி முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது. சமீபமாய் எங்கிருந்தோ இதை மீண்டும் தோண்டியெடுத்து காட்சிகளுக்கு பின்னணியாய் கதை ஒன்றை எழுதி கதைக்குச் சம்பந்தமாய் ஓரிரு காட்சிகளை மட்டும் எடுத்திருக்கிறார்கள். எடிட்டிங்கை கவனமாய் செய்து முடித்ததும் இதோ ஒரு திரைப்படம் தயாராகிவிட்டிருக்கிறது. இது ஒரு well made movie அவ்வளவுதான் என அவர் சிரித்துக் கொண்டே சொன்னபோது எனக்கு அதுவரைக்கும் இருந்த உற்சாக மனநிலை காணாமல் போனது.

ஆனால் இந்த Tell me Who you are படம் பார்த்து விட்டு உரையாடியது மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஆப்பிரிக்காவின் மாலி போன்ற பிரதேசங்களில் பெண்களின் வாழ்வு எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு இயக்குனர் தந்த பதில் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பெண்கள் அதிகம் படித்திருந்தாலோ நல்ல வேலையில் இருந்தாலோ அவர்களுக்கு திருமணம் நடப்பது மிகவும் கடினமானது. ஏதாவது ஒரு ஆணுக்கு மூன்றாம் தாராமாகவோ நான்காம் தாரமாகவோகத்தான் வாழ்க்கைப்பட வேண்டி இருக்கும். இந்த நிலை மாறுவதற்கு எந்த ஒரு முயற்சிகளும் மேற்கொள்ளப்படவுமில்லை என்ற தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ஒரு ஆப்பிரிக்கர் மிகவும் கோபமாக ஒரு கேள்வியை முன் வைத்தார். மிமி கதாபாத்திரம் சோரம் போவதாய் காண்பிப்பதன் மூலம் வெளியில் போய் படித்து விட்டு வரும் பெண்கள், வேலைக்குப் போகும் பெண்கள் போன்றோர் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் என்பதாய் ஆகாதா? என்றார். இதற்கும் மிக நிதானமாகவே, எந்த சமூகத்தில்தான் சோரம் போவது நடக்கவில்லை? என்றொரு எதிர்கேள்வியும் இயக்குனர் வைத்தார். கலாச்சார நெருக்கடிகள் நிறைந்த சூழலில் பொய்களும் மீறலும் இருக்கும்தான் என்றார்.

இந்த விமர்சனங்கள் எல்லாவற்றையும் தாண்டி பின் தங்கிய பிரதேசங்களின் சினிமாவிற்கான கரிசனத்தையும் நாம் தந்தாக வேண்டும். ஏராளமான பணமும், தொழில் நுட்பமும், திறமையும் நிறைந்து கிடக்கும் தழிழ் சூழலில் பெரும்பாலும் வணிகக் கொடுங் குறிகள்தாம் விறைத்துக் கிடக்கின்றன. இவற்றோடு ஒப்பிடுகையில் சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஒரு பிரதேசத்திலிருந்து நேர்மையான படங்கள் வருவதை சினிமா மொழி அறிந்த தமிழ் மனமாக விருந்தாலும் கொண்டாடத்தான் வேண்டும் என்றபடியே அரங்கை விட்டு வெளியே வந்தேன். கிடானோவின் outrage, அலெஜாண்ட்ரோவின் Buitiful, துருக்கிப் படமான Poetry போன்றவைகளைப் பார்க்க திட்டமிட்டிருக்கிறேன். பார்த்து விட்டுப் பகிர்கிறேன்.

3 comments:

சண்முககுமார் said...

தமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilthirati.corank.com/

bala said...

katurai epothu continue panna poringa sir ;
waiting ->>>>
daily vanthu parthu yemanthen ?
please complete that

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி அய்யனார்...
பேசி நிறைய நாட்களாகி விட்டது.

Featured Post

test

 test