Monday, October 1, 2012

குள நடை

நான் வசிக்கும் பகுதியில் ஒரு பூங்கா இருக்கிறது. நல்ல விஸ்தாரமான பூங்கா. ஏராளமான மரங்கள், பரந்த புல்வெளி, குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல் அத்துடன் இரண்டு கி.மீ சுற்றளவு கொண்ட ஒரு பெரிய குளம் ஒன்றும் உண்டு. நடப்பதற்கு தோதாய் குளத்தைச் சுற்றி இரப்பர் பூசிய நடைபாதை அமைத்திருக்கிறார்கள். நடை பாதை வழியெங்கும் அடர்ந்த செடிகொடிகளும், மரங்களும், ஏராளமான பறவைகளும், குறிப்பாய் சிட்டுக்குருவிகளின் கீச்சுச் சிறகடிப்புகளும் உடன் வரும். நடப்பதற்கோ அல்லது இளைப்பாறுவதற்கோ மிகச் சிறந்த இடம். கடந்த ஒரு வருடமாய் வார இறுதி நாட்களில் பயல்களை அழைத்துக் கொண்டு போய்வரும் இடம்தான் என்றாலும் ஒரு முறை கூட நடக்கப் போனதில்லை. ஒவ்வொருமுறையும் பூங்காவிலிருந்து திரும்பும்போது நாளையிலிருந்து நடக்க ஆரம்பிக்கவேண்டும் என நினைத்துக் கொள்வதோடு முடிந்து போய் விடும். ஆனால் சமீபமாய் வழக்கத்தைப் பொய்யாக்கிவிட்டு நடக்க ஆரம்பித்திருக்கிறேன்.

செய்ய ஒன்றுமே இல்லாமல் ஒரு நாளை வைத்துக் கொள்வதில் முனைப்பாக இருக்கும் என்னுடைய இயல்பும், மனைவியின் இண்டர்நெட் சமையலறிவும் சேர்ந்து என்னுடலைப் பதம் பார்த்திருக்கின்றன. புளிமூட்டை அல்லது அரிசிமூட்டை கணக்காய் உடல் பெருத்திருக்கிறது. சிறிய இடைவெளிக்குப் பிறகு பார்க்கும் மனிதர்கள் என்னை அடையாளம் கண்டறிய முடியாது திகைப்பதைப் பார்த்து நானும் அவர்களோடே திகைப்பேன். அலுவலகத்தில் நடக்கும் உடல்நல முகாம்களில் வெள்ளைக் கோட்டணிந்த லெபனீஸ் பெண்கள் வயிறைத் தட்டிக் காட்டி சைகையால் குறைத்தே ஆகவேண்டும் என்பார்கள். புன்னகைத்து வைப்பேன். ஆனால் சமீபமாய் நடந்த ஒரு சம்பவம்தான் உடனடியாய் நடக்க தூண்டுதலாக அமைந்தது.

வழக்கமான ஒரு உடல்நல முகாம். அதே வழக்கமான லெக்சர்கள். பிபி, கொலஸ்ட்ரால் சோதனைகள். எல்லாம் முடிந்து ஒருவர் சொன்னார் உங்களின் Metabolic age 45. சற்றுக் கடுப்புடன் என்ன! இதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிக்கிறீர்கள் எனக் கேட்டேன். உங்களின் மிகச்சரியான எடை அறுபது கிலோதான் பதினைந்து கிலோ அதிகமாக இருக்கிறீர்கள் என்றார். கோபப்பட்டு உடனடியாய் முகாமை விட்டு வெளியேறினேன். மாலை க்ரீன் டீ டப்பாக்கள், கொள்ளு சகிதமாய் வீட்டிற்கு போய் மனைவியிடம் என் வயது நாற்பத்தைந்து என்றேன். அடுத்த நாள் காலை காபிக்கு பதிலாய் ஊறவைத்துக் கொதிக்க வைத்த கொள்ளு நீரைத் தந்தாள். அதற்கடுத்த நாள் மாலை நடக்க ஆரம்பித்து விட்டேன்.

உற்சாகமாத்தான் இருக்கிறது. அவ்வப்போது வாங்கும் எலெக்ட்ரானிக் வஸ்துக்களை பயல்களே ‘இரு’ கை பார்த்துவிடுவதால் பாட்டுக் கேட்டு நடக்கும் பெரும்பான்மைகளின் கும்பலில் தனித்துத் தெரிகிறேன். தொடர்புக்கு ஒரு சாம்சங் போன் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கிறது ஆனாலும் அதைப் பேசுவதற்கு மட்டும்தான் பயன்படுத்த முடிகிறது. இயற்கையின் இசையை விட வாத்தியங்களின் இசை பெரிதா என்ன? குளிர்காலம் துவங்கிவிட்டதால் ஏராளமான பறவைகள் வர ஆரம்பித்துவிட்டன. நடக்கும்போது உடன் வரும் பறவைகளின் கீச்சுக் குரல்களுக்கு நிகரேது? மிக ரம்மியம். மாதத்திற்கு மூன்று கிலோ குறைப்பதுதான் இப்போதைய இலக்கு. பத்து நாள் நடந்துவிட்டு பதினோராம் நாள் சுத்த போர்,டைம் வேஸ்ட், இப்ப குண்டா இருந்தா என்ன? என்றெல்லாம் கிளம்பாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

2 comments:

manjoorraja said...

எங்க க்ளப் மெம்பர் ஆயிட்டீங்க.. வாழ்த்துகள் அய்யனார்.

யாழினி said...

:))) வாழ்த்துக்கள்

Featured Post

test

 test