Friday, November 2, 2012

அத்தியாயம் – மூன்று

“நீ என்னிக்கு வர?”

 “நாளைக்கு நைட் அங்க இருப்பன்”

 “ஹோட்டல் போன் நம்பர் மெசேஜ் பன்றேன். கால் பண்ணி ரூம் புக் பண்ணிடு”

 “என்னது தனி ரூமா? அப்புறம் நான் என்ன டேஷ்க்கு அங்க வரனும்?”

 “ஏய் சும்மா உன் பேர்ல புக் பண்ணு. நான் இங்க ஒரு மாசமா தங்கி இருக்கறதால எல்லாரையும் தெரியும். நீ வந்து என் கூட தங்கினா தப்பா போய்டும். நீ அந்த ரூம்ல திங்க்ஸ் லாம் போட்டுட்டு யார் கண்லயும் படாம என் ரூம் க்கு வந்திடு.” 

“சரி. ஆனா ஒரு மாசமாவா ஹோட்டல்ல இருக்க?”

 “ஆமா டா இதோ இதோ ன்னு நாவல் இழுத்துட்டே போகுது. இந்த வாரத்துல முடிஞ்சிடும். எப்படி வந்திருக்குன்னு நீ வந்து படிச்சிட்டு சொல்லு”

 “நாவல் படிக்கறதுக்கா என்ன கூப்டுற?”

 “பின்ன வேற எதுக்காம்?”

 “உன்னப் படிக்க இல்லயா?”

 “கருமம் கேட்க சகிக்கல. ஏண்டா, நீ எழுதுற குப்ப நாவல் மாதிரியேதான் பேசுவியா?

 “எல்லாம் என் தலையெழுத்துடி”

 “கோச்சுக்காதடா. என்னதான் இருந்தாலும் நீ க்ரைம் எழுத்தாளன் தானே”

 “நீ பெரிய இலக்கிய எழுத்தாளினியாச்சே ஏன் என்னப் போய் உன் நாவல படிக்க கூப்டுற?”

 “நீ நல்லாப் படிப்பேன்னுதாண்டா”

 “கொடும எனக்கு டபுள் மீனிங்காவாவே அர்த்தமாகுது”

 “நான் டபுள் மீனிங்க் லதான பேசினேன்”

 “பாவி இரு வந்து வச்சிக்குறேன்”

 “வா வா சீக்கிரம் வா”

 “காலைலயே சரக்காடி கெறங்குற”

 “இல்லடா நீ வா நேர்ல பேசலாம்” 

கைப் பேசியைத் துண்டித்தேன். வீணா. சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளர். என்னைப் போன்ற பல்ப் எழுத்தாளர்களை மூர்க்கமாய் மறுக்கும் இலக்கியவாதி. சமூகத்தின் அத்தனைப் பிரச்சினைக்கும் மூல காரணம் என்னைப் போன்றவர்களின் எழுத்துகள்தாம் என நம்பும் தூய இருதயம் கொண்டவள். சென்ற வருட இறுதியில் அவளுடைய பேட்டி ஒன்று ஆனந்த விகடனில் வெளிவந்திருந்தது. கேள்வி கேட்டவர் சம்பந்தமே இல்லாமல், என் எழுத்தைப் பற்றி அபிப்பிராயம் கேட்டிருந்தார். வீணா என்னுடைய ஒரே ஒரு நாவலை நான்கு பக்கங்கள் மட்டும் படித்ததாகவும் அதற்கு மேல் படிக்க முடியாத அளவிற்கு அந்நாவல் குப்பை எனவும், சாக்கடை எழுத்து எனவுமாய் பதில் சொல்லி இருந்தார். நான் இதைப் பொருட்படுத்தவில்லை. சாகித்ய விருது வாங்கியவர் எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என என் மாத இதழில் நக்கலடித்துவிட்டுக் கடந்து போய்விட்டேன். ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் என் அலுவலக விலாசத்திற்கு மலைக்க வைக்கும் எண்ணிக்கையில் கடிதங்களாய் வந்து குவிந்தன. எல்லாக் கடிதங்களுமே வீணாவை கண்டபடி வசைந்தும் எனக்கு ஆறுதல் சொல்லியுமாய் எழுதப்பட்டிருப்பதாக உதவியாளர் சொன்னார். எனக்குத் திடீரென இக்கடிதங்களோடு வீணாவைப் போய் பார்த்தால் என்ன? எனத் தோன்றியது. உதவியாளரை அத்தனை கடிதங்களையும் ஒரு பெரிய சாக்குப் பையில் போட்டுக் கட்டி காரில் வைக்கச் சொன்னேன். விச்சுவிடம் அவளின் முகவரியைத் தேடிப் பிடிக்கச் சொன்னேன். கே கே நகரில்தான் அவள் வீடு. அடுத்த அரை மணிநேரத்திற்குள் அவள் வீட்டின் முன்னால் போய் நின்று காலிங் பெல் அடித்தேன்.

பதின்மங்களைக் கடந்திராத ஒரு பெண் கதவைத் திறந்து யார் வேணும்? எனக் கேட்டாள். வீணாவைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னேன். ஹாலில் அமரச் சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டாள். ஹாலில் ஏராளமான புத்தகங்களோடு மிகப் பெரிய புத்தக அலமாரி ஒன்று கம்பீரமாய் நின்றிருந்தது. நடுத்தர வயதில் ஒரு பெண் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள்தான் வீணாவாக இருக்கக் கூடும். ஐந்து நிமிடத்தில் நைட்டி சகிதமாய் முகத்தை துண்டால் துடைத்தபடி வீணா ஹாலிற்கு வந்தாள். யாருங்க எனக் கேட்டவளை நிமிர்ந்து பார்த்தேன். சந்தன நிற வீணா அப்போதுதான் தூங்கி எழுந்தாள் போல, அவளின் மிகப் பெரிய கண்கள் பளிச்சென மின்னின. எழுந்து நின்று

 “நாந்தான் நீங்க சொன்ன சாக்கடை எழுத்துக்கு சொந்தமான அய்யனார்”

இரண்டு நொடி கண்களை இமைக்க மறந்து, சற்றுத் திகைத்து பின் சகஜமாகி “அட வாங்க வாங்க உட்காருங்க என்றபடியே பின்புறமாய் கழுத்தை திருப்பி மாலா, காபி கொண்டா” என்றுவிட்டு சொல்லுங்க என்றாள். எனக்கு அதற்கு மேல் பேச வார்த்தைகளே வரவில்லை. நொடிக்கொரு பாவணை காட்டும் அவளின் முகத்தையும் இரவு உடையில் தளும்பிய உடலின் கச்சிதத்தையும் பார்த்தும் பார்க்காமலிருக்க முடியாமல் தவிக்க ஆரம்பித்தேன். அவளாகவே தொடர்ந்தாள்.

“நான் எதிர்பாத்தத விட ரொம்ப யங் ஆ இருக்கீங்க நானூறு நாவல் எழுதிட்டீங்களாமே க்ரேட்”

“நானூறு குப்பை”

மெதுவாக சிரித்தாள்.

“சாரி. நான் அப்படி சொல்லி இருக்க கூடாதுதான். பேட்டி முடிஞ்சதுமே நான் சொன்னது தப்புன்னு புரிஞ்சி சொன்னத எடிட் பண்ண சொன்னேன். வேணுன்னே போட்டிருக்காங்க “

“ம்ம் அவங்களோடதும் விக்கனுமே “

 “காபி குடிங்க “

குடித்துவிட்டு எழுந்தேன்.

“சரி வரேங்க”

“என்ன விஷயமா வந்தீங்கன்னு தெரிஞ்சிக்கலமா?”

 “விகடன் பேட்டிய கேள்விப்பட்டு சும்மா உங்கள பாக்க வந்தேன் அவ்ளோதான் வரேன்”

நான் சொன்னதை அவள் நம்பவில்லை. என் கண்களை ஆழமாய் பார்த்து பரவால்ல சொல்லுங்க என்றாள் எதுவும் பேசாமல் எழுந்து வெளியேறி கேட்டைத் திறந்து கொண்டு வீட்டிற்கு முன்பு நிறுத்தியிருந்த காரைத் திறந்து பின் சீட்டில் கிடந்த மூட்டையை வெளியே இழுத்தேன். பின்னாலேயே வந்தவள் கேட்டின் மேல் கையூன்றி

“என்ன மூட்டை? “

வெளியில் நின்றபடி ஒரு கை பிடிங்க என்றேன் மாலா எனக் குரல் கொடுத்தாள் உள்ளேயிருந்து வந்த மாலா மூட்டையின் இன்னொரு பக்கத்தைப் பிடித்தாள். இருவருமாய் இழுத்து வந்து கேட்டினுள் போட்டோம் என்னங்க இதெல்லாம் எனப் புதிராய் கேட்டவளுக்கு மூட்டையின் முடிச்சை அவிழ்த்தேன்.

தபால் உறைகள், இன்லெண்ட் லெட்டர்கள், போஸ்ட் கார்டுகள் என குவியலாய் தரையில் வந்து விழுந்தன.

“எனக்கு வந்த வாசகர் கடிதங்கள்.”

 “சரி இத ஏன் என் வீட்டுக்கு எடுத்து வந்தீங்க?”

 “இந்த எல்லா லெட்டருமே உங்களத் திட்டித்தான் வந்திருக்கு நியாயப்படி உங்ககிட்டதானே கொடுக்கனும்”

என்றபடியே கேட்டை சாத்திக் கொண்டு வெளியேறினேன். வீணா மலைத்துப் போய் நின்றதை காரில் அமர்ந்து பார்த்தபடியே வண்டியைக் கிளப்பினேன் -

-- மேலும்

3 comments:

ராம்ஜி_யாஹூ said...

உரைநடை , பத்து வருட கால முன்பு நடந்த
நிலையில் இருப்பதாக ஒரு உணர்வு
(முதல் இரண்டு அத்தியாயங்கள் படிக்க வில்லை)

கோவை நேரம் said...

நன்றாக இருக்கிறது...தொடரும் போட்டுவிட்டீர்கள்

Anonymous said...

குறுநாவல்5 என லேபிளில் உள்ளதே. நான்கும் பாதியில் இருக்கிறது. ஒரே நேரத்தில் எழுதப் போகிறீர்கலா? தினமும் ஒரு அத்தியாயமாவது வெளியிடுங்கள். ப்ளீஸ்!!

Featured Post

test

 test