Tuesday, June 11, 2013

ஓரிதழ்ப்பூ : அத்தியாயம் ஆறு


" " எனப் பல்லைக் காட்டிய சாமியை ஓங்கி மிதிக்க வேண்டும் போலிருந்தது. இருந்த காசிற்கு குவாட்டர்தான் அடிக்க முடிந்தது. போதை சுத்தமாய் இல்லை. அப்படியே விட்டிருந்தால் தூங்கிப் போயிருப்பேன். எதற்கு இந்த சாமி என்னை எழுப்பியது? நாளைக் காலை எழவெடுத்த வேலைக்கு வேறு போய்த் தொலைய வேண்டும். கோபத்தை சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டு 

என்ன சாமி?” என்றேன் கடுகடுப்பாய்

யப்பா வாத்தி உன்ன எங்கலாம் தேடுறது? உன்கிட்ட ஏதோ வெளக்கம் கேட்கணும்னு நேத்துலருந்து இவரு எம் பின்னாடி சுத்துராரு “ 

என்றபடி இன்னொரு சாமியாரைக் காண்பித்தார். ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.

"என்னா விளக்கம்?"

மாமுனி தொண்டையைக் கனைத்துக் கொண்டு

ஐயா ஓரிதழ் பூ என்றால் என்ன? அது எங்கு கிடைக்கும் என்பதை அறிய வந்தேன். தாங்கள் அறிவீர்களாமே?”

ங்கொம்மா பாவாடய தூக்கிட்டு பாரு இருக்கும்”  இரைந்தேன்.

அவர் ஒரு நொடி சினந்தார். பின் யோசித்தார். மெதுவாய் வாய் திறந்து

நான் தான் அகத்திய மாமுனி. நீங்கள் போகராக இருக்க வேண்டும். தெளிவடைந்தேன். நன்றி வருகிறேன்” 

என சொல்லிவிட்டு விடுவிடுவென நடையைக் கட்டினார்.

சாமிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

சாமி நானே போதை பத்தலன்னு கடுப்புல கிறேன். நீ வேற ஏன் கண்ட கெரகத்தையும் இழுத்தாந்து கடுப்பேத்துற

சரி சரி கோச்சுக்காத, கைல ஆப் இருக்கு, வா அந்தாண்ட மரத்துக்கா போய் உட்கார்ந்து சாப்புடலாம்

சட்டென உற்சாகமானேன். “சாமி நீ தெய்வம் சாமி

வாடா டேய் வாடா

சமுத்திர ஏரிக்கரை. காற்று ஜிலுஜிலு வென வீசிக்கொண்டிருந்தது. நான் இங்கிருப்பதை இந்த சாமி எப்படிக் கண்டுபிடித்தார் என யோசித்துக் கொண்டே அவரோடு நடந்தேன். நுணா மரத்தடியில் போய் அமர்ந்தோம் சாமி வேட்டி இடுப்பிலிருந்து அரை புட்டியை எடுத்தார். கூடவே ஒரு வாட்டர் பாக்கெட்டும் இரண்டு நடுங்கிய ப்ளாஸ்டிக் டம்ளரும் இருந்தது.

அட ஒரு பாரையே உள்ள வச்சிருக்கியே

ம்க்கும் என்றபடியே முக்கால் டம்ளர் ரம் ஊற்றி கொஞ்சூண்டு வாட்டரை நுரை வர அடித்தார்.

ஆசையாய் எடுத்து இழுத்தேன்.

சாமிமெதுவா குடி மெதுவா குடிஎன்றபடி தன் டம்ளரில் கால்வாசியை  வாயில் சரித்துக் கொண்டார்.

அந்தாளு அகத்திய மாமுனி, போகரு ன்னு என்னவோ ஒளறினானே என்னவா இருக்கும்?”

சிலதுங்க இப்படி ஆய்டும். நேத்து நைட் அந்தாள பாத்தப்பவே நினைச்சேன். லேசா கழண்டிருக்கும்னு. ஆனா நீ அப்படி திட்டியிருக்க வேணாம்என சிரிப்பாய் சொன்னார்

மனுசனுக்கு கடுப்பாவுமா ஆவாதா? நியாயப்படி உன்னதான் திட்டி இருக்கனும். சரக்கு எட்தாந்து தப்பிச்சிட்ட

நான் அவரக் கூட்டியாந்ததுக்கு காரணம் இருக்கு

என்ன காரணம்?”

சாமி மீதமிருந்ததையும் இழுத்து விட்டு சொன்னார்

ஒலகம் முழுக்க பைத்திகாரப்பசங்க நிறைய பேர் இருக்காங்க. இதுல பாதி பேர் தன்ன வேணும்னே பைத்தியம்னு நினைச்சிக்கிறாங்க. அதுல நீயும் ஒருத்தன்

நான் நேத்து சொன்னத நீ நம்பலயா

அடப்போடா சாமானம் சாமானம்தான் அதில எங்க வருது பூ

சாமி உனக்கு புரியாது வுட்ரு

என்னா புரியாது

எதுவும் புரியாது வுட்ரு

சாமிக்கு குரல் உயர்ந்தது. கண்கள் விரியக் கிட்டத்தட்ட கத்தினார்

டேய் நான் சாமிடா, சும்மா ரோட்ல அலையுற பிச்சகாரன்னு நினைச்சிக்காத. ங்கோத்தோ சாமானம் மட்டும் பூவு மாதிரி இருந்தா போதுமா? ஒடம்பு முழுக்க பூவா பூத்த பொண்ண நீ யோசிச்சாச்சிம் பாத்துகிறியா நான் கூடவே படுத்துகிறேன்

திகைப்பாய் பார்த்தேன். சாமி தொடர்ந்தார்

”எந்தப் பூன்னு சொல்றது அவள? அதுவரைக்கும் கல்யாண ஆசையே இல்லாதவன சொழட்டி ஒரு அடி அடிச்ச பொண்ணு அவ... நா பத்து வயசிலயே ஒரு ஜோசியக்காரருக்கு எடுபிடி வேலைக்கு போய்ட்டேன்... மூங்கில்தொறபட்டு ஜோசியக்காரர்னு கேள்விபட்டிருப்ப... நல்ல மனுசன்... சொன்னா சொன்னதுதான்... வாக்கு சுத்தம். ரொம்ப பெரிய பெரிய ஆளுங்கலாம் அவரு முன்னாடி கைகட்டி குனிஞ்சி ஆசிர்வாதம் வாங்கிட்டு போவாங்க. அவரும் உள்ளத உள்ளபடியே சொல்வாரு. நடக்கும்னா நடக்கும். நடக்காதுன்னா நடக்காது. என் இருபத்தைஞ்சி வயசு வரைக்கும் அவரோடதான் இருந்தேன். ஊத்தா மழ ஊத்திட்டிருந்த ஒரு கார்த்திக மாசம் தீபத்தன்னிக்கு காலைல ஒரு பொண்ண கூட்டிகினு வயசானவர் ஒருத்தர் வந்தார். நான் அன்னிக்கு கிட்டத்தட்ட அந்த பொண்ணு மொகத்திலதான் முழிச்சேன். பார்த்த ஒரு நொடி சகலமும் ஆடிப் போச்சி. என்னோட வயசு, வாலிபம் எல்லாமே அந்த பொண்ண பார்த்த ஒடனே முழுச்சிகிச்சி அப்படியே அந்த பொண்ண தூக்கிட்டு எங்கயாவது ஓடிடனும்னு ஒரு வெறி வந்துச்சி. இப்ப யோசிச்சி பாத்தாலும் அந்த நாள் அந்த நிமிசம் எதுக்காக அப்படி தோணுச்சின்னு தெரியல... அந்த பொண்ணுக்கு ஏதோ தோஷம். கல்யாணம் தள்ளி தள்ளி போச்சி. பரிகாரத்துக்காக ஜோசியர் கிட்ட வந்தாங்க. ஜோசியர் அந்த பொண்ணு மூஞ்ச மட்டும்தான் பாத்தாரு எதுவுமே சொல்லாம உள்ள வந்துட்டு எங்கிட்ட அவங்கள போவ சொல்லிடுன்னுட்டாரு. அவருகிட்ட இருந்த பதினஞ்சி வருஷத்தில ஒரு வாட்டி கூட அவர் யாரையும் அப்படி சொன்னதில்ல. எனக்கு கொஞ்சம் ஆச்சரியமா போச்சி. வெளில வந்து அவங்க வீட்டு அட்ரஸ் வாங்கிட்டு அனுப்பிட்டேன். ரெண்டு நாள் முழுக்க அந்த பொண்ணு மூஞ்சே எல்லா நேரமும் கண்ணு முன்னால நின்னுச்சி. சரியா மூணாவது நாள் காலைல ஜோசியர் கொஞ்சம் பணத்தை கைல கொடுத்து போய்டுன்னு சொல்லிட்டு திரும்பிப் பாக்காம உள்ளாற போய்ட்டார். எனக்கு டக் னு ஒண்ணும் புரியல. ஆனா என்னவோ நம்மள சுத்தி நடக்குதுன்னு மட்டும் உள் மனசு சொல்லிச்சி. நான் எத பத்தியும் யோசிக்கல. அந்த பொண்ணோட ஊர் தேவ பாண்டலம். சங்கராவரம் கிட்ட. பஸ் ஏறி காலைல பத்து மணிக்கெல்லாம் அவங்க வீட்ட கண்டுபிடிச்சிட்டு போய்ட்டேன்.
ஒரு சின்ன தெருவில கடேசி வீடு. கதவு தெறந்தேதான் இருந்திச்சி. பெரியவரேன்னு சொல்லிட்டே உள்ள போனேன். அந்த பொண்ணு குத்துக்கால் வச்சி தரைல உட்கார்ந்துட்டு தலவாரிட்டு இருந்திச்சி. என்ன நிமிந்து ஒரு பார்வ பாத்துச்சி. அது பார்வைல ஆச்சரியமே இல்ல. நான் வந்தே தீருவன்னு அதுவும் நெனச்சிருக்கும் போல. நான் பேசாம நின்னேன்
சாப்புட்ரிங்களான்னு கேட்டுச்சி. உம்ம்னு தலைய ஆட்டினேன். உள்ளாற போய் தட்டு நெறய பழையத போட்டு வழிய வழிய மோர் ஊத்தி எடுத்தாந்து கைல கொடுத்திச்சி. என் கண்ணு முழுக்க அவமேல நிலகுத்தி நின்னுடுச்சி. ஒரு வார்த்த கூட பேசாம சோத்த அள்ளி அள்ளி சாப்டேன். அவ அன்னிக்கு  நெருப்பு கலர்ல புடவ கட்டி இருந்தா. அவ நின்னுட்டிருந்த தோற்றம் ஒரு தீப் பிழம்பு எரியுற மாதிரிதான் இருந்தது. சாப்பிட்டு முடிச்சேன். அவ மெல்ல நடந்து போய் வாசல் கதவ சாத்தினா. அதுவரைக்கும் உள்ள பொங்கிட்டிருந்த ஏதோ ஒண்ணு வெடிச்சது. பாய்ஞ்சி போய் அவள அணைச்சிகிட்டேன். அய்யோ அவ தீப்பிழம்பு மட்டும் இல்ல தீயா பூத்த பூவுந்தான். உடம்பு முழுக்க நெருப்பு பூ பூத்த மாதிரி இருந்தது. ஒரு பைத்தியக்காரன் மாதிரி அவ கூட கலந்தேன். அவள என்னென்னவோ பண்ணேன். கசக்கி பிழிஞ்சி கடிச்சி நக்கி அய்யோ இப்ப நெனச்சாலும் ஒடம்பு புல்லரிக்கிது. ஆனா அவ்ளோ ஆட்டத்துக்கு பின்னாடியும் அவ கொஞ்சம் கூட கசங்காம அதே நெருப்பு பூ மாதிரிதான் இருந்தா. ஆனா கண்ல ஒரு பெரிய அமைதி இருந்திச்சி. அதுக்கப்புறம் அந்த அமைதிய அவ கூட வாழ்ந்த ரெண்டு வருஷத்துல ஒரு நாள் கூட நான் பாக்கல...”

சாமி பேச்சை நிறுத்தினார். மழை பெய்து ஓய்ந்ததைப் போன்ற அமைதி. வியர்த்திருந்ததர். இன்னொரு பக்க இடுப்பு வேட்டி மடிப்பிலிருந்து ஒரு பொட்டலத்தை வெளியில் எடுத்தார். சதுரமாய் மடிக்கப்பட்ட தாள் அவர் சட்டைப் பையில் இருந்தது. நிதானமாய் புகையைத் தயாரித்து உள்ளிழுத்தார். புகை தீர்ந்த பின் மெல்ல எழுந்து போய் நிழல் விரித்துக்கிடந்த ஆல மரத்தடியில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டார்


மேலும்

புகைப்படம்: பினு பாஸ்கர்

No comments:

Featured Post

test

 test