Wednesday, March 22, 2017

கூடு திரும்புதல்

இந்த வலைப்பக்கத்தை எட்டிப் பார்த்து மாதங்களாகின்றன. எழுதியோ,வருடமாகிறது. ஃபேஸ்புக் யுகத்தில் போய் என்ன ப்லாக்ஸ்பாட் ! என்கிற அலுப்பு மட்டுமே இந்தப் பக்கத்தில் எழுதாமல் விட்டதற்கான காரணமாய் இருக்க முடியாது. எழுதி என்ன ஆக? அல்லது எழுத என்ன இருக்கிறது? என்கிற விட்டேத்தி மனநிலைதாம் முக்கியக் காரணம்

ஒரேயடியாய் சேர்ந்து கொண்ட சினிமாப் பித்தும், இலக்கிய அடையாளமாகவிருந்த மனதிற்குப் பிடித்த சில முகங்களின் பரிதாபகரமான காரிய வெளிறல்களும் எழுத்தின் மீதான வாஞ்சையை சற்றல்ல, நிறையவே குறைத்திருக்கின்றன. இது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் எல்லாத் துறையிலேயும் நிகழும் தேய்மானம் தான் என்பதையும் புரிந்து கொள்கிறேன்.

இதையெல்லாமா எழுதுவது? என்கிற கூச்சமும் சென்ற சில வருடங்களில் என்னிடம் அடையாய் அப்பியிருந்தது. ஃபேஸ்புக்கில் நெகிழ்ந்த சில வியாழன் இரவுகளில் மட்டும் எதையாவது கிறுக்கி வைக்கப் போய்,பின்பு அதுவே வழக்கமானது. சில நெருங்கிய நண்பர்கள் இதைப் புரிந்து கொண்டு என் குறிப்பைப் பார்த்து நாளை நினைவு கொள்வதாய் கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அவசரமாய் விழித்துக் கொண்டு வியாழன் இரவுக் குறிப்புகளை நிறுத்தினேன்.

 முன்பு எப்போதுமே இல்லாத அசாத்திய அமைதி இப்போது வாய்த்திருக்கிறது. மேலும் நிதானப்பட்டிருக்கிறேன். மனதின் பைத்திய நிழல்களையெல்லாம் துரத்தி அடித்தாயிற்று. சிறுமை, மனநோவு, கோபம், பற்றாக்குறை, பேராசை என எதுவுமில்லை. முழுமையாய் மகிழ்ச்சியோடிருந்தல் என்பது இப்போதுதான் சாத்தியப்பட்டிருக்கிறது. மற்றவர்களின் பிழைகளையும் என்னுடைய பிழைகளையும் முழுமையாய் மறந்துவிட்டு ஒவ்வொரு நாளையும் புத்தம் புதிதாய் எதிர் கொள்கிறேன். நோய்மையுற்றிருந்த உடல், மனம் இரண்டும் வலுப் பெற்றிருக்கிறது.

 எழுத மட்டுமே விரும்புபவன் எங்கே போவேன்? எங்கெங்கோ சுற்றி விட்டு மீண்டும் கூட்டிற்கே வருகிறேன். எழுத்தே என்னைச் சேர்த்துக் கொள்.

No comments:

Featured Post

test

 test