Wednesday, March 29, 2017

வேசி மகன்


'Bastard son' - Game of Thrones தொடரில் புழங்கும் சொல் இது. முறையான திருமண உறவின் வழியாய் பிறக்காத குழந்தைகளை இப்படி அழைக்கிறார்கள். பிரபுக்களின் குழந்தைகளாக இருந்தாலும், ராஜாவின் மகன்களாக இருந்தாலும், இழிவும் புறக்கணிப்பும் அக்குழந்தைகளின் பிறப்பிலிருந்து தொடரும். தந்தையின் பெயரை முதல் பெயருடன் சேர்த்துக் கொள்ள அனுமதி கிடையாது. அரசாளும் உரிமையும் கிடையாது, அவர்களின் இலட்சினையை அணிந்து கொள்ளவும் அனுமதி கிடைக்காது.

 மிகத் துல்லியமான விவரணைகளோடு கட்டியெழுப்பிய இன்னொரு உலகத்தில் Game of Thrones கதைகள் நிகழ்கின்றன. பெரும்பாலான நிகழ்வுகள் Westeros என அழைக்கப்படும் ஒரு கண்டத்தில் நிகழ்கின்றன. இக் கண்டம் ’செவன் கிங்க்டம்ஸ்’ என அழைக்கப்படும் ஏழு ராஜ்ஜியங்களின் ஆளுகைக்கு உட்பட்டது . இந்த ஏழு ராஜ்ஜியங்கள் North, Iron Islands, Riverlands, Vale, Westerlands, Stormlands, Reach, Crownlands, and Dorne ஆகிய ஒன்பது நிலப்பிரதேசங்களைக் கொண்டது . இந்த ஏழு ராஜ்ஜியங்களையும் ஆளும் அரசன் அமரும் இடம் கிங்க்ஸ் லேண்டிங் . அவரது இருக்கை ஐயர்ன் த்ரோன். இந்த இரும்பு இருக்கையைக் கைப்பற்ற இந்த ஏழு ராஜ்ஜியங்களுக்கி டையே  நிகழும் போட்டியும் போர்களும்தான் பிரதானக் கதை. மற்றபடி எண்ணிடலங்காக் கிளைக் கதைகளும் உள்ளன. அவை குறித்து மெதுவாய் எழுதுகிறேன். இப்போதைக்கு இந்த பாஸ்டர்ட் விவகாரத்தைக் கவனிப்போம்.


 ஜான் ஸ்நோ, நெட் ஸ்டார்க் கின் பாஸ்டர்ட் மகன். அவனுடைய தாய் யார் என்பது ரகசியமாகவே இருக்கும். நார்த் பகுதியின் அடையாளம் - உறை பனி எனவே அப்பகுதியின் பாஸ்டர்ட் மகன்களுக்கு ஸ்நோ தந்தைப் பெயராக இருக்கும். இன்னொரு உதாரணம் ரூஸ் போல்டன். அவரின் பாஸ்டர்ட் மகன் பெயர் ராம்ஸி ஸ்நோ.


 காட்டுவாசிகள் மற்றும் பனிப்பேய்களிடமிருந்து நாட்டைக் காக்க - மிக உயரமான சுவர்கள் நாட்டின் எல்லையில் எழுப்பப்பட்டிருக்கும். அதைக் காக்கும் வீரர்கள் ’நைட்ஸ் வாட்ச்’ எனப்படுவர். இரவு பகலாக காவல் வேலைக்கு தன்னை அர்ப்பணிக்கும் இவ்வீரர்களை ’ப்ரதர்ஸ்’ அல்லது ’க்ரோ’ எனும் அடைமொழியிட்டு அழைப்பார்கள். இந்த காவல் பணிக்கு ஜான் ஸ்நோ தந்தையால் அனுப்பி வைக்கப்படுவான். தானொரு ’பாஸ்டர்ட்’ என்பதில் அவனுக்கு ஆழமான வருத்தங்களும் காயங்களும் உண்டு. நெட் ஸ்டார்க்கின் மனைவி லேடி ஸ்டார்க் ஜானை அங்கீகரிப்பதில்லை. ஆனால் ஜானின் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும்  அவன்  மீது அன்பு உண்டு.  நைட்ஸ் வாட்சில் பல்வேறு இன்னல்களுக்கும் அவமானங்களுக்கும் இடையில் ஜான் தன்னுடைய வீரத்தாலும் தியாகத்தாலும் மேலெழுந்து வருகிறான். ஒரு கட்டத்தில் நைட்ஸ் வாட்சின் தலைமை பொறுப்பையும் ஏற்கிறான். இதயத்தில் அன்புமிக்க ஜான் தன் கருணையால் செத்தும் மீண்டும் பிழைக்கிறான். புறக்கணிப்பும் அவமானமும் ஒரு மனிதனை நாயகனாக மாற்றும் என்பதற்கான உதாரணம் ஜான்.


இதற்கு நேரெதிரான கதாபாத்திரம் ராம்ஸி. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட அவமானங்கள் ராம்ஸி ஸ்நோவை குரூரம் மிக்கவனாய் மாற்றியிருக்கும். ராம்ஸியின் வீரத்திற்கான பரிசாய் ரூஸ் போல்டன் அவனைத் தன்னுடைய மகனாய் அறிவிப்பார். ராம்ஸி ஸ்நோ - ராம்ஸி போல்டன் என அழைக்கப்படுவான். மேலும் துயரத்தில் அலைக்கழியும் பேரழகி சன்ஸா ஸ்டார்க்கை திருமணமும் செய்து வைப்பான். ஆனாலும் ராம்ஸியின் வெறியும் கொலைத் தாண்டவங்களும் ஒரு முடிவிற்கு வராது. ’கோல்ட் ஹார்ட்டட் பாஸ்டர்ட்’ என நம்மை முணுமுணுக்க வைக்கும் அளவிற்கு அவன் வெறியாட்டமிருக்கும். க்ரேஜாய்  , சன்ஸா ஆகியோருக்கு அவன் இழைக்கும் கொடுமைகளைப் பார்க்க முடியாது. தந்தைக்கு இன்னொரு ஆண் குழந்தை பிறந்ததால் தன் உரிமையைக் காத்துக் கொள்ள, தந்தையையும் அவரின் மனைவியையும் அப்போதுதான் பிறந்த குழந்தையையும் கொல்வான்.

 புறக்கணிப்பின் இருவேரு முகங்கள் இவை.

 இத் தொடரின் மிக சுவாரஸ்யமான கதாபாத்திரம் டிரியன் லானிஸ்டர் எனும் குள்ளர். அபாரமான நகைச்சுவையும் ஆழமான அறிவும் கொண்டாட்டமான வாழ்க்கை முறையும் அடியாழத்தில் மிக நேர்மையும் கொண்ட ஒரு கதாபாத்திரம். அவருக்கும் ஜான் ஸ்நோவிற்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடல் இது.

 Tyrion Lannister: "And you, you're Ned Stark's bastard, aren't you? Did I offend you? Sorry. You are the bastard, though."

Jon Snow: "Lord Eddard Stark is my father."

Tyrion Lannister: "And Lady Stark is not your mother, making you...the bastard. Let me give you some advice, bastard. Never forget what you are. The rest of the world will not. Wear it like armor, and it can never be used to hurt you."

Jon Snow: "What the hell do you know about being a bastard?"

Tyrion Lannister: "All dwarves are bastards in their fathers' eyes."

 புறக்கணிப்பை பிறப்பிலிருந்து எதிர்கொள்ளும் குள்ளர், இன்னொரு புறக்கணிப்பிற்கு ஆறுதல் கூறும் பகுதி இது. கேம் ஆப் த்ரோனின் திரையாக்கத்தை விட திரைக்கதைதான் எனக்கு அவ்வளவு பிடிக்கிறது. இத்தொடரின் வசனங்களை எத்தனை பேர் கொண்ட எழுதுகிறதோ எனத் தெரியவில்லை. பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் சொல்லும் அவ்வளவு ஆழத்தையும் விசாலத்தையும் கொண்டுள்ளது.

‘பாஸ்டர்ட் ‘  அவமானங்களைச் சித்தரிக்கும் இதே கதையில் இன்னொரு மீறலும் இருக்கும். டோர்ன் என அழைக்கப்படும் பகுதி நாகரீக வளர்ச்சியின் உச்சம் பெற்ற பகுதி. அங்கு இந்த பிறப்பின் அடிப்படையிலான மரியாதைகள் ஒரு பொருட்டில்லை. பாஸ்டர்களை காதலின் தீவிரத்தால் பிறந்தவர்கள் என அடையாளப்படுத்தும் போக்கும் டோர்ன் நகரத்தில் உண்டு. டோர்ன் இளவரசியான எல்லாரியா சாண்ட் ஒரு பாஸ்டர்ட். அவளுக்குப் பிறந்த எட்டு மகள்களும் பாஸ்டர்ட்கள் தாம். அந்நகரத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கும் பிறப்பு ஒரு பொருட்டு கிடையாது.

 இப்படி ஒரே கதையில் பல்வேறு திறப்புகளை நிகழ்த்துவதால் தான் கேம் ஆஃப் த்ரோன் மிக முக்கியமான தொடராகிறது. நேற்று பகிர்ந்து கொண்ட மகாஸ்வேதாதேவியின் வேட்டைக் கதையில் வரும் மேரியும் ஒரு பாஸ்டர்ட் மகள். அவளுக்கு நேரிடும் புறக்கணிப்பை வாசிக்கும் போது கேம் ஆப் த்ரோனின் வேசி மகன்/ள் புறக்கணிப்பும் நினைவிற்கு வந்ததால் இங்கே எழுதிப் பார்த்தேன்.

 சில விஷயங்கள் காலம், நிலப்பிரதேசம், நிஜம், புனைவு போன்றவற்றைக் கடந்ததாய் இருக்கின்றன.

No comments:

Featured Post

test

 test