Wednesday, April 12, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பத்து


சாமி தெறித்து ஓடின வாத்தியை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருந்தார். வாயில் மென்றுகொண்டிருந்த சோற்றுப் பருக்கைகள் துர்க்கா மீது தெறித்தது.


“ஏ சோத்த வாயில வச்சிகினு என்னா சிரிப்பு” துர்க்கா நொடித்தாள்.


“பாருடி அந்த பைத்தியக்காரன உன்ன நெலா வெளிச்சத்துல பாத்து மிரண்டு ஓடுறான்”


“ஐயே நீ வேற.. ஏதோ போத.. ஓடுது.. லூசு..யார் பையன்?”
“உனக்கு தெரியல? “


“தெர்லயே”


உனக்கு எங்க ஒலகம் தெரியுது.. ராம்சாமி வாத்தியார் மொவன்”


“அட அவரு செத்துட்டாரு இல்ல?!”


“ஆமா..பையனுக்கு ஏதோ கிறுக்கு. பொம்பள கிறுக்கு. ஒரு வாட்டி கூட்டி போய் மந்திரிச்சி வுடுறியா?”


“அட நீ வேற ரொம்ப சின்ன புள்ளையாட்டம் இருக்கு”


“நாளைக்கு வந்து உன்ன சாமி ம்பான்”


“சர்தான…”


“என்ன சர்தான்?”


“எல்லா பொம்பளயும் சாமிதான”


சாமி ஒரு கணம் தடுமாறினார்.


சரி நேரமாச்சு நீ கெளம்பு என்றார்.  எதுவும் பேசாமல் எழுந்து கொண்டாள். சிறுமி எல்லா பாத்திரங்களையும் ஏற்கனவே கூடைக்குள் வைத்திருந்தாள். இருவரும் சாமிக்கு முதுகு காட்டி ரவி ஓடிய திசைக்காய் நடக்க ஆரம்பித்தார்கள்.

சாமி நாதன் துண்டை உதறி தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துவிட்டார். நிலவொளி இன்னும் பிரகாசமாக அந்த மைதானத்தை நிறைத்தது. சாமி படுத்த வாக்கிலேயே ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டார். தூக்கம் வரவில்லை. வயிறு நிறைந்திருந்தாலும் போதை இல்லாததால் மூளை விழிப்பாக இருந்தது. சாமி, தன் முதல் கலவியை நினைத்துக் கொண்டார்.

0

சாமி என்கிற சாமிநாதனின் பூர்வீகம் தேனிமலை. சரியாய் பள்ளிக்கூடத் தெரு. பிரசவத்திலேயே அம்மா இறந்து போக, ஆயா வீட்டில் தான் வளர்ந்தான். மனைவி செத்துப் போன துக்கத்தில் தூரதேசம் போன அப்பா திரும்பி வரவில்லை. ஆயா அவனைப் பத்து வயது வரை வளர்த்தது. அதற்கு மேல் அதனாலும் முடியவில்லை. யாரிடமாவது வேலைக்கு சேர்த்துவிடச் சொல்லி அக்கம் பக்கம் சொல்லிக் கொண்டிருந்தது. ஜவுளி வியாபாரத்திற்காக மூங்கில் துறைப்பட்டு அடிக்கடி செல்லும் கோவிந்தன் அங்குப் பிரசித்தமாக இருந்த ஒரு ஜோசியரிடம் இவனைச் சேர்த்துவிட்டார். சாமிநாதனுக்கு படிப்பு ஏறவில்லை. பள்ளிக்கூடம் போவதைத் தவிர வேறு எதையும் செய்யத் தயாராக இருந்தான். மூங்கில் துறைப் பட்டு ஜோசியர் அவனைத் தன்னோடு வைத்துக் கொண்டார்.

ஜோசியர் தனி ஆள். சாமிநாதன் அவரோடு இருந்த பதினைந்து வருடத்தில் ஒருவர் கூட உறவு எனச் சொல்லிக் கொண்டு அவரைப் பார்க்க வந்ததில்லை. கரும்புத் தோட்டங்கள் தாண்டி மரங்களடர்ந்த ஏரிக்கு சமீபமாய் ஒரு குடிசையில்தான் அவருடைய ஜாகை. அது யாருடைய நிலம் என்பது கூட சாமிநாதனுக்குத் தெரியாது. ஜோசியர் அபூர்வமாகத்தான் பேசுவார். காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போகும் வரை அவனுக்கு வேலைகள் இருந்து கொண்டிருக்கும். குடிசைக்குப் பின்னால் சிறிய தோட்டம் ஒன்றிருந்தது. கீரைச் செடிகள், மிளகாய், தக்காளி, வெண்டைக்காய் போன்றவற்றை பராமரிக்க வேண்டியதும் இவன் வேலைதாம்.

சாமி அதிகாலையில் ஜோசியரோடே எழுந்து கொள்வான். மணியக்காரர் நிலத்தில் பம்பு செட்டு அதிகாலை நான்கே முக்காலுக்கு இறைக்க ஆரம்பித்துவிடும். காலைக் கரண்ட் ஆறு மணி வரைதாம். ஐந்து மணிக்கு ஜோசியரோடு குளித்து விட்டு வருபவன், ஆட்கள் அமர்வதற்காக போடப்பட்டிருக்கும் பெஞ்சுகளைத் துடைத்து, முற்றத்தைக் கூட்டி, தோட்டத்தை ஒழுங்கு செய்து நிமிர்கையில் ஆறு மணி ஆகிவிட்டிருக்கும். சூரியன் மேலெழ ஆரம்பிக்கும்போது ஆட்கள் வர ஆரம்பிப்பார்கள். பெரும்பாலும் ஜாதகப் பொருத்தம், வரன் அமையுமா எனக் கேட்பது, வீடு நிலம் குறித்தான சந்தேகங்கள், வீட்டில் சுப துக்க காரியங்களுக்கான ஆலோசனைகள் இவைதாம். எட்டு அல்லது அதிகபட்சம் ஒன்பது மணிக்கெல்லாம் கூட்டம் கலைந்துவிடும்.

அதற்குப் பின்பு ஜோசியரும் இவனுமாய் பழைய சாதத்தில் மோர் ஊற்றி, தோட்டத்துச் செடியில் தொங்கிக் கொண்டிருக்கும் பச்சை மிளகாயை பறித்து வந்துக் கடித்துக் கொண்டு சாப்பிடுவார்கள். ஒரு கடி மிளகாய்க்கு இரண்டு உருண்டை சோறு இறங்கும். சாப்பிட்டதும் ஜோசியர் குடிசைக்கு எதிரில் புங்கை மரத்தடியில் கிடக்கும் கட்டிலில் போய் படுத்துக் கொள்வார். சாமிக்கு தூக்கம் கண்ணைச் சுழற்றினாலும் அடுத்தடுத்த வேலைகள் அவனுக்காக காத்துக் கொண்டிருக்கும். மாலை அடுப்பெரிக்கத் தேவையான சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டுவருவதும், மாட்டுச் சாணம் எடுத்து வந்து பிசைந்து எருமட்டை தயாரிப்பதும் அவனுடைய முற்பகல் வேலைகள்.

ஊரிலிருக்கும் அத்தனைக் கால்நடைகளும் ஏரிக்கரைக்குதான் மேய வரும். காலை ஒன்பது மணி வாக்கில் மாடுகளை மந்தையாக ஓட்டிக் கொண்டு அவன் வயதையொத்த சிறுவர்களும் சிறுமிகளும் மாட்டின் பின்னால் வருவார்கள். சாணியள்ளப் போகும் சாக்கில் அவர்களோடு விளையாடிவிட்டு வருவான். ஏராளமான விளையாட்டுக்களை விளையாடுவார்கள். சீசனுக்குத் தகுந்தார் போல விளையாட்டுகள். இந்த சீசன் என்பது என்ன, எப்படி துவங்கும் என்பதெல்லாம் யாருக்குமே தெரியாது. கோட்டி புல்லை ஒரு கும்பல் அடித்துக் கொண்டிருக்கும்போது யாராவது ஒரு பயல் கோலி குண்டை விளையாடினால் அன்றிலிருந்து வேறு சீசன் துவங்கிவிடும். செதுக்குவது என்கிற விளையாட்டுதான் சீசனில் அடிக்கடி வரும். சிகெரெட் அட்டையில் செய்த சதுரமான அட்டையை மண்ணிற்குள் புதைத்து வைத்து, அதைச் சுற்றி வட்டமாய் பெரிய கோட்டைப் போட்டு விட வேண்டும். பின்பு அம்மண் குவியலில் புதைந்துள்ள பண மதிப்பு கொண்ட சிகரெட் அட்டைகளை ஒரு சதுர அல்லது முக்கோணக் கல்லால் செதுக்கி வட்டத்தை தாண்டி வெளியே வரவழைக்க வேண்டும். சிகரெட் அட்டைக்கேற்ப பண மதிப்பு. எளிதில் கிடைக்கும் சிசர்ஸ் அல்லது சார்மினார் அட்டைகளுக்கு மதிப்பு பத்து, சாதா கோல்ட் ப்ளேக் சிகரெட் மதிப்பு ஐம்பது. கிங்க்ஸ் சிகரெட் அட்டை மதிப்பு நூறு. யாரிடம் அதிக பணம் இருக்கிறதோ அவனே வென்றவன். சாமி ஜெயித்த சிகரெட் அட்டைகளை ஜோசியருக்கு தெரியாமல் குடிசையின் பின்புறத்தில் உள்ள எரவாணத்தில் சொருகி வைத்திருப்பான்.

எவ்வளவு சுவாரசியமான ஆட்டமாக இருந்தாலும் பனிரெண்டு மணி அவனுக்குத் தெரிந்துவிடும். சூரியன் தலைக்கு நேராய் வந்துவிட்டிருக்கும் அல்லது மண்ணில் எச்சிலைத் துப்பிப் பார்ப்பான். எச்சிலை மண் வேகமாக இழுத்துக் கொண்டால் பனிரெண்டு மணி என அர்த்தம். வேகவேகமாக கொண்டு வந்திருக்கும் புட்டுக் கூடையில் சாணிக் குவியலை அள்ளிப் போட்டுக் கொண்டு குடிசைக்குத் திரும்புவான். அப்போது ஜோசியர் எழுந்து பூஜையில் ஆழ்ந்திருப்பார். வீட்டிலேயே வைத்திருக்கும் சாமி படங்களுக்கு நண்பகல் பூஜை. சரியாய் பணிரெண்டு மணிக்கு மந்திர உச்சாடனங்களை சொல்லி காளியையும் மாரியம்மனையும் வழிபடுவார். அந்நேரத்தில் சாமிநாதன், கொண்டு வந்த சாணியை உருட்டி அதற்காகவே போடப்பட்டிருக்கும் கருங்கற்களில் வட்டமாகத் தட்டிக் கொண்டிருப்பான். மனம் முழுக்க விளையாட்டில் குவிந்திருக்கும்.

உச்சிக்கு சமையல் கிடையாது. துணிகளை துவைப்பது, பாத்திரம் கழுவுவது, சாயந்திர சமையலுக்கு காய்கறிகளை நறுக்குவது போன்றவை இவன் வேலைகள். ஜோசியர் பூஜை முடித்து பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்துவிடுவார். நோட்டில் ஏதேதோ கணக்குகளைப் போட்டுப் பார்ப்பார். அங்கும் இங்குமாய் நடந்து வேலைகளைப் பார்க்கும் சாமிநாதனுக்கு எதையும் அவர் சொல்லிக் கொடுக்கவில்லை. அவனும் எதையும் கேட்டுக் கொள்வதுமில்லை.

மாலை நான்கு மணிக்கு மேல் விளையாட்டு இன்னும் சூடு பிடிக்கும். பள்ளிக்கூடம் போன பிள்ளைகள் கைவசம் இருக்கும் விளையாட்டு சாமான்களோடு நேராய் ஏரிக்குத்தான் வருவார்கள். ஒரே கூச்சலும் சப்தமுமாய் இருக்கும். சாமி எப்படியாவது அந்த சமயத்தில்  நழுவி விடுவான். இரண்டு குழுவாகப் பிரிந்து கொண்டு  கோட்டி புல் அடிப்பது, தோற்றுப் போன அணியை கஞ்சி வாங்குவது என ஒரே ஆர்ப்பாட்டமாக இருக்கும். பேந்தா கோலி விளையாட்டு கோட்டி புல் விளையாட்டைப் போல சப்தமானது அல்லதான் என்றாலும் நுணுக்கமானது. இந்த இரண்டு விளையாட்டுக்களையும் தாண்டி செதுக்குவது மிகுந்த உற்சாக சப்தத்தை வரவழைக்கும்.

இப்படியாய் இருள் கவியும் வரை விளையாடிக் கழிப்பான். ஒப்புக்காக மாலை நேரத்திலும் கூடை வழிய வழிய சுடச்சுட மாட்டுச் சாணத்தை சேகரித்துக் கொண்டு வருவான். ஜோசியர் ஏதாவது சொல்லிவிடுவாரோ என்கிற பயம் அவனுக்கு இருந்தது. ஆனால் ஜோசியர் எதையும் சொல்வதில்லை. அங்கிருந்த பதினைந்து வருடங்களில் அவனைக் கடிந்தோ அறிவுறுத்தியோ அவர் ஒருவார்த்தை கூடச் சொன்னதில்லை. சாமிநாதனும் அப்படி நடந்து கொண்டான்.

மாலையில் வரும் ஓரிருவருக்கும் ஜாதகம் பார்த்துவிட்டு ஜோசியர் சமைக்க ஆரம்பிப்பார். பெரும்பாலும் கீரைக் குழம்பு, சோறு, ஒரு பொரியல் இருக்கும். அவையும் தோட்டத்தில் கிடைத்தவையாக இருக்கும். ஆனாலும் அவ்வளவு ருசியாகச் சமைப்பார். சாப்பிட்டுவிட்டு எட்டு மணிக்கெல்லாம் மரத்தடியில் கிடக்கும் கட்டிலைத் தூக்கி வந்து குடிசை முற்றத்தில் போட்டு ஜோசியர் படுத்துவிடுவார். சாமிநாதன் குடிசைக்குள் பாயை விரித்துப் படுத்துக் கொள்வான். பதினைந்து வயதுவரை அவனது நாட்கள் இதே வரிசையில் இதே ஒழுங்கில்தான் கழிந்தது. கோவில் திருவிழா, தீபாவளி பொங்கலுக்கு புதுத் துணி, அபூர்வமாய் சினிமா இதைத்தாண்டி வேறெதுவும் நடந்துவிடவில்லை.

பதினைந்தாவது வயதில் ஆயா செத்துப் போனதாய் தகவல் வந்தது. போய் வெறுமனே பிணத்தின் முன்னால் நின்றுவிட்டு வந்துவிட்டான். அவன் உறவினர்கள் குறித்தோ சொத்து குறித்தோ எதுவும் தெரியவில்லை. எவரும் அவனைக் கண்டுகொள்ளவும் இல்லை.
இருந்த ஒரே சொந்தமும் போனது என்கிற வருத்தம் உள்ளூர இருந்தது. தான் இனியொரு முழு அநாதை என்கிற எண்ணமும் வந்து போனது.
பெரும்பாலும் இரவில் இந்த எண்ணம் மேலெழுந்து வரும். சன்னமாய் அழவும் செய்வான். என்னவோ ஆயா சாவிற்குப் போய்விட்டு வந்த பின்பு அவன் தன்னை பெரிய ஆளாகி விட்டதாய் நினைத்துக் கொண்டான். அன்றிலிருந்து விளையாடப் போவதை நிறுத்தி விட்டான். ஜோசியர் வருபவர்களுக்கு ஜோசியம் சொல்வதை உற்றுக் கேட்க ஆரம்பித்தான். குடிசைக்குள் ஒரு பழைய பெட்டியில் பழைய பஞ்சாங்கங்கள், ஜாதகப் பலன் தொடர்பான புத்தகங்களை எடுத்து, எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பித்தான். பல விஷயங்கள் அவனுக்குப் புரியவில்லை. இது என்ன எப்படி என ஜோசியரிடம் கேட்கவும் தயங்கினான். அப்படி ஒரு பேச்சோ உரையாடலோ அவர்களிடம் இருந்ததே இல்லை. எல்லாம் குழப்பமாய் தோன்றும்போது சாமிக்கு ஜோசியர் மீது ஆத்திரமும் கோபமும் வந்தது. தன் வாழ்வையே அவர் சீரழித்து விட்டதாய் எண்ணினான். ஆனால் அந்தக் கோபத்தை அவர் மீது காண்பிக்கவோ, அங்கிருந்தோ கிளம்பவோ அவனுக்குத் துணிச்சல் வரவில்லை. ஒரே மாதிரி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

ஒரு நண்பகலில் மணியக்காரர் நிலத்து கிணற்றடிக்காய் நடந்து போய்கொண்டிருந்தான். கிணத்திற்குள் மார்பு வரை ஏற்றிக் கட்டிய பாவாடையோடு லட்சுமி நீச்சல் அடித்து குளித்துக் கொண்டிருந்தாள். லட்சுமிக்கும் அவன் வயதிருக்கும் பல வருடங்களாய் பார்த்த பெண் தான் என்றாலும் அவளை இப்படி இதற்கு முன்பு பார்த்ததில்லை. சாமிக்கு முதன் முறையாய் காதலுணர்வும் காம உணர்வும் ஒரே சமயத்தில் மேலெழுந்தது. அதுவரை அவன் கனவில் கூட பெண்ணைப் பற்றி யோசித்ததில்லை. ஏற்கனவே தெரிந்த பெண் என்பதால் என்ன லட்சுமி குளிக்கிறியா எனக் கேட்டபடியே கிணறில் இறங்கினான். லட்சுமியும் நீயும் குளிக்க வரியா என சாதாரணமாக கேட்டாள். சாமிக்கு உடல் புல்லரித்தது. நீருக்கு சமீபமான திட்டில் அமர்ந்து கொண்டு அவளைப் பார்த்தான். குறு முலைகள் நீரில் நனைந்து சன்னமான நீலப் பாவாடையோடு ஒட்டிக் கொண்டிருந்தன மொட்டுப் போன்ற காம்புகள் துலக்கமாய் தெரிந்தன. சாமியின் உடலில் என்னவோ ஆனது. ஒரு புது உலகம் அவனுக்காய் திறந்து கொண்டது. அந்த நிமிடத்திலிருந்து அவன் லட்சுமியைக் காதலிக்க ஆரம்பித்தான்.

மேலும்



No comments:

Featured Post

test

 test