Wednesday, June 14, 2017

குரங்குப் புத்தியும் பிழைகளற்ற நிகழும்


இரண்டு வாரங்களாக ஓஷோவின் சொற்பொழிவைக்  கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  நோன்புக் காலம் என்பதால் அலுவலக நேரம் மிகக் குறைவு. அலுவலகத்தில் ஐந்து மணி நேரமென்றால் அதற்குச் சரிபாதி காரில் இரண்டரை மணி நேரம். ஓஷோவைத் துணைக்கு அழைத்துக் கொண்டதால் இந்த அலுப்பு சுத்தமாய் தெரியவில்லை. வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடன் பயண நேரத்தைக் கடந்து விட முடிகிறது. 1984 ஆம் வருடம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அமெரிக்காவில் ஓஷோ நிகழ்த்திய உரைகள்  From Unconciousness to Consciousness என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கிறது.  முப்பது மணி நேரத்திற்கு மேல் நீளும் பேச்சு. ஒரு நொடி கூடத் தொய்வடைய வைக்காத பேச்சு. வெடிச்சிரிப்பும் கும்மாளமுமாய் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

மதங்கள், வழிபாட்டு முறைகள்,  தேவதூதர்கள், மெசையாக்கள், தீர்த்தங்கரர்கள், புத்த பிட்சுகள், சங்கராச்சாரியார்கள், போப்புகள், என ஒருவரையும் விடாமல் காய்ச்சி எடுக்கிறார். மிக ஆணித்தரமான வாதங்களை இவற்றிற்கு மற்றும் இவர்களுக்கு எதிராக முன் வைக்கிறார். கேட்க கேட்க புதுப் புது கதவுகள் திறக்கின்றன. காந்தியின் எளிமை குறித்தும் உணவு குறித்தும் ஓஷோ கிண்டலாய் விமர்சிக்கும்போது எழும் சிரிப்பு அடங்க வெகு நேரமாகிறது. ஆனால் இந்த அத்தனை தர்க்கங்களையும் உள்வாங்கிக் கொள்வதோடு நிறுத்திக் கொள்கிறேன். அவரே சொல்வது போல் அவரைப் பின் தொடர்பவர்களென யாரும் இருக்க கூடாது. சுயத்தை மீட்டெடுக்க வைப்பதே இத்தனைப் பேச்சுக்களின் நோக்கம். அந்த நோக்கத்தை நான் சரியாகப் புரிந்து கொண்டதாய் நினைக்கிறேன்.

குரங்கின் வழி வந்ததால் மனிதன் இயல்பாகவே குரங்கின் தோற்றத்தோடு அதன் சுபாவத்தையும் ஒத்திருக்கிறான்.  குரங்கால் ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க முடியாததைப் போலவே  நம் மனமும் புத்தியும் எண்ணங்களும் சதா அலைபாய்ந்து கொண்டே இருக்கின்றன. இரண்டாவது விஷயம் இன்னொருவரைப் போலச் செய்வது.  குரங்கிடமிருந்துதான்  இந்த இமிடேட் செய்யும் சுபாவமும் நமக்கு வந்திருக்கிறது. நாம் எப்போதுமே பிறரைப் போல வாழ்கிறோம் அல்லது மற்றவர்களைப் போலாக மெனக்கெடுகிறோம். மற்றதைப் பார்த்து ஏங்கியே செத்தும் போகிறோம். தனித்தன்மை என்பது குறித்து யோசிக்கக் கூட மறுக்கிறோம். இந்தக் குரங்குப் புத்தியிலிருந்து வெளிவந்து விட்டாலே நிறைய துன்பங்களைத் தவிர்க்க முடியும் எனத் தோன்றுகிறது. 

பயல்களிடம் ஓஷோ சொன்ன குரங்கு குல்லாய் கதையை சொன்னேன். இந்த இரண்டு அடிப்படை புத்திகளை மட்டும் சிறு வயதிலேயே களைந்து விட்டால் போதும். பெரும்பாலான பிரச்சினைகளைத் தாண்டி வந்து விடலாம்.

மதம் என்கிற பெயரில் சித்தாந்தம் என்கிற பெயரில் சொர்கத்தில் சிறப்பான வாழ்வு என்ற பெயரில் மனிதன் தன்னை வதைத்துக் கொள்வதை ஓஷோ மிகக் கடுமையாய் சாடுகிறார். எளிமை மிகப் போலித்தனமானது என்கிறார். எளிமை மீது எனக்கும் பெரிய மதிப்பில்லை. பெரும்பாலான எளியர்கள் அதை தங்களின் வலிமைக்கான, அதிகாரத்தைச் சென்றடைவதற்கான கருவியாகத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது தமிழ் சூழலில் கண்கூடு. காந்தியின் எளிமை இன்றளவும் வியந்தோந்தப்படுகிறது. ஆனால் ஓஷோ அதை தரைமட்டமாக்குகிறார்.  காந்தி வறுமையை மக்களிடம் புகுத்தினார் என்கிறார். தன்னை வருத்திக் கொள்பவன் மாசோகிஸ்ட். பிறரை வருத்துபவன் சாடிஸ்ட். மிக அபூர்வமானவர்களே ஒரே நேரத்தில் சாடிஸ்டாகவும் மாசோகிஸ்டாகவும் இருக்கின்றனர். காந்தி அத்தகைய மாசோ சாடிஸ்ட் என வறுத்தெடுக்கிறார். காந்தி ஆசிரமத்தில் வழங்கப்படும் வேப்பிலைச் சட்னியையும், கொசுக் கடிக்காமல் இருக்க மண்ணென்ணையை உடம்பில் பூசிக் கொள்வதையும் காந்தியின் மாசோகிஸ சாடிசங்களுக்கான உதாரணங்களாகச் சொல்கிறார். ஒரு அமெரிக்கர் காந்தி ஆசிரமம் வந்து வேப்பிலைச் சட்னியை சாப்பிடும் அனுபவத்தை விவரிக்கும் போது சிரிப்பை அடக்கமுடிவதில்லை.


ஒரேகனில் இருக்கும் ரஜனீஷ்புர ஆசிரமம் ஏன் இவ்வளவு ஆடம்பரமாக இருக்கிறது என்பதற்கு, ”மன்னித்துக் கொள்ளுங்கள் இப்போதைக்கு இவ்வளவு வசதிதான் முடிந்தது விரைவில் இன்னும் வசதியாக இந்த ஆசிரமத்தை மாற்றுகிறோம்” எனப் பதில் சொல்கிறார். 

சுயவதை போலித்தனமானது. மதம், கடவுள், ஆன்மீகம், ஒழுக்கம், கர்மா எனப் பல்வேறு பெயர்களில் அதை இன்னொருவரின் மீது செலுத்துவது என்பது குரூரமானது. மேலும் ஓஷோ தன்னிடம் வருபவர்களிடம் இப்படி இருக்கச் சொல்கிறார். அவரது வார்த்தைகளில்,

I teach you to live tremendously, ecstatically, in every possible way. On the physical level, on the mental level, on the spiritual level, live to the uttermost of your possibility. Squeeze from each single moment all the pleasures, all the happinesses possible, so that you don't repent later on that, "that moment passed and I missed."

நிஜமாகவே இப்படி வாழத்தான் எனக்குப் பிடித்திருக்கிறது. ”நினைவின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பிழைகளின் அவமானம் ” என்ற சுராவின் வரியை இலக்கியவாதிகளான நாம் நினைவில் வைத்திருப்போம். பிழையற்ற அவமானமற்ற நினைவுகளிற்கு, நிகழை முழுமையாய் வாழ்வதுதான் சரியான வழிமுறையாக இருக்கும். நானும் அதை நோக்கி நகர்வதாத்தான் தோன்றுகிறது.



No comments:

Featured Post

test

 test