Sunday, June 25, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தொன்று


"பூ மொழம் எவ்ளோப்பா?"

அகத்திய மாமுனி நிமிர்ந்தார். பூக்கட்டிக் கொண்டிருந்த விரல்கள் நின்றன.

"ரெண்ரூவாம்மா"

" நாலு மொழம் கொடுப்பா"

 மாமுனி சுற்றி வைக்கப்பட்டிருந்த பூச்சரத்தை மெதுவாய் அளந்து நாலாவது முழ முடிவில் நூலை அறுத்து ஒரு வாழையிலையில் வைத்து நீட்டினார்.   பத்து ரூபாய் தாளிற்கு மீதிச் சில்லறையக் கொடுத்து விட்டு மீண்டும் பூத்தொடுக்க ஆரம்பித்தார். சாலையில் நடமாட்டம் கூடியது. அருகிலிருந்த கேசட் கடையில் இருந்து மாரியம்மன் பாடலொன்று சப்தமாய் உயிர் கொண்டது. வெயில் ஏற ஏற பேருந்துகளின் இரைச்சல் அதிகமானது. ஒரு சிறுமி சாமிக்கு பூ கொடுங்க எனக் கை நீட்டினாள். குவித்து வைத்திருந்த சாமந்திப் பூவை அப்படியே அள்ளி சாமி அவளின் சிறு கையில் போட்டார். சிறுமி போனதும் துர்க்கா கையில் எவர் சில்வர் தூக்குப் போசியோடு கடைக்குள் நுழைந்தாள்.

சாப்ட்ரு என்றாள்.  மாமுனி எழுந்து கொண்டார். பின் புறமாய் போய் கைகழுவி வந்தார். கிண்ணத்தில் நான்கைந்து இட்லிகள் சாம்பாரில் ஊறி இருந்தன. மெதுவாய் பிட்டு வாயில் போட்டுக் கொண்டார். இட்லி கரைந்தது. வேக வேகமாய் உண்டார். பின் தூக்குப் போசியோடு பின்புறம் போய் கையையும் பாத்திரத்தையும் கழுவி மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டார். விரல்கள் தாமாகவே பூத் தொடுக்க ஆரம்பித்தன. துர்க்கா கல்லாவைத் திறந்து நான்கைந்து பத்து ரூபாய் தாள்களை எடுத்துக் கொண்டாள்.

"மத்யானத்துக்கு என்னா வோணும்?" என்றாள். மாமுனி நிமிர்ந்து அவளையே பார்த்தார். அவளாகவே
"வர்ர வழில விரால் மீனு வித்துகினு போனான். வாங்கிரவா?" என்றாள் 

சரி என தலையசைத்தார். துர்க்கா கடையை விட்டு வெளியேறினாள். சாமி மீண்டும் பூத் தொடுக்க ஆரம்பித்தார்.

ஒரு நண்பகலில் துர்க்காவின் வீட்டிலிருந்து இறங்கிய மாமுனி நேராய் மலையை நோக்கி நடந்தார். ரமணரிடம் போய் விடைபெற்றுக் கொண்டு அவர் உதவியோடு கமண்டலத்தை மீண்டும் கண்டறிந்து, தன் சக்திகளைத் திரட்டிக் கொண்டு பொதிகை மலைக்குச் சென்றுவிடும் திட்டத்தோடுதான் நடந்தார். நடக்க நடக்க அவர் உள்ளம் துர்க்காவிடமே திரும்ப வந்தது. முந்தின நாள் இரவின் மகாக் கலவி அவர் உடலின் ஒவ்வொரு செல்லிலும் நினைவுகளாய் தேங்கி விட்டிருந்தது. இன்று காலையில் அவர் அரைக் கண்ணில் கண்ட துர்க்காவின் குளித்த முடித்த உடல். குளிக்கும் ஓசை, அந்த ஸ்ஸ் சப்தம் அவரை மேலும் நடக்க விடவில்லை. ரமணாசிரமம் வரைப் போய் நின்றுவிட்டார். மலையின் மீது கால் வைக்க அவர் பாதம் அனுமதிக்கவில்லை. திரும்பி நடந்தார். ஆசிரமத்தை ஒட்டி இருந்த பூக்கடையில் அந்தச் சிறுமி இருந்தாள். அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.

"எங்க போற சாமி?" என்றாள்.

அப்படியே நின்றார்.

"ஏன் நிக்குற  உள்ள வா " என்றாள்.

மாமுனி கடைக்குள் போய் அமர்ந்து கொண்டார். அவள் தன் சின்னஞ்சிறு விரல்களால் முல்லைப் பூவை நேர்த்தியாய் நூலில் கட்டிக் கொண்டிருந்தாள். அதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர். எங்கிட்ட கொடு என அச்சரத்தை வாங்கி கட்ட ஆரம்பித்தார். பத்து நிமிடத்தில் பூ கட்டும் லாவகம் அவருக்குப் பிடிபட்டது. வாழ்வின் ஒட்டு மொத்த நோக்கமே பூத்தொடுப்பதுதான் என்பது போல அதில் ஆழ்ந்து போனார்.

"த இங்கியா இருக்க, குள்ச்சிட்டு வர்ரதுக்குள்ள ஆள  காணமேண்ணு நினைச்சேன்"

என்றபடியே துர்க்கா உள்ளே வந்தாள். சிவப்பு நிற ஜாக்கெட்டும் மஞ்சள் நிறப் புடவையையும் அணிந்திருந்தாள். நிலவைப் போல நெற்றியில் அத்தனை பெரிய குங்கமப் பொட்டு. சாமி அநிச்சையாய் காளி என முணுமுணுத்தார். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார். மலையின் மீது தன் பாதம் படாததற்கான காரணம் அவருக்குப் புரிந்தது.

" ந்தா சாப்ட்ரு" என்றபடியே அவள் கொண்டுவந்திருந்த சாதத்தை போசியிலிருந்து தட்டில் போட்டு நீட்டினாள். மாமுனி சாதுவாய் அதை வாங்கி மெதுவாய் சாப்பிட ஆரம்பித்தார். அவ்வளவுதான். அவரின் சகலமும் சாஸ்வதம் அடைந்தது. பகல் முழுக்கப் பூத் தொடுப்பார். உணவு வேளாவேளைக்கு வந்துவிடும். பூக்கள் தீர்ந்ததும் சாலையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவார். வித விதமான மனிதர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார். வாகனங்களின் விரைவு ஆரம்பத்தில் மிரட்சி ஏற்படுத்தினாலும் போகப் போகப் பழகியது. பணம் குறித்து அறிந்து கொண்டார். கணக்கை சிறுமி சொல்லித் தந்தாள். எழுத்துக்களையும் அவளே அறிமுகப்படுத்தினாள். இரவு ஏழு மணி வரை கடையில் இருப்பார். கடைசி வாடிக்கையாளரான பேங்க் அலுவலர் பூ வாங்கிக் கொண்டு போனதும் டாப்பை இழுத்து மூடி பூட்டு போட்டுவிட்டு தேனிமலைக்காய் நடக்க ஆரம்பிப்பார். அவர் போகும் நேரத்திற்கு துர்க்கா சமையலை முடித்திருப்பாள். இவர் பின்புறமாய் போய் கொல்லையில் தயாராய் இருக்கும் நீரில் குளித்து விட்டு கம்பியிலேயே காய்ந்து கொண்டிருக்கும் இன்னொரு வேட்டியை சுற்றிக் கொண்டு உள்ளே வருவார். துர்க்கா தட்டு நிறைய சோறு போட்டு சுடச் சுடக் குழம்பு ஊற்றிக் கொடுப்பாள். நிதானமாய் சாப்பிட்டு முடிப்பார். சாப்பிட்டதும் பாயை உதறிப் போட்டு படுத்துவிடுவார்.

துர்க்கா மெதுவாக சாப்பிட்டு விட்டு அடுக்களையை ஏற கட்டிவிட்டு புடவையை அவிழ்ந்து கொடியில் போட்டுவிட்டு அவர் அருகில் வந்து படுப்பாள். மாமுனி அதற்காகக் காத்துக் கொண்டிருப்பார். சாமிநாதன் பெரும்பாலும் இரவு வருவதில்லை. எங்கேயாவது குடித்துவிட்டு விழுந்து கிடப்பான். அல்லது மலை சுற்றும் பாதையில் படுத்து தூங்கிவிட்டு காலை நேராய் கடைக்கு வந்து துர்க்காவிடம் காசு வாங்கிப் போவான். ஒரு நாள் இரவு போதையேறாமல் வீட்டிற்கு வந்தவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாமுனியைப் பார்த்து நெற்றியைச் சுருக்கினான்.

"நீ அந்த மெண்டல் கேஸ் இல்ல, ங்கோத்தா எங்கூட்ல என்னடா பன்ற?" என மாமுனி மீது பாய்ந்தான். துர்க்கா அவனைப் பிடித்து வெளியே தள்ளினாள்.

"இனிமே வூட்டுப் பக்கம் வராத. இது இங்கதான் இருக்கும்" என அழுத்தந்திருத்தமாக சொல்லிவிட்டாள். சாமிநாதன் தெருவில் நின்று வண்ட வண்டையாய் அவளையும் மாமுனியையும் திட்டித் தீர்த்தான். அக்கம் பக்க வீடுகளிலிருந்து ஆண்கள் வந்து அவனைச்
 சமாதானப்படுத்தினர். இருட்டிலிருந்து ஒரு குடிகாரன் குழறலாய் கத்தினான்

"அந்த சாமியாரு ஒரு மாசமா ஒம்பொண்டாட்டிய ஓக்குறான் ங்கோத்தா உனக்கு இப்பதான் தெரிஞ்சதா" எனக் காறித் துப்பினான்.

சாமிநாதன் ஆத்திரத்தை அடக்க முடியாமல்  "அடங்கோத்தா தெவ்டியாப் பையா, ஒம் பொண்டாட்டிய ஊரே ஓக்குது நீலாம் பேச வந்துட்டியாடா" என கையில் கிடைத்த கல்லை அவன் மீது எறிந்தான். இருளில் அது எங்கேயோ போய் விழுந்தது. குடிகாரன்  மனைவி  அவனைத் துடைப்பத்தால் அடித்து நொறுக்கி வீட்டிற்குள் இழுத்துப் போனாள். அந்த ரகளைக்குப் பிறகு சாமிநாதன் வீட்டுப் பக்கம் வருவதில்லை. ஆனால் தவறாமல் காலையில் வந்து துர்க்காவிடம் காசு வாங்கிப் போவான். என்றாவது நிதானமான போதை மாலை வேளைகளில் வந்து அவளிடம் ஆசையாகப் பேசுவான். மீன் கொழம்பு வச்சி கொடம் பொண்ணே எனக் கெஞ்சுவான். ஞாயித்துக் கெழம வூட்டாண்ட வா என்பாள். சில நாட்களில் மாமுனியிடம் வந்தும் பணம் வாங்கிக் கொண்டு போவான்.

அன்று மதிய வாக்கில் கடைக்கு வந்தான். காலையிலிருந்து சுற்றிச் சுற்றி வந்தவனுக்கு யாரும் சரியாய் மாட்டவில்லை. வாத்தி எங்காவது தென்படுவானா எனப் பார்த்துக் கொண்டே கடைக்குள் அமர்ந்து கொண்டிருந்தான். எங்கிருந்தோ வந்த மழை திடீரென அடித்துப் பெய்தது. சாமிநாதன் திகைத்தான். இன்னாபா இது அதிசியம் என்றபடியே ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு கடையில் உட்கார்ந்து விட்டான். பூக் கட்ட பூவும் இல்லை. உதிரிப் பூ வாங்க ஜோதி மார்க்கெட்டிற்குப் போன துர்க்கா மழையில் மாட்டிக் கொண்டாளோ எனக் கவலையாய் மாமுனி சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போதுதான் அந்த பைக் கின் ப்ரேக் சப்தம் கேட்டது. சாமி அவசரமாய் எழுந்து சாலைக்கு வந்தார். ஏ ஏ எனக் குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேட்டன. பைக்கால் தூக்கி எறியப்படது ரவி என்பதை சாமி கண்டுகொண்டான். அட நம்ம வாத்திய அடிச்சிட்டானுங்களே எனக் கத்தியபடியே ஓடினான். மாமுனி மொத்த சம்பவத்தையும் பார்த்துக் கொண்டு எந்த அலட்டலும் இல்லாமல் அமர்ந்து கொண்டிருந்தார்.

- மேலும்

No comments:

Featured Post

test

 test