Saturday, July 8, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தேழு

" ஐயோ என்ன விட்டுடு"

என்கிற சாமிநாதனின் கதறலை துர்க்கா பொருட்படுத்தவில்லை. தரையில் மல்லாந்து கிடந்தவனின் மார்பில் இன்னொரு முறை ஆத்திரம் மிக மிதித்தாள். அவன் மார்பெலும்புக்கூடு உடைந்திருக்கலாம். சாமிக்கு நெஞ்சு அடைத்துக் கொண்டது. செத்தோம் என நினைத்ததுதான் அவன் கடைசி நினைவு. ஏற்கனவே போதையின் பிடியில் இருந்தவன் சுத்தமாய் மயங்கினான். மரண பயம் உறைய இன்னொரு மூலையில் பெரியசாமி மண்டை உடைந்து கிடந்தார். இரத்தம் வழிந்து அவர் அணிந்திருந்த சட்டையின் நிறத்தை மாற்றியிருந்தது. அவர் மண்டையைப் பிளந்த உலக்கை துர்க்காவின் கையில் இருந்தது. போதைக்கு அவள் தன்னை முழுமையாய் ஒப்புக் கொடுத்திருந்ததால் பச்சாதாபங்கள் காணாமல் போயிருந்தன. திருட்டுத் தாயோலிங்களா என ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருந்தவளின் மூச்சிரைத்தது. உலக்கையை எறிந்துவிட்டு வெளித் திண்ணையில் போய் அமர்ந்து கொண்டாள். அக்கம் பக்கம் இருந்தவர்கள் வீட்டை நோக்கி வர ஆரம்பித்தார்கள். இவர்கள் போட்ட சப்தம் கேட்டு சற்றுத் தொலைவில் இருந்த பெரியசாமி கவுண்டர் வீட்டு விளக்குகள் சடாரென எரிந்தன. நான்கைந்து பேர் ஓடி வந்தார்கள். இவள் ஒரு பிசாசைப் போல வெளியே அமர்ந்திருந்ததைப் பார்த்து சந்தேகித்து உள்ளே ஓடினார்கள். அய்யய்யோ எனக் கத்தியபடியே பெரியசாமியைத் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தார்கள். கார எட்றா கார எட்றா எனக் கத்தினார்கள். கவுண்டர் வீட்டுப் பெண்கள் சூழ்ந்து கொண்டு கதற ஆரம்பித்தார்கள். அந்த இரவு அலங்கோலமாய் கிடந்தது. யாருக்கும் எதுவும் புரியவில்லை.

 சாமிநாதனை யாரோ எழுப்பிப் பார்த்தார்கள். அவன் மயங்கி இருந்தான். செத்துட்டானா என சந்தேகித்து மார்பில் காதை வைத்துக் கேட்டார்கள். உசிரு இருக்குது. இவனையும் வண்டில தூக்கி போடுங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போங்க என்பதைக் கேட்க யாருமில்லை. வண்டி ஏற்கனவே மருத்துவமனையை நோக்கி விரைந்திருந்தது. துர்க்காவை கவுண்டர் வீட்டுப் பெண்கள் உலுக்கிக் கொண்டிருந்தனர். என்னாச்சின்னு சொல்லுடித் தேவ்டியா முண்ட என அவர் கன்னத்தில் பளார் பளாரென அறைந்தார்கள். துர்க்கா உறைந்திருந்தாள். அவளை யாரும் எதுவும் செய்துவிட முடியவில்லை. திருட்டு முண்ட குடிபோதையில இருக்கு என ஆத்திரத்தில் அவளை ஓங்கி அறைந்தார்கள். துர்க்கா அப்படியே சரிந்தாள். 

 ழைய பெட்டியில் ஒன்றையும் தேற்ற முடியாத ஆத்திரத்தில் வெளியே வந்த சாமிநாதன் நேராய் பெரியசாமி கவுண்டர் வீட்டு முன்பு போய் நின்றான். அவர் வெளியில் எங்கேயோ கிளம்பிக் கொண்டிருந்தார். இவனைப் பார்த்து முன்பு போல சிரிப்பதில்லை. என்ன சாமி எனப் பொதுவாக கேட்டார். சாயந்திரம் வீட்டுப் பக்கம் வாங்க, உங்க கிட்ட முக்கியமான விஷயம் பேசனும் எனச் சொல்லிவிட்டு பதிலைக் கூட எதிர்பாராமல் வீட்டிற்குப் போனான். துர்க்கா இன்னும் எழவில்லை. அவள் உறங்கும் கோலம் பார்த்ததும் இவனிற்குள் ஆத்திரம் முசுமுசுவென மூண்டது. இவ ஆங்காரத்த மொதல்ல அடக்கனும். சாமியின் மூளை தீவிரமாக யோசித்தது. கட்டிலுக்கு கீழே வைத்திருந்த விஸ்கி பாட்டிலகளில் ஒன்றை வெளியே இழுத்து, மூடியைத் திருகி அப்படியே வாயில் சரித்துக் கொண்டான். வெளியில் போய் உட்கார்ந்து கொண்டான். 

துர்க்கா அவன் அரவம் கேட்டு விழித்தாள். அவளின் தினசரியைத் துவங்கினாள்.சாமி மெதுவாக குடித்தான். சமையல் ஆனதும் உள்ளே வந்து சாப்பிட்டான். மீண்டும் வெளியில் போய் அம்ர்ந்து கொண்டான். துர்க்கா அவனைப் பொருட்படுத்தவில்லை. வீட்டு வேலைகளில் மூழ்கி இருந்தாள். மதிய சாப்பாட்டை ஒரு தூக்கில் போட்டுக் கொண்டு போய் அப்பாவிற்கு கொடுத்து விட்டு வந்தாள். அசதியில் மீண்டும் போய் கட்டிலில் படுத்துக் கொண்டாள். நான்கு மணி வாக்கில் பெரியசாமி வந்தார். 

இன்னா சாமி ஒரு மாதிரி இருக்கயே என்றபடியே திண்ணையில் அமர்ந்தார். சாமி அதுவரை மனதிற்குள் தீட்டிக் கொண்டிருந்த கணக்கை செயல்படுத்த ஆரம்பித்தான். 

இன்னிக்கு பவுர்ணமி காளி அப்படியே முழுசா எனக்குள்ள வந்து உட்கார்ந்திருக்கா அவள அமைதிபடுத்தத்தான் கொஞ்சம் போல குடிச்சேன் என்றபடியே திரும்பி பின்னால் வைத்திருந்த புட்டியை எடுத்து, தயாராய் வைத்திருந்த டம்ப்ளரில் கொஞ்சம் போல ஊற்றி பெரியசாமியிடம் நீட்டினான். குடிங்க என்றான். பெரியசாமி தயங்கினார். பொழுதோடவா என்றார். அட அடிங்க ஒண்ணும் ஆவாது என்றான். அவர் வாங்கி வாயில் சரித்துக் கொண்டார். நல்லாருக்கே என்றவரிடம் ஸ்காட்ச் என இளித்தான். இன்னொன்னு போடுங்க என்றபடி இரண்டாவது ரவுண்டை அதிகமாய் ஊற்றிக் கொடுத்தான். அதையும் வாங்கி ஒரெ மூச்சில் இழுத்தார். 

 சாமி தெம்பானான் அவன் நினைத்ததை விட இவர் பெருங்குடிதான். தொண்டையைக் கனைத்துக் கொண்டே 

 "கேக்குறேன்னு தப்பா நினைச்சுகாதீங்க இவ்ளோ சொத்துக்கும் வாரிசே இல்லாம இருக்கே என்னன்னாவது யோசிச்சீங்களா?" 

" எல்லாரும் கேக்குற கேள்விதான் சாமி, ஆனா என்ன செய்ய? காலம் கடந்திருச்சே., அவளுக்கும் ஒரு பொண்ணுக்கு மேல பொறக்கல..,"  

"சரி அதுல போய் என்ன இன்னொன்னு கட்டுங்க"  

"அட போய்யா., இந்த வயசுல  போய் " 

"என்னா வயசு போங்க. ஆள் பாக்க கிண்ணுதான இருக்கீங்க" 

 பெரியசாமி க்ளாசை நீட்டினார். இன்னொன்னு போடு. 

  சாமி ஆவலாய் நிரப்பிக் கொடுத்தான். அதையும் ஒரே மூச்சில் இழுத்து விட்டு எழுந்து போய் காறித் துப்பிவிட்டு வந்தார். 

 சாமி,  துர்க்கா எனக் கத்தினான். 

தூங்கிக் கொண்டிருந்தவள் அரண்டு எழுந்து வெளியில் வந்தாள். அவளைப் பார்த்ததும் சாமி இளித்தான். 

"கட்ச்சிக்க ஏதாவது எட்த்தாமே., அதிசியமா கவுண்டர் நம்மூட்டுக்கு வந்திருக்கார்" 

சேலையை சரியாகப் போடாமல் வந்து நின்றதால் துர்க்காவின் முலைகள் பளிச்செனத் தெரிந்தன. பெரியசாமி அவளை அப்போதுதான் முதன் முறையாய் பார்ப்பதுபோல அவ்வளவு ஆசையாகப் பார்த்தார். அவர் பார்வையை உணர்ந்து அவசரமாய் துர்க்கா உள்ளே திரும்பிப் போனாள். காய்ந்த மல்லாட்டை இருந்தது. அதை வறுத்து எண்ணெய் மிளகாய்த்தூள் போட்டு ஒரு தட்டில் கொண்டு வந்து வைத்தாள். பெரியாசாமி கொஞ்சம் அள்ளி வாயில் போட்டுக் கொண்டார். காரம் மூளையை எட்டியதும் ஹா என்னம்மா இருக்கு என்றார். 

 சாமி அடுத்த ரவுண்டை ஊற்றியபடியே 

"எல்லாம் நம்ம ட்ரைனிங்தான். அருமையா சமைப்பா, அத விட அருமையா குடிப்பா. போதையாயிட்டா அத விட அருமையா என்ன மேல தூக்கி போட்டுட்டு பண்ணுவா" 

எனச் சொல்லியபடி பெருங்குரலில் சிரித்தான். முகத்தை சுளித்த துர்க்கா அவசரமாய் உள்ளே போனாள். பெரியசாமிக்கு போதை ஏறியிருந்தது. அவன் சொன்னதைக் கேட்டதும் குறும்பாய் சிரித்தார். 

"உன்ன மட்டும்தான் பண்ணுவாளா?" என்றார். 

"உங்களுக்கும் வேணுமா?" என நேரடியாக ஆரம்பித்தான். 

அவர் லேசாக தடுமாறினார். 

"இதுல போய் என்ன கவுண்டரே. உள்ள போங்க" என்றான். 

பெரியசாமிக்கு உடல் முறுக்கியது எழுந்து உள்ளே போனார். துர்க்கா கட்டிலில் அமர்ந்திருந்தவள் எழுந்தாள். என்ன வேணும் என்றாள். நீதாம்மே என ஆசையாய் அவள் மீது பாய்ந்தார். துர்க்கா இதை எதிர்பார்திருந்தாள். மேலே வந்து விழுவதற்குள் ஒதுங்கிக் கொண்டாள். கட்டிலில் போய் விழுந்தவர் சுதாரித்துக் கொண்டு எழுந்தார். 

"இத பாரு நீ இப்ப இருக்கிறது என் வூடு. இன்னும் உனக்கு என்ன வோணும்னு கேளு தரேன். நான் யார்னு தெரியுமில்ல" 

என மீசையை நீவினார். 

 துர்க்கா நிதானமாய் சொன்னாள். "என் வூட்டுக்காரனுக்கு புத்தி பிசகிடுச்சி. உங்க மரியாதைய காப்பாத்திகிட்டு வெளிய போய்டுங்க" என்றாள். 

 பெரியசாமி ஆத்திரமானார். என்னடி பெருசா பத்தினி வேசம் போடுற என எழுந்து அவளைப் பிடித்து இழுத்து கட்டிலில் தள்ளி மேலே படர்ந்தார். துர்க்கா அவரைப் பிடித்து தள்ளினாள். தடுமாறியவரை எட்டி உதைத்தாள். கட்டிலிலிருந்து கீழே விழுந்தவரால் எழ முடியவில்லை. சத்தம் கேட்டு சாமி உள்ளே ஓடிவந்தான். துர்க்காவிற்கு ஆத்திரம் முற்றியிருந்தது. 

"அடத் தேவ்டியாபையா கட்ன பொண்டாட்டியவா கூட்டி கொடுக்கிற?" எனக்கத்தியபடியே அவன் மீது பாய்ந்தாள். சாமி அவளை மடக்கினான். அதே நேரம் பெரியசாமி சுதாரித்துக் கொண்டு எழுந்து  பின்புறமாய் அவள் சேலையை உருவி கைகளை பின்னால் வளைத்துக் கட்டினார். சாமி இன்னொரு பாட்டிலைத் திறந்து அவள் வாயில் ஊற்றினான். துர்க்கா முரண்டு பிடிப்பதை நிறுத்தியிருந்தாள். நிதானமாய் குடித்தாள். மயங்கியதைப் போல் உட்கார்ந்தாள். சாமி கள்ளச் சிரிப்புடன் வெளியேறினான். பெரியசாமி துர்க்காவை கட்டிலில் தள்ளி, பாவாடையே மேலே ஏற்றினார். அவள் அழகின் பிரம்மாண்டம் பார்த்த உடனேயே அவருக்கு கழண்டது. ஏற்கனவே பெரிய போராட்டம் ஒன்றையும் நடத்தியிருந்ததால் உடல் விதிர்த்திருந்தது. அவளைத் தொடக் கூட இயலாமல் வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு வெளியேறினார். 

துர்க்கா கைகளை விடுவித்துக் கொண்டாள். சேலையை அணிந்து கொண்டாள். சமையலறைக்குப் போய் மூலையில் வைத்திருந்த உலக்கையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். சாமி அடுத்த ரவுண்டை பெரியசாமிக்கு ஊற்றிக் கொண்டிருந்தான். வந்து நின்றவளை இருவரும் கவனிக்கவில்லை. துர்க்கா உலக்கையை ஓங்கி பெரியசாமி மண்டையில் நச்சென இறக்கினாள். அலறக் கூட இயலாமல் அதிர்ச்சியில் சரிந்தார். சாமி மிரண்டான். அடுத்த அடி இறங்குவதற்குள் சுதாரித்து திண்ணையில் இருந்து இறங்கி ஓடினான். அவள் உலக்கையை எறிந்தாள். முதுகைப் பலமாய் தாக்கி தலைக் குப்புற விழுந்தான். 

சப்தம் வெளியில் கேட்கும் என யூகித்தவள் ஒரு கையால் பெரியசாமியின் தலைமுடியையும் இன்னொரு கையால் சாமியின் தலைமுடியையும் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து உள்ளே போட்டாள். பெரியசாமி எழுந்து கொள்ள முயன்றார். சாமி கூப்பாடு போட்டான். துர்க்கா மீண்டும் வெளியில் போய் விழுந்து கிடந்த உலக்கையை எடுத்து வந்து பெரியசாமி தலையில் இன்னொரு பலமான அடியை இறக்கினாள். அவர் முழுமையாய் மயங்கினார். சாமி தவழ்ந்து வந்து அவள் காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.  

"போதைல புத்தி பிசகிடுச்சி மன்னிச்சு வுட்ரு" எனக் கதறினான். கால்களாலேயே அவனை விலக்கியவள். மார்பில் ஓங்கி மிதித்தாள். உலக்கையை வயிற்றில் இறக்கினாள். வலி தாங்க முடியாமல் மல்லாந்தவனின் மார்பில் இன்னொருமுறை ஆழமாய் மிதித்தாள். 
அவன் மூர்ச்சையானதும் உலக்கையை எறிந்துவிட்டு வெளியில் போய் அமர்ந்து கொண்டாள்.

அதிகாலையில் சாமிக்கு நினைவு திரும்பியது. ஒரு கணம் என்ன நடந்தது எனப் புரியாமல் விழித்தான். மெல்ல மெல்ல அந்த நாளின் சம்பவங்கள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தன. உடலை அசைக்க முடியவில்லை அடிவயிறும் நெஞ்சும் அப்படி வலித்தது. எழுந்து நின்றான். சமையலறைக்குப் போய் தண்ணீர் எடுத்துக் குடித்தான். பெரியசாமியைக் காணவில்லை. அவர் பிழைப்பது கடினம் எனத்தான் தோன்றியது. அவராகவே போயிருக்க வாய்ப்பில்லை. யாராவது வந்திருக்க வேண்டும். அவசரமாய் வெளியில் போனவன் திண்ணையில் சரிந்து கிடந்த துர்க்காவைப் பார்த்தான். செத்துப் போய்விட்டாளோ என்ற பய எண்ணம் அவனிற்குள் எழுந்தது. மெல்ல அருகில் போய் மூக்கில் விரல் வைத்துப் பார்த்தான். சுவாசம் இருந்தது. அவளைச்
 சப்தம் போடாமல் உலுக்கினான். உள்ளே ஓடிப்போய் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து அவள் முகத்தில் அடித்தான். மூன்றாவது தண்ணீர் விசிறலுக்கு எழுந்து கொண்டாள்.

எதிரில் நின்றிருந்தவன் மீது பாயத் தயாரானாள். சாமி அவள் பாதங்களில் விழுந்தான்.

"மொத மொறையா புத்தி பிசகி தப்பு பண்ணிட்டேன். மன்னிச்சிரு" எனக் கதறினான்.

துர்க்கா சற்று சாந்தமானாள். சாமி தொடர்ந்தான்.

"கவுண்டனுக்கு என்னாச்சின்னு தெர்ல ஆனா பொழைக்கிறது கஷ்டம்னு தோணுது. விடிஞ்சதுன்னா நம்மள பொலி போட்ருவானுங்க" என நடுங்கினான்.

துர்க்கா எழுந்தாள். கூந்தலை உதறி முடிந்து கொண்டாள். வெளியில் எட்டிப் பார்த்தாள். தூரத்து வீடுகளில் லைட் எரிந்தது. தீர்மானமாய் உள்ளே வந்து இரண்டு மஞ்சள் பைகளில் கிடைத்ததெல்லாம் எடுத்து நுழைத்தாள். வா போகலாம் என அவனை இழுத்துக் கொண்டு பின்புறமாய் வெளியேறினாள். வயல்களில் புகுந்து பிரதான சாலை வந்தனர். நடந்தே சங்கராபுரத்தை அடைந்த போது கிழக்கு வெளுக்க ஆரம்பித்திருந்தது. ஒரு பால் லாரி ஹார்ன் அடித்துக் கொண்டு வந்தது. துர்க்கா ஓடிப்போய் நடு சாலையில் நின்றாள். வண்டி நின்றது இருவரும் ஏறிக்கொண்டார்கள். சாமி, வண்டி எங்கப் போவுது என விசாரித்தான். ஓட்டுனர் திர்ணாமல போவுது என்றார்.

சாமி முகத்தில் சாந்தம் படர்ந்தது. அயற்சியில் துர்க்கா கண்களை மூடிக் கொண்டாள்.

 - மேலும்

No comments:

Featured Post

test

 test