Thursday, August 24, 2017

பல்ப் 3. பல்ப்பின் இலக்கியக் காதல்

”நீ என்னிக்கு வர?”

 “நாளைக்கு நைட் அங்க இருப்பன்”

 “ஹோட்டல் போன் நம்பர் மெசேஜ் பன்றேன். கால் பண்ணி ரூம் புக் பண்ணிடு”

 “என்னது தனி ரூமா? அப்புறம் நான் என்ன டேஷ்க்கு அங்க வரனும்?”

 “ஏய் சும்மா உன் பேர்ல புக் பண்ணு. நான் இங்க ஒரு மாசமா தங்கி இருக்கறதால எல்லாரையும் தெரியும். நீ வந்து என் கூட தங்கினா தப்பா போய்டும். நீ அந்த ரூம்ல திங்க்ஸ் லாம் போட்டுட்டு யார் கண்லயும் படாம என் ரூம் க்கு வந்திடு.”  

“சரி. ஆனா ஒரு மாசமாவா ஹோட்டல்ல இருக்க?”

 “ஆமா டா இதோ இதோ ன்னு நாவல் இழுத்துட்டே போகுது. இந்த வாரத்துல முடிஞ்சிடும். எப்படி வந்திருக்குன்னு நீ வந்து படிச்சிட்டு சொல்லு”

 “நாவல் படிக்கறதுக்கா என்ன கூப்டுற?”

 “பின்ன வேற எதுக்காம்?”

 “உன்னப் படிக்க இல்லயா?”

 “கருமம் கேட்க சகிக்கல. ஏண்டா, நீ எழுதுற குப்ப நாவல் மாதிரியேதான் பேசுவியா?”

 “எல்லாம் என் தலையெழுத்துடி”

 “கோச்சுக்காதடா. என்னதான் இருந்தாலும் நீ க்ரைம் எழுத்தாளன் தானே”

 “நீ பெரிய இலக்கிய எழுத்தாளினியாச்சே ஏன் என்னப் போய் உன் நாவல படிக்க கூப்டுற?”

 “நீ நல்லாப் படிப்பேன்னுதாண்டா”

 “கொடும எனக்கு டபுள் மீனிங்காவாவே அர்த்தமாகுது”

 “நான் டபுள் மீனிங்க் லதான பேசினேன்”

 “பாவி இரு வந்து வச்சிக்குறேன்”

 “வா வா சீக்கிரம் வா”

 “காலைலயே சரக்காடி, கெறங்குற”

 “இல்லடா, நீ வா நேர்ல பேசலாம்”  

விக்ரம் கைப் பேசியைத் துண்டித்தான்.

லேனா. சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளர். விக்ரமைப் போன்ற பல்ப் எழுத்தாளர்களை மூர்க்கமாய் மறுக்கும் இலக்கியவாதி. சமூகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம் வெகுசன எழுத்துகள்தாம் என நம்பும் தூய இருதயம் கொண்டவள். சென்ற வருட இறுதியில் அவளுடைய பேட்டி ஒன்று ஆனந்த விகடனில் வெளிவந்திருந்தது. கேள்வி கேட்டவர் சம்பந்தமே இல்லாமல், புகழ் பெற்றிருக்கும் விக்ரமின் எழுத்தைப் பற்றி அபிப்பிராயம் கேட்டிருந்தார். லேனா விக்ரமின் ஒரே ஒரு நாவலை நான்கு பக்கங்கள் மட்டும் படித்ததாகவும் அதற்கு மேல் படிக்க முடியாத அளவிற்கு அந்நாவல் குப்பை எனவும், சாக்கடை எழுத்து எனவுமாய் பதில் சொல்லி இருந்தார். அவன் இந்தப் பேட்டியை வாசித்திருந்தாலும் பொருட்படுத்தவில்லை. சாகித்ய விருது வாங்கியவர் எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என அந்த மாத பெளர்ணமி இரவில் இதழில் நக்கலடித்துவிட்டுக் கடந்து போய்விட்டான். ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் அவன் அலுவலக விலாசத்திற்கு மலைக்க வைக்கும் எண்ணிக்கையில் கடிதங்களாய் வந்து குவிந்தன. எல்லாக் கடிதங்களுமே லேனாவை கண்டபடி வசைந்தும் அவனைப் புகழ்ந்துமாய் எழுதப்பட்டிருந்தன. விக்ரமே வியந்து போனான். திடீரென அவனுக்கு இக்கடிதங்களோடு லேனாவைப் போய் பார்த்தால் என்ன? எனத் தோன்றியது. உதவியாளரை அழைத்து அத்தனைக் கடிதங்களையும் ஒரு பெரிய சாக்குப் பையில் போட்டுக் கட்டி, காரில் வைக்கச் சொன்னான். அசோக்கிடம் கேட்டு அவளின் முகவரியைத் தேடிப் பிடித்தான். கே கே நகரில்தான் அவள் வீடு. அடுத்த அரை மணிநேரத்திற்குள் வீட்டின் முன்னால் போய் நின்று காலிங் பெல் அடித்தான்.

பதின்மங்களைக் கடந்திராத ஒரு பெண் கதவைத் திறந்து யார் வேணும்? எனக் கேட்டாள். லேனாவைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னான். ஹாலில் அமரச் சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டாள். ஹாலில் ஏராளமான புத்தகங்களோடு மிகப் பெரிய புத்தக அலமாரி ஒன்று கம்பீரமாய் நின்றிருந்தது. நடுத்தர வயதில் ஒரு பெண் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள்தான் லேனாவாக இருக்கக் கூடும். ஐந்து நிமிடத்தில் நைட்டி சகிதமாய் முகத்தை துண்டால் துடைத்தபடி லேனா ஹாலிற்கு வந்தாள். யாருங்க? எனக் கேட்டவளை நிமிர்ந்து பார்த்தான். சந்தன நிற லேனா அப்போதுதான் தூங்கி எழுந்தாள் போல, அவளின் மிகப் பெரிய கண்கள் பளிச்சென மின்னின. எழுந்து நின்று

 “நாந்தான் நீங்க சொன்ன சாக்கடை எழுத்துக்கு சொந்தமான விக்ரம்”

இரண்டு நொடி கண்களை இமைக்க மறந்து, சற்றுத் திகைத்து பின் சகஜமாகி “அட வாங்க வாங்க உட்காருங்க என்றபடியே பின்புறமாய் கழுத்தை திருப்பி மாலா, காபி கொண்டா” என்றுவிட்டு சொல்லுங்க என்றாள். அவனுக்கு அதற்கு மேல் பேச வார்த்தைகளே வரவில்லை. நொடிக்கொரு பாவணை காட்டும் அவளின் முகத்தையும் இரவு உடையில் தளும்பிய உடலின் கச்சிதத்தையும் பார்த்தும் பார்க்காமலிருக்க முடியாமல் தவிக்க ஆரம்பித்தான். அவளாகவே தொடர்ந்தாள்.

“நான் எதிர்பாத்தத விட ரொம்ப யங் ஆ இருக்கீங்க நானூறு நாவல் எழுதிட்டீங்களாமே க்ரேட்”

“நானூறு குப்பை”

மெதுவாகச் சிரித்தாள்.

“சாரி. நான் அப்படி சொல்லி இருக்க கூடாதுதான். பேட்டி முடிஞ்சதுமே நான் சொன்னது தப்புன்னு புரிஞ்சி சொன்னத எடிட் பண்ண சொன்னேன். வேணுன்னே போட்டிருக்காங்க “

“ம்ம் அவங்களோடதும் விக்கனுமே “

 “காபி குடிங்க “

குடித்துவிட்டு எழுந்தான்.

“சரி வரேங்க”

“என்ன விஷயமா வந்தீங்கன்னு தெரிஞ்சிக்கலமா?”

 “விகடன் பேட்டியக் கேள்விப்பட்டு சும்மா உங்கள பாக்க வந்தேன் அவ்ளோதான். வரேன்”

விக்ரம் சொன்னதை அவள் நம்பவில்லை. அவன் கண்களை ஆழமாய் பார்த்து பரவால்ல சொல்லுங்க என்றாள். எதுவும் பேசாமல் எழுந்து வெளியேறியவன் கேட்டைத் திறந்து கொண்டு வீட்டிற்கு முன்பு நிறுத்தியிருந்த காரைத் திறந்து பின் சீட்டில் கிடந்த மூட்டையை வெளியே இழுத்தான். பின்னாலேயே வந்தவள் கேட்டின் மேல் கையூன்றி

“என்ன மூட்டை? “ எனக் கேட்டாள்

ஒரு கை பிடிங்க” என்றான்.

லேனா தன் இடத்தில் இருந்து அசையாமல், மாலா எனக் குரல் கொடுத்தாள்.

உள்ளேயிருந்து வந்த மாலா மூட்டையின் இன்னொரு பக்கத்தைப் பிடித்தாள். அந்த மூட்டையை இருவருமாய் இழுத்து வந்து கேட்டினுள் போட்டனர்.
“என்னங்க இதெல்லாம்?” எனப் புதிராய் கேட்டவளுக்கு மூட்டையின் முடிச்சை அவிழ்த்துக் காண்பித்தான்.

தபால் உறைகள், இன்லெண்ட் லெட்டர்கள், போஸ்ட் கார்டுகள் என குவியலாய் தரையில் வந்து விழுந்தன.

“எனக்கு வந்த வாசகர் கடிதங்கள்.”

 “சரி, இத ஏன் என் வீட்டுக்கு எடுத்து வந்தீங்க?”

 “இந்த எல்லா லெட்டருமே உங்களத் திட்டித்தான் வந்திருக்கு நியாயப்படி உங்ககிட்டதானே கொடுக்கனும்”

என்றபடியே அவள் பதிலை எதிர்பாராமல் கேட்டைத் திறந்து கொண்டு வெளியேறினான். லேனா கோபம் கொப்பளிக்க நின்று கொண்டு அந்தக் கடிதங்களையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். விக்ரம் காரில் அமர்ந்துகொண்டு கண்ணாடியைச் சரி செய்து அவளைப் பார்த்தபடியே வண்டியைக் கிளப்பினான்.

அந்த சந்திப்பிற்குப் பிறகு லேனாவை விக்ரம் மறந்து போனான்.எழுத்தில் கவனத்தைத் திருப்பினான்.  ஆனால் அசோக்கின் கொதிப்புதான் அடங்கவில்லை. இலக்கிய எழுத்து என்பது வெறும் ஜோடனை அல்லது பாவனை மட்டும்தான் என அசோக் ஆழமாய் நம்பினான். மேலும் ஒரு எழுத்திற்கு இலக்கிய அந்தஸ்தைக் கொடுப்பது எது என்பது குறித்தும் அவனிற்குள் கேள்விகள் இருந்தன. அதிக மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் எளிய மக்கள் வாங்கும் விலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவுமே மாத நாவலை மலிவான தாளில் விலை குறைவாய் கொடுக்கிறோம் அதற்காக அது தரமில்லாததாகிவிடுமா என்றெல்லாம் இரவு குடி சந்திப்புகளில் விக்ரமுடன் மருகிக் கொண்டிருந்தான். இறுதியில் ஒரு முடிவிற்கு வந்தான். விக்ரமின் இரண்டு நாவல்களைத் தொகுத்து ஒரே புத்தகமாக தரமான அச்சில் கெட்டி வண்ண அட்டைகளோடு கொண்டு வந்தான். அந்த வருட புத்தகக் கண்காட்சியிலும் ஸ்டால் போட முடிவெடுத்தான். இப்படித்தான் பெளர்ணமி இரவில் பதிப்பகம் உருவானது. அட்டையின் பின்பக்கத்தில் பிரபலங்களின் ப்ளர்ப் புகழாரங்கள் தாங்கிய அடுத்தடுத்த ஐம்பது புத்தகங்கள் தயாராகின. புத்தகக் கண்காட்சி துவங்கியதும் தினமும் மாலையில் விக்ரமை ஸ்டாலுக்கு வரச் சொன்னான். விக்ரமும் சிரத்தையாய் கண்காட்சிக்கு சென்று வந்தான். ஸ்டாலில் நல்ல கூட்டம். திரளான வாசகர்கள் சூழ்ந்து கொண்டனர். கையெழுத்தும் சங்கோஜமான பதில்களுமாய் திக்குமுக்காடினான். அசோக்கும் உற்சாகத்தில் மிதந்தான். விற்பனை நன்றாக இருப்பதாக சொன்னான்.

“சுஜாதாவிற்கு அடுத்தபடியாக புத்தகக் கண்காட்சியில் பெஸ்ட் செல்லர் நீதான், நம் புத்தகங்கள்தாம்” என்ற அவன் உற்சாககுரலை விக்ரமால் நம்பக் கூட முடியவில்லை.

கூட்டம் குறைவாக இருந்த ஒரு மாலையில் கண்காட்சியைச் சுற்றிய வரப் போனபோது லேனாவைப் பார்த்தான். ஒரு இலக்கியப் பதிப்பக ஸ்டாலில் லேனா சற்று உரத்த குரலில் உரையாற்றிக் கொண்டிருந்தாள். சின்னக் குழு அவளைச் சூழ்ந்து கொண்டிருந்தது. ஸ்லீவ்லெஸ் டாப்ஸும் ஜீன்ஸ் பேண்ட் டும் அணிந்திருந்த அவளை அம் மஞ்சள் வெளிச்சத்தில் தாண்டிப்போன போது மனதிற்குள் இனம் புரியாத ஏதோ ஒரு மாறுதல் நிகழ்ந்தது. திடீரென அவளைப் பிடித்துப் போயிற்று. திரும்பி அவள் பேசிக் கொண்டிருந்த ஸ்டாலிற்குள் நுழைந்தான். பேச்சினூடாய் விக்ரமை அடையாளம் கண்டு கொண்டது அவள் கண்களில் தெரிந்தது. ஸ்டால் உரிமையாளர் அவனை எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு சின்ன நமுட்டுச் சிரிப்போடு தலையசைப்பில் அவனையும் வரவேற்றார். லேனாவை சூழ்ந்திருந்த குழுவிற்கு விக்ரமைப் பிடிக்காதது ஒரு ஜந்துவைப் போல் அவர்கள் பார்த்ததிலிருந்து அப்பட்டமாய் தெரிந்தது. எதையும் பொருட்படுத்தாமல் குழுவுடன் ஐய்க்கியமானான். விர்ஜினா வுல்ஃப் என்கிற எழுத்தாளரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள். தன்னுடைய கடைசி நாவலை எழுதிவிட்டு வீட்டிற்கு அருகாமையிலிருந்த நதியில் குதித்து தன்னை மாய்த்துக் கொண்டாள் என்ற வரியோடு ஒரு துளி கண்ணீரையும் சிந்தி, லேனா தன் உரையை முடித்த போது கைத் தட்டல்கள் எழுந்தன. கைத்தட்டல் ஓய்ந்ததும் கூட்டத்தைப் பார்த்து, நதியில் குதிப்பதற்கு முன்பு விர்ஜினா கூழாங்கற்களை தன் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்ட தகவலை விக்ரம் சொன்னான்.

கூட்டத்தில் ஒரு குரல்ஆ! அப்படியா அது கூழாங்கல்லே தானா?” என்றதற்கு பலத்த சிரிப்பு எழுந்தது. 

அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. நேராக லேனாவிடம் போய், ”நன்றாகப் பேசினீர்கள்” என்றான்.

புன்னகைத்தாள்.

“இன்னும் சற்று அருகில் போய் டி.வி சீரியல் அல்லது சினிமாவிற்கு நீங்கள் முயற்சிக்கலாம் நடிப்பு நன்றாக வருகிறது” என கிசுகிசுத்து விட்டு வெளியேறினான்.

 டுத்த நாள் காலை விக்ரமிற்கு சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. தூங்கி எழுந்து காபியோடு தினசரியை மேய்ந்து கொண்டிருந்தான். ஒன்பது மணி இருக்கலாம். காலிங் பெல் அடித்தது. போய் கதவைத் திறந்ததும் குப் பென மது வாடை வீசியது. மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்தனர். ஒல்லியான ஒரு நபரால் நிற்கக் கூட முடியவில்லை. தள்ளாடிக் கொண்டிருந்தார். சற்றே குள்ளமான இருவரும் ஸ்டடியாக இருந்தது போல் காட்டிக் கொண்டனர். யார் நீங்கலாம் எனக் கேட்டு முடிப்பதற்குள் குள்ளமாய் இருந்தவன் சற்று எக்கி அவன் மூக்கில் குத்தினான். எதிர்பார்த்திராத தாக்குதல் என்பதால் விக்ரம் நிலைதடுமாறி கீழே விழுந்தான். மூவரும் உள்ளே நுழைந்தனர். ஒல்லியாய் இருந்தவன் கெட்ட வார்த்தைகளை சத்தமாய் அள்ளி வீசினான். திட்டும்போது அவன் நாக்கு குழறவே இல்லை. மற்ற இருவரும் மல்லாந்து விழுந்து கிடந்த விக்ரமை மார்பில் மிதித்தனர். விக்ரமின் அப்பா உள்ளே இருந்து அதிர்ச்சியாய் ஓடிவந்தார். வெளியில் காரைத் துடைத்துக் கொண்டிருந்த ட்ரைவர் பெயர் சொல்லி இறைந்தார். வேலையில் கவனமாக இருந்த பாலன், இவர்கள் மூவரும் உள்ளே சென்றதையோ அங்கு நடந்த களேபரத்தையோ கவனிக்கவில்லை. சுதாரித்துக் கொண்டவர் உள்ளே ஓடி வந்து மூவரையும் குண்டு கட்டாய் அள்ளி வெளியில் வீசினார்.

அப்பா போலிசிற்குத் தொலைபேசினார். அசோக்கிடம் விவரத்தைச் சொல்லி விரைந்து வருமாறு அலைபேசியில் கத்தினார். கேட்டிற்கு வெளியில் மூவரும் சத்தமாய் வசைகளை இறைத்துக் கொண்டிருந்தனர். பத்து நிமிடத்தில் அசோக்கும் போலிசும் வந்து சேர்ந்தனர். போலீசார் மூவரையும் அள்ளிக் கொண்டு போனார்கள். விக்ரமின் அம்மா ரத்தம் வழிந்த அவன் மூக்கில் ஐஸ்கட்டியை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டாள். கொஞ்ச நேரத்தில் இரத்தம் நின்றது. விக்ரம் எழுந்து நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அப்பா டாக்டரிடம் போகத் தயாரானதற்கு மறுப்பாய் தலையசைத்தான். பதறிய அவன் அம்மாவிடம் ஒன்றுமில்லை பயப்படாதே எனச் சொன்னான். வந்தவர்கள் யார் என அடையாளம் தெரியவில்லை. ஒல்லியாய் இருந்தவனை மட்டும் எங்கேயோ பார்த்தார் போலிருந்தது. விக்ரம் சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு போலிஸ் ஸ்டேசன் வரை போய்வருவதாய் சொல்லிவிட்டு அசோக்குடன் கிளம்பினான். அடுத்த தெருமுனையில்தான் போலிஸ் ஸ்டேசன்.

ஸ்டேசனில் ஒரு கான்ஸ்டபிள் மூவரையும் நையப் புடைத்துக் கொண்டிருந்த சப்தம் கேட்டது. திடீரென பாரதியாரின் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே கவிதையை ஒரு குரல் சப்தமாய் மந்திரம் போல் உச்சரிக்கத் துவங்கியது. விக்ரம் குழம்பினான். கான்ஸ்டபிளபிடம் அடிப்பதை நிறுத்தச் சொல்லிவிட்டு கேட்டான்,

“யார் நீங்கலாம் என்ன வந்து ஏன் அடிச்சீங்க?”

“என்னது நாங்க யாரா?” ஒல்லிக் குரல் அதிர்ச்சியாய் கேட்டது

விக்ரம் குழப்பமாய் பார்த்தான்

ஒல்லியாய் இருந்தவன் பேச ஆரம்பித்தான்

 “தமிழ் எழுத்து சூழல் எவ்வளவு அயோக்கியத்தனமா இருக்குதுங்கிறதுக்கு இந்தக் கேள்வி ஒரு சான்று. இருந்தாலும் சொல்றேன். பாரதியாருக்குப் பிறகு தமிழ்ல கவிதை எழுதுறது நான் மட்டும்தான். என்ன உனக்கு தெரியாமப் போனதில ஆச்சரியம் இல்ல…”

உடனே அவன் பெயர் நினைவிற்கு வந்தது. அதீதன். சிறுபத்திரிக்கைக் கவிஞன்.

”நீங்களாம்?” என மற்ற இருவரையும் பார்த்துக் கேட்ட விக்ரமை நக்கலாய் பார்த்துவிட்டு

”நான் தான் காட்டுச்சித்தன்” என்றான் ஒருவன். இன்னொருவன் முறைத்துக் கொண்டே ”மித்ராங்கி” என்றான்.

விக்ரமிற்கு மூவரின் எழுத்தையுமே படித்திருப்பது நினைவிற்கு வந்தது. மீண்டும், வெகு நிதானமாக

“என்னை ஏன் அடிச்சீங்க?” என்றான்

“நீ லேனாவ சினிமா நடிக்க போவ சொன்னியாமே.. பாடு.. அவ்ளோ ஏத்தமாய்டுச்சா?” காட்டுச்சித்தன் கத்தினான்

புரிந்து கொண்ட விக்ரம் மெதுவாய் “இல்ல சீரியல் தான் முதல்ல ட்ரை பண்ணிப் பார்க்க சொன்னேன்” என்றான்.
மூவருமே ஒரே நேரத்தில் டாய் எனக் கத்தினார்கள். சட்டை செய்யாது எஸ்.ஐ நாற்காலிக்குப் போனான். அசோக்கிற்கு மிக நெருக்கமான நண்பர் அவர்.

“இந்த மூணு பேரும் அம்புகள்தான் எய்தது எழுத்தாளர் லேனா” என்றான்.

அப்ப லேனா பேரையும் கம்ப்ளைண்ட்ல சேர்த்துடுங்க என்றான் அசோக். 

“கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு வா” என சொல்லிவிட்டு விக்ரம் வெளியேறினான்.

எஸ்.ஐ தொலைபேசியில் ”ரைட்டர் லேனாங்களா? நீங்க ஸ்டேசன் வரனுமே” என சொல்லிக் கொண்டிருந்தது கேட்டது. அவனுக்கு லேனாவைக் கொஞ்சம் அலைய விட்டுப் பார்க்கும் எண்ணம் தோன்றியது பாலனைக் கூப்பிட்டு வண்டியை எடுக்கச் சொன்னான். முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு வீட்டிற்குத் திருப்பச் சொன்னான். குளித்துவிட்டு சாப்பிடும்போது அலைபேசி அலறியது.

 “ரைட்டர் விக்ரம் “

“ஆமாங்க”

“லேனா பேசுறேன் “

அமைதியாக இருந்தான்.

“தயவு செய்ஞ்சி நான் சொல்றத நம்புங்க.. நடந்ததுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது”

 “ம்ம்”

“நீங்க நம்பலன்னு தெரியுது நான் உங்க வீட்டுக்கு வரேன்”

“இல்லங்க வீட்ல நிலைமை சரியில்ல. அம்மா பயந்துட்டாங்க. இன்னொரு நாள் வாங்க”

“அப்போ நீங்க என்ன நம்பனும். சத்தியமா அந்த மூணு பேரும் ஏன் வந்து உங்கள அடிச்சாங்கன்னு எனக்கு தெரியாது. சொல்லப்போனா அதீதன தவிர்த்து மத்த ரெண்டு பேர்கிட்டயும் நான் பேசினது கூட கிடையாது”

“அப்போ நான் உங்கள சினிமாவுக்கு நடிக்க போகச் சொன்னது அவங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?”

“நீங்க என் காதுகிட்ட பேசினத அதீதன் பாத்துட்டு வந்து என்கிட்ட கேட்டான். அப்படி என்ன சொன்னார்னு”

“நானும் நீங்க சொன்னத அவன் கிட்ட சொன்னேன். ஆனா நிச்சயமா அது இப்படி வெடிக்கும்னு எனக்கு தெரியாது”

”…..”

“நடந்த தவறுக்கு ஏதோ ஒரு வகைல நானும் காரணமாகிட்டேன். அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கிறேன்”

“எனக்கு கோபம் எதுவும் இல்லைங்க. அவங்க பண்ண தப்புக்கு நீங்க என்ன பண்ணுவீங்க”

“சரி விக்ரம், இத சொல்லனும்னுதான் போன் பண்ணேன். உங்க கம்ப்ளைண்ட நான் என் வக்கீல் மூலமா பாத்துக்குறேன்” எனச் சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் துண்டித்தாள்.

விக்ரம் அவளை மேலும் கோபப்படுத்தி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான். உடனே அசோக்கிற்கு போன் செய்து கம்ப்ளைண்டை வாபஸ் வாங்கச் சொன்னான். எஸ்.ஐ க்கு இம்மாதிரி எழுத்தாளர்கள் சண்டை எப்படி முடியும் என்பதில் முன் அனுபவம் இருந்திருக்கும்போல, எப்.ஐ.ஆர் எதுவும் போடவில்லை. வெறுமனே நால்வருக்கும் பொது வார்னிங் கொடுத்து அனுப்பிவிட்டார்.

அடுத்த நாள் காலை விக்ரமிற்கு அவளோடு மேலும் விளையாடிப் பார்க்கும் எண்ணம் தோன்றியது. மூக்கில் பெரிய சைஸ் பிளாஸ்திரி ஒன்றை ஒட்டிக் கொண்டு லேனா வீட்டிற்குப் போய் காலிங் பெல் அடித்தான். லேனாதான் திறந்தாள். மூக்குப் பிளாஸ்திரியைப் பார்த்து பதபதைத்தாள். அவளின் இரவு உடை உடல், அவனையும் லேசாய் பதபதைக்க வைத்தது. இருக்கையில் போய் அமர்ந்தான்.

மெதுவாக தொண்டையைக் கனைத்துக் கொண்டு ஆரம்பித்தான்

“போலிஸ் ஸ்டேசனுக்கு உங்களை வரவழைச்சதுக்கு சாரிங்க, பப்ளிஷர் அசோக் உணர்ச்சிவயப்பட்டு செய்தது அது”

“அவர்தான் உடனே கம்ப்ளைண்ட வாபஸ் வாங்கிட்டாரே இல்லனா எப்.ஐ.ஆர் அது இதுன்னு அலைய வேண்டி வந்திருக்கும்”

“ஆரம்பத்திலிருந்தே நமக்குள்ள எல்லாமே தப்பாவே நடக்குது “

“ஆனா ஒண்ண கவனிச்சிங்களா, இது எதுக்குமே நாம காரணம் இல்ல மத்தவங்கதான் காரணமா இருக்காங்க “

புன்னகைத்தான்

அடுத்தடுத்த தினங்களில் இருவரும் நெருக்கமாகி விட்டனர். தினம் பேசிக் கொண்டனர். எழுத்து, இலக்கிய கிசுகிசுக்கள், சினிமா, வாசிப்பு என இருவரும் பேசிக் கொள்ள பல விஷயங்கள் இருந்தன. பல புள்ளிகளில் இருவரின் ரசனைகளுமே ஒத்திருந்ததன. விக்ரம் மீது லேனாவிற்கு ஒரு பிடித்தம் வந்துவிட்டிருந்தது. பல்ப் எழுதுகிறன் இவ்வளவு படித்திருப்பான் என அவளால் நம்பவே முடியவில்லை. லேனாவின் உடலை மட்டுமே ஆரம்பத்தில் கவனித்த விக்ரம் மெல்ல அவளின் குணத்தையும் கவனிக்க ஆரம்பித்தான். எல்லா வகையிலும் அவள் மிகச் சிறந்தவள் என அவனிற்குத் தோன்ற ஆரம்பித்தது. லேனாவிற்கு விக்ரமை விட இரண்டு வயது அதிகம். திருமணமும் டைவர்ஸும் ஆகிவிட்டது. ஓரளவிற்கு வசதியான குடும்பம். அப்பா அம்மா அண்ணன் தம்பிகள் எல்லோரும் இருந்தாலும் தனியாகத்தான் வசிக்கிறாள். லேனாவுடைய முதல் நாவல் 
நெருஞ்சி முள். இலக்கிய உலகில் பல அதிர்வுகளை உண்டாக்கியது. அவளுக்கான தனி அடையாளத்தையும் தந்திருந்தது. லேனாவின் இரண்டாவது நாவலான அயல்மகரந்தச் சேர்க்கை க்கு சாகித்ய அகடாமி விருதும் கிடைத்தது. இந்த காலகட்டத்தில்தான் அவள் கொடுத்த பேட்டி வாயிலாக விக்ரம் அறிமுகம் நிகழ்ந்தது. இப்படியே போய்கொண்டிருந்த நட்பு ஒரு மாலை அறுந்தது.

 அன்று மாலை ஏழு மணிக்கு லேனாவிடம் இருந்து அழைப்பு வந்தது. லேசாய் குழறலாய் பேசினாள்

“எங்க இருக்க விக்ரம்?”

“வீட்லதாங்க”

“ரொம்ப பிசியா நீ”

“இல்லயே சொல்லுங்க”

“கொஞ்சம் மகாபலிபுரம் வரமுடியுமா”

“ஓ வரலாமே அங்க என்ன பன்றீங்க?”

“என்னோட அடுத்த நாவல் தலைல வந்து உட்கார்ந்திருச்சி. ரொம்ப சிரமப்படுறேன். யார்கிட்டயாவது பேசியே ஆகனும். நீ வந்தா நல்லாருக்கும்”

அடுத்த இரண்டு மணிநேரத்தில் விக்ரம் கடற்கரையை ஒட்டிய அவள் தங்கியிருந்த விடுதிக்கு சென்று அறை எண்ணை போனில் கேட்டுத் தட்டினான். கதவைத் திறந்த லேனா கிட்டத்தட்ட தளும்பிக் கொண்டிருந்தாள். முன்பெப்போதும் பார்த்திராத அவளின் அன்றைய போதையூறிய புன்னகையை இப்போது நினைத்தாலும் அவனிற்கு சிலிர்க்கும். உள்ளே நுழைவதற்கு முன்பே அவன் மீது சரிந்தாள். விக்ரம் அப்படியே அவளை அள்ளிக் கொண்டான். இருவரும் ஆழமான காதலில் விழுந்தார்கள். நிறையப் பயணித்தார்கள். குடித்தார்கள். கொண்டாடினார்கள். ஆனால் அவர்களது வேலைகளில் கவனமாகவும் இருந்தார்கள்.

 “சார் வந்துட்டோம்” பாலனின் குரல் அவன் நினைவுகளைத் திருப்பக் கொண்டுவந்தது.

நேற்று லேனா போனை வைத்த உடனேயே மனம் அவளோடு போய் ஒட்டிக் கொண்டது. சில மாதங்களாக இருவரும் சந்தித்திருக்கவில்லை. விடிந்ததும் பாலனை எழுப்பி ஊட்டி போவதாகச் சொன்னான். வண்டியை மெக்கானிக்கிடம் எடுத்துக் கொண்டு போய் சரிபார்த்துவிட்டு வரச் சொன்னான். எல்லாம் முடிந்து காலை பத்து மணிக்கு கிளம்பினார்கள். கோவை வந்து சேர மாலையாகிவிட்டது. கோவையைத் தாண்டியதுமே மழை பிடித்துக் கொண்டது. மலைப் பாதையில் ஏறுவதற்கு முன்பு பாலன் நின்னுப் போலாங்களா? எனக் கேட்டார். மறுப்பாய் தலையசைத்தவன் மெதுவாகப் போகச் சொன்னான். லேனா வை எவ்வளவு சீக்கிரம் பார்க்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பார்த்துவிடும் தவிப்பை ஒரு மணி நேரத்திற்கு முன்பு குடித்திருந்த பியர் ஏற்படுத்தி இருந்தது. லேனா வருடத்திற்கு ஒரு நாவல்தான் எழுதுகிறாள். பெரும்பாலும் மகாபலிபுரத்தில் வைத்து எழுத்தை ஆரம்பிப்பாள். இறுதி வடிவத்தை ஊட்டியில் வைத்து முடிப்பாள். சென்ற வருடம் வந்த மின்மினிகளின் பகற் கனவு  நாவலை இருவருமாய்த்தான் எடிட் செய்தனர். 

கார் மெதுவாக வந்து சேர்ந்தது. ஹோட்டலின் நியான் பெயர் மழையிலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இருள் அடர்ந்திருந்தது. மழை சற்று வலுத்திருந்தது. காரை விட்டிறங்கிய விக்ரம் மூச்சை உள்ளிழுத்து விட்டுக் கொண்டான். லேனாவின் தளும்பும் உடலை நினைத்தபடியே ரிசப்ஷன் கவுண்டருக்காய் போனான்.

-    மேலும்



No comments:

Featured Post

test

 test