Monday, August 27, 2018

மெளனத்தின் சங்கீதம்

மூன்று மாதங்களாய் இந்தப் பக்கத்தைத் திறக்க முடியவில்லை. புழக்கத்தில் இல்லாமல் இருந்தால் எல்லாமும் துருப்பிடித்துப் போகிறது. இந்தப் பக்கம் மட்டும் அப்படியே இருப்பதுதான் ஆச்சரியம். தினம் ஐம்பது பேராவது இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்கிறார்கள். அந்த எளிய மனங்களுக்காவது எதையாவது இங்கு கிறுக்கி வைக்க வேண்டும். இந்தியப் பயணம், தொடர்ச்சியான விடுமுறைகள் என அலுவலகத்தில் சாவகாசமாய் உட்கார்ந்து எழுத நேரம் வாய்க்கவில்லை. என் அலுவலக மேசையும் கணினியும் இல்லாமல் போனால் என்னால் எழுதவே முடியாதோ என்கிற பயமும் அவ்வப்போது தோன்றுவதுண்டு. நிறைய எழுதுவதற்கான உந்துதலில் மேக்புக்கை  வாங்கியதோடு சரி. ஓரிதழ்ப்பூவின் எடிட்டிங் வேலை பார்த்ததைத் தவிர, அதை வரவேற்பரையில் பார்க்க முடியாத படங்களைக் காண மட்டுமே பயன்படுத்துகிறேன். 

’வாட்ஸப்’ வழியாய் அமீரகத் தமிழ் வாசிப்பாளர் குழுமம் என்கிற பெயரில் நாற்பது நண்பர்கள் இணைந்திருக்கிறோம். ஒரு வருடத்திற்கும் மேலாய் இந்தக் குழு கலையாமல் இருப்பதும், தினம் உரையாடல்கள் நிகழ்வதும் வரலாற்றில் எழுதப்பட வேண்டிய நிகழ்வுதான். நிறைய சந்திப்புகளும்,  விவாதங்களும், கிண்டலும் கேலியுமாய் குழு ஆரோக்கியமாக நகர்கிறது. தினசரியின் சலிப்பை உணர்ந்து ஒரு வருடமாகிற்று. ஃபேஸ்புக்கில் கிடந்து உழலுவதும் தவிர்க்கப்பட்டு மன ரீதியிலாய் ஆரோக்கியமாக உணர்கிறேன். எந்த உளைச்சலும், உயர்வுணர்வும், தாழ்வுணர்ச்சியும் இல்லை. 

இதுவே எழுதுவதற்கான சரியான மனநிலையும் காலமும் என்பதை உணர்ந்தே என் அடுத்த நாவலை எழுத ஆரம்பித்தேன். சோம்பலால் தள்ளிப் போகிறது. மேலதிகமாய் இரண்டு சிறுகதைகளும் மூளையில் வந்து உட்கார்ந்து கொண்டு நகராமல் அடம்பிடிக்கின்றன. இடையில் மீண்டும் கவிதை எழுதும் முனைப்பு வேறு. ஆனால் ஒரு வரி கூட எழுதவில்லை. இந்தச் சுகசெளகர்யச்சோம்பலிலிருந்து மீள வேண்டும்.

வாழ்வு இணக்கமாக இருக்கிறது. நண்பர்கள் மகிழ்வைக் கூட்டுகிறார்கள். சகலத்திலும் மென்மையும் கருணையும் நிரம்பி வழிகிறது. ஆன்மாவின் இசைத்தட்டிலிருந்து மெளனத்தின் சங்கீதம் இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. நினைவில் அவ்வப்போது எழும் பிழைகளின் அவமானத்தைத் துடைத்தெறிந்து விட்டு முன்னால் நகர்கிறேன். இந்த நிகழ் மகத்தானது. ஒருபோதும் மீளக் கிடைக்காதது. சிரிக்கும் செம்மஞ்சற்ப்பூவில் தோற்கும் வெட்கைச் சூரியனைப் பார்த்துப் புன்னகைத்துக் கடக்கிறேன்.


0

’நார்கோஸ்’, ’வைல்ட் வைல்ட் கண்ட்ரி’ தொடர்களுக்குப் பிறகு நெட்ஃபிலிக்ஸில் ’ப்ரேக்கிங் பேட்’ இரண்டு சீசன்களைப் பார்த்தேன். இடையில் ’சாக்ரெட் கேம்ஸ்’ எட்டு பகுதிகள் - அவ்வளவுதான் வந்திருக்கிறது,-  ’ப்ளாக் மிர்ரர்’ நான்கு பகுதிகள் பார்த்து முடித்திருக்கிறேன். ப்ளாக் மிர்ரரின் முதல் இரண்டு கதைகளும் வியப்பிலாழ்த்தின. எதிர்காலத்தின் கதைகள் என இவற்றை வகைமைப்படுத்தலாம்.  அறிவியல் புனைக் கதைகள் என்பதைத் தாண்டி கதை சொல்லலில் எவ்வளவு துல்லியம்! Black Mirror - Series 4 ன் முதல் கதையான USS Callister தந்த வியப்பு, கடந்த ஒருவாரமாக அப்படியே இருக்கிறது Arkangel மற்றும் Crocodile கதைகளும் பிரமாதம். Game of Thrones போல மிகத் தாமமாக கண்டறிந்த தொடர் இது. இதற்கு முன்பு வெளியான  ப்ளாக் மிர்ரரின் முதல் மூன்று பாகங்களையும் பார்த்துவிட்டு விரிவாக எழுதுகிறேன்.

Sacred Games வழக்கமான மும்பை தாதா கதைதான்.  மனித வாழ்வில் ஒருபோதும் அலுக்கவே அலுக்காதவை என சில விஷயங்கள் உண்டு. போலவே  பணம்,பெண்,போதை, அதிகாரம், வன்முறை இவற்றை உள்ளடக்கிய சினிமா அல்லது தொடர் எத்தனை வந்தாலும் அவை கண்டிப்பாய் நம்மை கட்டிப்போடும். கொஞ்சம் சுவாரசியமும், புத்திசாலித்தனமான திரைக்கதையும், தேர்ந்த நடிகர்களும் இருந்தால் போதும். திரையுடன் பார்வையாளர்கள் ஒன்றிப்போகலாம்.  அப்படித்தான் இந்தத் தொடரும் இருக்கிறது. 

சாயிஃப் அலி கான் இவ்வளவு நல்ல நடிகரா என்ன! என்கிற வியப்புதான் முதலில் தோன்றியது. சாயிஃப் அலி கான் சினிமா வாழ்வில்  சர்தாஜ் சிங் போல ஒரு கதாபாத்திரம் கூட  அமையவில்லை என்றே நினைக்கிறேன். சந்தேகமே வேண்டாம் அவரின் ’கேரியர் பெஸ்ட்’ இதுதான்.

Ganesh Gaitonde வாக தானைத் தலைவன் நவாசுதீன் சித்திக். சாயிஃப் உயிரைக் கொடுத்து நடிப்பதை ஒரே ஒரு உடலசைவில் நவாசுதீன் மிக எளிதாக தாண்டுகிறார். மொத்த தொடரையும் இவரது இருப்பே தாங்குகிறது. இந்தியாவின் மிகச் சிறந்த சமகால நடிகன் இவராகத்தான் இருக்க முடியும். Sacred Games குறித்தும் விரிவாக எழுதுகிறேன்.


Tuesday, May 1, 2018

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்



இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷால் ஈர்க்கப்பட்டு கம்யூன் உள்ளே வந்தவர். Swami Prem Niren என்கிற சந்நியாசப் பெயரால் அறியப்பட்டவர். ரஜனீஷின் எல்லா வித சட்ட சிக்கல்களையும் இவரே எதிர் கொண்டார்.

Charlotte விமான நிலையத்தில் கைதான ரஜனீஷ் மூன்று சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டார். அவரைப் பதினைந்து நாட்கள் அலைக்கழித்தும் அரசு எதிர்பார்த்த குற்றம் எதுவும் கிடைக்கவில்லை. பிலிப்பின் திறமையான முயற்சியால் குடியேற்ற மோசடி என்கிற வகையில் மட்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

பிலிப்பின் ஒட்டு மொத்த பேச்சிலும் அவருக்கு ரஜனீஷ் மீதிருந்த அன்பும் பக்தியும் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. இந்தத் தொடரின் இன்னொரு பிரமாதமான அம்சம் இதன் எடிட்டிங். ஆறு பகுதியிலேயும் பிலிப்பின் பேச்சு இடம்பெற்றிருக்கும்.  ரஜனீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நாட்களை நினைவு கூரும்போது பிலிப் நிலை குலைகிறார்.  பகவான் எவ்வளவு அற்புதமான மனிதர்! எனத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்.

ரஜனீஷ்  சிறையில் அடைக்கப்பட்டிருந்த தோற்றத்தைப் பார்த்து தான் அடைந்த துயரத்தைப் பகிரும்போது பிலிப் முழுமையாய் உடைகிறார். ரஜனீஷின் மிகப் பெரிய பலம் பிலிப் போன்ற லட்சக்கணக்கான மனிதர்கள் அவர் மீது கொண்டிருக்கும் அன்புதான். வெறும் குரு- சீடன் என்பதையும் தாண்டிய பிணைப்பு இது.

பிம்ப உருவாக்கம் மீது நம்பிக்கையற்றவன் என்ற போதிலும் ஓஷோ என்றதுமே உருவாகும் வாஞ்சையை என்னாலுமே தவிர்க்க முடிவதில்லை. நான் அனைவரிடமும் சொல்வதுதான். ஓஷோ மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மனிதர். இதில் நானும் அடக்கம்தான்.

0

கம்யூனிலிருந்து வெளியேறிய ஷீலா குழுவினர் ஜெர்மனியில் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பிக்கின்றனர். ஜெர்மனில் வெளியாகும் பரபரப்புப் பத்திரிக்கையான ஸ்டெர்ன் ஷீலாவின் கதையை பிரசுரிக்க விரும்புகிறது. எப்போதுமே செய்திகளில் அடிபட விரும்பும், லைம்லைட்டில் இருக்க விரும்பும் ஷீலா இதற்குச் சம்மதிக்கிறார். அவரின் நிர்வாணப் புகைப்படத்தோடு முழுக் கதையும் வெளியாகிறது. இதைக் குறித்துச் சொல்லும்போது நாங்கள் வாழ எங்களுக்குப் பணம் தேவையாக இருந்தது. ஆகவே இதற்கு சம்மதித்தேன் என்கிறார் ஷீலா.

FBI ரஜனீஷைக் கைது செய்யும் அதே நேரம் ஷீலாவும் கைது செய்யப்பட்டு அமரிக்காவிற்குத் திருப்பி அனுப்பி வைக்கப் படுகிறார். குற்றங்களாக - ரகசிய ஒலிப்பதிவு, கொலை முயற்சி மற்றும் குடியேற்ற விசா மோசடி போன்றவை நிரூபிக்கப்படுகின்றன. ஷீலாவிற்கு இருபது வருட ஆயுள்  தண்டனை கிடைக்கிறது. ஆனால் நன்னடத்தை காரணமாக இரண்டரை வருடத்தில் வெளியே வருகிறார். தற்போது சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் ஷீலா முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார்.

0

இந்தத் தொடரின் போதாமை குறித்தும் சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. எனக்குமே ஹாசியாவின் தரப்பு இல்லாதது பெரும் உறுத்தலாக இருந்தது. ஹாசியா தற்போது இல்லையென்பதால் அது இயலவில்லை ஆனால் அவரின் கணவரும் ஓஷோவின் தனிப்பட்ட மருத்துவருமான ஜார்ஜின் நேர்காணலும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெறவில்லை. ஷீலா மிகத் தவறாக ரஜனீஷைப் பொதுவெளியில் கட்டமைத்தார் என்பதுதான் இவர்களின் ஆணித்தரமான தரப்பு. ஏன் ஒவ்வொரு ஓஷோ நம்பிக்கையாளரின் தரப்பும் இதுதான். இந்த ஆவணப்படம் பார்க்கும் வரை நானுமே கூட அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தேன். இந்த நம்பிக்கையை Wild Wild Country அசைத்துப் பார்த்திருக்கிறது.

பிலிப் என்கிற Swami Prem Niren இன் இணையதளத்தில் ரஜனீஷ் மருத்துவரின் நேர்காணல் கிடைக்கிறது. அவர்களின் தரப்பை - ஆவணப்படம் சொல்லாததை - அறிய இங்கே செல்லுங்கள்

http://sannyasnews.org/now/archives/7751

Monday, April 30, 2018

Wild Wild Country - 2 விஷக்கன்னி


இந்த ஆவணப்படம் குறித்தான  முதல் பதிவிற்கு வந்த எதிர்வினைகள், என் ஒரு பக்க சாய்வைக் குறித்து கேள்வி எழுப்பின. ஒருவேளை ஷீலா தந்த வியப்பில்  மிகையாக எழுதுகிறேனோ என எனக்கே சந்தேகம் தோன்றியதால் நான்கைந்து நாட்கள் இதை எழுதுவதை தள்ளிப்போட்டேன். இப்போது மனம் சமநிலைக்கு வந்திருப்பதாகவே உணர்கிறேன்.

எல்லாத் தரப்புகளையும் இந்தத் தொடர் உள்வாங்கியிருப்பதுதான் இதன் தனிச் சிறப்பு. முடிந்தவரை உண்மைகளைச் சொல்ல மெனக்கெட்டிருக்கிறார்கள்.  ஷீலாவின் இடத்தைப் பறித்துக் கொண்ட Ma Prem Hasya (Francoise Ruddy) மரணமடைந்து விட்டதால் அவரின் தரப்பு மட்டும் இதில் பதிவாகவில்லை. ஒருவேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் எதனால் ரஜனீஷ் அவ்வளவு மோசமாக ஷீலாவை வெறுத்தார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் துல்லியமாக  நமக்குக் கிடைத்திருக்கும்.

ஷீலா தன் பதினாறாவது வயதில் ரஜனீஷை மும்பையில் வைத்துச் சந்திக்கிறார். குஜராத் படேல் சமூகத்தைச் சேர்ந்த ஷீலாவிற்கு ரஜனீஷை அவரின் தந்தை இரண்டாம் புத்தா என்கிற அடைமொழியோடு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அந்த சந்திப்பை ஷீலா அவ்வளவு பரவசத்தோடு நினைவு கூர்கிறார். அவரின் கண்களைப் பார்த்த நொடியில் தான் முழுமையடைந்ததாகவும் அந்த கணத்தில் இறந்துபோகவும் தயாராக இருந்ததாகவும் சொல்கிறார்.  பின்னணியில் காண்பிக்கப்படும் புகைப்படங்களும் அவ்வளவு உண்மையாக இருக்கின்றன.

பதினேழாவது வயதில் ஷீலாவை அவரது பெற்றோர் உயர்கல்வி பயில நியூஜெர்ஸிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஷீலா அங்கே மார்க்கை சந்திக்கிறார். My first love, the beautiful man என மார்க் குறித்து விழிகள் விரியப் பேசுகிறார். உயர் சமூக இளைஞர்களின் ஹிப்பிக் கொண்டாட்ட வாழ்வாக இவர்களின் காதல் இருந்ததைப்  புகைப்படங்கள் வழியாய் புரிந்து கொள்ள முடிகிறது. மார்க்கிற்கும் ரஜனீஷைப் பிடித்துப் போகவே இருவரும் பூனே ஆசிரமத்திற்கு வந்து சேர்கின்றனர். சில வருடங்களில் மார்க் கேன்சரில் இறந்து போக, ஷீலா பூனா ஆசிரமத்திற்காக முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார்.

ஷீலா தன்னை ஒரு மார்க்கெட்டிங் ஆளாகத்தான் முன் நிறுத்திக் கொள்கிறார். தியானம் செய்வதில் அவருக்கு ஆர்வமில்லை. தியானத்தை ஒரு பொருளாக,  பணத்தைக் கொண்டு வரும் பொருளாக மட்டுமே பார்க்கிறார்.

இந்தியாவில் 70 களின் இறுதியில் ரஜனீஷ் பரவலாக சென்றடைகிறார்.  அதே நேரம் அவருக்கு கணிசமான எதிரிகளும் உருவாகின்றனர். ஒரு முறை அவரின் மீது கத்தி வீசப்படுகிறது. அரசியல்வாதிகளையும் தன்னுடைய கிண்டல்களால் முறைத்துக் கொள்ளவே கம்யூனில் ஒரு வித சமனில்லாத நிலை நிலவுகிறது. மேலும்  ஏராளமான பணமும் குவிகிறது.

ஷீலா அமெரிக்காவிற்கு சென்று விடும் யோசனையைச் சொல்கிறார். ரஜனீஷ் உடனே அதை அங்கீகரிக்கிறார். ஒரேகன் மாநிலத்தின் ஆண்டலோப் பகுதியில் 65000 ஏக்கர் நிலத்தை ஷீலா வாங்குகிறார். எதற்குமே பயனில்லாத இடம். கரடுமுரடான மலைக் குன்றுகளையும் பாறைகளையும் கொண்ட  முரட்டு நிலம். ஷீலா அந்த நிலத்தைப் பண்படுத்துகிறார். சொற்ப வருடத்தில் அந்தப் பிரதேசத்தையே நவீன நகரமாக மாற்றிக் காட்டுகிறார். இந்தப் பகுதிகளின் வீடியோ ஃபுட்டேஜ் களைப் பார்க்க பார்க்க ஆச்சரியம் மேலெழுகிறது. 80 களில் இருக்கும் கட்டுமாண வசதிகள், உபகரணங்களைக் கொண்டு அதிவேகமாக ஒரு நகரத்தை உருவாக்க முடியும் என்பதை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. ஆனால் ஷீலா அதை நடத்திக் காண்பிக்கிறார்.

அதி நவீன தியான அரங்கங்கள், தனித்தனிக் குடியிருப்புகள், டைனிங் ஹால்கள்,  நீச்சல் குளங்கள் என பிரம்மிக்க வைக்கும்படியாய் ஒரு நகரம் தயாராகிறது. மேலும் விவசாய நிலங்களை உருவாக்கி அதில் கம்யூனிற்குத் தேவையான காய்கறிகளையும் பயிரிட்டுக் கொள்ளும்படியான வசதிகளையும் ஏற்படுத்துகிறார்கள்.

ரஜனீஷ் ஏர்வேஸ் என்கிற பெயரில் கம்யூனில் ஒரு விமான தளமே உருவாகிறது. நான்கைந்து விமானங்கள் நிற்கின்றன. வரிசையாக ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், குவியும் மக்கள் கூட்டம் என மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமான  ரஜனீஷ்புரம் உருவாகிறது. நீளமான சிவப்பு அங்கி மற்றும்  ஓஷோ உருவம் பதித்த டாலைரைக் கொண்ட மணியை அணிந்த ஆயிரக்கணக்கான சந்நியாசிகள் ரஜனீஷ் புரத்தை நிறைக்கிறார்கள். இந்தக் கட்டுக் கோப்பான அமைப்பின் பின்னால் ஷீலா இருக்கிறார். கம்யூனின் ஒவ்வொரு அசைவும் ஷீலாவிற்கு தெரிகிறது. ரஜனீஷின் தனியறை உள்ளிட்ட முக்கியமான இடங்களில் ரகசிய ஒலிக்கருவிகள் பதிக்கப்பட்டு எல்லாப் பேச்சுக்களும் பதிவு செய்யப்படுகின்றது. கொஞ்சம் நாடகத்தனமாக சொல்லப்போனால் அங்கு ஷீலாவிற்குத் தெரியாமல் ஒரு அணுவும் அசையமுடியாது.

ஷீலா தினமும் மாலையில் ரஜனீஷை சந்திப்பார். அப்போது ரஜனீஷ் மெளனத்திலிருந்தார். அவர் சந்திக்கும் ஒரே நபர் ஷீலா மட்டும்தான்.  ஷீலா எல்லா விஷயங்களையும்  ரஜனீஷிடம் பகிர்ந்து கொள்வார் மேலும் அவரின் விருப்பத்தையும் கம்யூனின் அடுத்த கட்ட நகர்வையும்  ரஜனீஷ் சொல்லியதாக சந்நியாசிகளிடம் அல்லது முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களிடம் ஷீலா சொல்வார்.  இந்த ஒரு வழிப் பாதையில் நான்கு வருடங்கள் யாரும் குறுக்கிடவில்லை.

கம்யூனிற்குப் பிரச்சினைகள் எப்படி உருவாகின்றன என்பது குறித்துப் பார்ப்போம்.

1. 50 குடும்பங்கள் வசிக்கும் ஆண்டலோப் பகுதி முழுக்கவே வெள்ளையர்கள் வசித்து வந்தனர். இயல்பாகவே அவர்களிடம் நிற உணர்வும் கடவுள் பக்தியும் மிகுந்திருந்தது.  திடீரென உருவான ரஜனீஷ்புரத்தின் பிரம்மாண்டமும் அங்கு குவியும் ஆட்களும் அங்கிருந்து வரும் சப்தங்களும் அவர்களின் இயல்பைக் குலைத்தது.
மெல்ல  ரஜனீஷ் புரத்தின் மீது மிகுந்த வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு நாள் ரஜனீஷ்புரக் குடியிருப்பில் வெடிகுண்டு ஒன்று வெடிக்கிறது.

2. இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது நிறவெறி பிடித்த உள்ளூர்காரர்கள்தாம் என ஷீலா நினைக்கிறார். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே கம்யூனின் பாதுகாப்பிற்கான ஒரே வழி என ஷீலா நம்புகிறார் எனவே ரஜனீஷ்புரத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலிலும் ஈடுபாடு காண்பிக்க ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவரான   கிருஷ்ண தேவா ஆண்டலோப்பின் மேயராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். அமெரிக்காவின் ஜனநாயக சட்டங்கள் ஷீலாவிற்கு தன் எல்லைகளை விரிவாக்க உதவியாக இருக்கின்றன. மேலும்  எங்கெல்லாம் வழிகளை உருவாக்க முடியுமோ அங்கெல்லாம் ஷீலாவால் ராஜபாதையையே போட்டுக் கொள்ளும் ஆற்றல் இருந்தது.

3.அடுத்ததாக 1984 ஆம் ஆண்டின் வாஸ்கோ கவுண்டி தேர்தலில் வெற்றிபெற ஷீலா தேர்ந்தெடுத்த வழிதான் அவரே சொல்வதுபோல எவராலும் கற்பனை கூட செய்து பார்த்திராத ஒன்று. நாடெங்கிலும் உள்ள ஆயிரம் வீடற்ற மனிதர்களை/ நோயாளிகளை அழைத்து வந்து கம்யூனில் தங்க இடமும் உணவும் கொடுக்கிறார். நோயுற்றவர்களுக்கு மருத்துவ வசதிகளையும் செய்து தருகிறார். அவர்களுக்கு கம்யூனில் வேலையும் தரப்படுகிறது. அரசாங்கத்தாலும் சக மனிதர்களாலும் கைவிடப்பட்டவர்கள் ஷீலாவின் மூலம் மீண்டும் ஒரு அடையாளத்தையும் புது வாழ்வையும் பெறுகிறார்கள். ஆனால் ஷீலாவின் உண்மையான நோக்கம், நடைபெற இருக்கும் தேர்தலில் ஆயிரம் பேரையும் தமக்கு ஆதரவாக  வாக்களிக்கச் செய்வதுதான். ஆயிரம்பேரும் பதிவுசெய்து கொள்ளப் போகும் நாளில் அதை எதிர்பார்க்காத ஒரேகன் மாநில அரசு, தேர்தலுக்கு முன்னரான வாக்காளர் பதிவை ரத்து செய்கிறது. தம் திட்டத்தில் தோல்வி அடையும் ஷீலா கணிசமான நபர்களை - தொந்தரவு செய்யும் நபர்களை என ஷீலா குறிப்பிடுகிறார் - வெளியேற்றுகிறார். அதில் ஒரு நபரால் கழுத்து நெறிக்கப்பட்டு சாகும் நிலையை அடைந்து தப்பிக்கிறார்.

4. தன் திட்டங்கள் முறியடிக்கப்பட்டாலும் மனம் தளராத ஷீலா  சந்நியாசிகளைப் பயன்படுத்தி பல்வேறு உணவகங்களின் உணவுகளில் விஷத்தைக் கலந்ததாகச் சொல்கின்றனர். இதனால் வாஸ்கோ கவுண்டியைச் சேர்ந்த 750 நபர்கள் ஒரே நேரத்தில் வயிற்று உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.  ஆனால் ஷீலா இதை மறுக்கிறார். பிற்பாடு இந்தக் குற்றம் ஷீலாவின் மீது சுமத்தப் பட்டாலும் நிரூபிக்கப்படவில்லை. மேலும் நகரத்திற்கு தண்ணீர் வரும் நீர்த்தொட்டியில் எலியின் துணுக்குகளை ஷீலாக்குழுவினர் கலந்ததால்தான் 750 பேர் பாதிக்கப்பட்டனர் என்றொரு கதையையும் உள்ளூர் வாசிகள் சொல்கின்றனர். ஆனால் இரண்டிற்குமே ஆதாரம் இல்லை.

5. இந்தக் காலகட்டத்தில் ரஜனீஷின் புகழ் ஹாலிவுட் வரை பரவுகிறது. நிறைய புதுப் பணக்காரர்கள் உள்ளே வருகின்றனர். குறிப்பாக காட்பாதர் திரைப்படத் தயாரிப்பாளரின் முன்னாள் மனைவி Francoise Ruddy ரஜனீஷிடம் நெருக்கமாகிறார். அவரின் புதுக் கணவர் ரஜனீஷின் மருத்துவராகிறார். ஷீலாவிற்கு இந்த நபர்களின் நெருக்கம் பிடிக்காமல் போகிறது.  குறிப்பாக ரஜனீஷின் மீது கொண்டிருக்கும் தனக்கு மட்டுமேயான தன்மைதான் அவரைக் கொலை வரைக்கும் இட்டுச் செல்கிறது.

6. ரஜனீஷின் மருத்துவரான ஜார்ஜை கொலை செய்ய திட்டம் தீட்டிய குற்றம் ஷீலா மீது சுமத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டது. ரஜனீஷை மரணத்திலிருந்து காக்கவே  மருத்துவரைக் கொலை செய்ய முயன்றதாக ஷீலா தன்னுடைய தரப்பாக கூறுகிறார்.  ரஜனீஷ் மருத்துவரிடம் வலிக்காமல் சாகும் முறையை கேட்டு அறிந்துகொண்டதை ஷீலா இரகசிய பதிவுக் கருவிகளின் மூலம் கேட்டதாகவும். மோர்பினைப் பயன்படுத்த மருத்துவர் பரிந்துரைத்ததை கேட்டு பதட்டமடைந்ததாகவும் கூறுகிறார். இந்தக் குழுவினர் அவரை மயக்க மருந்துகளிலேயே வைத்திருந்தனர் எனவும் ஷீலா குற்றம் சாட்டுகிறார். தனக்கு நெருக்கமான சந்நியாசிகளில் ஒருவளான ஸ்டோர்க் மூலம் விஷ மருந்து கொண்ட ஊசியை மருத்துவர் மீது செலுத்தி இருக்கிறார். ஆனால் மருத்துவர் தப்பித்துக் கொண்டார்.

7. ’பொசஸிவ் ’ குணம்தான் ஷீலா வீழ்ச்சியடைய முக்கியக் காரணமாக இருந்தது. ஷீலாவிற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் ஸ்டோர்க்கிற்கே ஒரு முறை விஷம் வைத்திருக்கிறார் என்பதுதான் மிகவும் அதிர்ச்சியான செய்தி. ஒருமுறை  ரஜனீஷ், தான் வந்த காரின் பானட் மீதிருந்த ரோஜாப் பூக்கள் முழுவதையும் அங்கு நின்று கொண்டிருந்த ஸ்டோர்க்கை எடுத்துக் கொள்ளுமாறு  சொல்லியிருக்கிறார். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஷீலா அடுத்த நாள் ஸ்டோர்க்கின் காபியில் விஷத்தைக் கலந்திருக்கிறார்.



தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஹாலிவுட் குழாமினரின் செல்வாக்கு கம்யூனில் அதிகரிக்கிறது. ஒருகட்டத்தில் ஷீலாவால் ரஜனீஷைப் பார்க்கக் கூட முடியாமல் போகிறது. தான் பாடுபட்டு உருவாக்கியவை எல்லாம் நொறுங்குவதைப் பார்க்க முடியாமல் ஷீலா தனக்கு நெருக்கமான 25 பேருடன் ஜெர்மனிக்குப் போய்விடுகிறார்.

இதுவரைக்குமே கம்யூன் மீது சுமத்த ஒரு குற்றமும் அரசிற்கோ, கம்யூன் மீது அதிருப்தியில் இருந்த மக்களுக்கோ கிடைக்கவில்லை. ஆனால் நான்கரை வருடங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ரஜனீஷ் முதன் முறையாய் பேச ஆரம்பிக்கிறார்.
ஷீலாவின் மீது அடுக்கடுக்காய் குற்றங்களை சுமத்துகிறார். ஐம்பதைந்து மில்லியன் பணத்தை எடுத்துக் கொண்டு ஷீலா ஓடிவிட்டதாக சொல்கிறார். தன் தனிப்பட்ட மருத்துவரைக் கொல்லப் பார்த்ததாகவும், ரஜனீஷ்புர வளர்ச்சிக்குத் தடையாக இருந்த அட்டர்னி டர்னரைக் கொல்ல முயற்சித்தார் எனவும் இதெல்லாம் தனக்குத் தெரியாமல் நடந்தது எனவுமாய் சொல்கிறார்.

மீடியாக்களும், அரசும், FBI ம் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த சந்தர்ப்பத்திற்காகத்தான் அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மதத்திற்கும் உள்ளூர் அரசியலுக்கும் எதிர்ப்பாய் முளைத்த இராட்சத மரத்தை வேரோடு பிடுங்கி எறிய தங்களின் அனைத்து சக்திகளையும் அவர்கள் முடுக்கி விடுகிறார்கள்.

ரஜனீஷ் அவர்களாகப் பிடுங்கிப் போடுவதற்கு முன்பு தாமாகவே உருவான எல்லாவற்றையும் அழிக்கிறார்.

“ என்னுடைய சாராம்சமே மதங்களுக்கு எதிரானதுதான், நானே ஒரு மத அடையாளமாக மாறுவேனா? சுத்த நான்சென்ஸ் எல்லாமே ஷீலாவின் விளையாட்டு”  என அவர் ஷீலா கட்டி வைத்த கோட்டையை உடைக்கிறார். ரஜனீஷ் இசம் புத்தகங்களைக் கொளுத்துகிறார்கள். அதென்ன சிவப்பு ஆடை என்கிற அடையாளம்? அதையும் அழி என உடைகளைக் கொளுத்துகிறார்கள்.

ஒரு நெடிய தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டதைப் போல ரஜனீஷ் நடந்து கொள்கிறார்.  ஷீலாவின் நம்பிக்கையாளர்களை அதிரடியாக மாற்றுகிறார். ஹசியா வின் குழாம் அதிகார வட்டங்களுக்கு உள்ளே வருகிறது. மேயரான கிருஷ்ணாவை மாற்றுகிறார்கள். எல்லாக் கட்டுக் கோப்பும் குலைகிறது.

ஷீலா மீது கம்ப்ளைண்ட் ரெஜிஸ்டர் செய்யவே  FBI உள்ளே நுழைகிறது. வயர் டேப்பிங் என்கிற ரகசிய ஒலிப்பதிவு அமரிக்காவில் குற்றமாகக் கருதப்படும். அதற்கான ஆதாரத்தை FBI  கைப்பற்றுகிறது.  ஏராளமான ஆயுதங்களையும்  கைப்பற்றுகிறார்கள். மூன்றாவதுதான் மிகப் பெரிய குற்றம். குடியேற்ற உரிமை மோசடி. இதில் ரஜனீஷின் பெயரையும் சேர்க்கிறார்கள்.

மேயர் கிருஷ்ணா அப்ரூவராக மாறுவதால் FBI ன் வேலை இன்னும் எளிதாகிறது. ஷீலாவிற்கும் ரஜனீஷிற்கும் வாரண்ட் கிடைக்கிறது. உடனே கைது செய்யும் உத்தரவையும் நீதிமன்றம் இடுகிறது.

ரஜனீஷைக் கைது செய்த நாடகம்தான் அமெரிக்கா ஆடிய மிகப் பெரிய ஆட்டம். மொத்த மீடியாவும் ரஜனீஷ் கைது நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு செய்தது. போலிஸ் கம்யூன் உள்ளே நுழைய பயப்படுவது போல் நடித்தது. உள்ளே அனைவரும் ஆயுதங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் தாக்குதல் நிகழலாம் என கதைகளை கட்டிவிடுகிறார்கள். கம்யூனிற்கு பின்னால் இருக்கும் காடுகள் வழியாய் போலிஸ்காரர்கள் பதுங்கிப் பதுங்கி உள்ளே நுழைய முயற்சிப்பது போல் காண்பிக்கிறார்கள். ஆனால் எதுவும் நிகழ்வதில்லை.

இந்த அபத்த நாடகத்தின் உச்சம்தான் இன்னும் அபத்தம். ரஜனீஷ் தன் விமானத்தின் மூலம் கம்யூனை விட்டு வெளியேறுகிறார். தப்பிக்க முனைகிறார். FBI  சிரித்துக் கொள்கிறது. வான்வழிப் படைக்கு உத்தரவுகள் பறக்கின்றன. அங்கு அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாது. விமானம் தரையிறக்கப்பட்டு ரஜனீஷ்  கைது செய்யப்படுகிறார்.

- மேலும்

Wednesday, April 25, 2018

Wild Wild Country - மா ஆனந்த் ஷீலா



ஓஷோவின் அமெரிக்க வாழ்வைக் குறித்து வெளியாகி பெரும் அதிர்வுகளைக் கிளப்பியுள்ள வைல்ட் வைல்ட் கண்ட்ரி ஆவணப்படத்தில் மா ஆனந்த் ஷீலா கேமிராவைப் பார்த்து இப்படிச் சொல்வதோடு ஆறாவது  பகுதி நிறைவடைகிறது.

“ அவ்வளவுதானா எல்லாம் முடிந்ததா? இந்தப் பேச்சு முடியவே முடியாதென நினைத்தேன். இது மதுவிற்கான நேரம். வாருங்கள் நாம் மதுவருந்துவோம்” 

கனத்த இதயத்தோடு பார்த்துக் கொண்டிருந்த எனக்குமே கூட அப்படி ஒரு எண்ணம்தான் தோன்றியது. ஆனால் அதிகாலை எழ வேண்டியிருப்பதை நினைத்துக் கொண்டே, கனத்த இதயத்தைப் போர்த்திவிட்டுப் படுத்தேன்.

மா ஆனந்த் ஷீலா - நிச்சயம் இந்தப் பெயர் எனக்குப் புதிது கிடையாது. இருபதுகளிலேயே அறிந்து கொண்ட பெயர்.  ஓஷோவின் பேச்சுக்களின் வழியாய் ஷீலாவை அறிந்திருந்தேன்.  ஷீலா அமெரிக்காவில் ஓஷோவின் சரிவுகளுக்கு காரணமாய் இருந்தவர். ஓஷோ ஆசிரமத்தை மிகத் தவறான வழிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டவர் என்பதுதான் இதுநாள் வரைக்குமான ஷீலா பற்றிய என் அறிதல். ஆனால் இந்த ஆவணப்படம் அதை மாற்றியிருக்கிறது. 

ஷீலா நிகழ்ந்த அற்புதங்களில் ஒன்று. தவறான ஆட்களின் தூண்டுதலால் ஷீலாவின் மீது வெஞ்சினம் கொண்ட ரஜனீஷ், ஷீலாவிற்கு குழி தோண்டுவதாய் நினைத்துக் கொண்டு தானும் விழுந்தார். அதேக் குழியில் அவரை நாடி வந்தவர்களையும் விழ வைத்தார். ஆனால் ஷீலா என்கிற அற்புதம் மட்டும் தன் குருவின் மீதான தீராக் காதலுடன் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. 

தான் நினைத்ததை செயல்படுத்த ஷீலா கையாண்ட விதங்கள் வேண்டுமானால் சட்டத்திற்கு புறம்பாக இருக்கலாம் (  இந்தச் சட்டங்கள் என்பவையே யாரோ ஒரு சாரருக்கு சாதகமானவைதானே) ஆனால் ஷீலாவின் செயல்பாடுகளுக்குப் பின் இருந்த நோக்கங்கள் ரஜனீஷ் மீதிருந்த காதலால் அன்பால் பக்தியால் உருவானவை. அதில் என்ன பிரச்சினை இருக்க முடியும். ஷீலாவை இத்தனை வருடங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருந்தமைக்காக இந்த ஆவணப்படத்தை பார்த்து முடித்து விட்டு வருந்தினேன்.

0

என்னுடைய சகோதரன் வழியாய் ஓஷோ எனக்கு அறிமுகமானார். புத்தகங்கள் பேச்சுக்கள் வழியாய் மெது மெதுவாய்  ஈர்க்கப்பட்டு பின்னர் ஒரு மீட்சிக்கு வேண்டி ஓஷோவின் சந்நியாசியாகவும் மாறினேன். என்னுடைய  இருபத்தோராவது வயதில் திருச்சி ஆசிரமத்தில் ஸ்வாமி ப்ரேம் அய்கா என்கிற சந்நியாசப் பெயர் எனக்கு கிடைத்தது. தியானங்கள், ஓஷோ நண்பர்களுடனான பயணங்களென முழுக்கப் பரவசத்தில் திளைத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. ஓஷோவின் பேச்சுக்களில் ’தனித்துவம்’ ’சுதந்திரம்’ ’கற்பனை’ என்கிற மூன்று விஷயங்கள் என்னைப் பெரிதும் பாதித்தன.  இருபதுகளில் உள்ள ஒரு சிறுநகரத்து இளைஞனுக்கு பெரிதாய் என்ன துக்கங்கள் இருந்துவிட முடியும்? ஓஷோவின் தியானங்களும் நடனங்களும் அதைக் கரைத்தன. நான் தன்னம்பிக்கையும் ஆற்றலும் கொண்டவனாய் மாறவும் உதவின. இதோ இதையெல்லாம் இப்படி எழுத விதையாகவும் அந்த அறிதல்கள் இருந்திருக்கக் கூடும்.

இந்தப் பின்புலத்தால் ’வைல்ட் வைல்ட் கண்ட்ரி’ என்கிற ஆவணப்படத்தோடு என்னால் முழுவதுமாக கரைந்து போக முடிந்தது.  இதன் ஆறு பகுதிகளையும் பார்க்கும் நாட்களில் ஆச்சர்யம்  அதிர்ச்சி வியப்பு என மாறி மாறி  உணர்வுகளால் அலைக்கழிக்கப் பட்டேன்.

 ஷீலாவின் முதல் பேச்சிலிருந்து கடைசிப் பேச்சு வரைக்குமான ஒவ்வொரு சொல்லும் என்னை அசர வைத்தது. என்ன ஒரு ஆளுமை . என்ன மாதிரிப் பெண் இவள்! எவ்வளவு புத்திக் கூர்மை!, எவ்வளவு ஆற்றல்! என மாய்ந்து போனேன். உண்மையில் ஹாலிவுட் ஆட்களை ஓஷோ தொலைவில் வைத்திருந்தால், ஷீலாவை புறக்கணிக்காமல் இருந்திருந்தால் இன்றைய அமரிக்காவில் பாதியை ரஜனீஷ்- இசம் கைப்பற்றி இருக்கும். கிறிஸ்துவ மதம் பெரும்பான்மையானதாக மாறி இருக்காது. அமெரிக்க வரலாறே திருத்தி எழுதப்பட்டிருக்கும். 

தன் இரும்புக் கரங்களால் உலகையே வேட்டையாடிக் கொண்டிருக்கும்  அமெரிக்கப் பெரியண்ணன்கள் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட்டிருப்பார்கள். ரஜனீஷ்-இசம் ஒரு மதமாக மாறி மக்களை கொண்டாட்டத்தில் திளைக்க வைத்திருக்கும். இன்றைய முழு மூட அமெரிக்க சமூகம் உருவாகியே இருக்காது. உலகமே அமைதியாக இருந்திருக்கும். ஓஷோவின் முட்டாள்தனத்தால் எல்லாம் பாழானது.

எப்படி? 

எழுதுகிறேன்.





Monday, April 2, 2018

ஓரிதழ்ப்பூ மேலும் சில விமர்சனங்கள்

ஓரிதழ்ப்பூ - ராம்கி






ஓரிதழ்ப்பூ- அய்யனார் விஸ்வநாத் 
------------------------------------------------------
அய்யனாரை நான் முதலில் சந்தித்தது ஜெயமோகன் தங்கியிருந்த விடுதியில். அங்குதான் முதலில் கேட்டேன் இந்தத் தலைப்பை.
...
வெயில் கொளுத்தும் களம். மற்ற உணர்வுகளுக்கு இடம் இருக்குமா? இந்த உலகமும் மனிதனும் உருவான காலத்திலேர்ந்தே ஆணும் பெண்ணும் உறவாடிய சிக்கல்களும் தோன்றியிருக்க வேண்டும். மனதின் அடித்தளத்தில் உருவாகும் அர்த்தமற்ற அல்லது அர்த்தமுள்ள நிஜமான உணர்வுகளுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையில் தத்தளிக்கும் மனிதர்களைப் பற்றிய கதை. 

அது ஒரு மலைகளால் சூழப்பட்ட வெயில் நகரம். தன்னுடைய எண்ண சூழல்களை வைத்து பிடித்தும் பிடிக்காமலும்  போகும் இடங்கள். சங்கமேஸ்வரன் மலர்விழியின் ஆசைக்கு அவளைக் காவுக் கொடுத்துவிட்டு மான் முகத்தோடு, சிறு வயது முதல் மானைப் பற்றிய கனவுகளோடு வளர்ந்து, நரி முகத்தோடு வரும் ரவியைக் கைப்பிடிக்கும் அங்கையை வசீகரிக்கிறான். 

எப்போதும் குடியோடும் அமுதாக்காவின் நினைவுகளோடும் அங்கையை அண்ட முடியாமல் இருக்கும் ரவி.

பூவைத் தேடி அல்லது பூவின் அர்த்தத்தைத் தேடி , துர்காவில் முங்கி கண்டெடுத்த மாமுனி. 

துர்காவின் அரை புருஷன் சாமிநாதன். 

இவர்களிடயே நிகழும் பத்து பதினைந்து நாட்களின் சங்கமம். 

மலையை விட்டு மாமுனி  கடும் கோபத்தோடு இறங்குவதோடு தொடங்கி ரவி வீட்டைவிட்டு இலக்கில்லாமல்  வெளியேறும் வரை முன்னும் பின்னும் பயணிக்கும் அதே சமயத்தில் நகரத்தின் மொத்த சீதோஷ்ண நிலையையும் பதிவு செய்கிறார். 

மலையும், மலைச் சார்ந்த மழையும், கொளுத்தும் வெயிலும் , விஸ்கி மற்றும்  ஏமாற்றங்களும் கொண்ட கதம்பம். நுகர்ந்தால் நாசியில்  குருதி பெருகிடும் மலரை ஒத்து இந்தக் கதையில் போதை சலிப்பின்றி பயன்படுத்தப் பட்டிருகிறது. 

தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம், போதை அல்லது அதிகமான புத்துணர்ச்சி என்ற இரண்டு தீவிர நிலைமைகளைக் கொண்டு நகர்கிறது. 

நல்ல பசி வேலையில் உள்ளிறங்கும் உணவுப் போல சரசரவென்று சரியும் எழுத்து. 

குளத்தின் மீது எறியப்பட்ட கல் ஏற்படுத்தும் வெவ்வேறு தவளைப்பாய்ச்சல் போல எழுத்து – ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் வெவ்வேறு உணர்வுகளை உயிர்த்தெழச் செய்கிறது. 

பெண்களே ஆண்களின் உந்து சக்தியாக இருந்திருக்கிறார்கள். அகத்தியராக நினைத்துக் கொள்ளும் நபர் துர்காவில் கண்டதும், ரவி தேடிய அமுதா அக்காவிலும், சங்கமேஸ்வரன் மலர்விழியில் கண்டதும் இந்த சக்திதான். 

சம்பவங்கள் துரத்தத் துரத்த ஓடுபவன் ஒருவன், தன் வினையில் இலக்கில்லாமல் ஓடுகிறவன் இன்னொருத்தன் என்று வாழ்க்கை ஒரு சின்ன வட்டத்தில் சுழற்றி சுழற்றி அடிக்கும். நம்மில் பல பேர் அதை உணராமலே வெகு வாழ்க்கையைக் கடந்து விடுவோம். 
எழுத்தாளன் ஒரு கணம் நின்று திரும்பிப் பார்த்து விட்டுச் செல்கிறான். அதனாலேயே ஓடிய வேகத்துக்கு ஒரு ஆசுவாசம் போல ஆற்றுப் படுத்தும் அவனுடைய எழுத்துக்கள். 

ஊரைப் பற்றிய விவரங்கள்  நாவலின் ஊடே விவரிப்பது காட்சியின் நம்பகத்தன்மைக்கு வலு சேர்கிறது. 

“திருவண்ணாமலை ஒரு வறட்சிப் பகுதி. வெயில் நகரம். இந்த உயரத்தில் பார்க்கும் பொழுது எவ்வளவு மரங்கள் தென்படுகின்றன. ஒரு நாள் கூட இவ்வளவு மரங்கள் சூழ வாழ்கிறோம் என்ற எண்ணமே தோன்றாமல் இருந்திருக்கிறோம்.” 

நாவலை உருவாக்குவதில் நாவலாசிரியரின் உழைப்பும் அக்கறையும் தெரிகிறது. சில இடங்களில் உரையாடல்கள் தேவைக்கு அதிகமாகவும் , சில அம்சமான விவரணைகளுக்குப் பிறகு வரும் வட்டார உரையாடலும் நெருடலாக இருக்கிறது. இந்த நாவலின் பிரதான பாத்திரம் ரவியின் தோல்விக்கான காரணம் அவனின் பொறுப்பற்றத் தன்மையும் (ஆனால் அவன் பாவமாகவே படைக்கப் பட்டிருப்பான்) காரணமோ என்றும் யோசிக்க வைக்கிறது. 

மாமுனியின் பாத்திரம் அட்டகாசம். கனவுப் பாதையில் கொஞ்ச நேரம் இவ்வுலகை மறக்க வைக்கிறார் . 

இந்தாருங்கள் ஓராயிரம் பூக்கள் அய்யனார். வாழ்த்துகள்.

Sunday, April 1, 2018

ஓரிதழ்ப்பூ - ஜீ.முருகன்




ஓரிதழ்ப்பூ
...........
அய்யனார் விஸ்வநாத்
………

திருவண்ணாமலை மலைக்கும் அந்த நகரத்துக்கும் அசாதாரணங்கள் நிறைந்த வசீகரங்கள் பல இருக்கின்றன. பெரிய கோபுர வாசலில் இருந்த மண்டபம் (தீ விபத்தில் அது சரிந்துவிட்டது) என்னை ஈர்த்தது போல வெவ்வேறு விதங்களில் அவை உலகத்தின் பல திசைகளிலிருந்து மனிதர்களை ஈர்க்கின்றன. ஆன்மிகம், பக்தி, கிரிவலம், தத்துவம் எல்லாம் மேலுக்கான காரணங்கள் மட்டுமே. 

‘மரம்’ நாவலின் பிரதான பாத்திரங்களை உருவாக்கிவிட்டு அவர்களை எங்கே உலாவ விடுவது என்று சுமார் ஆறு மாத காலங்கள் யோசித்துக்கொண்டிருந்த போது திருவண்ணாமலை நிலவெளியை ஞாபகம்கொண்டதும் சட்டென்று அவர்கள் அங்கே குடியேறிவிட்டார்கள். 

அப்படித்தன் அய்யனார் விஸ்வநாத்தின் ஓரிதழ்ப்பூ நாவலில் வரும் பாத்திரங்கள் அந்த வினோத நிலவெளியில் பொருந்திப் போயிருக்கிறார்கள். அகத்திய முனி, சாமிநாதன், ரவி, அங்கையர்க்கன்னி, மலர்ச்செல்வி, சங்கமேஸ்வரன், துர்க்கா, அமுதா, ரமா எல்லோருமே தங்களுக்குள் ஒரு அசாதாரணத்தை சுமந்து திருவண்ணாமலை மண்ணில் வலம்வருகிறார்கள்.

‘கொம்பில்லா இலையில்லாக் காம்பில்லா ஓரிதழ்ப் பூவாம் கண்டு தெளிந்து உண்டு நீங்கி நிலையில் நிறுத்து பிளவில் பூக்கும் மலரை யறிய வேணுங் கண் யறிந்த கண்ணைச் சுவைத்த நாவை அறிந்தறிந்து யடைவாய் உன்மத்தம்’ 

என்ற புதிரில் ஒளிந்திருக்கும் ஓரிதழ் பூவை இருநூறு ஆண்டுகளாகத் தேடியும் கிடைக்காமல் பொதிகை மலையிலிருந்து திருவண்ணாமலைக்கு வருகிறார் அகத்திய முனி. 

ஒரு நாள் ரவி கோபத்தில் அவரிடம் சொல்கிறான், “ங்கொம்மா, பாவடையத் தூக்கிப் பாரு இருக்கும்” என. விடை கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கிறார் முனி. பிறகொருநாள் ‘அண்ணாமலை’ தான் அந்த ஓரிதழ்ப்பூ என்றும் கண்டுகொள்கிறார்.

ரமணாஸ்ரமம், சேஷாத்திரி மகரிஷி ஆஸ்ரமம், கந்தாஸ்ரமம், தேனிமலை, சமுத்திரம் ஏரி என ஒரு நாடங்க அரங்கு போல திருவண்ணாமலை மயக்கம் கொள்ள முனி, சாமி, ரவி, துர்க்கா, அங்கை எல்லோரும் நாடக நடிகர்களாக மாறிவிடுகிறார்கள். யாதார்த்தத்தில் காலூன்றாத அவர்களின் வினோதப் பண்புகளே இந்த நாவலின் பெரிய வசீகரம். காமமும் காதலும் போதையும் பைத்திய நிலையும் அவர்களை இயங்கும் விசைகளாகின்றன.

‘மான்’ என்ற படிமம் ரொமான்டிஸத்தை நோக்கி நாவலை இழுத்தாலும் பெரும் காமத்தை நோக்கிய பாத்திரங்களின் விழைவு அதை ஈடு செய்துவிடுகிறது. 

நம்ப முடியாத, நாடகீயமான சம்பவங்களே நாவலின் கட்டமைப்பு என்பதால் நாவலுக்கு பலவீனமாக இல்லாமல் அவையே பலமாகவும் மாறிவிடுகின்றன. 

இந்த நாவல் வேண்டி நிற்கும் தத்துவார்த்த தளம் ஒன்று கைகூடாமல் போனதும் நடந்திருக்கிறது. 

மண் வாசனை உத்தரவாதத்தோடு, வட்டார மொழிப் பேசி, ரத்தமும் சதையுமான மனிதர்கள் உலாவும் யாதார்த்த வகை என்ற பாதுகாப்பான எல்லைக்குள் நீதிக் கதைகள் எழுதுபவர்களுக்கு மத்தியில் அபூர்வமாக மலர்ந்துள்ளது கனவுத் தன்மை கொண்ட இந்த ஓரிதழ்ப்பூ.

..........

வெளியீடு கிழக்குப் பதிப்பகம், பக்கங்கள் 166, விலை ரூ.150.

Thursday, March 29, 2018

ஓரிதழ்ப்பூ - அமுதமொழி



ஓரிதழ்ப்பூ - அய்யனார் விஸ்வநாத் அவர்களின்  புதினம். அதன் இறுதி வடிவ நகலை அச்சுக்கு முன் படித்து   கருத்து சொல்லும்படி  அனுப்பி வைத்துள்ளார் . படித்துகொண்டிருக்கிறேன் . அகத்திய முனிவரின் தேடலும் போகனின் பதிலுமாய் தேடல் தொடரும் ஆரம்பம் திகைப்பை தருகிறது .

"கொம்பில்லா இலையில்லா காம்பில்லா ஓரிதழ் பூவாம்
கண்டு தெளிந்து உண்டு நீங்கி -நிலையில் நிறுத்து 
பிளவில் பூக்கும் மலரை யரிய வேணுங் கண்
யறிந்த கண்ணை சுவைத்த நாவை அறிந்தறிந்து அடைவாய் உன்மத்தம் "

இந்த பாடல் தேடலுக்கான உந்துதலாக இயக்குகிறது கதை 

ஓரிதழ்ப்பூ  -  என் பார்வையில் .

வாழ்க்கை மனிதர்களை இடம் மாற்றி சேர்த்தே வேடிக்கை காட்டுகிறது. அதிலிருந்து தப்பித்து அவர்கள் அவர்களுக்கான இடத்தை கண்டடைய செய்யும் முயற்சிகளின் சிராய்ப்புகள் வலிகள் வேதனைகள் பரிதவிப்புகளை   எல்லாம் விரிவாய் பேச ஒரு கதையாகிறது ஓரிதழ் பூ.

தனக்குள் உரைவுற்றிருக்கும் மென்மையை எழுப்பத் தெரிந்த புரிதல் தேடி ஆண்களும் பெண்களும் இப்பிரபஞ்ச வெளியெங்கும் அன்பை தொலைத்த அகதிகளாய் அல்லலுற்று அலைவதை படிப்பவர் மனதில் அழுத்தமாய் பதிய வைக்கிறார். தன்னை தன் கதா பாத்திரங்களில் ஒளிந்துகொண்டு கதை ஆசிரியர் பேசாமால் கதை மாந்தர்களின் வாழ்க்கை நகர்வில் அதை உணர்த்திப் போவது இந்தப் புதினத்தின் சிறப்பு.

காமத்தை அதன் அகவியல் சார்ந்த நிறைவை எய்த யத்தனிக்கும் இவரது கதை மாந்தர்கள் நம்முள் நம் அருகில் எதிரில் எங்கும் வியாபிதமாகி நிறைந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்திப் போகிறார்.

கதையின் ஓட்டம் ஆரம்பத்தில் உள்ளே நுழைய முடியாத ஒரு சின்ன சிக்களை வைக்கிறது. கதை மாந்தர்களின் அறிமுகம் இன்னும் தெளிவான நிறைவில் நேரடியான அறிமுகத்தில் நிகழ்த்தப்பட்டிருந்தால் இந்த நெருடல் உணராமல் சுலபமாய் கதைக்குள் ஒன்றி இருக்க முடியும் 

கதையின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் இடங்கள் புதிய சுவாரஸ்யமான பரவசத்தில் படிப்பவரை ஆழ்த்துகிறது.

மாமுனியின் ஓரிதழ் பூவுக்கான தேடல் அது பெண்ணின் அந்தரங்க உறுப்பின் கலை வடிவாய் பரிமளிப்பதை ஆசிரியர் கதை முழுவதும் தொடர்ந்து வரைந்துப் போகிறார். சில இடங்களில் அது சலிப்பையும் எட்டி பார்க்கச் செய்கிறது .

பெண்ணுடன் கூடல் என்பது உடல் தேவையின் உச்சம் என்பதை விட மனத்திருப்தி, ஆத்மா நிறைவுக்கான தாகம் என்பதான புரிதலை முன் மொழிந்து நகரும் புதினம் இறுதி பக்கங்களில் வேகமெடுத்து ஓடுகிறது . 

புத்தகத்தை தரையில் வைக்க முடியாத ஈர்ப்பை கொட்டியிரைத்து நகர்கிறது. இதோ முடிந்து விடுமோ என்ற பரவச தவிப்பை படிப்பவரின் அனுபவத்தில் விட்டுச்செல்கிறது.

துர்க்கா, அங்கையற்கண்ணி, அமுதா, மலர் எல்லாம் தங்கள் தீரா காதலின் சுதந்திர வேட்கை துரத்த துரத்த அதை கண்டடைய ஓடிய ஓட்டத்தின் களைப்பில் விடுதலை நோக்கி பயணிப்பதாக கதையை முடிக்கிறார்.
இவர் பெண் பாத்திரங்கள் தங்களின் மினுங்கலான அக அழகின் ஒளிர்வில் நிறைந்திருக்கிறார்கள். துர்காவுடன் அங்கையற்கண்ணி பயணமாகிறாள். சங்கமேஸ்வரன் எனும் குறியீட்டு வடிவின் நிஜ உருவின் அன்பில் திளைக்கிறாள் .
அமுதா தனித்தே இப்பிரபஞ்ச அழகை தேடிக்கொண்டு போகிறாள். அதில் அவளுக்குத் துணையாக அவளே போதுமென்ற நிறைவை எட்டுகிறாள்.
மாமுனி துர்காவால் அவரது மனைவி வசம் ஒப்படைக்கப் படுகிறார்.
சில மனிதர்களின் அறிமுகத்தில் நாம் தரிசணங்கள் கண்டடைந்த பரவசத்தில் சிலிர்ப்பதை துர்கா மூலம் நிகழ்த்துகிறார் . அது கேலி செய்கிறாரோ அப்படியான புரிதலை என்றும் கேள்வி எழுப்புகிறது .
இன்னுமொரு வாசிப்பில் வேறு புரிதலையும் தரலாம் இந்தப்பூ. இன்னுமொருவர் வாசிப்பில் பல் வேறு புரிதலும் வசப்படலாம் .

அனைத்தையும் கருத்தேற்று பதிப்பித்தால்  இன்னும் மெருகேறலாம் இந்தப்பூ.

நிறை நன்றியும் வணக்கமும் அய்யனார் விஸ்வநாதன். வாழ்த்துகள் .

ச. கனியமுது 
காவேரிப்பட்டினம்.

ஓரிதழ்ப்பூ - கனவுப் பிரியன்







“ புத்தக அறிமுகம் "



" ஒரு இடத்துல இருக்கமாட்டேன்கிறான். துருதுறுன்னு வாரான். எது கொடுத்தாலும் கொஞ்ச நேரம் தான் வேலையாடுறான். அடுத்ததுக்கு போயிறான் “ என்பது தான் என் குழந்தைகளைப் பற்றி யாரேனும் சொல்லும் அதிகபட்ச குற்றச்சாட்டாக இருக்கும்.

 “ மனசுக்குள்ள நினச்சுக்குவேன் தக்காளி, நெல்லு வச்சா நெல்லு தானே வெளையும்ன்னு “

என்னை ஒருமுகப்படுத்துவது கஷ்டம். என்னை மட்டுமல்ல கூடுதல் சிந்தனை கொண்டவனை நிலைப்படுத்தவே முடியாது. சதா ஏதேனும் ஓடிக்கொண்டே இருக்கும் அவனுள். 

“ தட்டலிஞ்சு திரியிறான் “ என்பார்கள் ஊருக்குள். 

வெளிகாட்டுவதற்கு அவனுக்கு ஏதேனும் தடம் கிடைக்கும் போது வார்த்தை வடிவில் கொட்டத் துவங்கி விடுகிறது அவனது அலைகழிப்பு. 

அதிலும் என்னமாதிரி அகங்காரம் கொண்டவனுக்கு குக்கர்ல மூணு விசில் எல்லாம் பத்தாது. ஏழு விசில் வைக்கணும் அப்போ தான் எதுவுமே வேகும். 

எதையாவது வாசிக்கிறப்போ அல்லது எதையாவது பாக்கிறப்போ அதுக்குள்ளே என்ன மறந்து நிக்கனும். அப்போ தான் எதுவுமே தொடரும். இல்லைன்னா சட்ன்னு நான் சுய நினைவுக்கு வந்துடா அதுக்குள்ளே பயணப்பட என்னால முடியாது. 

கொஞ்சமேனும் எளிமையான புரிதல் இருக்கணும்

புதுசா ஏதாவது இருக்கணும் 

தகவல் இருக்கணும் 

நூறு இருபது வார்த்தைகள் கொண்டு ஏன் இந்த எழவெல்லாம் சொல்லுறேன்னு பாக்குறீங்களா. என்ன எதையாவது  வாசிக்க வைக்கிறது கஷ்டம்ங்கிறதை சொல்லவேண்டி இவ்வளவு மெனக்கெடல். 

எப்போமாவது, இத விடக்குடாது முழுசா வாசிச்சிரனும் எனும் இந்த அற்புதம் நிகழும். 

“ அய்யனார் விஸ்வநாத் “ அவர்களின் “ ஓரிதழ்ப்பூ “ புத்தகம் அதை சாத்தியப்படுத்தியது. 

உண்மையிலே “ ஓரிதழ்ப்பூ “ ன்னா என்ன தெரியுமா ஆறாவது அத்தியாயத்தில் வாத்தியார் கோவத்துல சொல்லுவான் பாரு  “ என்று நண்பன் பீடிகை போட 

பூங்காவனத்தின் புருஷன் மாமுனி போல நானும் 

“ கொம்பில்லா இலையில்லாக் காம்பில்லா ஒரிதழ்ப் பூவாம் கண்டு தெளிந்து உண்டு நீங்கி – நிலையில் நிறுத்து பிளவில் பூக்கும் மலரை யரிய வேணுங் கண் யறிந்த கண்ணைச் சுவைத்த நாவை அறிந்தறிந்து யடைவாய் உன்மத்தம் “  

எனும் வரிகளில் குடியிருக்கும் அந்த ஒரிதழ்ப்பூ பற்றி தெரிந்து கொள்ளும் ஆசையில் 

பெய்யும் பேய்  மழையையே ஒரு முறை வானத்தை உற்றுப் பார்த்து நிறுத்தும் வரம் கொண்ட மாமுனிவனோடு சேர்ந்து தேடத் துவங்கினேன். 

ரவி – அமுதாக்கா 

அமுதாக்கா – அவ புருஷன் 

ரவி – ரமா 

ரவி – அங்கயர்க்கண்ணி 

அங்கயற்கண்ணி – சங்கமேஸ்வரன் 

சங்கமேஸ்வரன் – மலர்ச்செல்வி 

அங்கயற்கண்ணி – துர்க்கா 

துர்க்கா – சாமிநாதன் 

சாமிநாதன் – லட்சுமி  

துர்க்கா – அய்யனாரு 

அய்யனாரு – பூங்காவனம்ன்னு கதையில் சம்பவங்கள் ஊடே அஞ்சு ஓரிதழ்ப்பூவை ஆசிரியர் வார்த்தையில் பரப்பிக் காட்டுகிறார். 

கதை அப்படியே திருவண்ணாமலையை சுத்தி பேயா சுத்துது. பேய்ன்னா அப்படி ஒரு பேய்த்தனம். 

இந்த புத்தகத்தின் கதையை நிஜம்ன்னு நம்புறதா, புனைவுன்னு சொல்லுறதா இல்லை அதீத புனைவுன்னு எடுக்கவான்னு, வாசிப்பவனை உன் தரத்துக்கு ஏத்தமாதிரி நீயே எது எதுல சேத்தின்னு தேடிக்கோ என்று கொடுத்துவிடுகிறார்.

அகத்திய முனியா கண்டா அகத்திய முனி அதுவே அய்யனாரா கண்டா அய்யனாரு. 

ஓரிதழ்ப்பூ வைத்தேடி அலைஞ்சா ஓரிதழ்ப்பூ, இல்ல ஊருக்குள்ள நடக்கத்தானே செய்யுதுன்னு எடுத்துக் கிட்டா சம்பவம் அவ்வளவு தான். 

ஆனா சொல்லுற விதம் இருக்கே அது ரொம்ப கிளாசிக்கா இருக்கு. 

ஆசிரியரே முன்னுரையில் சொல்லுவது போல முதல் ஏழு அத்தியாயம் மிரட்டாலா இருக்கு. 

உண்மையிலே வந்திருக்கிறது முனிவன் தானா. 

மகரிஷியைத் தேடி வந்தவனா. 

ஓரிதழ்ப்பூ என்ற அந்த வரிகளை எழுதியது யார். 

உண்மையிலே போகர் யாரு. 

இதெல்லாம் மானிட வடிவமா. 

மலர்ச்செல்வி உண்மையிலே அந்த பர்வதமலை காட்டுல காணாம போயிட்டாளா. 

மனிதத் தலை கொண்ட மான் வருமா அங்கயர்கன்னியை தேடி. 

இது எந்த காலத்துல நடக்குது. 

இப்படி பல கேள்விகள் வாசிப்பவன் முன் அடிபட்ட திறந்து இருக்கும் புண் மீது சுற்றிவரும் ஈ போல கோய்ங்ங்ங்.. என்று சுற்றுகிறது.

மகரிஷி, அகத்தியர் எல்லாம் கதையில் வருகிறார்கள். அதற்காக கொதிக்காமல் விசுவாமித்திர்ராக சிவாஜி நடித்த " ராஜரிஷி " யும் தமிழ்ப்படம் தான் என்பதை சமூகம் நினவில்  கொள்ள வேண்டும்.

ஓரிதழ்ப்பூ என்று பெயர் வைத்ததாலோ என்னவோ ஏகப்பட பூக்கள் பூ மரங்கள். அதி அற்புதமான ஒரு வீதி வழி நடப்பது போல உள்ளது. 

மழைக்கு இடையே ஒரிதழ்ப்பூவை ஒவ்வொருவரும் தரிசிக்கும் நிகழ்வுகளை எல்லாம் நல்ல கவிதைத் தனத்துடன் விவரிக்கிறார். அதிலும் கூடுதலாக அவர் பெண்கள் பகுதியில் இருந்து அவற்றை பேசுவதால் இன்னும் அழகாக உள்ளது. 

“ ஆதி உறவு அந்து போகும் ......உறவு அக்காது “ என்ற வட்டார வழக்கு ஒன்று உண்டு. 

காதல் என்றும் பெண் போக்கிலே என்பார்கள். 

வாழ்வியலும் பெண் போக்கில் தான் 

அப்போ ஓரிதழ்ப்பூ.............?

எங்க ஊருல பஜாருல என்னோட வண்டியை நிறுத்திட்டு ஏதாவது வாங்கப் போவேன். 

திரும்பி வரும் போது சிலநேரம் அழுக்கு உடையோட மெலிந்த பெண் நிற்பாள். என்னைக் கண்டதும் கையை நீட்டுவாள். நானும் சிரித்தபடி பணம் தருவேன். வாங்கிக் கொண்டு எதுவும் பேசாமல் போய் விடுவாள். ரோட்டில் யாராவது சீண்டினால் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கி விடுவாள். 

அந்த கிறுக்கச்சியை காணும் போதெல்லாம் எனது நண்பர்கள் அது என்ன உன்கிட்ட மட்டும் பணம் கேக்கிறா. நீயும் கொடுக்கிற. பைத்தியக்காரிக்கி போய் பணம் கொடுக்கிற என்றெல்லாம் கூறுவதுண்டு. நான் ஒன்றும் பதில் சொன்னதில்லை. 

ஆனால் கல்யாணம் ஆனதும் மனைவியுடன் முதன் முதலாக அவளை சந்திக்க நேர்ந்த போது மனைவி அவள் என்னிடம் பணம் வாங்கிக் கடந்ததும் கேட்டாள் 

“ யாரு இந்த கிறுக்கி “

“ ............ஸ்கூலோட இங்கிலீஷ் டீச்சர் “ என்றேன் 

திக் என்று பயந்தவளாக “ என்னது “ என்றவளிடம் 

“ நம்ம வீட்டுக்கு எதிரே இருக்கிற அல்லல்காத்தான் வீட்டுக்கு டியுசன் எடுக்க வருவா. நேருல அப்போ பாகிறப்போ ஒரு சிரிப்பு சிரிப்பா அவ்வளவு தான். அப்போ அவளுக்கு கல்யாணம் ஆகல. நல்ல அழகா இருப்பா. ............ளோட ஆட்கள் அஞ்சாறு பேரு சேர்ந்து கற்பழிச்சிட்டாங்க. பைத்தியம் மாதிரி திரியிறா.  “ என்றேன். 

எல்லாமே தோற்ற மயக்கம் தான். 

நீ எதுவாக காண்கிறாயோ அதுவாக இருப்பேன். 

இந்த புத்தகமும் அப்படித்தான்.

x

ஓரிதழ்ப்பூ என்பது ஒரு பூ தானா?




நதியின் பெயர் பூர்ணா

 முதல் விழுங்கலில் துவர்த்தாலும்
மறுமுறைக்கு தவித்தது நாக்கு
இரண்டாவது மடக்கில் தோளில் முளைத்தன சிறகுகள்
தக்கையாய் மிதந்தன கால்கள்
கருவறை விட்டெழுந்த அவசரத்தில்
பிருஷ்டங்கள் நடுவே சுருண்டிருந்தது உன் ஆடை
சருமத்தில் சந்தன வியர்வை
வெண்கல முலைகளில் ததும்பும் இனிமை
கனவின் படிகளில் இடறியோ
மதுவின் சிறகிலிருந்து உதிர்ந்தோ
உன் யோனிக்குள் துளியாய் விழுந்தேன்
“யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்”
பூர்ணா நதியின் மடிப்புகளில் ஒடுங்க மறுத்து
அலைகிறது சூரியவெளிச்சம்
ஆர்யாம்பாளின் கண்ணீரில் கரையாத
பிரம்மச்சாரியின் முதலைப் பிடிவாதத்தின்
காவி நெடியில் பூமி மயங்கி மீண்டும் விழித்தது
கற்படியின் குழியில் தேங்கிய நீர் வெதுவெதுப்பு
காற்று உந்திய புதிய அலையில்
குளிர் நதியும் அத்வைதிதான்-
போதையும் களவும் போல
கடவுளைப் புணர்ந்த ஆனந்தம் கொண்டாட நானும்
மனிதனைப் புணர்ந்த பாவம் தொலைய நீயும்
முழுகிக் கொண்டிருக்கிறோம் தேவி ஒரே நதியில்.

 - சுகுமாரன் 


 நான் செய்த தவறுகள்

என்னுடைய முதல் தவறு
கடவுளில்லாத உலகத்தில் பிறந்தது
இரண்டாவது தவறு
கடவுளை எனக்காக உருவாக்கிக் கொண்டது
மூன்றாவது தவறு
பால்பேதமற்றிருந்த கடவுளை
இரண்டாகப் பகுத்து மனித சாயலில் ஆண்-பெண் ஆக்கியது நான்காவது கடைந்தெடுத்த முட்டாள் தனம்
இனப்பெருக்க உறுப்புகளைத் தூண்டி விட்டது
ஐந்தாவது தவறு
ஆண்கடவுளுக்கு ஆணுறை வழங்க மறுத்தது
ஆறாவதாக குட்டிக் கடவுளைக் கொண்டு போய் பள்ளியில் சேர்த்தது
ஏழாவது தவறு
எனது வீட்டுக்குப் பக்கத்திலேயே கோயிலைக் கட்டிக் குடியமர்த்தியது
எட்டாவது தவறு
என் துணைவியை ஆண்கடவுளிடம் சோரம் போக விட்டது ஒன்பதாவது பெருந்தவறு
பழி வாங்கும் எண்ணத்தோடு பெண்கடவுளை நான் வன்புணர்ச்சி செய்தது
பத்தாவது தவறு
என் துணைவியின் வயிற்றில் கடவுள் உண்டானதையும் பெண்கடவுளின் வயிற்றில் மனிதர் உண்டானதையும் கருவழிக்க மறந்தது
நான் செய்த பத்து தவறுகளுள் எனக்கு மிகவும் பிடித்த தவறு கடவுளை எனக்காக உருவாக்கியதுதான்.

 - ரமேஷ் பிரேம்

 தவறுகளின் நிமித்தம், நான் உட்செல்கிறேன். பின் வெளி வருகிறேன். அணைக்காமல் விட்டுச் சென்ற சிகரெட் புகைச்சுருள் சிவந்து பின் அமர்கிறது. காற்றுவெளியின் துகள்களின் நடுவே அதன் மீந்த சாம்பல் இன்னும் சின்னஞ்சிறு துகள்களாக, பின் துகள்கற்ற அகாலப்பரப்பாக, ஏதுமற்றதாக மறைகிறது. சுருண்ட புகை மென்மேலும் உயர்ந்து உயர்ந்து, அருகமர்ந்த நாசிகளில் நிரம்பி, சுவாசத்திற்குள் புகப்புக, அதன் திட்டுத்திட்டான அரூபம் படிந்து எண்ணங்களை உரசத் தொடங்கியது. எத்தனை முறை பார்த்திருக்கிறோம். என் முதல் தொடுகை எப்பொழுது நடந்தது. மாமா மறைத்து வைத்திருந்த நிர்வாணப்படங்களையும் அதன் தலைகீழான புணர்வுகளையும், குறிகள் எதன் பொருட்டு அலைக்கழிகின்றன என்றும் நினைத்துக் கொள்கிறேன். கடவுளர்களும் மனிதர்களும் புரளும் நிலையற்ற பரப்பில் தொடர்ச்சியாக உள் நுழைவதும் வெளித் தள்ளுவதும். கனவின் நிலத்தில் தவறுகளினால் (தவறுகளா) உருவாக்கிய உடல்களை விடாது கடித்துக் கொண்டே இருக்கிறது ஆண் மனம். பற்களாலான குறிகள் கொண்டிருக்கிறேன். எண்ணிலடங்கா உடல்களின் சுழலில் மீள மீள உள் செல்கிறேன் வெளித் தள்ளுகிறேன். ஆனால் தொடர்ச்சியாக பீய்ச்சப்பட்ட விந்துவிற்கு பின் எளிய உயிரியாக தன்னை பாவித்துக் கொள்ளாத ஆண்களே இல்லை போலும். எதனையோ தூக்கி சுமந்து கொண்டிருக்கும் பொழுது கால்கள் நழுவி அத்தனையும் கரையற்ற நீர்ப்பரப்பில் கரைந்து ஒன்றுமில்லாமலாவது.

 “கொம்பில்லா இலையில்லாக் காம்பில்லா ஓரிதழ்ப் பூவாம் கண்டு தெளிந்து உண்டு நீங்கி நிலையில் நிறுத்தி பிளவில் பூக்கும் மலரையறிய வேணுங் கண் யறிந்த கண்ணைச் சுவைத்த நாவை அறிந்தறிந்து யடைவாய் உன்மத்தம்”

 ஓரிதழ்ப்பூ பெண்குறி. அகத்தியர், போகர், ரமணர், சங்கமேஷ்வரன், அய்யனார், ரவி, சாமிநாதன், ஜோசியர், பெரியசாமி, மான், திருவண்ணாமலை. மையமற்று அங்கும் இங்குமாக செல்லும் கதை உத்தி. பெண்கள், காளி, துர்கா, லட்சுமி, அங்கயற்கண்ணி, மலர்ச்செல்வி, ரமா, அமுதா, டீச்சர் அம்மா. அவர்களுடைய ஒவ்வோரு ஓரிதழ்களும். திரும்பத் திரும்ப பூக்கள். இவர்களின் உலகிற்குள், கனவிற்குள், உறக்கத்திற்குள், நிலத்திற்குள், உணவிற்குள் என சமனின்றி பாயும் கதையில் தொடர் கண்ணியாக ஒரே பெண்கள். இந்தப் பெரும் சங்கிலியில் ஊளையிட்டுக் கொண்டே இருக்கும் வன மிருகம் ஒன்று கழுத்து கட்டுண்டு இருக்கிறது. கட்டுண்டால் மட்டுமே கிடைக்கும் ஊன். ஆனால் தன்னால் கட்டவிழ்க்க முடியும் என்று அறிந்து கொண்ட பின் தான் அந்த கனத்த சங்கிலியை தன் உடல் முழுதுக்குமாய் கட்டிக் கொள்ள முனைகிறது. பெரிதும் சிறிதுமான இந்தச் சங்கிலியின் அழுத்தம் அதன் உடலை ஒரு எரிவாயு போல உறிஞ்சிக் குடிக்கத் தொடங்குகிறது. ஒரு சமயம் இன்னும் இன்னும் என அந்த மிருகம் லயிக்கையில் நிகழ் உலகில் வெத்துக் கூடாக கிடக்கும் என்றால் அப்படியுமில்லை. அந்த சங்கிலிகள், மிருகம், லயிப்பு, கனவு எல்லாம் கதை சொல்லலில் மையமின்றி போய் விடுகிறது. காமம் தான், பெண் உறுப்பில் பூ பூத்திருக்கிறது.

அமானுஷ்ய குணாதீசயங்களுடன் இருக்கிறார்கள் பெண்கள். மான்களுடன் புணர்ந்து பிள்ளைகள் பெறுவார்கள். பித்தனுடன் கூடி இன்பம் துய்ப்பார்கள். நெஞ்சு மிதித்து காளியாவார்கள். கழுத்துடைந்து பலி ஆடாய்க் கிடக்க விரும்புவார்கள். எதற்கு இப்படி ஒரு பயம் அவனுக்கு அவள் யோனியைப் பார்த்ததும் தொற்றுகிறது. அவன் ஏன் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மூத்திரம் மலம் வாந்தி எனப் போய்க்கொண்டிருக்கும் பாதையில் திரும்பத் திரும்ப பெண் பூ பூ நாற்றம் நாற்றம் என்று எனக்கு தலைகீழாக்கம் ஆகியிருந்தது. உவர்த்த மத நீரின் ருசி, பிசுபிசுப்பு, மணம் என அதன் வாதையின் ரீங்கரிப்பு என்னுள் புகும் பொழுது, இன்னும் ஆழமாக அவள் விரல்கள் உள் நுழைந்து வெளியே பீய்ச்சிக் கொண்டிருந்தாள். திரும்பத் திரும்ப தெளிவற்ற பாதையினுள் போய்க்கொண்டிருப்பதைப் போலவே இருந்தது. ஆனால் சொல்ல விளைவது என்ற கருத்திற்குள் நான் நுழையவே இல்லை.

புனைவு மொழி படிமங்களால் ஆனது என்றே நம்பிக் கொண்டிருக்கிறேன். நான் அந்த ஒவ்வொருவனாகவும் ஆகிக் கொண்டிருக்க வேண்டும். விழுந்து எந்திரிக்க வேண்டும். மாயயதார்த்தம், யதார்த்தம், புனைவு, பின் நவீனத்துவம், மிகு கற்பனை, மீளுருவாக்கம், முரணான கதை சொல்லல் முறை என்று எதற்குள்ளும் செல்லவில்லை. ஆனால் வெகு காலமாக ஆண் மனம் உருவாக்கிய பிரக்ஞையைத் தேடிக் கொண்டிருந்தேன். சாத்தியமற்ற வழிகளில் அதன் பைத்தியக்களையைப் பிடித்து விடலாம் என்று நம்பினேன். பெண்கள் தேவதைகளாக இல்லை காளிகளாக உருவானவர்களா என்று நம்பவில்லை. இளகியவர்களா நிச்சயமில்லை. அரதப்பயலுக்கு பொறைந்தைகள, தேவடியாப்பய, புளையாடி மோன, புண்டாச்சி மவன, புண்டைக்கு பொறந்தைகள, தள்ளைய ஓத்தவன, அக்காள வோளி இப்படி உறவுகளுக்குள் தினமும் புணரும் வார்த்தைகளை பெண்களின் மொழி வழியாகவே அறிந்து உணர்ந்திருக்கிறேன். அதனால் அது மிக எளிதாக பெண்ணுக்கான வசை, பெண்களை மைய்யப்படுத்தி ஆணைக் குறிக்கும் வசை. ஆனால் ஆண் பெண் எனும் உறவிற்குள் காமம் அற்றுப் போகையில் அவர்களுக்குள்ளான உறவு என்பது எதனை அமைக்கிறது. எந்தப் பிடிமானம் இருக்கும்.

தன் எளிய தாழ்வுணர்ச்சியிலிருந்து அவன் பெண்களை அறிகிறான். அம்மையை விரும்பும் அகம், காதலியை அங்கு வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. அதே நேரம் அம்மை காளியாகி விடுவதில்லை. காதலியின் காளியின் கணங்கள் அவனுக்கு தேவை. அதே நேரம் சந்தன வல்லியாக அவள் வந்து அணைத்துக் கொண்டு நெஞ்சில் மிதிக்க வேண்டும் என உள்ளூற ஆசைப்படுகிறான். காதலியின் முலையை சப்பாத ஆண் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அவன் குழந்தையாகவும் வன் மிருகமாகவும் திரும்ப காதலனாகவும், எளிய உயிரியாகவும், வெறும் உடலாகவும், புனைந்து கொண்டே இருக்கும் பாவனையில் பெண் தன்னை காதலியாக, அம்மையாக, தமக்கையாக, காளியாக, பிள்ளையாக, அனாதரவானவளாக உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்களோ?

பிம்பங்களுக்கான எதிர்பிம்பங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கையில் ஒன்றை உணர்கிறேன். பிம்பங்களின் ஆடி யார் வசம் இருக்கிறது என்று. அதனால் வானம் அழைக்க பொதி மூட்டையக் கொண்டு நகரும் ரவி என்னிடம் வசப்படவே இல்லை. வந்திருந்தால் அவன் தொங்கிக் கிடக்கும் மொன்னைக் குறியை நான் அறிந்து கொண்டிருக்ககூடும். கூடவே மொன்னை மனிதனாய் சாமி நாதனின் கால் இடுக்கில் அகப்பட்டுக் கிடக்கும் வெத்துக் களச்சிகளையும். பின் எதற்காக இந்தக் கவிதை. ஏன் அய்யனார் புத்தி பேதலித்திருக்கிறான். அவன் சுகித்த அந்த ஓரிதழ்ப்பூவை, இவர்கள் ஏன் விலக்கினார்கள். ஆமாம். ஒரு பித்து நிலை வேண்டும் போலும் இந்தப் பெண்களுக்கு. அய்யனாரின் பெண்களுக்கு மான் தான் வேண்டும். மான் தலை உள்ள ஆண்களிடம் விடைத்த குறிகள் உண்டோ. இல்லை. இது குறி சம்மந்தப்பட்ட விஷயம் இல்லை. ஏன்! திருவண்ணாமலையே ஒரு பெருத்து எம்பி நிற்கும் குறிதானே. வானம் அளக்க, உள் சென்று வெளி செல்கிறேன். மறுபடியும் நான் செய்த தவறுகள். உண்மையில் காமத்தின் பொருட்டு நான் சென்ற தூரத்தின் வழியில் தென்பட்டனர் இவர்கள்.

ஆனால், எனக்கு மிகவும் பிடித்த தவறு கடவுளை எனக்காக உருவாக்கியதுதான். போதைக்கும் களவுக்கும் இடைப்பட்ட காலமற்ற பொழுதில் வந்தாய் நீ


நன்றி,

 நந்தகுமார்

http://nanthangl.blogspot.ae/

Thursday, February 22, 2018

Three Billboards Outside Ebbing, Missouri


ஸ்பாட்லைட் Spotlight (2015), Manchester by the Sea (2016) வரிசையில் இந்த வருடம்  Three Billboards.  ஹாலிவுட்டில் வருடத்திற்கு  ஒரு படம் இப்படியாக  வந்து விருதுகளை அள்ளுகின்றது. வழக்கம் போல இந்தப் படமும் ஆஸ்கரின் பெரும்பாலான பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. எதனால் இந்த செண்டிப் படங்கள் வலுவான தாக்கத்தை நம்மிடையே ஏற்படுத்துகின்றன என யோசித்தால் மழுங்கிப்போன நம்முடைய அற உணர்வு இதற்கான பிரதான காரணமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

 நம்மைச் சுற்றி நிகழும் அநீதிகளுக்கெதிரான போராட்டம்தான்  கிட்டத்தட்ட மறத்துப் போன நம் அற உணர்வை மெல்ல மீட்டெடுக்கின்றது. இந்த அற உணர்வு, காலம் தாமதிக்கும் நீதியின் மீது இன்னும் கோபம் கொள்ள வைக்கிறது.  நீதி வென்றே ஆக வேண்டும் என நம்மைத் தீவிரப்படுத்துகிறது.

இந்த வகைத் திரைப்படங்களும் இத் தீவிர மனநிலையை பார்வையாளர்களிடம் உருவாக்குகின்றன. மேலும் திரைக்கதையின் மய்யக் குரூரத்தை நேரடியாகக் காட்சிப்படுத்தாமல் உரையாடல் வழியாகவோ அல்லது தொலைவுக் காட்சிகளின் வழியாகவோதான் சொல்கிறார்கள். காட்சிப்படுத்தப்படும் குரூரத்தை விட சொல்லப்படும் குரூரம்    பெரும் தாக்கத்தை நம்மிடையே ஏற்படுத்துகின்றது.

Spotlight , Manchester by the Sea,  Three Billboards Outside Ebbing Missouri  இம்மூன்று திரைப்படங்களும் மேலே சொன்ன உத்திக்குள் வருகின்றன. இப்படங்களின் இயக்குனர்கள் மிக இறுக்கமான திரைக்கதை வடிவைக் கையாள்கிறார்கள். நீதிக்காக போராடும் கதாபாத்திரங்களை முசுடுகளாய்,  எதிர்த்தன்மை கொண்டவர்களாய் சித்தரிக்கிறார்கள்.  இந்த இறுக்கம் உடையும் தருணம் ஒன்று  வரும்போது பார்வையாளர்களும் கதாபாத்திரத்தோடு சேர்ந்து உடைகின்றனர்.  படம் தன்னளவில் முழுமையடைகிறது.

இது ஒரு அபாரமான எப்போதுமே சோடை போகாத உத்தி. ஸ்பாட்லைட்டும், மான்செஸ்டர் பை த சீ யும், த்ரீ பில்போர்ட்ஸும் இந்த உத்தியை சரியாகக் கையாண்ட படங்கள். இது சற்றுப் பிசகினால் அது Moonlight (2016) திரைப்படம் போல ஆகிவிடும். மூன்லைட்டும் சிறந்த படம்தான் என்றாலும் அது தவறவிட்டது இந்த இறுக்கத்தையும் உடைதலையும்தான்.

த்ரீ பில்போர்ட்ஸ் படத்தின் புதுத் தன்மை அதன் பெயரிலேயே இருக்கிறது. சம்பந்தப் பட்டோரை குற்ற உணர்வடைய வைக்கும் விளம்பரம் என்பதுதான் இதில் புது சிந்தனை. பிறகு அது உருவாக்கும் பின் விளைவுகளின் பின்னாலேயே போனால் முழுமையான அவார்ட் மெட்டீரியல் நமக்குக் கிடைத்துவிடும். இந்தப் படம் இதைக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறது.

ஒரு அநீதி இழைக்கப்படுகிறது. சட்டத்தாலும் காவலர்களாலும்  நீதியை வழங்க முடியாமல் போகிறது. பாதிக்கப்பட்டவர் ஒரு நூதனப் போராட்ட த்தைக் கையில் எடுக்கிறார். அது ஏற்படுத்தும் விளைவுகளால் இன்னொரு அநீதி நிகழ்கிறது. இப்போது அநீதி  க்கு எதிராய் இன்னொரு அநீதியை உருவாக்கியாகிற்று. பின்பு இரு அநீதிகளும் ஒன்றிணைந்து நீதியை நோக்கிப் பயணிக்கும்போது திரைப்படம் மகத்தான எழுச்சியை நம்மிடையே உருவாக்கிவிடுகிறது.

இத் திரைப்படத்தின் பின்னணி எனக்கு டேவிட் லிஞ்சின் தொலைக்காட்சித் தொடரான Twin Peaks - ஐ நினைவூட்டிக் கொண்டே இருந்தது. 1990 களில் தொலைக்காட்சித் தொடராக வெளியாகிப் பெரும் வெற்றியடைந்த ட்வின் பீக்ஸின் கதைக்களமும், த்ரீ பில்போர்ட்ஸின் கதைக்களமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். டேவிட் லிஞ்ச், ட்வின் பீக்ஸ் எனும் கற்பனை நகரத்தை உருவாகியிருப்பார். அங்கும் ஒரு இளம்பெண் வன்புணரப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பாள். அதன் பின்னணியைத் துப்பறியும் தொடராக ட்வின் பீக்ஸ வளர்ந்திருக்கும். முதல் எட்டுப் பகுதிகள் மட்டும் பார்த்திருந்தேன். இன்னும் பார்க்க 30 பகுதிகள் உள்ளன. நார்கோஸ் அலுத்ததால் மீண்டும் ட்வின் பீக்ஸை ஆரம்பிக்கும் திட்டம்.

த்ரீ பில்போர்ட்ஸில் தானைத் தலைவன் டிரியன் லானிஸ்டர் aka Peter  சில காட்சிகள் வருகிறார். எனினும்  பிரதான கதாபாத்திரத்தை ஏற்றிருப்பது Frances Louise McDormand என்பதால் அவருக்கே அதிக ஸ்கோப். ஃப்ரான்சசும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

துமாரி சுலு


வித்யா பாலனைப் பிடிக்கும் என்றாலும்  ’நெகிழவைக்கும்பெண்ணிய’  வகைமைத் திரைப்படமோ என அஞ்சி ’துமாரி சுலு’ வைப் பார்க்காமல் விட்டேன். சோம்பலான ஒரு மதியப்பொழுதில்  சும்மா பார்த்து வைப்போமே என ஆரம்பித்து முழுமையாய் ஒன்றிப்போனேன். படம் இப்படிக் குறிப்பு எழுதும் அளவிற்குப் பிடித்துப் போனது.

துமாரி சுலு வில் குறிப்பிட்டே ஆகவேண்டிய முதல் விஷயம், இது பெண்ணை மய்யமாகக் கொண்ட படமென்றாலும் எந்த ஆணையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவில்லை. குறிப்பாகப் பிரதான பெண் கதாபாத்திரத்தின் கணவரை உலகின் மிக மோசமான அயோக்கியனாய் சித்தரிக்கவில்லை. இந்த ஆசுவாசம் மட்டுமல்லாது இந்தப் பிரதான பெண் கதாபாத்திரம் துன்பத்திலும் சோர்விலும் மூழ்கி ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு பல தடைகளைத் தாண்டி குறிப்பாக ஆண்களை மிதித்து மேலெழுந்து நிற்கவில்லை. இந்த இல்லாத தன்மைகளே படத்தின் மிகப்பெரிய பலம்.

மிக இயல்பான, பாவணைகள் குறைவான, எளிமையான, வெள்ளந்தித்தனமும் உஷார்தனமும் சேர்ந்த ஒரு மிடில் க்ளாஸ் புடவை கட்டிய ஆண்ட்டியின் சில சுவாரசியமான நாட்களை இந்தப் படம் காட்சிப்படுத்துகிறது. வித்யா பாலன் இந்தக் கதாபாத்திரத்தில் அப்படிப் பொருந்திப் போகிறார். சர்வ நிச்சயமாக வேறொரு நடிகையால் இந்தப் பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்க முடியாது என்பது திட்டவட்டம். சுலு என்கிற சுலோச்சனாவின் கணவராக நடித்திருக்கும் அஷோக் கதாபாத்திரமும் சிறப்பு.

லெமன் ஸ்பூனில் ஆரம்பித்து டிபன் காண்ட்ராக்ட் கிடைக்குமா எனக் கண்கள் மின்னக் கேட்கும் காட்சி வரை மொத்தமும் வித்யாபாலனின் விளையாட்டு. அடித்து ஆடியிருக்கிறார். படத்தின் பல காட்சிகள் கவிதை. குறிப்பாகத் தொலைபேசியில் துமாரி சுலு நிகழ்ச்சியில் பேசும் ஒரு முதியவர், தன் மனைவி பெயரும் சுலோச்சனாதான் அவளுக்கும் உன்னைப் போன்ற குரல் அவளையும் சுலு என்றுதான் அழைப்பேன் எனக் கூறும் இடம் . இது ஒரு தேய்ந்த காட்சிதான். வழக்கமாக இது போன்ற காட்சிகளில் நாயகி குளோஸ்-அப் பில் கண் கலங்குவதாக ஒரு ஷாட்டை வைப்பார்கள். ஆனால் அப்படி  க்ளிஷே வாக மாற இருக்கும் ஒரு காட்சியை தன் இலகுவான வெளிப்பாட்டால்  வித்யா சம நிலைக்குத் திருப்பியிருப்பார்.  இப்படிப் பல காட்சிகள் வித்யாவினால் மெருகூட்டப்பட்டிருக்கும். மகன் திரும்பக் கிடைக்கும் காட்சியில் நொடி நேர மெளனத்திற்குப் பிறகு வெடிக்கும் காட்சியும் அபாரம்.



இறுதிக் காட்சியில் கிடைக்கும் நெகிழ்ச்சியை உருவாக்க வேண்டி மகன் காணாமல் போகும் சம்பவம், சுலுவின் இரட்டை சகோதரிகள் தரும் அழுத்தம், ரேடியா ஜாக்கி வேலையை விடுவது போன்ற காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த மெனக்கெடல்களையும் தவிர்த்திருந்தால் முழுமையான இயல்பான படமாக வந்திருக்கும். ஆனால் இந்த உருவாக்கப்பட்டவைகள் தரும் உணர்வும் நன்றாகத்தான் இருந்தது.

துமாரி சுலு வின் தமிழ் வடிவத்தில்  ஜோதிகா நடிக்க இருப்பதாக வந்த செய்தியைப் படித்ததிலிருந்து சற்று திக் கென்றுதான் இருக்கிறது.   மகேஷிண்ட ப்ரதிகாரம் தமிழில் வந்த அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில் அடுத்த அதிர்ச்சி. எப்படி  பகத் பாசிலுக்கு மாற்றாய் உதயநிதியை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லையோ அதற்கு சற்றும் குறையாதது வித்யா இடத்தில் ஜோதிகாவை வைப்பது. இந்த கோராமைகளிலிருந்து பணம் போடும் தயாரிப்பாளர்களாவது எங்களைக் காக்க வேண்டும்.


Narcos : நமுத்த வாழ்வின் பரவசம்


பாப்லோ எஸ்கோபார்  - கொலம்பியாவை உலகறியச் செய்த பெயர். பாப்லோ கொல்லப்பட்டு கால் நூற்றாண்டு ஆகப் போகிறதென்றாலும் இன்று வரை  இந்தப் பெயர் தந்து கொண்டிருக்கும் ஈர்ப்பை தொடர்ந்து வெளிவரும் புத்தகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், சினிமாக்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். அசாதாரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் நம்முடைய நமுத்த சாதாரண வாழ்வில் இருக்கும் ஒரே பரவசம் . எனவேதான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள், டான் கள், கொள்ளைக் கூட்டத் தலைவர்கள், போதை மருந்து மாஃபியாக்கள், நடிகர்கள், குறிப்பாக கவர்ச்சி நடிகைகள் போன்றோரின் சொந்த வாழ்வை ஒட்டிய படைப்புகள் எப்போதும் வெற்றியில் சோடை போவதில்லை.

நார்கோஸ் மிக நேரடியாக கொலம்பியாவின் போதை மருந்துக் கும்பல் தலைவனான பாப்லோ எஸ்கோபாரின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறது. வாழ்வைப் பதிவு செய்வதில் இருக்க வேண்டிய நேர்மை இந்தத் தொடருக்கு இருக்கிறதா என்றால்   இதுவரை இல்லை. அதாவது இரண்டு சீசன்கள் வரை. எனவே மூன்றாவது சீசனைப் பார்க்கும் ஆர்வம் விட்டுப் போயிற்று. ஆனால் வெற்றியைக் குறிவைத்து எடுக்கப்படும் தொடர்களில் இருக்க வேண்டிய சகலமும் நார்கோஸ் தொடரில் இருக்கிறது. பணக்கார வாழ்வின் பகட்டு, குடி, காமம், அதிகாரம் மற்றும் இவற்றோடு சம பங்கு இரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் என ஒவ்வொரு பகுதியும் மிக நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிறது. எனவே இயல்பாகவே ஒருவித பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. மிக வேகமாக இத்தொடரைப் பார்த்தும் விடுகிறோம். ஆனால் இறுதியில் இத்தொடர் புதிதாக எதையாவது  சொல்லியிருக்கிறதா என யோசித்தால் வெறுமை தான் எஞ்சுகிறது. ஏற்கனவே நாம் பார்த்து சலித்த இலத்தீன் அமெரிக்க டான் களின் வாழ்வு, கொக்கைன் கடத்தல் பின்னணி, அமெரிக்க அரசின் அடுத்த நாட்டின் மீதான ’அக்கறை’ என ஏற்கனவே பார்த்து சலித்த விஷயங்கள்தாம் தொடரை ஆக்ரமித்திருக்கின்றன . மேலும் டான்கள் தங்கள் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் செண்டிமெண்ட் காதல், மனைவி அம்மா பாசம் என காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விஷயங்கள் யாவும் திகட்டிப் போனவை. ஒருவேளை காட் ஃபாதர் வரிசைப் படங்கள், ஸ்கார்ஃபேஸ், குட் ஃபெலாஸ், மரியா ஃபுல் ஆஃப் க்ரேஸ் மாதிரியான படங்களைப் பார்த்திராதவர்களுக்கு இந்தத் தொடர் நல்ல அனுபவத்தைத் தரலாம்.

நார்கோஸ் தொடரின் சிறப்பம்சம்  என்னவென்று பார்த்தால் இதில் பயன்படுத்தப் பட்டிருக்கும் நிஜக் காட்சித் துணுக்குகள்தாம். கதையின் போக்கை ஒட்டியே 1970 -90 களில் கொலம்பியா மற்றும் அமெரிக்காவில் நடந்த நிஜ சம்பவங்களையும் டாக்குமெண்டரிக் காட்சிகளாக இணைத்திருப்பது தொடரின் நம்பகத் தன்மையைக் கூட்டுகிறது.  பாப்லோ எஸ்கோபராக நடித்திருக்கும் பிரேசில் நடிகரான Wagner Moura வின் பிரமாதமான நடிப்பும் நம்மைத் திரையோடு ஒன்ற வைக்கின்றது. கொலம்பியச் சூழல், நடிகர்கள், பின்னணி இசை, லேப் கள் எனப்படும் கொக்கைன் மருந்து தயாரிக்கும் இடங்கள், பயன்படுத்தப்பட்டிருக்கும் ஏராளமான துணை நடிகர்கள் என தொடருக்கான உழைப்பு பிரம்மாண்டம்தான் என்றாலும் திரைக்கதை ஒரே விஷயத்தையே சுற்றிச் சுற்றி வருவதால் அலுப்பையும் தவிர்க்கமுடிவதில்லை. அமெரிக்கத் தூதரகத்தின் உள்ளடி வேலைகள், கொலம்பிய அதிபரின் அரசியல் நகர்வுகள், அவரும் துணை அதிபரும் பாப்லோவை வீழ்த்த எடுக்கும் முயற்சிகளில்  தென்படும் முதிர்ச்சியற்ற தன்மை  போன்றவை  தொடரை மேலும் பலகீனப்படுத்துகின்றன.

 பாப்லோ எஸ்கோபரின் அசலான வாழ்வைத் தேடி வாசித்தால் தொடரில் சொல்லப்பட்டிருப்பதை விடக் கூடுதல் சுவராசியம் கொண்டதாக இருக்கிறது. நார்கோஸ் தொடர் எஸ்கோபரின் கொக்கைன் சாம்ராஜ்யத்தின் துவக்கத்தையும் உச்சத்தையும் சரிவையும் பிரதானமாக முன் வைக்கிறது. ஆனால் பாப்லோ கொக்கைன் உலகிற்கு வருவதற்கு முன்னரான வாழ்வு இன்னும் அசாத்தியத் தன்மை கொண்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட சிகரெட்டுகளை விற்பவனாக, சில்லறைத் திருடனாக, கார் திருடனாக, அடியாளாக மெல்ல மெல்ல வளர்ந்து கொக்கைன் உலகில் நுழைந்திருக்கிறார். உலகக் குற்றவாளிகளின் வரலாற்றில் பாப்லோ எஸ்கோபர்தான் மிகப் பெரிய செல்வந்தர். 1990 களில் பாப்லோவின் வருட வருமானம் 30 பில்லியன் அமரிக்க டாலர். ஆம் பில்லியன். எவராலும் கற்பனை செய்து கூடப் பார்த்திராத வாழ்வை பாப்லோ எஸ்கோபர் வாழ்ந்திருக்கிறார்.  ஏராளமான வசிப்பிடங்கள். வீட்டிற்குள்ளேயே மிருகக் காட்சி சாலை வைத்திருந்ததாகவெல்லாம் விக்கி சொல்கிறது. வியப்புதான் மேலிடுகிறது.



நார்கோஸ் போல கவர்ச்சி சாயம் பூசாத அசலான பாப்லோ எஸ்கோபரின் வாழ்வை தேடி வாசிக்க அல்லது பார்க்க விருப்பமாக இருக்கிறது.  பாப்லோவின் நிருபர் காதலி - தொடரில் வலேரியா - எழுதிய Loving Pablo புத்தகம் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது. இந்தப் புத்தகத்தைத் தழுவி ஜேவியர் பார்டம் - பெனலோப் குருஸ் நடிப்பில் சென்ற வருடம் ஒரு ஸ்பானிய படமும் வெளியாகி இருக்கிறது. திரைப்படத்திற்கு வரவேற்பு இல்லை என்பதாக விமர்சனங்கள் சொல்கின்றன. பாப்லோவைக் குறித்தான நேஷனல் ஜியாக்ராபியின் டாக்குமெண்டரி ஒன்று கிடைத்திருக்கிறது. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.






Sunday, February 18, 2018

Dance Dance Dance - Haruki Murakami


ஹாருகி முரகாமியின் நாவலான  Dance Dance Dance ஐ ஒலி வடிவில் கேட்டு முடித்தேன். ஒலி வடிவம் எனக்கு மிகப் பழகிய ஒன்றுதான். பதின்மத்திலிருந்தே ஓஷோ பேச்சுக்களை கேசட்டில் திரும்பத் திரும்பக் கேட்டுத் தேய்த்த அனுபவம் இருக்கிறது என்பதால் ஒலி வடிவம் எனக்கு மிகப் பிடித்தமானதும் கூட. ஆனால் நாவல்களை ஒலி வடிவில் இதுவரை முழுமையாகக் கேட்டதில்லை. சென்ற வருடம் The Girl with the Dragon Tattoo நாவலைக் கேட்க ஆரம்பித்து, அலுப்படைந்து  பாதியிலேயே நிறுத்தினேன். அதற்குப் பிறகு ஒலி வடிவ நாவல்களை முயற்சிக்கவில்லை. இந்த வருட முயற்சியில் வெற்றி. பதிமூன்று மணி நேர  Dance Dance Dance ஐ மிகுந்த ஆர்வத்துடன் கேட்டேன். இதில் முக்கிய பங்கு இந்நூலை வாசித்த குரல் கலைஞரான Rupert Degas க்கு உரித்தானது. கேட்பதற்கு மிகக் கச்சிதமான குரல் இவருடையது. குரல்களின் வித்தியாசங்கள் வழியாய் கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிக்காட்டிய விதமும்  அபாரம். மிகவும் ஒன்றிப்போய் கேட்டேன்.

டான்ஸ் டான்ஸ் டான்ஸ் முரகாமியின் ஆறாவது நாவல். மூன்றாம் நாவலான A Wild Sheep Chase ன் தொடர்ச்சி. இதிலேயும் ஷீப் மேன் எனப்படும் புனைவுக் கதாபாத்திரம் இடம்பெறுகிறது. ஒப்பீட்டளவில் எனக்கு Wild Sheep Chase நாவலே பிடித்திருந்தது. டேன்ஸ் நாவலில் மிக அலுப்பூட்டும் அளவிற்கான ஒரே விவரணைகள் திரும்பத் திரும்ப வருகின்றன. குறிப்பாக இளம்பெண் யூக்கிக்கும் கதை சொல்லிக்கும் இடையே நிகழும் சம்பவங்கள் அவ்வளவு அலுப்பூட்டின.

கதை சொல்லி நாவல் முழுக்க குடித்துக் கொண்டும் தின்று கொண்டுமிருக்கிறார். அவரின் மிகத் திட்டமிடப்பட்ட துல்லியமான நாட்கள் சில இடங்களில் அபார உணர்வையும் சில இடங்களில் அலுப்பையும் தருகின்றது. முதல் அத்தியாயங்களில் வந்து கொண்டே இருக்கும்  டால்பின் ஹோட்டல்  குறித்த மிக நீண்ட விவரணைகள் எரிச்சலை வர வழைக்கின்றன. யாராவது கதை சொல்லியுடன் தின்றும் குடித்தும் கலவியும் கொள்கிறார்கள். அதைக் குறித்தும் மிக நீளமான வியாசங்கள். அடேய் முரகாமி போதும்டா என்கிற அளவிற்கு சில பகுதிகள் அலுப்பூட்டின. நாவலின் மிக சுவாரசியமான விஷயங்களாக நான் கருதியவை.

1. கதாபாத்திரங்களை இணைத்த முறை. வெவ்வேறு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி அவர்களை ஒரே இழையின் கீழ் கொண்டு வந்தது. உதாரணம் : கீக்கி - மே - ஜூன் இவர்களை இணைக்கும் சங்கிலியாக கோதண்டா.

2. கோதண்டாவிற்கும் யூக்கிக்கும் இடையே உள்ள தொடர்பு.

3. யூக்கியின் குடும்பம் குறித்தான சித்தரிப்பில் இருந்த புதுத் தன்மை . எல்லாவற்றையும் வாங்கிவிட முடியும் என நம்பும் எழுத்தாளர் அப்பா, வேலை என்று வந்து வந்துவிட்டால் சகலத்தையும் மறந்து போகும் புகைப்பட நிபுணரான அம்மா.
இவர்களுக்கிடையே அல்லாடி தனிமையில் விடப்படும் பதிமூன்று வயது யூக்கி.  மேலதிகமாய் அப்பாவின் நண்பன். அம்மாவின் ஒற்றைக்கை நண்பன்.

4. ஹவாய் குறித்தான விவரணைகள் - அங்கு நிகழும் விநோத சம்பவம்.நிகழ்ந்த / நிகழவிருக்கும்  மரணங்களை எலும்புக் கூடுகளோடு இணைத்திருப்பது.

5. பால்ய நண்பர்களான கதைசொல்லியும் கோதண்டாவும் முதலில் சந்திக்கும் அந்த இரவு. இருவரும்  சகல மதுவகைகளையும்  குடித்துத் தீர்க்கிறார்கள். எல்லாம் குடித்து ஓய்ந்த பிறகு கோதண்டா விலை மாதுக்களை அழைக்கிறான். கதைசொல்லி மே வோடும் கோதண்டா உடன் வரும் இன்னொரு பெண்ணுடனும் கலவி கொள்கிறார்கள். இந்த சம்பவங்களின் விவரணைகள் துல்லியத்தின் உச்சம்.

6. நடிகனான கோதண்டாவின் வாழ்க்கை. அவனுக்கும் அவன் மனைவிக்குமான விநோத உறவு.

7. மறைந்து போதல் குறித்தான கருத்தாக்கம். உடல்கள் சுவரின் வழியாய் இன்னொரு உலகில் நுழையும் மாயத்தன்மை.

8. நாவலின் புத்தம் புதுத் தன்மை. இந்நாவல் வெளியான வருடம் 1988. முப்பது வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட நாவலில் இருந்த சமகாலத் தன்மை வியப்பூட்டியது. ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய ஆழமான கற்பனையூக்கம் முரகாமியிடம் மிகுந்திருக்கிறது எனவேதான் அவர் காலம் கடந்தும் அப்படியே நிற்கிறார்.


முரகாமியின் பிரதானக் கதாபாத்திரங்கள் அபாரமான இசை ஞானம் கொண்டவை. டான்ஸ் கதைசொல்லியும் தொடர்ச்சியாய் அறுபதுகளின் ராக் அண்ட் ரோல் இசையைக் கேட்டுக் கொண்டே இருக்கிறான். நாவலைக் கேட்டுக் கொண்டிருந்த நாட்களில் நானும் பீச் பாய்ஸ் குழுவினரின் பாடல்களை யூடியூபில் தேடிப் பார்த்தேன்.  பீட்டில்ஸ் குழுவினரின் இசை எனக்கு பரிச்சயமானதுதான் என்றாலும் பீச் பாய்ஸை மிகவும் பிடித்திருந்தது.

ஒப்பீட்டளவில் நார்வேஜியன் வுட், காஃபா ஆன் த ஷோர், வைண்ட் அப் பேர்ட் உயரங்களுக்கு இந்நாவல் இல்லை. எனவே வாசிக்காமல் வைத்திருக்கும் முரகாமியின் முதல் இரண்டு நாவல்களை Hear the Wind Sing மற்றும் Pinball ஐ தவிர்த்துவிட்டு After Dark ஐ எடுத்திருக்கிறேன்.

ஆனால் முரகாமியின் நாவல்களை வாசிக்கும் நாள்களில் ஒரு வித ஒழுங்கமைதி நமக்குள்ளேயும் வந்து விழும். அந்த அமைதியை இந்த நாவலும் தந்தது. ஓஷோ எப்போதும் விழிப்புணர்வில் இருக்க வேண்டியதைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருப்பார். முரகாமியின் நாவல்களும் அதைத்தான் செய்கின்றன. ஆழமும் அகலமுமான விழிப்புணர்வு. தன்னைச் சுற்றி நிகழும் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக கவனிப்பது. இந்தத் தன்மை இந்த நாவலிலும் இருக்கிறது. A wide beautiful awareness of being.




Thursday, February 15, 2018

வண்ணத்துப் பூச்சிகளின் விடுதலை : Titli


டிட்லி தன் புத்தம்புது மனைவியை அவளுடைய காதலனுக்கு கூட்டிக் கொடுக்க வண்டியில் அழைத்துச் செல்கிறான் . பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டிருக்கும் நீலு, எதிர் காற்றில் அலையும் தன் முடிக்கற்றைகளை ஒதுக்கியவாறே  டிட்லியின் பெயர் காரணத்தைக் கேட்கிறாள்.  டிட்லியின் அம்மாவிற்கு முதல் இரண்டு குழந்தைகளும் பையன்கள், மூன்றாவதாய் பெண் குழந்தை வேண்டுமென விரும்பியவள் அக்குழந்தைக்கு டிட்லி என்கிற பெயரையும் தேர்வு செய்து விட்டிருக்கிறாள். ஆனால் மூன்றாவதாகவும் ஆண் குழந்தையே பிறப்பதால்  ஏமாற்றமடைபவள், தேர்வு செய்த பெயரை மாற்றிக் கொள்ள விரும்பாமல் டிட்லி என்கிற பெயரையே தனக்கு வைத்துவிட்டதாக சொல்கிறான். நீலுவிற்கு சிரிப்பு பொங்கிக் கொண்டு வருகிறது.

 டிட்லி தன் மனைவியை அவளுடைய காதலனிடம் கொண்டு போய் விடுகிறான். நீலு, டிட்லியின் முன்பே தன் காதலனான பிரின்சை அணைத்துக் கொள்கிறாள். இருவரும் ஓர் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்கிறார்கள்.  நீலுவின் மூலம் கிடைக்கும் இரண்டரை லட்ச ரூபாய் பணத்திற்காக டிட்லி இதையெல்லாம் செய்கிறான். அப்பணத்தைக் கொண்டு புற நகரில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பேரங்காடியின் வாகன நிறுத்த ஒப்பந்தத்தை வாங்கிவிடுவான். அதன் மூலம் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் நரகத்துளையிலிருந்து விடுதலை அடைவான்.

 குடும்பத்தாரின் நிர்பந்தத்தால் டிட்லியை மணந்து கொள்ளும் நீலு, தன் காதலன் பிரின்ஸ் முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற உடன் தன்னை மணந்து கொள்வான் என்கிற கற்பனையில் எல்லா எல்லைகளுக்கும் நகர்கிறாள். இறுதியில் அவன் தன்னை வஞ்சித்ததை உடைந்த கையோடு உணர்கிறாள். குடும்பம் என்கிற பெயரில் தன் அண்ணன்கள் செய்யும் முட்டாள்தனமான குரூரத் திருட்டுக் கொலைகளுக்குத் துணைபோகும்  டிட்லியும்  வதைபடுகிறான்.  இந்த இரு நசுக்கப்பட்ட வண்ணத்துப் பூச்சிகளும் மேலும் நசுங்கி தங்களின் பறத்தலை சாத்தியப்படுத்த முனைவதாக படத்தை முடிக்கிறார்கள்.



நேற்றிரவு இவ்வளவு ஆழமான, நேரடியான படத்தைப் பார்த்து திகைத்துப் போனேன்.  டிட்லி 2014 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. கான் திரைப்பட விழா உட்பட உலகின் முக்கியமான திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளியிருக்கிறது. தமிழ்சூழலில் சரியாக கவனம் பெறாததால்  எப்படியோ தவற விட்டிருக்கிறேன்.

டிட்லியின் குடும்பமும் வீடும்  அசாத்தியமாகச்  சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவு நுணுக்கமான கதாபாத்திர வடிவமைப்பும் கதைக்களமும் இந்திய சினிமாவில் நிகழ்ந்திருப்பதற்கு உண்மையில் நாம் பெருமைப் பட வேண்டும். ஒரு உணவு மேசை கூட நுழைய முடியாத எலிப் பொந்து போன்ற வீடு. அதில் ஒருவர் உணவருந்திக் கொண்டிருக்கும்போது இன்னொருவர் சப்தமாக தொண்டையைச் செருமி காறி உமிழ்ந்து பல்லைத் துலக்கிக் கொண்டிருப்பர். டிட்லி யை அவனது அண்ணன் விக்ரம் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும்போது தந்தை வரிக்கியை டீயில் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.  நிதர்சனமும் உண்மையும் சாதாரண மக்களின் மீது அறையும் ஆணியை திரைப்படம் அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறது.

ஒரு நகரம் இராட்சதத்தனமாக வளரும்போது அது அங்கிருந்த எல்லாவற்றையும் தின்றுவிட்டுத்தான் மேலெழுகிறது. மண், மனிதர்கள் அவர்களிடைய இருந்த நேயம் என எல்லாமும் இந்த நகர வளர்ச்சியில் அழிந்து போகின்றன. இந்தத் தன்மை இந்திய இலக்கியங்களில் குறிப்பிடத்தகுந்த அளவில் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் சினிமாவில் நேரடியாகச் சொல்லப்பட்டதில்லை. டிட்லி திரைப்படம் குறியீட்டு வடிவில் இந்த அழிவைப் பேச முனைகிறது.

டிட்லி கதாபாத்திரம் தன்னுடையை விருப்பத்தை அடைந்த பிறகு  அங்கிருந்து கீழே விழுகிறது. இதற்காகவா எல்லாம் என விரக்தியடைந்து தொடர்ச்சியாக வாந்தியெடுத்து மீண்டும் யதார்த்தத்திற்கு வருகிறது. தன்னைப் போலவே வஞ்சிக்கப்பட்ட இணையிடம் மீண்டும் செல்கிறது. இந்த கருத்தாக்கமும் இலக்கியத்தில் பேசப்பட்டதுதான். எல்லாம் அடைந்த பின் ஏற்படும்  விரக்தி உணர்வு, இதை ஒட்டியும் ஏராளமான படைப்புகள் இலக்கியத்தில் பதிவாகி இருக்கின்றன. தமிழில் மோகமுள் நாவல் இதை பதிவு செய்தது.

வன்முறையோடு இயைந்த  வாழ்வை அழுந்தந்திருத்தமாய் திரையில் கொண்டு வந்திருக்கும் இயக்குனர் கானு பேலின் முதல் படம் இது.  இத்திரைப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்த லலித் பேல் உண்மையில் கானு பேலின் தந்தை. அண்ணனாக விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ரன்வீர் ஷோரி. இவர் கொங்கனா சென்னின் முன்னாள் கணவர். கானு பேல் டிட்லிக்கு முன்பு ’Love Sex Aur Dhokha’ திரைப்படத்தை எழுதியிருக்கிறார்.

’ஆன்கோன் தேகி’ படம் நினைவிருக்கிறதா? 2014 இல் வெளிவந்த இன்னொரு பிரமாதமான படமது.  அதை இயக்கிய ரஜத் கபூர், திபாகர் பேனர்ஜி, அருண் ஷோரி  போன்றவர்கள் இயங்கும் கவர்ச்சி வெளிச்சமற்ற  பேரலல் சினிமா உலகமும் இந்தியில்தான் இயங்கி வருகிறது. இந்த காத்திரமான ஆட்கள் சத்தமே இல்லாமல் பிரமாதமான திரைப்படங்களை குறிப்பிட்ட இடைவெளிகளில் கொடுத்து வருகிறார்கள். இனி இவர்களின் மீதும் ஒரு கண்ணை வைக்க வேண்டும்.


Featured Post

test

 test